அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 31 டிசம்பர், 2010

ஸஃபர் மாதமும் முஸ்லிம்களும்!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.

இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருநேரத்தை, ஒருநாளை,ஒருமாதத்தை, ஒருஆண்டை சிறப்பித்து சொல்வதாக இருந்தாலும் அல்லது மேற்கண்ட விசயங்களை கெட்டவை என்று கருதுவதாக இருந்தாலும் அவை அல்லாஹ்வாலோ,அல்லது ரசூல்[ஸல்] அவர்களாலோ சொல்லப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு சொல்லப்படாத எதுவும் மார்க்கமாகாது என்பதுதான்  அடிப்படையான விஷயமாகும்.

12 மாதங்களில் இஸ்லாம் நான்கு மாதங்களை புணிதமாதம் என்று அடையாளம் காட்டி இந்த மாதங்களில் போர்செய்வது கூடாது என்று தடுத்திருக்கிறது. அவை முறையே துல்கஃதா,துல்ஹஜ்,முஹர்ரம்,ரஜப் ஆகியவையாகும். அதுபோல பீடை மாதங்கள் என்று ஏதாவது ஒருமாதம் மார்க்கத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளதா? என்றால் இல்லை. ஆனால் இன்று முஸ்லிம்  சமுதாயம் ஸஃபர் மாதத்தை பீடைமாதம் எனக்கருதி அம்மாதத்தில் சுபகாரியங்கள் எதையும் செய்வதில்லை.

இந்துக்கள் ஆடிமாததை பீடைமாதமாக கருதி, அம்மாதத்தில் சுபகாரியங்களை மேற்கொள்ளமாட்டார்கள். கடைகளில் 'ஆடித்தள்ளுபடி' என்று இருப்புகளை தள்ளிவிடுவார்கள். அதுபோல முஸ்லிம்களும் ஸஃபர் மாதத்தை தள்ளுபடி மாதமாக்கிவிட்டனர். ஒரு மாதத்தை பீடை என நம்புவது முஸ்லிம்களின் வழிமுறையல்ல. மாறாக மக்கத்து காஃபிர்களின் வழிமுறையாகும்.

அறியாமைக்காலத்தில் மக்கள் ஷவ்வால் மாதத்தை பீடைமாதமாக கருதிவந்தனர். நபி[ஸல்]அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில்தான் திருமணம் செய்தனர்.ஷவ்வால் மாதத்தில்தான் நபியவர்களுடன் இல்லறவாழ்வை தொடங்கினேன். என்னைவிட நபியவர்களுக்கு விருப்பமான மனைவி யாரும் உண்டா? என்று அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் அறிவிக்கும் செய்தி முஸ்லீம்,அபூதாவூத் ஆகிய கிரந்தங்களில் இடம்பெற்றுள்ளது.

பீடைமாதம்  என்று கருதப்பட்ட மாதத்தில், அதை உடைத்து எரியும்வன்னம் நபியவர்கள் ஆயிஷா[ரலி]அவர்களை திருமணம் செய்து, சிறப்புற வாழ்ந்துகாட்டி,அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் மடியிலேயே உயிர்துறந்தார்களே! இதிலிருந்து விளங்கவில்லையா? பீடைஎன்று எதுவுமில்லை என்று.

மேலும், ஒருநேரத்தில் உலகத்திலுள்ள அனைவருக்கும் நல்லது மட்டும் நடக்கும் நேரம் ஏதாவது உண்டா? ஒருநேரத்தில் உலகத்திலுள்ள அனைவருக்கும் தீயது மட்டும் நடக்கும் நேரம் ஏதாவது உண்டா? உதாரணத்திற்கு பத்துமணிக்கு எனக்கு குழந்தை பிறக்கிறது. இந்தநேரம் எனக்கு மகிழ்ச்சியான நேரம். என்வீட்டிற்கு நாலுவீடுதள்ளி ஒருவரின் குழந்தை அதேநேரத்தில் இறந்துவிடுகிறது. இது அவருக்கு சோகமான நேரம். ஒருநிமிடத்தில் உலகத்தில் அனைவருக்கும் ஒரேமாதிரி சம்பவங்கள் நிகழாதபோது, ஒருமாதத்தை பீடைஎன ஒதுக்குவது பகுத்தறிவிற்கு ஏற்றதா?

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன். [புகாரி]

மேலும் இம்மாதத்தில் பீடையை போக்குகிறேன் என்ற பெயரில் மாவிலையில் எழுதிக்குடிப்பது, கடலில் குளிப்பது, புல்வெளியை மிதிப்பது இப்படியான மூடபழக்கங்களும் அரங்கேறுகிறது. இது நிச்சயமாக மார்க்கம் காட்டித்தராத வழியாகும். மேலும் ஒடுக்கத்துப்புதன் என்ற ஒரு வார்த்தையைக்கூட அல்-குர்'ஆனிலோ, ஹதீஸிலோ காணஇயலாது.

எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள் மற்றும் மனிதர்களின் சாபம் உண்டாகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அலி (ரலி) ஆதாரம் : அபூதாவூத், நஸாயீ)

எனவே, ஒருகாலத்தில் முஸ்லிம்களுக்கும்-மார்க்கத்திற்கும் மத்தியில் இருந்த இடைவெளியை பயன்படுத்தி வயிறையும்,பாக்கெட்டையும் ஒருசேர நிரப்ப எண்ணியவர்களின் கண்டுபிடிப்பே  ஸஃபர் பீடையும், ஒடுக்கத்துபுதனும் என்பதை விளங்கி இந்த மூடநம்பிக்கையிலிருந்து முஸ்லிம்கள் விலகவேண்டும். மேலும், ஜாஹிலியாக்களின் அறியாமையை நபி[ஸல்] அவர்கள் எப்படி செயல்வடிவில் உடைத்து எரிந்தார்களோ அதுபோல, தவ்ஹீத்வாதிகள் இந்த ஸஃபர்மூட நம்பிக்கையை உடைத்தெறிய, ஸஃபர்மாதத்தில் தங்கள் குடும்ப திருமண மற்றும் சுபகாரியங்களை நடத்த முன்வரவேண்டும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் மார்க்கத்தில் உள்ளதை மட்டும் நம்பக்கூடிய,அதனடிப்படையில் அமல் செய்யக்கூடியவர்களாக ஆக்கியருள்வானாக!

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

முத்தத்திலும் முன்னோனின் சான்று!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின்  படைப்பினங்களில் மனிதர்கள் மட்டுமன்றி, விலங்குகள்-பறவைகள்- ஏன் தாவரங்கள் கூட ஒவ்வொன்றும் ஜோடி-ஜோடியாக படைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எந்த ஒரு ஆண் விலங்கும் இன்னொரு ஆண் விலங்கை நாடி இணைவதில்லை. அது பெண் விலங்கை மட்டுமே நாடுகிறது. எந்த ஒரு ஆண்  பறவையும் இன்னொரு ஆண் பறவையுடன் இணைவதில்லை. பெண் பறவையை மட்டுமே நாடுகிறது.  ஐந்தறிவுள்ள இந்த ஜீவன்கள் கூட இறைவனின்  ஏற்பாட்டின் படியே, தத்தமது இணையைத் தேடி இன்புற்று, இனவிருத்தி செய்கின்றன. ஆனால் ஆறறிவு உள்ளவன், அபரிதமான ஆற்றல் வழங்கப்பட்டவனான  மனிதன் மட்டும் நாகரீகத்தின் பெயரால் இறைவனின் நியதிக்கு மாற்றமான இணையை தேடுகிறான்.
ஆம்! இன்றைய நாகரிக வளர்ச்சியில் ஓரினச்சேர்க்கை என்பது ஏறக்குறைய குற்றமில்லை  என்று கருதும் அளவுக்கு வந்துவிட்டது. மேற்கத்திய நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்கள் பெரும்பாலான நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. இத்தகைய ஓரினச்சேர்க்கை இயல்பாகவே காலாச்சார சீரழிவு என்றாலும் 'முற்போக்கு' முலாம் பூசி மறைக்கின்றனர். ஆனால் ஒரு ஆணும்- பெண்ணும் இணைவதுதான் சிறந்தது என்பதற்கு எராளமான சான்றுகள் இருந்தாலும் சமீபத்தில் 'முத்தம்' மூலம் மற்றொரு சான்றும் வெளியாகியுள்ளது.
''ஆணும்-பெண்ணும் உதட்டோடு உதடு சேர்த்து வழங்கும் முத்தத்தில், முத்தம் கொடுக்கும் அந்த நேரத்தில் வாயில் ஊறும் உமிழ்நீர் நோய்க் கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்டது. இதன் மூலம் பற்களில் உள்ள பாக்டீரியாக்களை  போக்கி விடுகிறது. இத்தனை முன்னேற்பாடுகளும் வாய் மூலமாக, ஆணிடமிருந்து பெண்ணிற்கோ- பெண்ணிடமிருந்து ஆணிற்கோ கிருமிகள் பரவிவிடக் கூடாது என்பதற்காக இயற்கை[இறைவன்] செய்த முன்னேற்பாடு என்று கூறும் மருத்துவ உலகம், அடுத்து சொல்வதுதான் முக்கியமாக கவனிக்கவேண்டிய அம்சமாகும். அதாவது இந்த கிருமிகளை கொல்லும் சக்தி, ஆணும்-பெண்ணும் முத்தமிடும்போது மட்டுமே ஏற்படுகிறது என்ற மிகப்பெரிய ஆச்சரியத்தை சொல்கிறது  மருத்துவ உலகம்.
இதன் மூலம் அறிவது என்ன? இறைவன் ஏற்பாட்டின்படி இணைவதில்தான் இன்பம் என்பதோடு, அதுதான் பாதுகாப்பானது  என்பதை உணரமுடிகிறது. இனியேனும் நாகரீகம் என்றபெயரில் கால்நடைகளை விட கேவலமாக செல்லும் செயலிலிருந்து மனிதன் திருந்திக்கொள்ளுதல் நன்று.

தொலைந்த பிள்ளை கிடைத்தது; ஆனால் மார்க்கம்....?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

''விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான  (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கே சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை [இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.

மேலும், அபூ ஹுரைரா(ரலி) 'எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான] இயற்கை
மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலின் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்" என்ற (திருக்குர்ஆன் 30:30) வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள்.[நூல்;புகாரி எண்; 1358 ]
 
மேற்கண்ட நபிமொழியை  உண்மைப்படுத்தும் சம்பவம் ஒன்றை சமீபத்தில் செய்திகளில் பார்த்தோம். ஆந்திராவை சேர்ந்த முரான்பாய்- பேகம் தம்பதிகளின் மகன் சபீர். முன்பு சபீருக்கு 5 வயது. அப்போது வீட்டு அருகேயுள்ள ரெயில் நிலையத்தில் சபீர் விளையாடிக் கொண்டிருந்தான். ரெயிலில் ஏறி விளையாட ஆசை ஏற்பட்டதால் அங்கு நின்று கொண்டிருந்த ரெயிலில் ஏறினான்.
 
அந்த ரெயில் திடீரென கிளம்பியது. இதனால் சபீர் அதிர்ச்சி அடைந்தான். ரெயில் வேகமாக சென்ற தால் அவனால் கீழே இறங்க முடியவில்லை. அழுது கொண்டே ரெயிலில் அமர்ந் திருந்தான். இதற்கிடையே அந்த ரெயில் சென்னை வந்தது. ரெயில் நிலையத்தில் வந்திறங்கிய சபீருக்கு எங்கு செல்வதென்று தெரியவில்லை.
 
சபீர் அழுது கொண்டிருப்பதை பார்த்து ரெயில் நிலையத்தில் நின்றவர்கள் அவனை ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்த்தனர். அந்த தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கிய சபீர் 10-ம் வகுப்பு வரை படித்தான். அதன் பிறகு தொண்டு நிறுவனத்தில் இருந்து வெளியேறிய சபீர் கிடைத்த வேலைகளை பார்த்து வயிற்றை கழுவி வந்தார்.
 
தற்போது 21 வயதான சபீர், தனக்கு அறிமுகமாவ்ர்கள் மற்றும் தன்னார்வ   தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் பெற்றோரை தேடும்  படலத்தில் இறங்கினார்.  சபீர் தனது 5 வயதில் இருந்த ஞாபகத்தை பயன்படுத்தி ஆந்திர மாநிலத்தில் தனது வீடு இருக்கும் இடத்தை கூறினார். அதன் மூலம் 1 வாரம் கடுமையாக போராடியதன் மூலம் சபீரின் பெற்றோர் இருக்கும் இடம் தெரிந்தது. இதையடுத்து சபீரின் தந்தை முரான்பாய், தாய் பேகம் ஆகியோர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு பெற்றோரிடம் சபீர் ஒப்படைக்கப்பட்டார்.  
 
மகனை பார்த்த பெற்றோரும், பெற்றோரை பார்த்த சபீரும் உணர்ச்சி பெருக்கத்தில் காணப்பட்டனர். அவர்கள் ஆனந்த கண்ணீரில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பின்னர் சபீர் கூறியதுதான் கவனிக்கவேண்டிய அம்சமாகும்.  ''எனது பெற்றோர் எப்படியாவது கிடைக்க வேண்டும் என்று சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்திருந்தேன். எனது வேண்டுதல் பலித்து விட்டது'' என்றார். அதோடு ஐயப்பனுக்கு மாலை அணிந்து, அந்த தோற்றத்தில் சபீர் இருக்கிறார். மகனின் இந்த மன[மத]மாற்றத்தை பெற்றோரும் கண்டுகொண்டதாகவோ, கவலைப் பட்டதாகவோ தெரியவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.
 
சபீர் பெற்றோரின் அரவணைப்பில்,அறிவுரையில் வாழும் வாய்ப்பை சிறுவயதிலேயே இழந்த காரணத்தால், அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள யாரை கரம்பற்றினாரோ, அவர்களின் அடிப்படையில்  அவரது மார்க்கமும் அமைந்துவிட்டது. இந்த சம்பவத்தின் மூலம்  அறியவேண்டியது என்னவெனில், பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல்  கவனம் செலுத்தி, அவர்கள் எந்த வயதில் இருந்தாலும் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கவேண்டும்.
 
அடுத்து சமுதாய அமைப்புகள், ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை  முன்மாதிரியாக கொண்டு, 'அபய இல்லங்கள்' ஏற்படுத்தி, பெற்றோரை பிரிந்து வரும் சிறார்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய உதவிகள் செய்வதன் மூலம் சமூக சீர்கேட்டிலிருந்து அவர்களை  பாதுகாத்து இஸ்லாத்தில் அவர்கள் நிலைப்பெற உதவவேண்டும்.
 
ஹூம்..! என்ன செய்ய! நம்ம சமுதாயத்தில் இதைப்பத்தியெல்லாம் கவலைப்படுபவர்களை  விட, சக சகோதரனின் அமைப்பை ஆட்டயப் போடவும், அதற்காக சமுதாயத்தின் பணத்தை கோர்ட்டில்  கொண்டுபோய் கொட்டி, நினைத்ததை சாதிப்பதைப் பற்றியும்தானே   கவலைப்படுகிறார்கள். ஆனாலும் இவர்கள் சமுதாயத் தலைவர்களாம்! எல்லாம் அவன் செயல்.

செவ்வாய், 7 டிசம்பர், 2010

முஹர்ரம் 10.செய்யவேண்டியவையும்-செய்யக்கூடாதவையும்!



பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

முஸ்லிம்களில் சிலர் முஹர்ரம் 10 வந்துவிட்டால், அந்த நாளில் என்னசெய்ய வேண்டுமென்று மார்க்கம் சொல்லியிருக்கிறது என்றெல்லாம் பார்ப்பதில்லை காலம் காலமாக நடைமுறையில் என்ன உள்ளதோ அல்லது ஆலிம்சாக்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்து நன்மைக்கு பதிலாக அல்லாஹ்விடம் பாவத்தை பெற்றுக்கொள்வதை பார்க்கிறோம்.

சில  பகுதிகளில் முஹர்ரம10. அன்று கொழுக்கட்டை சுட்டு, வீடுவாசலை நன்றாக கழுவிவிட்டு ஆலிம்சாவை கூப்பிட்டு பாத்திகா ஓதிவிட்டால் கடமை முடிந்தது என்ற பழக்கம் இருந்தது. அல்லாஹ்வின் பேரருளால் தற்போது இந்த பித்அத்  குறைந்துள்ளது. எனினும், முழுமையாக ஒழியவில்லை.

வேறு சில பகுதிகளில்  ஹுஸைன் [ரலி] அவர்கள் ஷஹீதானதை நாங்கள் நினைவு கூறுகிறோம் என்ற பெயரில், ஷியாக்களின் வழிமுறையான பஞ்சா எடுத்து, இந்துக்களின் வழிமுறையான தீ மிதிப்பதையும் முஸ்லிம்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இது தெளிவான வழிகேடாகும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக்  கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்." [புகாரி எண்; 1294 ]

முஹர்ரம் மாதத்தில் செய்யவேண்டியது என்ன என்று நபி[ஸல்] அவர்கள் நமக்கு தெளிவாக்கிவிட்டார்கள். நாம் செய்யவேண்டியது இரண்டு நோன்புகள் நோற்பது மட்டுமே நபிவழியாகும்;

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர்;இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்,

ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி  ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)

ஆஷுரா நோன்பை ஆர்வமூட்டிய அல்லாஹ்வின் தூதர்;
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;

"ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!" [புகாரி எண்; 2006 ]

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, 'இன்று ஆஷுரா  நாளாகும்; எனவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாக இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும்!" என்று அறிவிக்கச் செய்தார்கள்! [புகாரி எண்; 2007 ]

ஆஷுரா நோன்பு ரமளானுக்கு முன்னும்; பின்னும்;
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;

அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி(ஸல்) அவர்களும் நோற்றனர். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷுரா  நோன்பைவிட்டுவிட்டனர். விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர்விட்டுவிட்டனர். [புகாரி எண்; 2002 ]

எனவே, சகோதர/சகோதரிகளே! இரண்டு நோன்பை நோற்பதன் மூலம் இறை உவப்பை பெறுவோம். மேலும் அநியாயக்கார அரசனான ஃபிரவ்ன் இடமிருந்து அல்லாஹ்வின் தூதர் மூஸா[அலை] அவர்களையும் நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் காப்பாற்றினான். அதுபோல ஃபிரவ்னின் மறுவடிவமான அமெரிக்கா, இஸ்ரேல், சங்பரிவாரத்திடமிருந்தும், சக முஸ்லிம்களின் உயிர்- உடமை- மானத்தோடு விளையாடும் குழப்பவாதிகளிடமிருந்தும்  உலக முஸ்லிம்களை பாதுகாக்குமாறு அந்நாளில் துஆ செய்வோம்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

வெள்ளி, 3 டிசம்பர், 2010

இறைவழியில் தியாகப்பயணம்[பாகம்1] ...[மறுபதிப்பு]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அகிலத்திற்கோர் அருட்கொடையாம் அண்ணல்நபி[ஸல்]அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை அன்றைய அறியாமைக்கால மக்களிடம் எடுத்தியம்பியபோது பல்வேறு ஏச்சுக்களும்,பேச்சுக்களும், எள்ளிநகையாடல்களும்தான் பதிலாக பரிசாக கிடைத்தது. நாளடைவில் அல்லாஹ்வின் அருளால் சிறுக சிறுக மக்கள் தூய இஸ்லாத்தை தழுவியபோது,அன்றைய குறைசிகளும், ஏனைய இறைமறுப்பாளர்களும் முஸ்லிம்களை சொல்லொணா துன்பத்திற்கு உள்ளாக்கினர்.

இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்திற்காக அருமை பிலால்[ரலி],அம்மார்[ரலி],யாசிர்[ரலி] உள்ளிட்ட சகாபாக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள். உச்சகட்டமாக யாசிர்[ரலி] சுமைய்யா[ரலி] உள்ளிட்ட சகாபாக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக தங்கள் இன்னுயிரையும் இழக்கும் நிலை ஏற்ப்பட்டது.

இப்படிப்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில்தான் நபித்துவத்தின் நான்காம் ஆண்டு நடுவில் அல்லது இறுதியில் முஸ்லிம்கள் மீது நிராகரிப்பவர்கள் வரம்பு மீற ஆரம்பித்தனர். தொடக்கத்தில் குறைவாகத் தென்பட்ட துன்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றன. ஐந்தாம் ஆண்டின் நடுவில் சோதனைகள் மலையாக உருவெடுக்கவே அதிலிருந்து விடுதலைபெற வழி என்ன என்று சிந்திக்கத் தொடங்கினார்கள். இச்சூழ்நிலையில்தான்

قُلْ يَا عِبَادِ الَّذِينَ آمَنُوا اتَّقُوا رَبَّكُمْ لِلَّذِينَ أَحْسَنُوا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةٌ وَأَرْضُ اللَّهِ وَاسِعَةٌ إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُم بِغَيْرِ حِسَابٍ
(நபியே!) நீர் கூறும்; "ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் - அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள். (அல்குர்ஆன் 39:10) என்ற வசனம் இறங்கியது.

நபியவர்களின்கட்டளை;

ஹபஷாவின் மன்னராக இருந்த 'அஸ்மஹா நஜ்ஜாஷி நீதமானவர். அவர் யாருக்கும் அநியாயம் இழைக்கமாட்டார் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். எனவே, உயிரையும் மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செய்யுமாறு முஸ்லிம்களை நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி நபித்தோழர்களின் ஒரு குழுவினர் முதலாவதாக ஹபஷாவிற்கு நாடு துறந்து செல்ல இருந்தார்கள். இதனை குறைஷிகள் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக இரவின் நடுநிசியில் புறப்பட்டு 'ஷ{அய்பா துறைமுகத்தை அடைந்தனர். வியாபாரக் கப்பல்கள் இரண்டு அங்கு முகாமிட்டிருந்தன. எப்படியோ மோப்பம் பிடித்த குறைஷிகள், இவர்களைத் தேடி அந்த துறைமுகத்திற்கு வந்துவிட்டார்கள். அதற்குள் முஸ்லிம்கள் வியாபாரக் கப்பல்களில் ஏறி ஹபஷாவுக்கு புறப்பட்டு விட்டார்கள். இதனால் குறைஷிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

நாடு துறந்து சென்ற குழுவில் பன்னிரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் இருந்தனர். அவர்களுக்கு தலைவராக உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) இருந்தார்கள். இப்பயணத்தில் அவர்களின் மனைவியான (நபி (ஸல்) அவர்களின் மகள்) ருகையாவும் (ரழி) உடன் இருந்தார்கள். நபி இப்றாஹீம் (அலை), நபி லூத் (அலை) ஆகிய இருவருக்குப் பின் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரா செய்த முதல் குடும்பம் இதுதான்" என்று இவ்விருவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம்கள் ஹபஷாவில் வாழ்வை நிம்மதியாகக் கழித்தார்கள். இது நபித்துவம் பெற்ற ஐந்தாம் ஆண்டின் ரஜப் மாதத்தில் நடைபெற்றது. (ஜாதுல் மஆது)

இந்நிலையில்,குறைசிகள் முஸ்லிமாகி விட்டனர் என்ற தவறான தகவல் அபிசீனியாவில் உள்ள முஸ்லிம்களிடம் பரவ அதனால் அதே ஆண்டு ஷவ்வால் மாதத்தில் அந்த முஸ்லிம்கள் மக்காவிற்குத் திரும்பினர். மக்காவிற்கு சற்று முன்னதாகவே உண்மை நிலவரம் முஸ்லிம்களுக்குத் தெரிய வந்தவுடன் சிலர் ஹபஷாவிற்கே திரும்பிவிட்டனர். சிலர் எவருக்கும் தெரியாமல் மக்காவிற்குள் சென்றுவிட்டனர். மற்றும் சிலர் குறைஷிகள் சிலர் பாதுகாப்பில் மக்காவிற்குள் நுழைந்தனர்.

மெல்ல மெல்ல குறைஷிகள் இவர்களையும் மற்ற முஸ்லிம்களையும் கடுமையாக வேதனை செய்தனர். அவர்களது நெருங்கிய உறவினர்களும் கூட அவர்களுக்குக் கொடுமை செய்தனர். இந்நிலையில் மறுமுறையும் ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செல்லுங்கள் என தங்களது தோழர்களுக்கு ஆலோசனை கூற வேண்டிய கட்டாயம் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது.

இரண்டாவது ஹிஜ்ரா;
முஸ்லிம்கள் பெருமளவில் ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செல்ல ஆயத்தமானார்கள். ஆனால் இந்த இரண்டாவது ஹிஜ்ரா முந்திய ஹிஜ்ராவை விட மிக சிரமமாகவே இருந்தது. முஸ்லிம்களின் இப்பயணத்தை குறைஷிகள் அறிந்து கொண்டதால் அத்திட்டத்தை அழிக்க வேண்டுமென்பதற்காக தீவிரமான முயற்சியில் இறங்கினர். ஆனால், அல்லாஹ்வின் அருளால் பயணம் அவர்களுக்குச் சாதகமாகி, நிராகரிப்பவர்கள் தங்களது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாகவே பயணத்தைத் துதப்படுத்தி ஹபஷா மன்னர் நஜ்ஜாஷியை அடைந்தனர்.
இம்முறை 83 ஆண்களும் 18 அல்லது 19 பெண்களும் ஹபஷா சென்றனர். (சிலர் அம்மார் (ரழி) இப்பயணத்தில் செல்லவில்லை. எனவே, ஆண்களில் 82 நபர்கள்தான் என்றும் கூறுகின்றனர்.) (ஜாதுல் மஆது)

குறைஷியர்களின் சூழ்ச்சி;
முஸ்லிம்கள் தங்களது உயிருக்கும் மார்க்கத்திற்கும் பாதுகாப்புள்ள இடமான ஹபஷாவில் நிம்மதியாக வசிப்பது இணைவைப்பவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவர்களில் நுண்ணறிவும், வீரமுமிக்க அம்ரு இப்னு ஆஸ், அப்துல்லாஹ் இப்னு அபி ரபீஆ ஆகிய இருவரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் நஜ்ஜாஷியையும் அவரது மத குருக்களையும் சந்தித்துப் பேசி, முஸ்லிம்களை நாடு கடத்தும்படி வேண்டுகோள் வைக்கும்போது அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு மதிப்புமிக்க வெகுமதிகளுடன் ஹபஷா அனுப்பி வைத்தனர்.

முதலில் அவ்விருவரும் மத குருக்களிடம் சென்று அவர்களுக்குரிய அன்பளிப்புகளை கொடுத்து முஸ்லிம்களை வெளியேற்றுவதற்காக தகுந்த காரணங்களைக் கூறினர். அந்த மத குருக்களும் அதனை ஏற்று, முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு நஜ்ஜாஷியிடம் ஆலோசனை கூறுவோம் என்று ஒப்புக் கொண்டனர். பிறகு அவ்விருவரும் நஜ்ஜாஷியிடம் வந்து அவருக்குரிய அன்பளிப்புகளைச் சமர்ப்பித்து அவரிடம் இது குறித்து பேசினர்.

'அரசே! தங்கள் நாட்டுக்கு சில அறிவற்ற வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்களது இனத்தவர்களின் மார்க்கத்தைவிட்டு வெளியேறிவிட்டனர். உங்களது மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் உங்களுக்கும் நமக்கும் தெரியாத ஒரு புதிய மார்க்கத்தை பின்பற்றுகின்றனர். இவர்களது இனத்திலுள்ளவர்கள் அதாவது இவ்வாலிபர்களின் பெற்றோர்கள், பெற்றோர்களின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள் அனைவரும் இவர்களை அழைத்து வருவதற்காக எங்களை இங்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் இவர்களை நன்கு கண்காணிப்பார்கள்பாதுகாப்பார்கள். அவர்களைப் பற்றி இவர்கள் கூறிய குறைகளை, நிந்தனைகளை அவர்களே நன்கறிந்தவர்கள். ஆகவே, நீங்கள் அவர்களை எங்களுடன் திருப்பி அனுப்பிவிடுங்கள்!" என்று கூறினர்.

 உடனே அங்கிருந்த மத குருக்களும் 'அரசே! இவ்விருவரும் உண்மைதான் கூறுகின்றனர். அவர்களை இவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்களது இனத்தவர்களிடம் இவர்கள் அவர்களை அழைத்து செல்வார்கள்" என்றனர்.
ஆனால், பிரச்சனையைத் தீர விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து நஜ்ஜாஷி முஸ்லிம்களை அவைக்கு வரவழைத்தார். எதுவாக இருப்பினும் உண்மையே சொல்ல வேண்டும் என்ற ஒரே முடிவில் முஸ்லிம்கள் அங்கு சென்றனர்.

முஸ்லிம்களிடம் 'உங்களது இனத்தை விட்டுப் பிரிந்து எனது மார்க்கத்தையும் மற்றவர்களின் மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் புதுமையான மார்க்கத்தை ஏற்றிருக்கிறீர்களே! அது என்ன மார்க்கம்?" என்று நஜ்ஜாஷி கேட்டார்.
முஸ்லிம்களின் பேச்சாளராக இருந்த ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரழி) பதில் கூறினார்கள்: '

அரசே! நாங்கள் அறியாமைக் காலத்தில் இருந்தோம். சிலைகளை வணங்கினோம். இறந்த பிராணிகளைச் சாப்பிட்டோம். மானக்கேடான காரியங்களைச் செய்தோம். உறவுகளைத் துண்டித்து அண்டை வீட்டாருக்கு கெடுதிகள் விளைவித்து வந்தோம். எங்களிலுள்ள எளியோரை வலியோர் விழுங்கி வந்தனர் (அழித்து வந்தனர்.) இப்படியே நாங்கள் வாழ்ந்து வரும்போதுதான் எங்களில் உள்ள ஒருவரையே அல்லாஹ் எங்களுக்குத் தூதராக அனுப்பினான்.

அவரது வமிசத்தையும், அவர் உண்மையாளர், நம்பகத்தன்மை மிக்கவர், மிக ஒழுக்கசீலர் என்பதையும் நாங்கள் நன்கு அறிவோம். நாங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். நாங்களும் எங்களது மூதாதையர்களும் வணங்கி வந்த கற்சிலைகள், புனித ஸ்தலங்கள் போன்றவற்றிலிருந்து நாங்கள் விலக வேண்டும். உண்மையே உரைக்க வேண்டும். அமானிதத்தை நிறைவேற்ற வேண்டும். உறவினர்களோடு சேர்ந்து வாழவேண்டும். அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் தடைசெய்தவற்றையும் கொலைக் குற்றங்களையும் விட்டு விலகிவிடவேண்டும் என அத்தூதர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.

மேலும் மானக்கேடானவைகள், பொய் பேசுதல், அனாதையின் சொத்தை அபகரித்தல், பத்தினியான பெண்கள்மீது அவதூறு போன்றவற்றிலிருந்து எங்களைத் தடுத்தார். அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு இணைவைக்கக் கூடாது தொழ வேண்டும். ஏழை வரி (ஜகாத்து) கொடுக்க வேண்டும். நோன்பு நோற்க வேண்டும் என்றும் அத்தூதர் எங்களுக்கு கட்டளையிட்டார் (ஜஅஃபர் இன்னும் பல இஸ்லாமிய கடமைகளைப் பற்றிய விவரங்களை கூறினார்.)

நாங்கள் அவரை உண்மையாளராக நம்பினோம். அவரை விசுவாசித்தோம். அவர் எங்களுக்கு அறிமுகப்படுத்திய அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றினோம். அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம். அவனுக்கு இணை வைப்பதை விட்டுவிட்டோம். அவன் எங்களுக்கு விலக்கியதிலிருந்து விலகிக் கொண்டோம். அவன் எங்களுக்கு ஆகுமாக்கியதை அப்படியே ஏற்றுக் கொண்டோம். இதனால் எங்களது இனத்தவர் எங்கள் மீது அத்துமீறினர். எங்களை வேதனை செய்தனர். அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்டு சிலைகளை வணங்க வேண்டும். முன்பு போலவே கெட்டவைகளைச் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தித்து எங்களை எங்களது மார்க்கத்திலிருந்து திருப்ப முயற்சித்தனர். எங்களை அடக்கி அநியாயம் செய்து நெருக்கடியை உண்டாக்கி எங்களது மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கும் மார்க்க(மத) சுதந்திரத்துக்கும் அவர்கள் தடையானபோது உங்களது நாட்டுக்கு நாங்கள் வந்தோம். உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். உங்களிடம் தங்குவதற்கு விருப்பப்பட்டோம். அரசே! எங்களுக்கு இங்கு அநீதி இழைக்கப்பட மாட்டாதென்று நம்புகிறோம்" என இவ்வாறு ஜஅஃபர் (ரழி) கூறி முடித்தார்.

'அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர் கொண்டு வந்த ஏதாவது உம்மிடம் இருக்கிறதா?" என்று ஜஅஃபடம் நஜ்ஜாஷி வினவினார். அதற்கு ஜஅஃபர் 'ஆம்! இருக்கின்றது" என்றார். நஜ்ஜாஷி, 'எங்கே எனக்கு அதை காட்டு" என்றார். காஃப்-ஹா-யா-ஐன்-ஸாத் எனத் தொடங்கும் 'மர்யம் எனும் அத்தியாயத்தின் முற்பகுதியை ஜஅஃபர் (ரழி) ஓதிக் காண்பித்தார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! தாடி நனையும் அளவு நஜ்ஜாஷி அழுதார். அவையில் உள்ளவர்களும் ஜஅஃபர் (ரழி) ஓதியதைக் கேட்டு தங்களின் கையிலுள்ள ஏடுகள் நனையுமளவு அழுதனர். பிறகு நஜ்ஜாஷி, இதுவும் நபி ஈஸா (அலை) கொண்டு வந்த மார்க்கமும் ஒரே மாடத்திலிருந்து வெளியானது
(முஸ்லிம்களை அழைக்க வந்த இருவரையும் நோக்கி) 'நீங்கள் இருவரும் சென்று விடுங்கள். உங்களிடம் நான் இவர்களை ஒப்படைக்கமாட்டேன்" என்று கூறினார்.

அவையில் இருந்த எவரும் அவ்விருவரிடமும் பேசுவதற்குத் தயாராகவில்லை.
அவ்விருவரும் வெளியேறி வந்தவுடன் அம்ர் இப்னு ஆஸ் தமது நண்பர் அப்துல்லாஹ் இப்னு அப+ரபீஆவிடம் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர்களை அடியோடு வேரறுப்பதற்குண்டான வேலையை நான் நாளை செய்வேன்" என்று கூறினார். 'ஆனால் அப்படி செய்துவிடாதே! அவர்கள் நமக்கு மாறு செய்தாலும் நமது இரத்த பந்தங்களே ஆவார்கள்" என்று அப்துல்லாஹ் கூறினார். ஆனால், அம்ரு தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

மறுநாள் அம்ரு நஜ்ஜாஷியிடம் வந்து 'அரசே! இவர்கள் ஈஸாவின் விஷயத்தில் அபாண்டமான வார்த்தையை கூறுகிறார்கள்" என்று கூறினார். 'அப்படியா! அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்" என்றார் நஜ்ஜாஷி. இதை அறிந்தவுடன் சற்று பயமேற்பட்டாலும் உண்மையே சொல்ல வேண்டும் என்ற முடிவுடன் முஸ்லிம்கள் அவைக்கு வந்தனர். நஜ்ஜாஷி அவர்களிடம் அது பற்றி விசாரணை செய்தார்.

'எங்களது நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கூறியதைத்தான் நாம் அவர் விஷயத்தில் கூறுகிறோம்: அவர் அல்லாஹ்வின் அடிமை அவனது தூதர். அவனால் உயிர் ஊதப்பட்டவர். கண்ணியமிக்க கன்னிப்பெண் மர்யமுக்கு அல்லாஹ்வின் சொல்லால் பிறந்தவர்" என்று ஜஅஃபர் (ரழி) கூறினார்.
நஜ்ஜாஷி கீழேயிருந்து ஒரு குச்சியை எடுத்து 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! மர்யமின் மகன் ஈஸா (அலை) இக்குச்சியின் அளவுகூட நீ கூறியதைவிட அதிகமாக கூறியதில்லை" என்றார். இதைக் கேட்ட அவரது மத குருமார்கள் முகம் சுழித்தனர். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் முகம் சுழித்தாலும் இதுவே உண்மை" என்று நஜ்ஜாஷி கூறிவிட்டார்.

பிறகு நஜ்ஜாஷி முஸ்லிம்களை நோக்கி 'நீங்கள் செல்லலாம்! எனது பூமியில் நீங்கள் முழு பாதுகாப்புப் பெற்றவர்கள். உங்களை ஏசியவர் தண்டனைக்குரியவர். தங்கத்தின் மலையை எனக்கு கொடுத்தாலும் உங்களைத் துன்புறுத்த நான் விரும்பமாட்டேன்" என்று கூறினார். தனது அவையில் உள்ளவர்களிடம் அவ்விருவர்கள் கொண்டு வந்த அன்பளிப்புகளை அவர்களிடமே திரும்ப கொடுத்து விடுங்கள். எனக்கு அதில் எவ்வித தேவையும் இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் முன்னர் பறிபோன எனது ஆட்சியை எனக்கு மீட்டுத் தந்தபோது என்னிடமிருந்து அவன் லஞ்சம் வாங்கவில்லை. எனவே, நான் அவன் விஷயத்தில் லஞ்சம் வாங்குவேனா? எனக்கு எதிராக அல்லாஹ் கிளர்ச்சியாளர்களுக்கு உதவாதபோது அவனுக்கு எதிராக நான் பிரச்சனையாளர்களுக்கு உதவுவேனா? (எனக்கு எதிராக என் எதிரிகளுக்கு அவன் உதவி செய்யாதபோது அவனுக்கு எதிராக நான் அவனது எதிரிகளுக்கு உதவி செய்வேனா?)" என்று கூறினார்.


இச்சம்பவத்தை அறிவிக்கும் உம்மு ஸலமா (ரழி) கூறுவதாவது: அவ்விருவரும் அங்கிருந்து கேவலப்பட்டு வெளியேறினர். அவர்களது அன்பளிப்புகளும் திரும்ப கொடுக்கப்பட்டன. நாங்கள் சிறந்த நாட்டில் சிறந்த தோழமையில் அவரிடம் தங்கியிருந்தோம். (இப்னு ஹிஷாம்)

தொடரும்...


இறைவழியில் தியாகப்பயணம்.[பாகம்2] ...[மறுபதிப்பு]

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.
முதல் பாகத்தில் சத்திய சகாபாக்கள்  அபிசீணியாநோக்கி தியாகப்பயணம் மேற்கொண்டதை அறிந்தோம். இந்த கட்டுரையில் இஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்ப்படுத்திய மதீனா ஹிஜ்ரத் பயணம் பற்றி சில முக்கிய விசயங்களை அறிந்துகொள்வோம்.

ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செய்த முஸ்லிம்களைத் திரும்பக் கொண்டு வருவதில் தோல்வியுற்ற இணைவைப்பவர்கள் கடுங்கோபத்தாலும் குரோதத்தாலும் பொங்கி எழுந்தனர். மக்காவில் மீதமிருந்த முஸ்லிம்களின் மீது தங்களது அட்யூழியங்களைக் கட்டவிழ்த்து விட்டதுடன் நபி (ஸல்) அவர்களுக்கும் கெடுதிகள் பல செய்யத் துவங்கினர். அவர்களின் செயல்பாடுகளைக் கவனிக்கும்போது அவர்களின் எண்ணப்படி இக்குழப்பத்திற்கு வேராக இருந்த நபி (ஸல்) அவர்களை ஒழித்துக் கட்டவே அவர்கள் முயற்சி செய்தனர் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.


ஹிஜ்ரா செய்தவர்கள் போக மக்காவில் முஸ்லிம்கள் மிகக் குறைவாகவே எஞ்சி இருந்தார்கள். அவர்களில் சிலர் சரியான பக்க பலத்துடனும் கோத்திர பாதுகாப்புடனும் இருந்தார்கள். மற்றும் சில முஸ்லிம்கள் சிலரின் அடைக்கலத்திலும் பாதுகாப்பிலும் இருந்தனர். ஆனால், எவரும் தங்களது இஸ்லாமை வெளிப்படுத்தாமல் மறைத்தும், வம்பர்களின் கண்களிலிருந்து முடிந்த அளவு மறைந்தும் ஒதுங்கியும் வாழ்ந்தனர். இவர்கள் எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்த போதிலும் நிராகரிப்பவர்களின் தொந்தரவிலிருந்து முழுமையாகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.

இந்நிலையில்தான் அல்லாஹ்,
فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ
ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!15:94என்ற வசனத்தை இறக்கியவுடன்
நபியவர்கள் தன்னுடைய பிரச்சாரத்தை வெளிப்படையாக செய்ய ஆரம்பித்தவுடன் நபியவர்களுக்கும்,ஏனைய சகாபாக்களுக்கும் பல்வேறு இன்னல்களை மக்கத்து குறைசிகள் தந்தார்கள் ஒருகட்டத்தில் குறைசிகளின் தொந்தரவால் அபூபக்கர்[ரலி]அவர்கள் ஹபஷாவை நோக்கி ஹிஜ்ரத் செய்ய தீர்மானித்தார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;

எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாகவே என் பெற்றோர் முஸ்லிம்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் பகலின் இரண்டு ஓரங்களான காலையிலும் மாலையிலும் எங்களிடம் வராமல் ஒரு நாளும் கழிந்தது இல்லை. முஸ்லிம்கள் (எதிரிகளின் கொடுமைகளால்) சோதனைக் குள்ளாக்கப்பட்டபோது, அபூ பக்ர்(ரலி) தாயகம் துறந்து அபிஸினியாவை நோக்கி சென்றார்கள். 'பர்குல் ஃம்மாத்' எனும் இடத்தை அவர்கள் அடைந்தபோது அப்பகுதியின் தலைவர் இப்னு தம்னா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களிடம், 'எங்கே செல்கிறீர்?' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி) 'என் சமுதாயத்தவர் என்னை வெளியேற்றிவிட்டனர்; எனவே பூமியில் பயணம் (செய்து வேறுபகுதிக்குச்) சென்று என் இறைவனை வணங்கப் போகிறேன்! என்று கூறினார்கள். அதற்கு இப்னு தம்னா, 'உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது' வெளியேற்றப்படவும் கூடாது; வெளியேற்றப்படவும்கூடாது! ஏனெனில் நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர்; உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்; பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர்; விருத்தினர்களை உபசரிக்கிறீர். எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன்! எனவே, திரும்பி உம்முடைய ஊருக்குச் சென்று இறைவனை வணங்குவீராக!' எனக் கூறினார்.
[ஹதீஸ் சுருக்கம்,நூல்;புஹாரி,எண் 2297 ]

இதற்கிடையில் நபியவர்கள் தாயிப் போன்ற சுற்றுப்புறங்களில் தன்னுடைய அழைப்புப்பணியை விரிவுபடுத்தியதோடு,ஹஜ்ஜுடைய காலம் நெருங்கியபோது மக்கள் அனைவரும் பல திசைகளிலிருந்து ஹஜ்ஜு கடமையை நிறைவேற்றுவதற்காக மக்காவிற்கு வந்த வண்ணமிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு கோத்திரத்திற்கும் சென்று அவர்களுக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்தி, அதன்பக்கம் அழைப்புக் கொடுத்தார்கள்.

நபித்துவத்தின் நான்காவது ஆண்டிலிருந்து இப்படித்தான் அம்மக்களை இஸ்லாமின் பக்கம் அழைத்து வந்தார்கள். ஆனால், இந்த பத்தாவது ஆண்டு மேலும் ஒரு கோரிக்கையையும் அவர்களுக்கு முன் வைத்தார்கள். அதாவது, நான் அல்லாஹ்வின் மார்க்கத்தை எடுத்து வைப்பதற்கு எனக்கு இடம் கொடுத்து உதவி செய்து எதிரிகளிடமிருந்து எனக்கு பாதுகாப்பு அளியுங்கள் என்று அம்மக்களிடம் கேட்டுக்கொண்டார்கள்.

அடுத்து நபி (ஸல்) மினாவில் அகபா என்ற இடத்திற்கு சென்றபோது அங்கு சில ஆண்களின் பேச்சுக் குரல் கேட்டவுடன் அவர்களிடம் சென்று பேச விரும்பினார்கள். அவர்கள் கஸ்ரஜ் கிளையாரைச் சேர்ந்த மதீனாவில் உள்ள ஆறு இளைஞர்களாவர்.
அவர்கள்,
1) அஸ்அது இப்னு ஜுராரா (நஜ்ஜார் குடும்பம்)
2) அவ்ஃப் இப்னு ஹாரிஸ் (நஜ்ஜார் குடும்பம்)
3) ராஃபிஃ இப்னு மாலிக் (ஜுரைக் குடும்பம்)
4) குத்பா இப்னு ஆமிர் இப்னு ஹதீதா (ஸலமா குடும்பம்)
5) உக்பா இப்னு ஆமிர் இப்னு நாபி (ஹராம் இப்னு கஅப் குடும்பம்)
6) ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஆப் (உபைத் இப்னு கனம் குடும்பம்)

மதீனாவாசிகளுக்கும் யூதர்களுக்கும் சண்டை மூளும்போது 'கடைசி காலத்தில் ஒரு நபி வருவார். அவருடன் சேர்ந்து நாங்கள் உங்களைக் கடுமையாகக் கொலை செய்வோம்" என்று அந்த யூதர்கள் மதீனாவாசிகளைப் பார்த்துக் கூறுவார்கள். இவ்வாறு யூதர்கள் கூறுவதை பலமுறை மதீனாவாசிகள் கேட்டிருந்தனர். எனவே, இப்போது நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்தியபோது அவர்களை அறிந்து கொள்வது மதீனாவாசிகளுக்கு மிக எளிதாக இருந்தது. (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

இவர்கள் மதீனாவுக்கு இஸ்லாமிய அழைப்பை எடுத்துச் சென்றார்கள். அங்கு மதீனாவாசிகள் ஒவ்வொருவரின் வீட்டிலும் நபி (ஸல்) அவர்கள் பற்றியே பேசப்பட்டது. (இப்னு ஹிஷாம்)

இதை அடுத்து நபித்துவத்தின் பனிரெண்டாம் ஆண்டு ஹஜ் காலத்தில் (கி.பி. 621 ஜூலையில்) மதீனாவிலிருந்து நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் (பைஆ) செய்வதற்காக 15 நபர்கள் வந்திருந்தனர். முந்தைய ஆண்டு வந்த ஆறு நபர்களில் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஆபைத் தவிர மற்ற ஐந்து பேர்களும், அவர்களுடன் புதிதாக ஏழு நபர்களும் இச்சமயம் வந்திருந்தனர். அந்த ஏழு நபர்களில் முந்திய ஐந்து பேர் கஸ்ரஜ் கிளையையும் பிந்திய இருவர் அவ்ஸ் கிளையையும் சேர்ந்தவர்கள்.
1) முஆத் இப்னு ஹாரிஸ் (ரழி) - நஜ்ஜார் குடும்பம்.
2) தக்வான் இப்னு அப்துல் கைஸ் (ரழி) - ஜுரைக் குடும்பம்.
3) உபாதா இப்னு ஸாமித் (ரழி) - கன்ம் குடும்பம்.
4) யஜீது இப்னு ஸஃலபா (ரழி) -கன்ம் குடும்ப நண்பர்களில் ஒருவர்.
5) அப்பாஸ் இப்னு உபாதா இப்னு நழ்லா (ரழி) - ஸாலிம் குடும்பம்.
6) அபுல் ஹைஸம் இப்னு தய்ம்ஹான் (ரழி) -அப்துல் அஷ்ஹல் குடும்பம்.
7) உவைம் இப்னு ஸாம்தா (ரழி) - அம்ர் இப்னு அவ்ஃப் குடும்பம்.
இவர்கள் அனைவரும் மினாவில் அகபா என்ற இடத்திற்கு அருகில் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்தார்கள். (இப்னு ஹிஷாம்)

நபியவர்களிடம் பைஅத் செய்த மேற்கண்டவர்களோடு நபி (ஸல்) தனது முதல் இஸ்லாமிய அழைப்பாளரை மதீனாவிற்கு அனுப்பினார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்புவதற்கும் மார்க்க ஞானங்களை கற்றுக் கொடுப்பதற்காகவும் இந்த அழைப்பாளர் அனுப்பப்பட்டார். இப்பணிக்காக முதலாவதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவரான முஸ்அப் இப்னு உமைர் (ரழி) என்ற வாலிபரை நபி (ஸல்) தேர்ந்தெடுத்தார்கள். இந்தசகாபிதான் முதன்முதலில் மதினாவில் கால்வைத்த முஹாஜிர் ஆவார்.

இப்படி நபியவர்களின் அசுரவளர்ச்சியை பொறுக்கமுடியாத குறைஷிகள் உச்சகட்டமாக நபியவர்களை கொலைசெய்வது என தீர்மானித்தார்கள்.இதற்காக அபூஜஹ்ல்   உள்ளிட்ட குறைஷிகளின் முக்கியப்பிரமுகர்களின் ஆலோசனைக்கூட்டத்தில் அபூஜஹ்ல்,

'அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் ஒரு யோசனை இருக்கின்றது. அது உங்களுக்குத் தோன்றியிருக்காது" என்று அபூஜஹ்ல் கூற, 'அபுல் ஹிகமே! அது என்ன யோசனை" என்றனர் மக்கள். அதற்கு அபூஜஹ்ல் 'நாம் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் நல்ல வீரமிக்க, குடும்பத்தில் சிறந்த, ஒரு வாலிபரைத் தேர்வு செய்து, ஒவ்வொரு வாலிபனுக்கும் மிகக் கூர்மையான வாள் ஒன்றையும் கொடுப்போம். அவர்கள் அனைவருமாக சேர்ந்து அவரை ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கொன்றுவிடட்டும். அவர் இறந்துவிட்டால் நாம் நிம்மதி பெருமூச்சு விடலாம். கொலை செய்தவர்கள் பல கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவரது உறவினர்களான அப்து மனாஃப் கிளையினர் பழிக்கு யாரையும் கொல்ல முடியாது. முழு அரபு சமுதாயத்தினரையும் பகைத்துக் கொண்டு அப்து மனாஃப் கிளையினர் நம்மீது போர் தொடுக்க முடியாது. எனவே, கொலைக்குப் பகரமாக அபராதத் தொகையை நிர்பந்தமாக ஏற்றுக் கொள்வார்கள். நாமும் அவர்களுக்கு அந்த அபராதத்தைக் கொடுத்து விடலாம்" என்று அரக்கன் அபூஜஹ்ல் கூறிமுடித்தான்.
நஜ்து தேச அயோக்கியக் கிழவன் (அவன்தான் இப்லீஸ்) இதைக் கேட்டுவிட்டு 'ஆஹா! இதல்லவா யோசனை! இதுதான் சரியான யோசனை! இதைத் தவிர வேறெதுவும் சரியான யோசனையல்ல" என்று கூறினான். (இப்னு ஹிஷாம்)


மதீனா ஹிஜ்ரத்திற்கான அல்லாஹ்வின் அனுமதி;


குறைஷிகளின் சதித்திட்டத்தை நபி (ஸல்) அவர்களிடம் அறிவிப்பதற்காக அல்லாஹ்வின் புறத்திலிருந்து வானவர் ஜிப்ரீல் இறங்கி வந்தார். 'நீங்கள் ஹிஜ்ரா செய்ய அல்லாஹ் அனுமதி கொடுத்து விட்டான். அதற்குரிய நேரத்தையும் நிர்ணயம் செய்துள்ளான். குறைஷிகளின் இத்திட்டத்தை முறியடிப்பதற்குரிய வழியையும் தெளிவுபடுத்தி இருக்கின்றான். எனவே, இன்று இரவு நீங்கள் வழக்கமாக தூங்கும் விரிப்பில் தூங்க வேண்டாம்" என்று வானவர் ஜிப்ரீல் கூறினார். (இப்னு ஹிஷாம்)


அபூபக்கர்[ரலி]அவர்களுடன் நபிகளார் ஆலோசனை;


ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;  நபி(ஸல்) அவர்கள் (மக்காவில் இருந்த காலத்தில்) காலையிலோ மாலையிலோ என் தந்தை அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டிற்கு வராமல் இருந்த நாள்கள் மிகக் குறைவாகவே இருக்கும்! மதீனாவிற்கு (ஹிஜ்ரத் செய்து) புறப்பட நபி(ஸல்) அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டபோது, நண்பகலில் நபி(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. நபி(ஸல்) அவர்கள் வந்திருக்கும் விஷயம் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அபூ பக்ர்(ரலி) 'புதிதாக ஏதோ பிரச்சினை ஏற்பட்டிருப்பதால் தான், இந்நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் நம்மிடம் வந்திருக்கிறார்கள்!" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்ததும், 'உங்களுடன் இருப்பவர்களை வெளியேற்றுங்கள்!" என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அஸ்மா, ஆயிஷா ஆகிய என்னுடைய இரண்டு புதல்வியர் மட்டுமே உள்ளனர்!" என்று அபூ பக்ர்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(மதீனாவிற்குப்) புறப்பட (ஹிஜ்ரத் செய்ய) எனக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது உமக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! '(தாங்கள் புறப்படும் (ஹிஜ்ரத்தின்)போது நானும் தங்களுடன் வர விரும்புகிறேன்!" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் என்னுடன் வருதை நானும் விரும்புகிறேன்!" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் என்னுடன் வருவதை நானும் விரும்புகிறேன்!" என்றார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நான் பயணத்திற்காகத் தயார்படுத்தி வைத்திருக்கும் இரண்டு ஒட்டகங்கள் என்னிடம் உள்ளன் அவற்றில் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்!' எனக் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அதை நான் விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்!" என்றார்கள்.
நூல்;புஹாரி,எண் 2138


தனது தோழருடன் தியாகப்பயணத்தை தொடங்கிவிட்ட நபி[ஸல்];


ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்; (மக்காவைத் துறந்து, ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்குச் சென்ற போது) நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் பனூ அப்து இப்னு அதீ குலத்தைச் சேர்ந்த ஒருவரை (வழிகாட்டியாகக்) கூலிக்கு அமர்த்தினார்கள். அவர் தேர்ந்த வழிகாட்டியாக இருந்தார். அம்மனிதர் ஆஸ்பின் வாயிலின் குடும்பத்தாரிடம் உடன்படிக்கை செய்திருந்தார். மேலும், அவர் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் மார்க்கத்தில் இருந்தார். நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் அவரை நம்பித் தம் ஒட்டகங்களை அவரிடம் ஒப்படைத்து, மூன்று நாள்கள் கழித்து ஸவ்ர் குகையில் வந்து சேரும்படி கூறினார்கள். அம்மனிதர் மூன்றாம் நாள் காலையில் ஒட்டகங்களுடன் அவர்களிடம் வந்தார். உடனே, நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் (மதீனாவை நோக்கிப்) புறப்பட்டார்கள். அவர்களுடன் ஆமிர் இப்னு ஃபுஹைரா என்பாரும் சேர்ந்து கொண்டார். பனூதீல் கூட்டத்தைச் சேர்ந்த அந்த வழிகாட்டி அம்மூவரையும் மக்காவிற்குக் கீழே கடற்கரை வழியாக அழைத்துச் சென்றார்.
நூல்;புஹாரி,எண் 2263


பயனத்திபோது நபியவர்கள் பட்ட கஷ்டங்களும், மதினாவில் நடந்த முக்கிய நிகழ்வுகளும் ...
தொடரும்....

இறைவழியில் தியாகப்பயணம்[பாகம்3]...[மறுபதிப்பு]


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


தனது ஆருயிர் தோழர் அபூபக்கர்[ரலி] அவர்களுடனும், ஆமிர் இப்னு ஃபுஹைரா[ரலி]  அவர்கள் சகிதமாக அருள்செய்யப்பட்ட மதினா நோக்கி நபியவர்கள் பயணப்பட்ட செய்தி மக்கத்து குறைஷிகளுக்கு எட்டியது.இதற்கிடையில் நபி[ஸல்]அவர்களும், அபூபக்கர்[ரலி] அவர்களும் ஸவ்ர் என்ற குகையை அடைந்துவிட்டனர் அந்த குகையில் நபியவர்கள் ஓய்வெடுப்பதற்காக அபூபக்கர்[ரலி] சுத்தம் செய்திட அபூபக்கர்[ரலி] அவர்களின் மடிமீது தலைவைத்து மாநபி[ஸல்]அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். மறுபுறம் குறைஷிகள் முஹம்மது விசயத்தில் நாம் தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறோமே என மனம் புழுங்கி அவசர ஆலோசனை நடத்துகிறார்கள்.

ஆலோசனை முடிவில்,
'நபி (ஸல்) அபுபக்ர் (ரழி) இவ்விருவரில் ஒவ்வொருவரின் தலைக்கும் நூறு ஒட்டகங்கள் பரிசாக அளிக்கப்படும் இவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ யார் மக்காவிற்கு கொண்டு வருகிறார்களோ அவர் யாராக இருப்பினும் சரிஅவருக்கு இந்தப் பரிசுஉண்டு" என்று பொது அறிவிப்பு செய்தனர். (ஸஹீஹுல் புகாரி).

எதிரிகள் நபி (ஸல்) அவர்களைத் தேடி அலைந்து அவர்கள் தங்கியிருந்த குகைவாசலை வந்தடைந்தனர். அபூபக்ர் (ரழி) கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுடன் குகையில் தங்கியிருந்தபோது எனது தலையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது எதிரிகளின் பாதங்கள் தெரிந்தன. நான் அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் யாராவது தங்களது பார்வையைத் தாழ்த்தினால் நம்மை பார்த்துவிடுவார்களே" என்று கூறினேன். நபி (ஸல்) 'அபூபக்ரே! சும்மா இருங்கள். நம் இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கின்றான்." என்று கூறினார்கள்.(ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய அல்லாஹ் மாபெரும் அற்புதமாகும் இது. சில எட்டுகளே நபி (ஸல்) அவர்களுக்கும் எதிரிகளுக்கும் இருந்தன. எனினும், தேடி வந்தவர்களால் நபி (ஸல்) அவர்களையும், அவர்களுடைய தோழரையும் பார்க்க முடியாமல் திரும்பிவிட்டனர்.

நபியவர்களும், அபூபக்கர்[ரலி]அவர்களும், ஸவ்ர் குகையிலிருந்து வெளியேறி வழிகாட்டியின் வழிகாட்டுதல்படி மதினா நோக்கி சென்று கொண்டிருக்கையில், அபூபக்கர்[ரலி] அவர்களை அறிந்திருந்த, நபியவர்களை அறிந்திராத சிலர் அபூபக்கர்[ரலி]இடம் நபியவர்களை காட்டி, யார் இவர் என வினவ இக்கட்டான சூழ்நிலையில் அதே நேரத்தில் பொய்யுரைக்காமல் அபூபக்கர்[ரலி] அவர்கள், இவர்கள்[நபி ஸல்]எனது வழிகாட்டி என்றார்கள். கேட்டவர்களோ எதோ பாதை காட்டுபவர் போலும் என எண்ணி சென்றுவிட்டனர்.[புஹாரி]

மேலும்,குறைஷிகளின் பரிசுக்கு ஆசைப்பட்ட சுரக்கா இப்னு மாலிக் என்பவர் நபியவர்களை பிடிக்கும் நோக்கில், நபியவர்கள் பயணித்த திசையை அறிந்து நபியவர்களை நெருங்கும் வேளையில், நடந்த விஷயத்தை சுரக்கா இப்னுமாலிக் வார்த்தையிலேயே  கேளுங்கள்;

நபி (ஸல்) அவர்களுக்கு நெருக்கத்தில் வந்தவுடன் எனது குதிரை தடுமாறவே நான் குதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டேன். பின்பு எழுந்து, எனது அம்புக் கூட்டிலிருந்து நான் அவர்களுக்குத் தீங்கு செய்யட்டுமா? வேண்டாமா? என்று குறிபார்க்கும் எண்ணத்தில் ஓர் அம்பை எடுத்தபோது 'வேண்டாம்" என்ற அம்பு வந்தது. அதில் எனக்கு திருப்தி ஏற்படாததால் மீண்டும் குதிரையில் ஏறி அவர்களை நெருங்க ஆரம்பித்தேன். நபி (ஸல்) ஓதும் சப்தத்தை கேட்கும் அளவிற்கு நான் அவர்களை நெருங்கி விட்டேன். நபி (ஸல்) திரும்பி பார்க்காமல் சென்றார்கள். ஆனால், அபூபக்ரோஅதிகம் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்கள். அப்போது எனது குதிரையின் முன்னங்கால்கள் முழங்கால் வரை பூமியில் புதைந்து கொண்டன. நான் குதிரையிலிருந்து கீழே விழுந்தேன்.

பின்பு எழுந்து, எனது குதிரையை விரட்டவே, அது மிகச் சிரமத்துடன் கால்களை வெளியே எடுத்தது. அது நேராக நின்றவுடன் வானத்திலிருந்து புகை போன்று வந்த ஒரு புழுதி அதன் முன்னங்கால்களில் காயத்தை ஏற்படுத்தியது. நான் என்ன செய்யலாம் என்று குறிபார்க்க அம்பை எடுத்தபோது எனக்குப் பிடிக்காத அம்பே இப்போதும் வந்தது. நான் அவர்களை எனக்கு பாதுகாப்புத் தரக்கோரி கூவி அழைத்தேன். எனது சப்தத்தைக் கேட்டு அவர்கள் நின்று விட்டார்கள். நான் குதிரையில் ஏறி அவர்களிடம் வந்தேன். நான் அவர்களை நெருங்குவதற்கு தடை ஏற்படுவதிலிருந்தே நிச்சயமாக நபி (ஸல்) அவர்களின் மார்க்கம் மிகைத்தே தீரும் என்று உறுதிகொண்டேன்.

நபி (ஸல்) அவர்களிடம் 'உங்களது கூட்டத்தினர் உங்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குச் சன்மானம் உண்டு என அறிவிப்புச் செய்திருக்கிறார்கள். எனவே, மக்கள் உங்களை பிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற வெறியில் உள்ளனர்" என்று கூறினேன். நான் அவர்களிடம் என்னிடம் இருந்த பிரயாண உணவையும், சாமான்களையும் அவர்கள் எடுத்துக் கொள்வதற்காக அவர்கள் முன் வைத்தேன். ஆனால், அவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. மேற்கொண்டு என்னிடம் எதுவும் விசாரிக்கவும் இல்லை. இருப்பினும் 'எங்களின் செய்திகளை மறைத்துவிடு" என்று மட்டும் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் எனக்காக பாதுகாப்புப் பத்திரம் ஒன்று கொடுக்குமாறு கூறினேன். நபி (ஸல்) ஆமிர் இப்னு புஹைராவிடம் கூறவே அவர் எனக்கு சிறிய துண்டுத் தோலில் எழுதிக் கொடுத்தார். பின்பு நபி (ஸல்) சென்று விட்டார்கள். ( புகாரி)

இவ்வாறாக பல்வேறு சோதனைகளை இறைவனின் அற்புதத்தால் வென்று நபியவர்களும் அபூபக்கர்[ரலி] அவர்களும் புனித மதினாவில் பாதம் பதித்தனர். நபியவர்களை கண்ட மதினத்து பெருமக்கள் மட்டில்லா ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்கள்;

நபி(ஸல்) அவர்கள(து வருகைய)ால், மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை நான் கண்டதில்லை. எந்த அளவிற்கென்றால், (மதீனாவிலுள்ள) சிறுமியரும் சிறுவர்களும், 'இதோ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள்' என்று கூறினர். நூல்;புஹாரி,எண் 4941

இவ்வாறாக நபியவர்களின் ஹிஜ்ரத்பயணம் அமைந்தது. மதினாவிற்கு முதன்முதலாக அழைப்பு பணிக்காக அனுப்பபட்ட முஸ்அப் இப்னு உமைர்[ரலி] அவர்களின் தியாத்தை இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்;

கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார்கள்;

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலனளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. அதன் (உலகப்) பலன்களில் எதையுமே அனுபவிக்காமல் சென்றுவிட்டவர்களும் எங்களிடையே உண்டு. முஸ்அப் இப்னு உமைர்(ரலி) அத்தகையவர்களில் ஒருவர் தாம். அவர் உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டார். அவரைக் கஃபனிடுவதற்கு (அவரின்) கோடிட்ட வண்ணத் துணி ஒன்றைத் தவிர வேறெதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தத் துணியினால் நாங்கள் அவரின் தலையை மூடியபோது அவரின் கால்கள் இரண்டும் வெளியே தெரியலாயின் அவரின் கால்கள் இரண்டையும் நாங்கள் மூடியபோது அவரின் தலை வெளியே தெரியலாயிற்று. எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்தத் துணியால் அவரின் தலையை மூடி விடும்படியும் அவரின் கால்கள் இரண்டின் மீதும் 'இத்கிர்' புல்லைச் சிறிது போட்டு (மறைத்து) விடும்படியும் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்ததற்கான இவ்வுலகப்) பலன் கனிந்து அதைப் பறித்து (சுவைத்து)க் கொண்டிருப்பவர்களும் எங்களில் உள்ளனர். நூல்;புஹாரி,எண் 3914

சத்திய மார்க்கத்திற்காக இம்மையை விற்று மறுமையை விலைக்கு வாங்கிய மாநபி[ஸல்] வழியிலும், மகத்தான சகாபாக்கள் வழியிலும் மறுமையை இலக்காகக்கொண்டு தொடரட்டும் நமது பயணம்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
                                                                                                                                    முற்றும்.

வெள்ளி, 26 நவம்பர், 2010

ஆதாரப்பூர்வமான ஹதீஸில் ஆரம்பித்த பீஜேயின் 'தள்ளுபடி' அங்கீகாரம் வரை....

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை புறம்தள்ளவேண்டும் என்பது  ஒட்டுமொத்த அறிஞர்களின் நிலை என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஹதீஸ்களை  பொருந்தாக் காரணம்  கூறி புறந்தள்ளியவர் பீஜே  என்பதையும்  நாடறியும். அவர் இப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் அங்கீகாரத்தில் கைவைக்கும் அளவுக்கு புதிய பரிமானம் எடுத்துள்ளார்.

மார்க்கத்தில் குர்ஆணுக்கு அடுத்தபடியாக அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் சொல்- செயல்- அங்கீகாரம் இவை மூன்றும் பின்பற்றப் படவேண்டியவையாகும். நபியவர்களின் சொல்லில் இல்லாத, செயலில் இல்லாத ஒன்றை, ஒரு நபித்தோழர் செய்கையில் அதை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் தடை செய்யவில்லையாயின் அதுவும் மார்க்கம்தான் என்பது  பீஜேயும் ஒப்புக்கொண்ட உண்மையாகும். ஆனால் இப்போது அதற்கு மாற்றமாக, அல்லாஹ்வின் தூதர்[[ஸல்] அவர்கள் ஒரு விஷயத்திற்கு  அங்கீகாரம் அளித்திருந்தாலும், அந்த விஷயத்தை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் செய்திருந்தாலோ, அல்லது செய்யுமாறு   கட்டளையிருந்தால்தான் மார்க்கமாகும்  என்ற கருத்தை லேசாக திணிக்க முற்படுகிறார்.

இமாமை பின்பற்றும் தொழுகையில், அவர் ஸமி அல்லாஹு லிமன் ஹiதா எனக் கூறும்போது நீங்கள் ரப்பனா வலக்கல் ஹம்து எனக் கூறுங்கள்.
என்பது அல்லாஹ்வின் தூதர்[ஸல்]  அவர்களின் கட்டளையாகும். இந்நிலையில், ஒருநாள்,


நாங்கள் நபி(ஸல்) அவர்களின் பின்னே ஒரு நாள் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியபோது 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒருவர் 'ரப்பனா வ லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி' என்று கூறினார். தொழுது முடித்ததும் 'இந்த வார்த்தைகளைக் கூறியவர் யார்?' என்று நபி(ஸல்) கேட்டார்கள். அந்த மனிதர் 'நான்' என்றார். 'முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதைப் பதிவு செய்வதில் போட்டி போட்டதை கண்டேன்" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
[புகாரி 799 ]

இந்த ஹதீஸில் நபித்தோழர் ஒருவர், இதுவரை நபியவர்கள் கட்டளையிடாத ஒரு வார்த்தையை கூற, அந்த இடத்தில் இந்த வார்த்தை சொல்லக்கூடாது என்று இருக்குமானால், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் தடுத்திருப்பார்கள். ஆனால் அவ்வாறு செய்யாமல் அந்த நபித்தோழர் கூறிய வார்த்தைகளை அங்கீகரிக்கும் வகையில், நீங்கள் கூறிய இந்த வார்த்தையை பதிவு செய்வதில் முப்பதுக்கும் மேற்பட்ட  வானவர்கள் போட்டி போட்டார்கள்   என்று சிலாகித்து சொல்கிறார்கள் என்றால், நபித்தோழரின் அந்த வார்த்தையை, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் அங்கீகரிக்கிறார்கள் என்பது தெளிவு. அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் அங்கீகரித்த அந்த வார்த்தையை  நாமும் இன்று சொல்லலாம் என்பதுதான் மார்க்கம்.


ஆனால் இந்த பீஜே, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் அங்கீகாரத்தை பெற்ற இந்த அமலை மறுப்பதற்காக, முஸ்லிமில் இடம்பெறும் கீழ்கண்ட ஹதீஸை காட்டி, சில சொந்த வியாக்கியானங்களை திணிக்கிறார்.

ஒரு மனிதர் மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகை வரிசையில் சேர்ந்து,

"அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி' (தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் "உங்களில் இவ்வார்த்தைகளை மொழிந்தவர் யார்?'' என்று கேட்டார்கள். மக்கள் (பதிலளிக்காமல்)
அமைதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்),"உங்களில் இதை மொழிந்தவர் யார்? ஏனெனில், அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை'' என்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் "நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில் சேர்ந்தேன். ஆகவே, இவ்வாறு சொன்னேன்'' என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே "இதை எடுத்துச் செல்பவர் யார்' எனும் விஷயத்தில் போட்டியிட்டுக்கொண்டிருந்ததை நான் கண்டேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), முஸ்லிம் (1051)

அந்த மனிதர் ருகூவுக்குப் பின் இதைக் கூற வேண்டும் என்பதற்காக இப்படிச்
சொல்லவில்லை. மாறாக ருகூவு கிடைக்குமோ அல்லது தவறி விடுமோ என்று அவர் மூச்சிறைக்க வேகமாக வருகிறார். அவர் வேகமாக வந்ததால் ருகூவு கிடைத்து விடுகிறது. இந்த மகிழ்ச்சியில் அல்லாஹ்வைப் புகழ்வதற்காகத் தான் மேற்கண்ட வாசகத்தைக் கூறினார் என்பது இதிலிருந்து தெரிகிறது. நமக்கு ஒரு நன்மை கிடைக்கும் போது அதற்கு நன்றி செலுத்துவதற்காக இந்த வாசகத்தைக் கூறுவது மிகச் சிறந்தது என்று தான் இந்த ஹதீஸிலிருந்து சட்டம் எடுக்க வேண்டும்.


ருகூவிற்குப் பிறகு இவ்வாறு கூறுவது மிகச் சிறந்தது என்று சட்டம் எடுப்பது கூடாது. ஏனென்றால் ருகூவிற்குப் பிறகு இதைக் கூற வேண்டும் என்று அந்த நபித்தோழர் நாடவில்லை. இந்த வாசகத்தைக் கூறினால் வானவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு இதை அல்லாஹ்விடம் கொண்டு செல்வதாக நபி (ஸல்) அவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

இந்த வாசகத்தை ருகூவிற்குப் பிறகு சொன்னால் தான் இந்த சிறப்பு கிடைக்குமென்றால் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இப்படிப்பட்ட சிறப்பைப் பெற்றுத் தரும் இந்த வாசகத்தை கூறாமல் இருந்திருக்க மாட்டார்கள். மேலும், இனிமேல் எல்லோரும் இன்று முதல் ருகூவிற்குப் பிறகு அவர் சொன்ன அதே வாசகத்தைத் தான் கூற வேண்டும் என்ற கட்டளையும் நபிகளார் பிறப்பிக்கவில்லை. குறிப்பிட்ட அந்த நபித்தோழராவது ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இந்த வாசகத்தை சொல்லி வந்தார் என்பதற்கும் எந்தச் சன்றையும் நம்மால் காண முடியவில்லை. வானவர்கள் எடுத்துச் செல்ல போட்டி போடுகின்றார்கள் என்று சொல்லக் கூடிய அளவுக்கு சிலாகித்துச் சொன்ன பிறகும் அந்த வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையிலுமோ, அல்லது எப்போதாவது, ஏதாவது ஒரு தொழுகையின் போதோ கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை.

அதாவது நபி[ஸல்] அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அந்த வார்த்தைக்கு, நபியவர்களின் சொல்லிலும் செயலிலும் ஆதாரம் கானக்கிடைக்கததால், அல்லாஹ்வின் தூதரால், அங்கீகரிக்கப்பட்ட  அந்த துஆவை அந்த இடத்தில் சொல்லத் தேவையில்லை என்கிறார். அப்படியாயின் நாம் அவரை நோக்கி ஒரே ஒரு கேள்வியை வைக்கிறோம்.

அதாவது ஒரு நபித்தோழர் மார்க்கத்தில் ஒரு விஷயத்தை செய்து, அந்த நபித்தோழரின் அந்த செயலை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அங்கீகரித்து, அந்த செயலை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் சொல்லிலும், செயலிலும் செயல்படுத்த வில்லையாயின், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் அங்கீகரித்த அமலை விட்டுவிடலாமா?  என்பதற்கு பீஜே பதிலளிக்கவேண்டும்.

அடுத்து, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்ற,
''ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ'' என்ற துஆவை, இமாம் 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா'  என்று கூறியபின் இந்த துஆவையும் கூறலாம் என்று பீஜேயின் மாணவரும், மார்க்க அறிஞருமான சகோதரர் எம்.ஐ.சுலைமான் அவர்கள், தனது 'நபி வழியில் தொழுகை சட்டங்கள்' என்ற நூலில் குறிப்பிடுகிறார். தனது மாணவருக்கு பீஜே அளிக்கும் பதில் என்ன? அவரையும் மார்க்கத்தை விளங்காதவர் என்று கூறப்போகிறாரா? அல்லது
''அது நேற்று- இது இன்று என்று வியாக்கியானம்  அளிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.


ஆக, கடல் அலை கரையை அரிப்பது போன்று, அண்ணனின் ஆய்வு[?] மார்க்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து வருகிறது  என்பதை கண்கூடாக காண்கிறோம். மார்க்கம் முழுமையாக கரைவதற்கு முன்னால், மார்க்க அறிஞர்கள் விழித்துக் கொண்டால் நன்று.

புதன், 24 நவம்பர், 2010

புகைவது நான்! எரிவது நீ...!

அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

இந்த தலைப்பு பார்ப்பவர்களுக்கு புதுமையாக இருக்கலாம். ஆனால் இதில் சொல்லப்படும் தகவல்கள் என்னவோ பழமைதான்.தகவல்கள் என்ன தான் பழமையாக இருந்தாலும் அதில் உள்ள உண்மைகள் எக்காலத்திற்கும் பயனுள்ளவகையாகத்தான் இருக்கும். இறைவனும் முற்காலத்தில் வாழ்ந்த நபிமார்கள், நல்லடியார்கள், ஆகியோரின் வாழ்க்கை குறிப்புகளை நமக்கு ஏன் நினைவூட்டுகிறான் என்றால் அதில் நமக்கு நன்மை இருக்கிறது என்பதற்காகத்தான். எனவே கால வெள்ளத்தால் உண்மைகள் அடித்து செல்லப்பட்டாலும் அது அழியாதது. அதன் அடிப்படையில் புகை என்னும் போதை பழக்கம் குறித்து ஏற்க்கனவே நாம் அறிந்து இருந்தாலும் அது சமூகத்தில் உண்டாக்கும் விளைவுகளால் மீண்டும்,மீண்டும்,நினவு படுத் வேண்டியுள்ளது குறிப்பாக இளசுகளிடம்.



முதலில் புகை பிடித்தல் தொடர்பாகவும்,அது ஏற்ப்படுத்தும் விளைவுகளையும் அறிந்துக்கொண்டு, இஸ்லாத்தின் பார்வையில் அதன் நிலை பாட்டிற்கு செல்வோம்.



ஐரோப்பியரின் வருகை : ஆரம்பத்தில் செவ்விந்தியர்கள் மத்தியில் மட்டும் காணப்பட்டது இந்தப் பழக்கம். வட அமெரிக்காவில் பரவலாக பயிரிடப்பட்டிருந்த புகையிலை, ஐரோப்பியரின் வருகையைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்துக்கும் பரவியது என்பதுதான் இந்த உயிர்க்கொல்லிப் பயிரின் சரித்திரம்.இப்படி ஐரோப்பியர்களால் இறக்குமதி செய்யப்பட்ட நல்ல? பழக்க,வழக்கங்களில் இதுவும் ஒன்று.



ஆறாவது விரல் சிகரட் : புகை! மனிதனுக்கு பகை! என்பது வெறும் ஏட்டளவில் உள்ள வாசகம் தான்.மாறாக நடைமுறையில் நாம் பார்ப்போமேயானால்,அது மனிதனுக்கு நண்பனாகவே திகழ்கிறது.எந்த அளவுக்கு எனில் மனிதனின் ஆறாவது விரலாக புகையிலையை உள்ளடக்கிய அந்த சிகரட் திகழ்கிறது. மனைவி இல்லாமலும் இருந்து விடுவேன் மயக்கமில்லாமல் [புகை] ஒரு வினாடி கூட இருக்கமுடியாது என்று சொல்லும் புகை பிரியர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாதமும் 850 கோடி சிகரெட்டுகள் விற்கப்படுவதாகவும், அதில் 84 கோடி சிகரெட்டுகள் தமிழ்நாட்டில் விற்கப்படுவதாகவும் சிகரெட் நிறுவனங்கள் கூறுகின்றன. இதிலிருந்து மனிதனுக்கு மத்தியில் அது ஏற்ப்படுத்தியிருக்கும் தாக்கத்தையும், எந்த அளவுக்கு மனிதன் அதன் பால் ஈர்க்கப்படுகிறான் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.



புகை பிரியர்களாக மாறிவரும் சிறுவர்கள் : பேனாவையும், பென்சிலையும், பிடிக்க வேண்டிய விரல்கள் சிகரட்டை பிடித்து வருவதுதான் வருத்தப்பட வேண்டிய செய்தி. குறிப்பாக பொருளாதாரத்தில் மேலோங்கியிருக்கும் வளைகுடா போன்ற நாடுகளில் இஸ்லாமிய சிறுவர்கள் இதற்க்கு அடிமை பட்டு இருக்கும் அவல நிலையை அவர்களின் பள்ளிகூடத்தின் அருகில் இருக்கும் பேருந்து நிலையங்களில் காணலாம்.



சிறுவர்கள் அதன் பக்கம் விட்டில் பூச்சிகளாய் ஈர்க்கப் படுவதற்கு காரணம்,அது குறித்த விளைவுகளை அறியாததும் ஏதோ பொழுது போக்கு அம்சமாக அதை கருதுவதாலும் தான்.இது ஒரு பக்கம் இருந்தாலும் புதிய நாகரீகத்தின் தாக்கமும் முக்கிய காரணம் எனலாம். இப்படி காரணங்கள் பலவாறாக இருந்தாலும் அடிப்படை காரணம் என்று ஒன்று இருக்கிறது.அதுதான் பெற்றோர்களின் கவனிபாரின்மை.அவர்களின் கண்காணிப்பும் ,கவனிப்பும் சரிவர அமையுமானால் பெரும்பாலான சிறுவர்களை பாதுக்காத்து விடலாம் .



பெண்களிடம் பெருகிவரும் புகை [போதை ] பழக்கம் : “புகை” என்னும் இந்த போதை பழக்கம் பெண்களிடமும் அதிவேகமாக பரவிவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் அதிகம் புகை பிடிக்கும் பெண்கள் வரிசையில் இந்தியப் பெண்களுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தை அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை சீனாவும் பிடித்துள்ளன.



இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதாகவும், அதில் பாதிக்கும் அதிகமானோர் புகைபிடிப்பதாகவும் கூறுகிறது ஆய்வுகள். அமெரிக்க புற்றுநோய் அமைப்பு மற்றும் உலக நுரையீரல் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் சேர்ந்து புகைபிடிக்கும் பெண்கள் குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, உலகம் முழுவதும் சுமார் 25 கோடி பெண்கள் புகை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். அவர்களில் 22 சதவீதம் பேர் மட்டுமே வளர்ந்த நாடுகளை சேர்ந்தவர்கள்.



இந்த பழக்கம் உள்ளவர்கள் வரிசையில் இந்தியப் பெண்கள் மூன்றாவது இடத்தில் இருக்கின்றனர். இதனால் அவர்கள் அவர்கள் சுமார் 8 ஆண்டுகள் முன்னதாகவே இறந்துவிடுகின்றனர்.



முதலிரண்டு இடங்களை அமெரிக்காவும், சீனாவும் பிடித்துள்ளன. அமெரிக்காவில் 2.3 கோடி பெண்களும், சீனாவில் 1.3 கோடி பெண்களும் புகை பிடிக்கின்றனர். பாக்கிஸ்தானில் பொருத்தவரைக்கும் சுமார் 30 லட்சம் பாகிஸ்தானிய பெண்கள் புகை பிடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.



""தாங்கள் ஆண்களைப் போல எல்லாம் செய்ய வேண்டும் என்கிற நாகரிக மோகம், படித்த பெண்கள் மத்தியில் அதிவேகமாக இந்தியாவில் வளர்ந்து வருவதன் தாக்கம்தான் இது. புகைபிடிப்பதாலும் ஆண்களைப் போல உடையணிவதாலும் ஆண்களுக்கு சமமாகிவிடுவோம் என்கிற கருத்து ஏற்பட்டிருப்பது, அவர்களது உடல்நிலையைப் பாதிக்கும் என்பதுகூடத் தெரியவில்லை. பெண்கள் நலவாரியங்கள் இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை'' என்று ஆதங்கப்படுகிறார்கள் புற்றுநோய் எதிர்ப்புக் கழகத்தினர்.



அறிந்தவர்களிடம் தான் அதிகம் : பொதுவாகவே எழுத படிக்க தெரியாதவர்களிடம் தான் எந்த ஒரு தீய பழக்கமும் பரவும்.காரணம் அதை பற்றிய அறிவு அவர்களிடம் குறைவு என்பதற்குதான்.மாறாக படித்து பட்டம் வாங்கி கிழித்ததாக சொல்பவர்கள், தான் இந்த புகை பிடிக்கும் போதைக்கும்,புகையிலையின் போதைக்கும் அடிமையாகிவருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. படிக்காத கிராமபுரத்தில் உள்ளவர்களிடம் குறிப்பாக பெண்கள் மத்தியில் புகையிலைப் பழக்கம் கணிசமாகக் குறைந்து வருவதாகவும், படித்த, நகர்ப்புற 30 வயதுக்குக் குறைவான பெண்கள் மத்தியில் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இப்படி ஆண்கள், பெண்கள்,சிறுவர்கள்,பெரியவர்கள்,என்று பாகுபாடு இல்லாமல் பெருகி வரும் இந்த போதை பழக்கத்தால் உண்டாகும் விளைவுகளை பார்ப்போம்...



நுரையீரல் பலவீனம் : புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் உடல் உழைப்புத் திறனும் கணிசமாகப் பாதிக்கப்படுவதாகவும் புகைபிடிப்பதால் நுரையீரல் பலவீனப்பட்டு, அந்தப் பழக்கம் உள்ளவர்கள் மற்றவர்களைப் போல விரைந்து நடக்கவோ, மாடிப்படி ஏறவோ முடிவதில்லை மேலும், அவர்களது வேலை நேரத்தில் புகைபிடிப்பதற்காக வெளியில் செல்வதால், எடுத்துக் கொண்ட பணியில் முழுக்கவனமும் செலுத்த முடிவதில்லை.



சிகரெட்டில் உள்ள புகையிலையில் நிக்கோடின் என்ற போதை பொருள் உண்டு. ரத்தத்தில் நேரடியாக கலந்தால் மனிதரை கொல்லத்தக்கது நிகோடின். புகையிலையில் நூற்றுக்கணக்கான வேதிபொருள் உள்ளது. புகைக்கும்போது தோல், நுரையீரலின் உட்பகுதியில் இவை ஒட்டுகிறது. மூச்சுக்குழலில் ஒட்டும் நுண் கிருமிகளையும், தூசிகளையும் அகற்ற முடியாது. இதனால் நாளடைவில் நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உருவாகும். துர்நாற்றம் வீசும் தலைமுடி, கறைபடிந்த பற்கள், இதயநோய், துர்நாற்றம் வீசும் வாய், தோல் சுருக்கமும் ஏற்படும்.



ஆழ்ந்த சுவாசம்: மனிதன் ஒரு நிமிடத்தில் 14-15 முறை மூச்சை இழுக்கிறான். உணர்ச்சிவசப்படும் போது இவ்வேகம் அதிகரிக்கும். உடல் நலம் கெடும். சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டும்.சரியான பயிற்சியால் மூச்சு இழுப்பதை 6-4 முறை என குறைக்கலாம். நுரையீரல் எனும் இயந்திரத்தை நோயிலிருந்து காக்கலாம். நீண்ட நாள் வாழலாம் .



ஆண்மைக்குறைவு : இந்த சிறு போதைக்கு அடிமையானவர்களுக்கு அடுத்த அதிர்ச்ச்சி என்னவென்றால்,ஆண்மையின்மை.புகையிலையில் உள்ள அந்த[நிகோடின்] நச்சு தன்மை விந்தணுக்களின் வீரியத்தை குறைத்து விடுகிறது.இதனால் குழந்தை பாக்கியம் என்பது கேள்விக்குறியாக்கி விடுகிறது.இது கணவன் -மனைவி மத்தியில் கசப்புணர்வை உண்டாக்கி விடுகிறது. குழந்தை இல்லையே என்ற தம்பதிகளின் ஏக்கத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சில மருத்துவர்கள் கறக்க வேண்டிய கரன்சிகளை கச்சிதமாக கறந்து விடுகின்றனர்.மருத்துவமும் கைவிடும் பொழுது சில தம்பதிகளுக்கு மூட நம்பிக்கைகளில் மூழ்கிவிடும் சூழ்நிலையும் , குழந்தை வரம் வேண்டி சாமியார்களை தேடிச்சென்று தங்களின் கர்புகளை இழந்து விடும் சூழ்நிலையும் ஏற்ப்பட்டு விடுகிறது.ஆக நம்மிடம் உள்ள தீய பழக்க வழக்கங்களை சரி செய்து கொண்டாலே இப்படிப்பட்ட பிரச்சனைகளை பெரும் பாலும் தடுத்து விடலாம்.



கருவறை குழந்தைக்கு ஆபத்து : புகைபிடிக்கும் பெண்கள் பிரசவத்தில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதுடன் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் வளர்ச்சி குறைந்து விடுவதாகவும் பெண்களுக்கு குறைபிரசவம், எடை குறைந்த ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அங்கஹீனம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர் .



மூளை மங்கி விடுதல் : இந்த போதைக்கு அடிமையானவர்களை தாக்கும் புதிய நோயினை சமீபத்தில் கண்டுபிடித்து உள்ளனர்.இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் மார்க் வெய்ஸர் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில், புகைக்கு அடிமையானவர்களுக்கு புத்தி கூர்மை குறைகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.அதாவது மூளை மங்கி விடுகிறது.



இஸ்ரேல் ராணுவத்தில் உள்ள 18 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.இந்த ஆய்வில், புகை என்னும் போதைக்கு அடிமையானவர்களை காட்டிலும், மற்றவர்கள் புத்திக் கூர்மையுடன் இருப்பது தெரிய வந்துள்ளது..மற்றவர்களின் புத்தி கூர்மை சராசரி புள்ளி 101 ஆக உள்ள நிலையில், புகை அபிமானிகளின் புத்திக் கூர்மை 94 ஆக உள்ளது.



இவர்களுக்குள் சுமார் 7 புள்ளிகள் வீதம் வித்தியாசம் கண்டறியப்பட்டுள்ளது. .மேலும், ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்டுக்கு மேல் புகைப்பவர்களுக்கு புத்திக் கூர்மையின் அளவு 90 புள்ளிகளாகவும், ஆரோக்கியமான மற்றும் நல்ல மனநிலையில் உள்ளவர்களின் புத்திக் கூர்மை 84 முதல் 116 புள்ளிகள் வரை காணப்படுவதாகவும் ஆய்வுகள் அறிவிக்கின்றன.



இந்திய தேசிய மூளை ஆராய்ச்சி மையம் : புகை பிரியர்களுக்கு மூளை மங்கி விடுகிறது என்ற உண்மையை இஸ்ரேல் பல்கலை கழக ஆய்வு குழுவினர் கண்டறிந்ததை நாம் பார்த்தோம் . புகை பிரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் மத்தியில் விளைந்த விளைவுகளை வைத்து மூளை பாதிப்பை இஸ்ரேல் ஆய்வு குழுவினர் கண்டறிந்தனர்.ஆனால் இந்திய மூளை ஆராய்ச்சி மையமோ! எப்படி?



மூளை பாதிப்படைகிறது!என்று ஆய்வு செய்துள்ளனர் .அதில்,புகைலையில் உள்ள நச்சு தன்மையான நிகோட்டின் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை கோபமூட்டுகிறது.கோபத்தில் கொந்தளித்து போன அவைகள் மத்திய நரம்பு மண்டலத்தில் உள்ள சுகாதாரமான செல்களை தாக்குகின்றன.



இதனால் நரம்பு மண்டலம் பாதிப்படைகிறது. இதனால் பல விதமான நோய்கள் உண்டாகும் சூழ்நிலை உண்டாகிவிடுகிறது.இதன் ஒரு பகுதியாக மூளையிள் உள்ள"மைக்க்ரோசியா"என்ற முக்கிய செல்களும் பாதிப்புக்குலாகிறது.இதை அடுத்து இறுதியாக மூளையும் பாதிப்படைகிறது. என்ற உண்மையை கண்டுபிடித்து உள்ளனர்.



புற்று நோயால் உயிரிழப்பு : புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் 25 விழுக்காடு நபர்கள் தங்களது அதிகமாகச் சம்பாதிக்கும் மத்திய வயதில் உயிரிழப்பு அல்லது கடுமையான நோய்க்கு ஆளாகிறார்கள். இதனால் அவர்களது குடும்பமும், அவர்களது பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.



உலகம் முழுவதும் புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை வரும் 2030ல் 1.7 கோடியைத் தாண்டும் என கணிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது 'எய்ட்ஸ், காசநோய், மலேரியா போன்ற நோய்களை விட புற்றுநோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. உலகில் எட்டு பேர் இறந்தால் அதில் ஒருவர் புற்றுநோயால் பலியாகும் நிலை உள்ளது. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் 1.2 கோடி மக்களுக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.



இனி இஸ்லாம் இது குறித்து என்ன கூறுகிறது என்று காண்போம்...

இறைவனின் எச்சரிக்கை : மது பிரியர்கள் மட்டும் இருந்த அன்றைய காலத்தில் புகை அடிமைகள் இல்லாததால் அது குறித்து நேரிடையான எச்சரிக்கைகளை நம்மால் குர் ஆணிலும் ,ஹதீஸிலும் காணமுடியவில்லை.அதே நேரத்தில் புகை என்னும் போதை பழக்கம் உண்டாக்கும் விளைவுகளை வைத்து பார்க்கும் பொழுது இஸ்லாம் அதை வன்மையாக தடை செய்கிறது என்று அறிந்துக்கொள்ளலாம்.



(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" (நபியே! "தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச் செலவு செய்ய வேண்டும்" என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; "(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்" என்று கூறுவீராக. நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான். 2:219



இந்த வசனத்தில் இறைவன் ஏன்? மதுவை தடை செய்கிறான் என்றால்,அதனால் ஏற்ப்படும் விளைவுகள் படு பயங்கரமானவை.சிறிதளவு நன்மை இருந்தாலும் தீமை அதிகம் என்பதால் தான் இறைவன் தடை செய்கிறான்.அந்த அடிப்படையில்,புகை பழக்கம் என்பதும் ஒரு போதை பழக்கம் தான். மது எப்படி மனிதனின் மூளையை மழுங்கடிக்க செய்து விடுகிறதோ!அதே வேலையை தான் இந்த புகையும் செய்கிறது.மது ஏற்ப்படுத்தும் விளைவுகள் உடனே காணமுடிகிறது.புகை ஏற்ப்படுத்தும் விளைவுகளை அவ்வாறு காணமுடிவதில்லை. அதுதான் வித்தியாசம்.



போதையை உண்டாக்கும் ஒரு வகை செடியை தான் இந்த பழக்கத்துக்கு பயன் படுத்துகின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை நாம் ஆரம்பத்திலேயே பார்த்துவிட்டோம்.இதனால் மனிதனுக்கு எந்த நன்மையையும் இல்லை.



அரசுக்கு தான் வருவாய் கிடைக்கிறது.ஒரு வகையில் வருமானம் அரசுக்கு கிடைத்தாலும் இந்த பழக்கத்தினால் பாதிக்கப்படும் பாவிகளுக்கு செய்யும் செலவு பன்மடங்கு அதிகம். எனவே மதுபானம் எந்த நோக்கத்திற்காக இறைவன் தடைசைகிறானோ அதே நோக்கமும் விளைவுகளும் புகை பிடிப்பதிலும், புகையிலையை பயன்படுத்துவதிலும், உள்ளடக்கி இருப்பதால் நிச்சயம் மார்க்க அடிப்படையில் தடை செய்யப்பட வேண்டிய செயல் தான்.



வீணாகும் பொருளாதாரம் : பொதுவாகவே பொருளாதார விஷயத்தில் கவனத்தை கையாள சொல்லுகின்றான் இறைவன். மனிதனுடைய வாழ்க்கை பயணத்தை மாற்றி அமைப்பதில் பொருளாதாரத்துக்கு முழுமையான முக்கிகிய பங்குண்டு .வறுமையில் உழல் பவர்களையும், செழிப்பில் புரல்பவர்களையும் தடம் தடுமாறி பாதை மாறசெய்துவிடுகிறது இந்த பொருளாதாரம்.இதை கொண்டு நன்மையையும் அடைந்துக்கொள்ளலாம்.,இதை கொண்டு தீமையும் அடைந்துக்கொள்ளலாம்.இப்படிப்பட்ட தன்மைகளை கொண்ட இந்த பொருளாதாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது?அதை எவ்வாறு ஈட்டுவது?என்றெல்லாம் தனது தூதரின் மூலமாக மக்களுக்கு தெளிவு படுத்துகிறான் இறைவன்.



இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளாதாரத்தை ) விரையஞ் செய்யாதீர். 17:26



இந்த வசனத்தில் இறைவன் பொருளாதாரத்தை வீணாக விரயம்மாக்காதீர்கள் என்று அறிவுரை பகருகிறான்.மாறாக வறுமையில்வாடும் சொந்த பந்தங்களுக்கும் ,ஏழைகளுக்கும் ,வழிபோக்கர்களுக்கும் பொருளாதாரத்தைக்கொண்டு உதவி புரியுங்கள்.மேலும் அது அவர்களுக்கு உரியது என்றும் கூறுகிறான்.நம்மால் விரையம்மாக்கப்படும் பொருள்களுக்கு உரியவர்கள் பூமியில்இருக்கிறார்கள்!என்ற ரீதியில் இறைவன் கூற்று அமைந்து இருக்கிறது.



மனிதனுக்கு தீங்கு விளைவிக்க கூடிய துளியளவும் நன்மை இல்லாத புகை பழக்கத்திற்கு ,குறைந்தது ஒரு நாளைக்கு ரூ 40 வீதம் 1 பாக்கெட் சிகரட் ஒரு நபருக்கு என்றாலும் மாதத்திற்கு ஆகும் செலவு ரூ -1200 , ஒரு வருடத்திற்கு ஆகும் செலவு ரூ-14400 .ஆக இவ்வளவு பணம் ஒரு வருடத்திற்கு வீணாகிறது.



விரயமாகும் ரூ-14400 பணத்தை மிச்சப் படுத்தி மேற்கூறிய வசனங்களில் இறைவன் சொல்லும் ஏழைகளுக்கும் , சொந்த பந்தங்களுக்கும், வழிபோக்கர்களுக்கும், வழங்கி அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம். மார்க்கம் அனுமதித்த எத்தனையோ வழிகளில் அந்த பணத்தை செலவு செய்து மறுமை வெற்றிக்கு நன்மைகளை அள்ளி குவிக்கலாம்.இஸ்லாத்துக்குஇடமின்றி இச்சைக்கு இடம் கொடுத்து இப்படி நன்மையான காரியங்களை விட்டு விட்டு தீய காரியங்களுக்கு செலவு செய்து பொருளாதாரத்தை விரயமாக்கவேண்டுமா?விரயமாகியதர்க்காக இறைவனிடத்தில் குற்றவாளி கூண்டில் நிற்கவேண்டுமா? மறுமையில் இது தொடர்பான கேள்விக்கு பதில்சொல்லாதாவரை நகர முடியாதுஎன்பதை புரிந்து கொள்ளுங்கள் .



பொருளாதாரத்தை புன்னியமில்லாதவைகளுக்கு செலவு செய்து விரயமாக்குபவர்களை ஷைத்தானின் சகோதரர்கள் என்று வேறு இறைவன் கூறுகிறான்.



நிச்சயமாக விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். 17:27



ஷைத்தானின் சகோதரர்கள், யாராக இருக்க வேண்டும்?அவர்களும் ஷைத்தானாகத்தான் இருக்கவேண்டும்.இறைவனின் கட்டளையை ஏற்க மறுத்த காரணத்தினால் தான் இறைவனுக்கு எதிரி ஆனான் ஷைத்தான்.நாமும் இறைவனின் இந்த கூற்றை மறுத்து அவனுக்கு எதிரானவர்களின் பட்டியலில் சேரவேண்டுமா? [இறைவன் பாதுகாக்க வேண்டும்] முடிவையும் ,மடிவைவையும் நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.



தற்கொலைக்கு சமம் : இந்த விஷ பழக்கத்தினால் சிறிது சிறிதாக நம்மையே நாம் மாய்த்து வருகிறோம். இப்படி நம்மை நாமே மாய்த்துக்கொள்வது தற்கொலைக்கு சமமானது.விஷத்தை அருந்தி ஒரே அடியாக உயிர் துறப்பதற்கு பதிலாக இந்த பழக்கத்தினால் சிறிது சிறிதாக உயிர் துறந்து வருகிறோம் என்பது தான் உண்மை .இப்படி நம்மை நாமே கொலை செய்வதையும் இறைவன் கண்டிப்பதை பாருங்கள்..



நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். 4:29



இறை தூதரின் எச்சரிக்கை : வாயில் துர்நாற்றம் வீசக்கூடிய பொருளை கண்டு கோபம் கொள்கின்றனர் நபி ஸல் அவர்கள்."பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலம் அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் பல விதமான துர்வாடையுடைய தாவரங்கள் கொண்டு வரப்பட்டன. அது பற்றி நபி(ஸல்) அவர்கள் விபரம் கேட்டபோது அதிலுள்ள கீரை வகைகள் பற்றி விளக்கம் தரப்பட்டது.



தம்முடன் இருந்த ஒரு தோழருக்கு அதைக் கொடுக்குமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தத் தோழர் சாப்பிட விரும்பாமலிருப்பதைக் கண்டபோது 'நீர் உண்ணுவீராக! நீர் சந்திக்காத (பல விதமான) மக்களிடம் நான் தனிமையில் உரையாட வேண்டியுள்ளது. (இதன் காரணமாகவே நான் சாப்பிடவில்லை.)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புஹாரியில் [பாகம் 1, அத்தியாயம் 10, எண் 855 ]பதிவு செய்யப்பட்டுள்ளது.



இந்த நபி மொழியில் ஒரு வித துர்வாடை வீசக்கூடிய கீரை வகையை நபி ஸல் அவர்களிடம் கொண்டு வரப்படுகிறது.அதை நபிஸல்அவர்கள் தனது தோழர் ஒருவருக்கு கொடுத்து. உன்னச் சொல்கின்றனர்.அவர் [வாடையை கண்டு] வெறுக்கவே நபி ஸல் அவர்கள் தான் சாப்பிடாததர்க்கு காரணம் ஒன்றையும் சொல்லுகிறார்கள் "நீ பார்க்காத மக்களிடம் நான் அதிகம் பேசவேண்டியுள்ளது". அதாவது வாடையோடு மக்களிடம் பேசினால் அவர்களுக்கு[எதிர் தரப்பினருக்கு] சிரம்மம் உண்டாகும் என்ற ஒரே காரணத்துக்காக அதை தவிர்த்தார்கள்.



ஆனால் இன்று புகை பிரியர்கள் வாயிலிருந்து வரும் துர் வாடையை சுபஹானல்லாஹ் சொல்லி மாளாது. அவ்வளவு நாற்றம்.,தனது நண்பர்களிடம் பேசும் பொழுதும்,மற்றவர்களிடம் பேசும் பொழுதும் புகைத்துக்கொண்டு பேசுவது தான் பெரும்பாலும் காணமுடிகிறது.அதன் வாடை மட்டுமல்ல ,வாயால் இழுத்து விடும் புகையும் எதிராளிக்கு பாதிப்பபை உண்டாக்குவதையும் கவனத்தில் கொள்வதில்லை.அருகில் இருப்பவர்களுக்கும் புகைப்பவரால் நோய்கள் வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.எனவே தனக்கும்,அடுத்தவனுக்கும் கேடு உண்டாகும் இந்த கொடிய செயலை விட்டொழிக்க வேண்டும். இஸ்லாமும் அதை வன்மையாக கண்டிக்கிறது. பூண்டுக்கும் ,வெங்காயத்துக்கும் தான் நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் என்று சிலர் நினைக்கலாம் சொல்லப்பட்டதன் நோக்கம் என்ன?என்பதை புரிந்து கொள்வோமேயானால் குழப்பம் வராது.



வானவர்களுக்கு சிரமம் : "வெங்காயம் வெள்ளை பூண்டு,சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு வரவேண்டாம் .மனிதர்கள் எதன் மூலம் தொல்லை அடைகிறார்களோ அதன் மூலம் மலக்குகளும் தொல்லை அடைகின்றனர்."என்று நபி ஸல் கூறினார்கள்.என்ற செய்தி ஜாபிர் [ரலி]அவர்கள் அறிவிக்க முஸ்லிம் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



வெங்காயம் வெள்ளை பூண்டு வாயில் உண்டாக்கும் துர் வாடையால் மனிதர்கள் மாத்திரம் அல்ல மலக்குகளும் துன்பமடைகின்றனர் .என்று இந்த நபி மொழி கூறுகிறது.வெங்காயம், வெள்ளை பூண்டின் வாடையாவது பொறுத்துக் கொள்ளலாம். பீடி ,சிகரட் நாற்றம் சொல்லவேண்டியதே இல்லை .ஒருவர் பாத்ரூமில் புகைத்துவிட்டு வந்த பிறகு அடுத்தவர் அதில் நுழைவாறேயானால், மூச்சி திணறி விடுவார்.



அந்த நாற்றத்தில்.இப்படி வெங்காயம் ,பூண்டை விட மனிதனுக்கு அதிக நாற்றத்தையும்,துன்பத்தையும் கொடுக்கும் பீடி ,சிகரட்டினால் மலக்குகள் எந்த அளவுக்கு துன்பமடைவார்கள் என்பதை அதன் பிரியர்கள் எண்ணி பார்க்கவேண்டும்.சிலருக்கு இயற்கையாகவே வாயில் நாற்றம் இருக்கும்.சிலருக்கு பற்கள் சொத்தையாக இருந்தால் உண்ணக்கூடிய உணவுகள் அதிலே தங்கி துர் வாடை ஏற்ப்படுத்திவிடும். அந்த வாடையோடு இந்த புகை வாடை கலக்குமேயானால் சொல்லவேண்டியதே இல்லை உங்களுக்கே புரிந்து இருக்கும். சிலர் அனுபவித்தும் இருக்கலாம். எனவே தான் பல் துலக்கி வாயை சுத்தப்படுத்துவதை கூட ,கூடுதலாக வலியுருத்தியுல்லார்கள் நபி ஸல் அவர்கள்.



"ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார் புஹாரி பாகம் 1, அத்தியாயம் 11, எண் 880



"என் சமுதாயத்திற்குச் சிரமமாம் விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்." என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" அபூ ஹுரைரா(ரலி) புஹாரி பாகம் 1, அத்தியாயம் 11, எண் 887



எனவே மார்க்கம் தடை செய்யும் இந்த அருவருக்கதக்க செயலை விட்டொழிக்க வேண்டும் இல்லையேல் புகைவது சிகரெட்டாக இருந்தாலும் எரிவது நாமாகத்தான் இருப்போம்.



ஆக்கம் :முபாரக்



குவைத் மண்டலம் : இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

புதன், 17 நவம்பர், 2010

பக்தியின் பெயரால் செய்யும் வியாபார மோசடி!

بســــم الله الـر حـمـن الرحـــيــم
இஸ்லாமிய மார்க்கம் அல்லாஹ்வை நம்பச்சொல்கிறது. ஆனால் அல்லாஹ்வை நம்புவதற்க்கு கட்டுக் கதைகளை ஆதாரமாக கொண்டு நம்பச் சொல்லவில்லை. மாறாக, அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து, அவனை நம்பிக்கை கொள்ள சொல்கிறது.

அதுபோல் முஹம்மது[ஸல்] அவர்களை அல்லாஹ்வின் தூதராக நம்பிக்கை கொள்ளச் சொல்கிறது இஸ்லாம். அதற்கும் கட்டுகதைகளை ஆதாரமாக கொண்டு நம்பச் சொல்லவில்லை. அல்லாஹ்வின்  தூதர்[ஸல்] அவர்களின் வாழ்க்கை வழிமுறையை அறிந்து, அதைக்கொண்டு அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நம்பச் சொல்கிறது இஸ்லாம்.

இத்தகைய பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாத்தை சேர்ந்தவர்கள் சிலர் பக்தியின் பெயரால் சில நேரங்களில் செய்யும் கூத்துக்கள், இஸ்லாத்தையும் மூட நம்பிக்கையுடைய மார்க்கமாக மாற்றார்கள் எண்ணுவதற்கு வழிகோலுகிறது. ஒரு மரத்திலோ, காய்கறியிலோ, கல்லிலோ, முள்ளிலோ, கால்நடையிலோ அல்லது  வேறு  எதிலாவது அல்லாஹ் எனும் எழுத்து உண்மையில் தோன்றினாலும் அப்பொருளுக்கு எந்த புனிதமுமில்லை. அதனுடைய இயற்கையான மதிப்பை விட அப்பொருளுக்கு கூடுதல் மதிப்புமில்லை. அதுபோலவே ஒரு பொருளில் முஹம்மது என்ற அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் பெயர் உண்மையில் தோன்றினாலும், அப்பொருளும் அதன் இயற்க்கை தன்மையை விட கூடுதல் புனிதம் பெற்றுவிடாது.

இஸ்லாமிய நிலைப்பாடு இவ்வாறிருக்க, தியாகத்திருநாளை முன்னிட்டு குர்பானி கொடுப்பதற்காக டெல்லியில் ஆடு விற்பனை நடந்துள்ளது. அந்த விற்பனை செய்யும் இடத்தில் ஒரு ஆட்டின் மீது, 'அல்லாஹ்' என்ற எழுத்தும், 786 என்ற எண்னும் இருந்ததாம். எனவே அந்த ஆட்டின் விலை நான்கரை லட்சம் என ஆட்டின் உரிமையாளர் தீர்மானித்துள்ளார். அதுபோல் அவரது மற்றொரு ஆட்டின் மீது 'முஹம்மது' என்ற பெயர் இருந்ததாம் . எனவே அந்த ஆட்டின் விலை இரண்டரை லட்சம் என அவர் தீர்மானித்துள்ளார். இவ்விரு ஆடுகளையும் வாங்க கடும் போட்டி நிலவிய நிலையில் இந்த இரு ஆடுகளும் விற்றுத் தீர்ந்துள்ளது.

அதிகபட்சம் பத்தாயிரம் மதிப்புள்ள ஆடுகள் லட்சங்களில் விற்கப்பட்டதற்கு  காரணம் மூடநம்பிக்கை என்ற ஒன்றன்றி வேறு காரணம் உண்டா? அல்லாஹ் என்றோ-முஹம்மது என்றோ எழுதப்பட்டிருப்பதால் அந்த பிராணி ஆடு என்ற நிலையிலிருந்து வேறு புனித நிலைக்கு மாறிவிடுமா என்ன? சரி இவ்வளவு பக்தி சிரத்தையோடு  லட்சங்களை கொட்டி வாங்கியவர்கள் அந்த ஆட்டை என்ன செய்யப் போகிறார்கள்? குர்பானி கொடுப்பார்கள். அந்த ஆட்டின் மீது  அல்லாஹ் என்ற வார்த்தை உள்ளதால் அல்லாஹ்வையே குர்பானி கொடுத்ததாக அர்த்தமா? [அஸ்தஃபிருல்லாஹ்].

சரி! அந்த ஆட்டை குர்பானி கொடுக்காமல்  வளர்த்தால் கூட சில ஆண்டுகளில் செத்து விடுமே? ஆடு செத்து விட்டால் அல்லாஹ் செத்து விட்டான்[அஸ்தஃபிருல்லாஹ்]. என்று அர்த்தமா?

சிந்தியுங்கள் முஸ்லிம்களே! ஒரு பொருள் அதன் இயற்கை வடிவத்திலிருந்து ஒரு போதும் மாறாது. புனிதமாகாது. ஒரு பொருளை அவ்வாறு புனிதமானதாக கருத வேண்டுமெனில், அதற்கு அல்லாஹ்வோ-அவனது தூதரோ கூறிய சான்றுகள் வேண்டும். எனவே கண்டதையும் கற்பனையால் புனிதமாக்கும் சிலரைப்  போல் முஸ்லிம்களும் ஆகவேண்டாம் என்றும், அல்லாஹ்வின் மார்க்கத்தை கேலிக்குள்ளாக்க  வேண்டாம் என்பதே எமது வேண்டுகோளாகும்.

ஞாயிறு, 14 நவம்பர், 2010

பீஜேயின் அநீதியைக் கண்டித்து, சகோதரர் பாக்கர் தலைமை ஏற்கிறேன்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்கினிய முஸ்லிம் சமுதாயமே! உங்களின் கனிவான பார்வைக்கு;

''ஒருவன் ஒரு பிள்ளையை பெற்று, அப்பிள்ளையின் மீது மொத்த கவனத்தையும் செலுத்தி வளர்த்துவருகிறான். அப்பிள்ளையும் அல்லாஹ்வின் அருளோடு அறிவார்ந்த பிள்ளையாக, அனைவரும் பாராட்டும் பிள்ளையாக வளர்வதை கண்ட 'மக்குப் பிள்ளையை' பெற்ற மற்றொருவன் பொறாமை கொண்டு எப்படியேனும் இந்த மக்கள் பாராட்டும் பிள்ளையை நாம் அபகரித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டி அதற்கான சதித்திட்டம் தீட்டுகிறான். அறிவான பிள்ளையின் தந்தை ஒரு அப்பாவி என்பதால், தனது பிள்ளையின் பிறப்பு பற்றி அரசு பதிவேட்டில் பதிவு செய்யாமல் இருந்ததோடு, பிறப்புச் சான்றிதழையும் வாங்காமல் இருந்தான். இதையறிந்த அந்த சதிகாரன், அந்த அறிவார்ந்த பிள்ளையை தனக்கு பிறந்த பிள்ளை என பதிவு செய்து, பிறப்புச் சான்றிதழையும் வாங்கி உண்மையான தந்தையான அந்த அப்பாவியிடம் சொன்னான்; உன் பிள்ளை விஷயத்தில் உனக்கு எந்த உரிமையுமில்லை என்று.

மேற்கண்ட சம்பவம் உண்மையாக இருந்தால் அந்த சதிகாரனை எவ்வாறு மகா அயோக்கியன் என்று சொல்வோமோ, அதுபோல மகா அயோக்கியத்தனமான வேலையை 'மகா அறிஞர்' பீஜே செய்திருக்கிறார் என்பதுதான் உச்சகட்ட வேதனையான செய்தி.

ததஜ வில் இருந்து சகோதரர் பாக்கர் உள்ளிட்ட சகோதர்கள் நீக்கப்பட்டதும், அவர்கள் ஒன்று கூடி உருவாக்கியதுதான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பது உலகறிந்த விஷயம். பீஜே மற்றும் அவரது ஆதரவாளர்களால் ஒரு உண்மையோடு பல்லாயிரம் பொய்கள் புனைந்து வீசப்பட்ட அத்தனை அவதூறுகளையும் தான்டி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர் பாக்கர் மற்றும் அவரது அமைப்பை சார்ந்த சகோதரர்களின் தியாகத்தால் வளர்ந்து நிற்கிறது.

இந்த நேரத்தில் 'நாங்கள்தான் உண்மையான இந்திய தவ்ஹீத் ஜமாஅத். எங்கள் இடத்தில்தான் பதிவு சான்றிதழ் இருக்கிறது என்று அமைப்பை அபகரிப்பது அப்பட்டமான அநீதியாகும். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் நாங்கள் அப்போதே, அதாவது பாக்கர் அவர்கள் ததஜ விலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பே பதிவு செய்துவிட்டோம் என்று சொல்லும் இந்த பொய்யர்கள் வெளியிட்டுள்ள சான்றிதழில் பதிவு செய்யப்பட்ட காலம் மார்ச் 2010 என்று உள்ளது. இதிலிருந்தே தெரியவில்லையா பீஜே வகையறாக்கள் பித்தலாட்டக்காரர்கள் என்று.

எனவே, பாக்கர் தலைமையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அசுர வளர்ச்சி கண்ணை உறுத்தியதாலும், தனக்கு எதிரான ஒரு அமைப்புகளை கைப்பற்றுவது; அல்லது முடக்குவது; அல்லது அந்த அமைப்பை அவதூறுகளின் மூலம் செல்லாக் காசாக்குவது என்ற கொள்கையுடைய பீஜே, அநீதியாக சிலரை தூண்டிவிட்டு, பதிவு செய்து இந்திய தவ்ஹீத் ஜமாத்தை அபகரிக்க நினைக்கிறார். இவரின் சூழ்ச்சியை அல்லாஹ் முறியடிப்பான் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு; அல்லாஹ்வின் ஆலயங்கள் தொடங்கி, அடுத்தவர் அமைப்புகள் வரை ஆக்கிரமிக்கும் எண்ணத்துடன் செயல்படும் பீஜேயை கண்டித்தும், அவரை போன்றவர்களை இந்த சமுதாயத்தில் அடையாளம் காட்டும் கடமையை உணர்ந்தும், பாதிக்கப்பட்ட பாக்கர் மற்றும் அவரது தலைமையில் இயங்கும் ஜமாஅத் சகோதரர்களுக்கு தோள் கொடுக்கும் விதமாகவும்,


சகோதரர் பாக்கர் அவர்களின் தலைமையில், அவரது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் என்னை உறுப்பினராக இணைத்துக் கொள்கிறேன். அல்ஹம்துலில்லாஹ். அதோடு இந்த அநீதியான அபகரிப்புக்கு எதிராக நியாயமுள்ள மனிதபிமானமுள்ள அனைவரும் ஒன்றிணையவேண்டும். சகோதரர் பாக்கர் கரத்தை பலப்படுத்த முன்வரவேண்டும் என்றும் அன்போடு அழைக்கின்றேன்.

இப்படிக்கு
உங்கள் மார்க்க சகோதரன் -முகவை எஸ்.அப்பாஸ்.

புதன், 10 நவம்பர், 2010

கொலைக்கு கொலையே தீர்வு; இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் கோவை 'என்கவுண்டர்'!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالأُنثَى بِالأُنثَى فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاء إِلَيْهِ بِإِحْسَانٍ ذَلِكَ تَخْفِيفٌ مِّن رَّبِّكُمْ وَرَحْمَةٌ فَمَنِ اعْتَدَى بَعْدَ ذَلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.
وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَاْ أُولِيْ الأَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَ

நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். [2 ;178 ,179 ]

மேற்கண்ட இறைவசனத்தில் ஒருவர்  அநியாயமாக  கொல்லப்பட்டால், கொலையுண்டவரின் வாரிசுகள் கொலையாளியை மன்னித்தாலன்றி, கொலையாளி கொல்லப்படவேண்டும். அதுவும் அந்த கொலையாளி பொதுமக்கள்  முன்னிலையில் கொல்லப்படவேண்டும் என்ற சட்டத்தை இஸ்லாம் பாதிக்கப்பட்டவனின் மன வலியை  உணர்ந்து அன்றே சொன்னது.

முக்காலமும் உணர்ந்த முதல்வனான அல்லாஹ்வின் இந்த அற்புதமான சட்டத்தை 'முற்போக்கு[வியாதிகள்]வாதிகள்' என்று சொல்லிக்கொள்ளும் மூளை மழுங்கிய ஒரு கூட்டம் தொன்று தொட்டு விமர்சித்து வருகிறது. ஆனால் அல்லாஹ்வை  தவிர வேறு எவராலும் சிறந்த சட்டத்தை வழங்கமுடியாது என்றும், அல்லாஹ்வின் சட்டமே என்றைக்கும் மேலோங்கும் என்பதை கோவையில்  இரு குழந்தைகளை கடத்தி, கொலை செய்த மாபாவியை கொன்ற விஷயத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கோவையில் முஸ்கின் என்ற 11 வயது சிறுமியையும், அவளது தம்பியான ரித்திக் என்ற 8 வயது சிறுவனையும் மோகன்ராஜ் எனும் டிரைவர் பணத்திற்காக கடத்தியதோடு, அந்த பச்சிளம் பாலகனான சிறுமியை பலாத்காரம் செய்ததோடு, இருவரையும் கொன்ற செயல் இந்தியா முழுக்க  எதிரொலித்தது. இந்த இரக்கமற்ற காமுகனை சம்பவம் நடந்த இடத்திற்கு காவல்துறையினர் அழைத்துச்சென்ற போது, காவலர்களை சுட்டுவிட்டு தப்ப முயன்றதாக, மோகன்ராஜ் 'என்கவுண்டரில்' சுட்டுக்கொல்லப்பட்டான்.

இந்த மாபவியை  சுட்டுக்கொன்ற காவல்துறையை மக்கள் பாராட்டியதோடு, இனிப்பு வழங்கியும் கொண்டாடியுள்ளனர். அதோடு, இது போன்ற பாவிகளுக்கு இதுதான் சரியான  தண்டனை என்று ஒட்டுமொத்த தமிழகமும் வரவேற்றுள்ளது. இதன் மூலம் தெரிவது என்ன? கொலைக்கு பகரம் என்பது அரசு செலவில்  அனைத்து வசதிகளுடன் சிறையில் போடுவதல்ல. மாறாக கொலை செய்தவன் உடனடியாக கொல்லப்படுவதுதான் சரியான தீர்வு என்று ஏகோபித்த குரலில் மக்கள் கூறியிருப்பதன் மூலம் 'கொலைக்கு கொலை' என்ற அல்லாஹ்வின்  சட்டம் மீண்டும் உண்மைப்படுத்தபட்டுள்ளது.

அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.

சனி, 30 அக்டோபர், 2010

பெண்கள் மஹ்றமான ஆண் துணையின்றி, ஹஜ் செய்யலாம் என்ற புதுமை ஃபத்வாவுக்கு மறுப்பு!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.

புஹாரியின் 3595 வது ஹதீஸை ஆதாரமாக காட்டி, ஒரு பெண் “மஹ்ரம்” இல்லாமல் தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என நவீனவாதிகள்  வழங்கும் ஃபத்வா குறித்து, மவ்லவி இஸ்மாயில் ஸலபி அவர்களின் விரிவான விளக்கம்;

கேள்வி :-

பெண்கள் மஹ்றமான ஆண் துணையின்றி ஹஜ்-உம்றாச் செய்யலாமா?


பதில்:-

இது விரிவாக விளக்கப்பட வேண்டிய அம்சமாகும். ஹஜ் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் அனைவரிடமும் இருக்கின்றது. இது வரவேற்கத் தக்கதுதான். எனினும், ஹஜ்ஜை முறையாகச் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமானவர்களிடம் இல்லையென்பது வருந்தத் தக்க விடயமாகும்.

ஹஜ் யார் மீது கடமையென்பது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது;

“..மனிதர்களில் அதற்குச் சென்று வரச் சக்தி பெற்றவர்கள் மீது அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும்..” (3:97)

எனவே, ஹஜ்ஜுக் கடமையைச் செய்யும் சக்தியுள்ளவர் மீதுதான் ஹஜ் கடமையாகும். பயணத்திற்கு மஹ்றமான ஆண் துணை இல்லாத பெண்ணுக்கு ஹஜ் கடமையில்லை. அப்படி அவர் தன் மீதுள்ள கடமையை நிறைவு செய்ய வேண்டுமென்றால் மஹ்றமான ஓர் ஆண் துணையை அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கும் முடியாவிட்டால் தனது ஹஜ்ஜைத் தனது நெருங்கிய உறவுடைய ஒரு ஆண் மூலம் நிறைவேற்ற அங்கீகாரமுள்ளது.

ஒரு பெண் தனியாகவோ, நம்பிக்கையான மஹ்றமல்லாத ஆண் துணையுடன், நல்லொழுக்கமுள்ள பல பெண்களுடன் கூட்டுச் சேர்ந்தோ ஹஜ் செய்யலாம் என்பதற்குக் கூறப்படும் ஆதாரங்கள் குறித்தும் அது பற்றிய உண்மை விளக்கம் என்ன என்பது குறித்தும் சுருக்கமாக நோக்குவோம்.

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;

எந்தவொரு ஆணும் மஹ்ரமில்லாமல் இருக்கும் பெண்களோடு தனிமையில் இருக்க வேண்டாம்! எந்தவொரு பெண்ணும் மஹ்ரமில்லாமல் பிரயாணிக்க வேண்டாம்!” என நபியவர்கள் கூறிய போது, ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! எனது மனைவி ஹஜ்ஜுக்காகச் சென்று விட்டார். நான் சில யுத்தங்களுக்காகப் பெயர் கொடுத்துள்ளேன். (நான் என்ன செய்வது?) எனக் கேட்டார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் “நீரும் உமது மனைவியோடு சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுவீராக!” என கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இப்னு உமர்(ரழி) அவர்களின் பின்வரும் அறிவிப்பை அவதானியுங்கள்!

எந்தவொரு பெண்ணும் தன்னுடன் மஹ்ரம் துணையில்லாமல் மூன்று நாட்களுக்குப் பயணிக்க வேண்டாம்.” (புகாரி, முஸ்லிம்)

மஹ்ரமின்றி ஒரு நாள் கூட பயணிக்கக் கூடாது என்ற தடையைக் கொண்டுள்ள பல ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில் காணப்படுகின்றன.

பெண்ணின் பிரயாணத்தில் மஹ்ரம் துணை இருப்பது ஜிஹாதுக்குச் செல்வதை விட முதன்மையானது என்பதனை முன்னர் நாம் பார்த்த இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கும் ஹதீஸ் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. நபியவர்களின் அந்த முடிவுக்கு மேலாக முடிவெடுப்பதற்கு எமக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே ஒரு பெண்ணோ, அல்லது பல பெண்களோ (திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட) மஹ்ரமான ஆண்கள் துணையின்றித் தனிமையில் ஹஜ் பயணமோ, அல்லது வேறு பயணமோ செல்லக் கூடாது எனக் கூறப்படுகின்றது.

இதற்குத் தவறான வியாக்கியானம் செய்யும் சில அறிஞர்கள் “நம்பகமான பெண்கள் பலருடன் சேர்ந்து ஒரு பெண் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்!” என வாதிடுகின்றனர். ஒரு பெண் தனிமையில் பள்ளிக்குச் சென்று தொழுகையை நிறைவேற்றுவது போன்று ஹஜ் செய்யச் செல்லலாமா? முடியாதா? என்ற வாதப் பிரதிவாதங்கள் மார்க்க அறிஞர்கள் வட்டத்தில் காணப்பட்டாலும் “மஹ்ரம்” என்ற ஆண் துணையுடன் ஹஜ் செய்வதையே நபி(ஸல்) அவர்கள் கட்டாயப்படுத்தி இருப்பதைப் பார்க்கின்றோம். ஒரு பெண் மஹ்ரம் இன்றி ஹஜ் செய்ய முடியாது என்பதே நாம் சரியான கருத்தாகக் கொள்ளத் தக்கதாகும்.

ஐயம்:- ஹஜ் குழுவினர் சிலர், தமது ஹஜ் குழுவுடன் ஒருவரை அதிகரித்துக்கொள்வதற்காக, தமது வசதிக்காகப் பெண்கள் பலருடன் ஒரு பெண் செல்வதில் தவறில்லை என்கின்றனர்.

குர்ஆன், ஸுன்னாவைப் பின்பற்றும் சிலர் ஒரு படி மேலே சென்று ஒரு சில அறிஞர்கள் தனிமையாக ஹஜ் செய்யலாம் என்பதற்கு அதிய்யே! அல்ஹீரா என்ற நகரைப் பார்த்திருக்கிறாயா? நான் அதைப் பார்த்ததில்லை. அது பற்றி கேள்விப்பட்டுள்ளேன்!” எனக் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “நீ நீண்ட காலம் வாழ்ந்தால் தனது ஒட்டத்தில் பயணம் செய்யும் ஒரு பெண் அந்த அல்ஹீராவில் இருந்து கஃபா வரை வந்து (தன்னந் தனியே) தவாஃப் செய்வாள். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அவள் அஞ்ச மாட்டாள்.” (புகாரி ) எனக் கூறிய அதிய் பின் ஹாதிம்(ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை ஆதாரமாகக்கொண்டு ஒரு பெண் ஹஜ்ஜுக்காகத் தனிமையில் பயணம் மேற்கொள்வதில் தவறில்லை என்கின்றனர்


விளக்கம்: நம்பகமான பெண்களுடன் செல்லலாம் என்றால் ஏன் அந்த நபித் தோழரை அவரது மனைவியுடன் ஹஜ்ஜை நிறைவேற்றும் படி நபி(ஸல்) அவர்கள் பணித்தார்கள்? நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஆண்களையும், பெண்களையும் விடவும் இந்தக் காலத்து மக்கள் நம்பிக்கையிலும், நாணயத்திலும் உயர்ந்தவர்களா?

அதீ பின் ஹாதிம்(ரழி) அவர்களின் ஹதீஸ் அச்சம்-பீதியற்ற ஒரு காலத்தை அதுவும் முன்னறிவிப்பு ஒன்றைக் குறிக்கின்றது. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நடைபெற்ற வழிப்பறிக் கொள்ளை, வறுமை ஆகியவற்றை முறைப்பாடு செய்த போதே இந்த முன்னறிவிப்பைக் கூறினார்கள். தனது காலத்தைக் கூட அச்சம், பீதி, வறுமை அற்ற காலம் எனக் கூறவில்லை.

மாற்றமாக அதை ஒரு முன்னறிவிப்பாகவே கூறினார்கள். அது அதி(ரழி) அவர்களின் வாழ்நாளிலேயே நடந்தேறியது. இதை உண்மைப்படுத்தும் வகையில் அதன் அறிவிப்பாளரான அதிய்(ரழி) அவர்கள் இது பற்றிக் குறிப்பிடுகின்ற போது, “ஒரு பெண் ஒட்டகத்தில் ஏறி அந்த அல்ஹீராவில் இருந்து கஃபாவரை வந்து (தனிமையாக) தவாஃப் செய்வதைக் கண்டேன். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அவள் அஞ்ச மாட்டாள்!” எனக் குறிப்பிடுகிறார்கள். (புகாரி)

இப்படியான காலத்துடன் கொலைகளும், கொள்ளைகளும் மலிந்து காணப்படும் இந்தக் காலத்தை ஒப்பிடலாமா?” என்றால், அனைவரும் “இல்லை!” என்றே கூறுவர். உலகில் அச்சமற்ற நாடுகளில் முன்னணி நாடு என போற்றப்படும் சவூதி அரேபியாவில் கூட கணவனுடன் ஹஜ் செய்யச் சென்ற பெண்கள் பலர் கடத்திக் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என்றால் நடந்தேறிய முன்னறிவிப்பைக் கொண்டு பெண்கள் தனிமையில் ஹஜ் செய்யலாம் என முடிவு செய்வது ஹதீஸுக்கு உடன்பாடான விளக்கமாகத் தெரியவில்லை.

ஐயம்: அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் ஜமல் போரின் போது கூபா நோக்கிப் பயணித்துள்ளார்களே! நாம் ஹஜ்ஜுக்காகச் செல்வதை எவ்வாறு தவறாகக்கொள்ள முடியும்?

தெளிவு:- இது அவர்களின் தனிப்பட்ட ஒரு முடிவாகும். நபித் தோழர்கள் பலர் இதனை விரும்பவில்லை. அப்படி இருந்தும் இஸ்லாத்தில் சமரசம் செய்து வைத்தல் விரும்பத்தக்க செயல் எனக் காரணம் காட்டியே அவர்கள் அவ்வாறு புறப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அத்துடன், பிற்காலத்தில் தனது இந்தத் தவறை உணர்ந்த அன்னை அவர்கள் அவர்களது முந்தானை நனையும் அளவு அழுது கண்ணீர் வடித்துள்ளார்கள் என ஆதாரபூர்வமான செய்திகள் குறிப்பிடுவதைக் கவனித்தால் இது போன்ற செய்திகள் ஆதாரமாகக்கொள்ள முடியாதவை என்பதை அறியலாம்.

நபி(ஸல்) அவர்களின் மேற்படி கட்டளையை மீறி ஸஹாபிப் பெண்கள் யாராவது இவ்வாறு சென்றிருப்பார்களாயின், அவர்கள் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் சென்றார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். பின் அவர்களின் விருப்பம் மார்க்கமாக முடியாது என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.

நன்றி; மவ்லவி இஸ்மாயில் ஸலபி மற்றும் இஸ்லாம் கல்வி.காம்.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

இரண்டாம் திருமணமும்- இல்லாத கட்டுப்பாடுகளும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
மனிதனை படைத்த அல்லாஹ், அந்த மனிதனின் பலம்- பலவீனம் அனைத்தையும்  உணர்ந்து மனிதனின் ஆசைகளுக்கு அனுமதியளிக்கும் அதே நேரத்தில், ஆசை அளவுகடந்து சென்றுவிடாமல் இருப்பதற்கான கடிவாளத்தையும்  போடுகிறான். அந்தவகையில் ஆண்களுக்கு நான்கு திருமணம் வரை செய்வதற்கு அல்லாஹ் அனுமதியளிக்கிறான்.

பொதுவாக ஒருவனுக்கு ஒருத்தி என்று தத்துவம் கூறப்பட்டாலும், அது தத்துவத்திற்குத் தான் நன்றாக இருக்குமேயன்றி, நடைமுறை வாழ்க்கைக்கு பெரும்பாலும் ஒத்துவருவதில்லை. பெரும்பாலான ஆண்கள் ஒரு மனைவியோடு நிறுத்திக் கொள்வதாக வெளியில் காட்டிக்கொண்டாலும், 'அன்அபிஷியல்' ஆக பல பெண்களோடு தொடர்புடையவர்களாக இருப்பதைக் காணலாம். இதனால் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பதை நாள்தோறும் பத்திரிக்கைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

மேலும், பிரபலமானவர்கள் கூட, ஒருவரை மனைவியார் என்றும் மற்றவரை துணைவியார் என்றும் சொல்லிக்கொண்டு வலம்வருவதைக் காண்கிறோம். இதெல்லாம் எதை  உணர்த்துகிறது என்றால், பெரும்பாலான ஆண்களுக்கு ஒரு மனைவி என்பது போதுமானாதாக இல்லை என்பதைத்தான். எனவே இன்னொரு மனைவி தேவை என்று கருதுபவனுக்கு சட்டப்படி திருமணம் செய்ய சட்டம் குறுக்கே நின்றால், அவன் சட்டத்திற்கு புறம்பாக அந்த பெண்ணுடன் வாழ முற்படுகிறான். இப்படி இவன் சேர்த்து வைத்திருக்கும் பெண்ணை இவன் புறக்கணித்தால் அப்பெண்ணிற்கு ஜீவனாம்சம் சட்டப்படி கிடைக்காது  என்பதுதான்  இப்போதுள்ள நிலை. எனவே இஸ்லாம் இதற்கு அழகான தீர்வை சொல்கிறது. அதுதான் பலதார மணம்.

وَإِنْ خِفْتُمْ أَلاَّ تُقْسِطُواْ فِي الْيَتَامَى فَانكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاء مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلاَّ تَعْدِلُواْ فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلاَّ تَعُولُواْ

அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (4:3)

இறைவனின் மேற்கண்ட அனுமதியை கொண்டு ஒரு முஸ்லிம் இரண்டாம் திருமணம் செய்ய முற்படுகையில், இன்றைய நவீன அறிஞர்கள் சிலர் அதற்கு பொருந்தாத சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். அதில் பிரதான கட்டுப்பாடு என்னவெனில், இரண்டாம் திருமணம் செய்யும் ஒருவன் முதல்மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் செய்யவேண்டும் என்பது. அதற்கு அவர்கள் வைக்கும் ஆதாரம்;
 
وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ وَأَخَذْنَ مِنكُم مِّيثَاقًا غَلِيظًا

அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே! (4:21

இந்த வசனத்தை வைத்து, மனைவி கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார். இந்த உடன்படிக்கையில், மனைவி கணவனைத் தவிர வேறு ஆனை  நாடக்கூடாது என்பதும் , கட்டிய மனைவியைத் தவிர வேறு பெண்ணை நாடக்கூடாது என்பதும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். எனவே இரண்டாம் திருமணம் செய்யும் கணவன் முதல்மனைவியிடம் முன்கூட்டியே அதுபற்றி தெரிவிக்கவேண்டும் என்று கூறுகிறார்கள்.
 
உண்மையில் இந்த வசனம் திருமணத்தை 'வாக்குறுதி' என்று கூறினாலும், இந்த வசனம் சொல்லும் முழுக்கருத்து என்ன என்பதை பார்க்கவேண்டும். இதற்கு முந்தைய வசனம் இதுதான்;
وَإِنْ أَرَدتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنطَارًا فَلاَ تَأْخُذُواْ مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَاناً وَإِثْماً مُّبِيناً

நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா? (4:20)

மேற்கண்ட இரு வசனங்களையும் பார்க்கும்போது இதன்மூலம் இறைவன் இடும் கட்டளை தெளிவானது. அதாவது, முதல்மனைவியை விவாகரத்து செய்து விட்டு, இரண்டாம் திருமணம் செய்யும் ஒருவன் முதல்மனைவிக்கு  தந்த மகரை ஒருபோதும் திரும்ப வாங்கக்கூடாது என்பதுதான்.

எனவே இதில் வரும் 'வாக்குறுதி' என்ற வார்த்தையை வைத்து தங்களின் வார்த்தைஜாலத்தை பயன்படுத்தி, ஒப்பந்தம் என்றும் அந்த ஒப்பந்தத்தில்,
மனைவி கணவனைத் தவிர வேறு ஆனை  நாடக்கூடாது என்பதும் , கட்டிய மனைவியைத் தவிர வேறு பெண்ணை நாடக்கூடாது என்பதும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். எனவே இரண்டாம் திருமணம் செய்யும் கணவன் முதல்மனைவியிடம் முன்கூட்டியே அதுபற்றி தெரிவிக்கவேண்டும் என்று கூற வருவார்களானால், திருமண ஒப்பந்தப்படி அந்நியப் பெண்ணை  நாடுவதற்குத்தான் தடையே தவிர; இன்னொரு பெண்ணை மணப்பதற்கு அல்ல எனபதையும் இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

மேலும், இரண்டாம் திருமணம் செய்யும் கணவன் முதல் மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் திருமணம் செய்யவேண்டுமென்றால், அதற்கு நபி[ஸல்] அவர்கள், ஒவ்வொரு திருமணத்தின் போதும் தமது முந்தைய மனைவியரிடத்தில்  இவ்வாறு  சொல்லிவிட்டுத்தான் செய்தார்கள் என்று ஆதாரத்தை  வைக்கவேண்டும். ஆனால் அவ்வாறு வைக்கமுடியாது ஏனெனில், நபியவர்கள் போர்களத்திலும், பயணத்திலும் கூட சில  மனைவியரை திருமணம் செய்துள்ளார்கள். எனவே இரண்டாம் திருமணம் செய்யும் கணவன் திருமணத்திற்கு முன்பே மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் செய்யவேண்டும் என்ற வாதத்திற்கு எந்த ஆதாரமுமில்லை.

அதே நேரத்தில் முதல் மனைவியிடம் சொல்லாமல் திருமணம் செய்யும் கணவன், தனது இரண்டாம் மனைவியை, முதல் மனைவிக்கு தெரியாமல் ரகசியமாக குடும்பம் நடத்த  அனுமதியில்லை. ஏனெனில் நபி[ஸல்] அவர்கள் தனது வாழ்வில், ஒரு மனைவிக்கு தெரியாமல் இன்னொரு மனைவியோடு குடும்பம் நடத்தவில்லை. மாறாக இன்று எந்த மனைவியிடம் தங்குவார்கள் என்று அனைத்து மனைவியரும் அறியும் வகையில்  நாட்களை ஒதுக்குவார்கள். எனவே இரண்டாம் திருமணம் செய்யும் கணவன், தனது இரண்டாம் மனைவியை முதல் மனைவி அறியும் வகையிலும், மற்றவர்கள் அறியும் வகையிலும் பகிரங்கமாக  குடும்பம் நடத்த  வேண்டும்.

அடுத்து இரண்டாம் திருமண விஷயத்தில் இன்னொரு புதுமையான ஃபத்வா வழங்கப்படுகிறது. அது என்னவெனில், புஹாரியில் இடம்பெறும் 3110 வது ஹதீஸை ஆதாரமாக காட்டி, நபியவர்கள் தமது மகள் ஜைனப்[ரலி] அவர்கள் மனைவியாக இருக்கும் நிலையில் வேறு பெண்ணை  மணக்கக் கூடாது என அபுல் ஆஸ்[ரலி] அவர்களிடம் ஒப்பந்தம் செய்தார்கள் எனக்கூறி, இந்த அடிப்படையில் ஒரு ஆனை திருமணம் முடிக்கும் பெண், நான் மனைவியாக இருக்கையில் என்னைத் தவிர எந்த பெண்ணையும் அடுத்து மணம் முடிக்கக் கூடாது  என  நிபந்தனை விதிக்க மார்க்கத்தில் அனுமதியிருக்கிறது என்று கூறுகிறார்கள். அவர்கள் வைக்கும் ஹதீஸ் இதுதான்;

அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) ஃபாத்திமா(ரலி) (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூ ஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (அந்த நேரத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அது குறித்து மக்களிடம் தம் இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை செவியுற்றேன். - அப்போது நான் பருவ வயதை அடைந்து விட்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள், 'ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தன்னுடைய மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன்" என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகனை - (அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை) - அவர் தம்மிடம் நல்ல மருமகனாக நடந்து கொண்டதைக் குறித்து (நினைவு கூர்ந்து) புகழ்ந்தார்கள். 'அவர் என்னிடம் பேசியபோது உண்மையே சொன்னார். எனக்கு வாக்குறுதியளித்து அiதை எனக்கு நிறைவேற்றித் தந்தார். மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன்;. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மகளும் (அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது" என்று கூறினார்கள்.


மேற்கண்ட ஹதீசை கவனமாக படியுங்கள். அதில் இவர்கள் கூறுவது போன்று,
அபுல் ஆஸ்[ரலி] அவர்களிடம் நபியவர்கள் அத்தகைய ஒப்பந்தம் எடுத்ததாக இவர்கள் மேற்கோள் காட்டும் ஹதீஸில் ஒரு வரி கூட இல்லை. எனவே திருமணத்திற்கு முன்பே கணவனிடம் 'நான் மனைவியாக இருக்கையில் வேறு பெண்ணை  மணக்கக் கூடாது  என கணவனிடம் ஒப்பந்தம் செய்ய மார்க்கத்தில் எந்த அனுமதியும் இல்லை.

மேலும் பெரும்பாலான  பெண்கள் [குறிப்பாக தமிழக முஸ்லிம் பெண்கள்] தான் இருக்கும்போது இன்னொரு பெண்ணை  தனது கணவன் மணப்பதை விரும்பமாட்டாள். இவர்களின் ஃபத்வா படி பெண்கள் திருமணத்திற்கு முன்பே இத்தகைய ஒப்பந்தத்தை செய்ய முற்பட்டால், எந்த ஆணும் இரண்டாம் திருமணம் செய்யமுடியாது. ஆக அல்லாஹ் கொடுத்த அனுமதியை பறிக்கும் வேலையை இந்த ஃபத்வா கொடுப்பவர்கள் செய்கிறார்கள் என்று விளங்கிக் கொளவேண்டும்.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வரலாம்.  அப்படியானால் அபுல் ஆஸ்[ரலி]யை நபியவர்கள் பாரட்டியது ஏன் என்று.  அபுல் ஆஸ்[ரலி]யை நபியவர்கள் பாரட்டியது ஏன் என்பதற்கு , ரஹீக் என்ற வரலாற்று நூலில் விளக்கம் கிடைக்கிறது;

பத்ருப் போரில் மக்கத்து நிராகரிப்பாளர்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டதனால், பலர் கொல்லப்பட்டனர், பலர் சிறை பிடிக்கப்பட்டனர். அவ்வாறு சிறை பிடிக்கப்பட்டவர்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகனார் மற்றும் ஜய்னப் அவர்களின் கணவனரான அபுல் ஆஸ் அவர்களும் ஒருவராக இருந்தார்.



ஜய்னப் அவர்களும் தமது கணவனாரை மீட்க தம் சார்பாக ஒருவரை பணயத் தொகையுடன் அனுப்பி வைத்திருந்தார்கள். அந்தப் பிரதிநிதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அபுல் ஆஸ் அவர்களை மீட்டுச் செல்வதற்கான பணயப் பொருளுடன் வந்தார். அந்தப் பணயப் பொருளைப் பார்த்தவுடன், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணர்ச்சி வசப்பட்டவராக அவரது முகம் கவலையால் வாடி சோகம் ததும்பி நின்றது. ஆம், ஜய்னப் அவர்கள் தம் கணவரை மீட்க, தமது தாயார் கதீஜா அவர்கள் இறப்பதற்கு முன் தனக்கு அளித்திருந்த நெக்லஸை பணயத் தொகையாக அனுப்பி இருந்ததே, நபிகளாரின் கவலைக்குக் காரணமாகும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கிக் கூறினார்கள் :


எனதருமைத் தோழர்களே, அபுல் ஆஸை மீட்பதற்காக ஜய்னப் இந்தப் பொருளைப் பணயப் பணமாக அனுப்பி உள்ளார். நீங்கள் விரும்பினால், இவரை விடுதலை செய்து, இந்தப் பொருளையும் அவரிடம் திருப்பிக் கொடுத்து விடுங்கள். இல்லை எனில் நீஙகள் விரும்பியவாறு நடந்து கொள்ளலாம் என்றார்கள்.


நபிகளாரின் மனச்சுமையை கண்ட அண்ணலாரின் தோழர்கள், உங்கள் விருப்பப்படியே நாங்கள் செய்கின்றோம் என்று கூறி, அபுல் ஆஸ் அவர்களி;ன் பணயத் தொகையைத் திருப்பிக் கொடுத்து விட்டனர். அபுல் ஆஸ் அவர்களை விடுதலை செய்வதற்கு முன், தன் மகள் ஜயனப் அவர்களை தன்னிடம் திருப்பி அனுப்பி விட வேண்டும் என்ற நிபந்தனையை, அண்ணலார் (ஸல்) அவர்கள் அவருக்கு விதித்தார்கள்.


அவ்வாறே அபுல் ஆஸ்[ரலி] அவர்களும் தனது மனைவி ஜைனப் அவர்களை நபியவர்களிடத்தில் திருப்பி அனுப்புகிறார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அவர் என்னிடம் கூறியதில், உண்மையுடனும், அவர் என்னிடம் சத்தியம் செய்ததில் வாய்மையுடனும் நடந்து கொண்டார் என்று கூறினார்கள்.

அபுல் ஆஸ்[ரலி] அவர்களை நபியவர்கள் பாராட்டியதற்கு காரணம் இதுதானேயன்றி, இவர்கள்  கூறியது போன்று எந்த ஒப்பந்தமும் காரணமில்லை. அப்படியிருந்தால் நேரடியான ஹதீஸை முன்வைக்கட்டும்.
 
அதோடு, ஒரு வாதத்திற்கு இந்த நவீனவாதிகள்  கூறுவது போன்று வைத்துக் கொண்டாலும், ஜைனப்[ரலி] அவர்களின் திருமணம் நபித்துவத்திற்கு முன்னால் நடந்ததாகும். இவர்கள்  கூறியது போன்ற ஒப்பந்தத்தை நபியவர்கள் செய்திருந்தாலும், நபித்துவத்திற்கு முன்னால் நபியவர்கள் செய்ததை பின்பற்றலாம் என கூறுவார்களா..? இது கீழ்கண்ட வசனத்திற்கு முரணில்லையா..?


وَإِنْ خِفْتُمْ أَلاَّ تُقْسِطُواْ فِي الْيَتَامَى فَانكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاء مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلاَّ تَعْدِلُواْ فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلاَّ تَعُولُواْ

அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (4:3)
 
அடுத்து, அபூஜஹ்லின் மகளை மணப்பதாக இருந்தால், எனது மகளை விவாகரத்து செய்துவிடு என்று அலீ[ரலி] அவர்களிடம் கூறியதை ஆதாரமாக காட்டி, இரண்டாம் திருமணம் செய்யும் கணவனை பிரியும் உரிமை பெண்ணிற்கு உண்டு என்பதால் அந்த உரிமையை நபியவர்கள் இங்கு பயன்படுத்துகிறார்கள்  என்றும் கூறி, இரண்டாம் திருமணம் செய்யும் கணவன், தான் இரண்டாம் திருமணம் செய்யப்போவதை முன்கூட்டியே மனைவியிடம் சொன்னால்தான், அவனது முதல் மனைவி விரும்பினால் இவனோடு வாழவும்- விரும்பினால் இவனை விவாகரத்தும் செய்யமுடியும் என்று ஒரு வாதத்தை  வைக்கிறார்கள். கணவனின் இரண்டாம் திருமணத்தை  காரணம் காட்டி ஒரு பெண் தனது கணவனை பிரியலாம் என்பதற்கும் இவர்கள் ஆதாரத்தை முன்  வைக்கவேண்டும். 
 
அப்படியானால்,  அலீ[ரலி]  அவர்கள் இரண்டாம் திருமணம் செய்ய நாடுகையில், நபி[ஸல்] அவர்கள் தனது மகளை விவாகரத்து செய்யக்  கூறியதற்கு காரணம், நபியவர்கள் அலீ[ரலி] அவர்களின் திருமணத்திற்கு தடையாக நின்றதற்கு காரணம் அதே புகாரி 3110 ஹதீஸில் உள்ளது.


மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன்;. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மகளும் (அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது" என்று கூறினார்கள்.  
 
அலீ[ரலி] அவர்கள் இரண்டாம் திருமணம் செய்ய நாடுகையில், தனது மகளை விவாகரத்து செய்யக்  கூறியதற்கு காரணம் 'விவாகரத்து உரிமையை' நிலைநாட்ட அல்ல. மாறாக அல்லாஹ்வின் எதிரியின் மகளோடு ஒன்று சேர்ந்து வாழமுடியாது  என்பதற்காகவே.
 
எனவே, இரண்டாம் திருமணம் தொடர்பாக இந்த நவீனவாதிகள் வழங்கும் ஃபத்வாக்கள் அல்லாஹ் வழங்கிய பலதாரமண உரிமையை பறிப்பதாகவும், கணவனின் மறுமணத்தை காரணம் காட்டி பெண்களை விவகாரத்து செய்ய தூண்டுவதாகவும் அமைந்துள்ளதை நம்மால் உணரமுடிகிறது.
 
எல்லாம்  வல்ல அல்லாஹ், ஃபத்வாக்களை பாக்கெட்டில் இருந்து அள்ளிவீசும் நவீன வாதிகளுக்கு நேர்வழி காட்டுவானாக!