அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 31 டிசம்பர், 2010

ஸஃபர் மாதமும் முஸ்லிம்களும்!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.

இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருநேரத்தை, ஒருநாளை,ஒருமாதத்தை, ஒருஆண்டை சிறப்பித்து சொல்வதாக இருந்தாலும் அல்லது மேற்கண்ட விசயங்களை கெட்டவை என்று கருதுவதாக இருந்தாலும் அவை அல்லாஹ்வாலோ,அல்லது ரசூல்[ஸல்] அவர்களாலோ சொல்லப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு சொல்லப்படாத எதுவும் மார்க்கமாகாது என்பதுதான்  அடிப்படையான விஷயமாகும்.

12 மாதங்களில் இஸ்லாம் நான்கு மாதங்களை புணிதமாதம் என்று அடையாளம் காட்டி இந்த மாதங்களில் போர்செய்வது கூடாது என்று தடுத்திருக்கிறது. அவை முறையே துல்கஃதா,துல்ஹஜ்,முஹர்ரம்,ரஜப் ஆகியவையாகும். அதுபோல பீடை மாதங்கள் என்று ஏதாவது ஒருமாதம் மார்க்கத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளதா? என்றால் இல்லை. ஆனால் இன்று முஸ்லிம்  சமுதாயம் ஸஃபர் மாதத்தை பீடைமாதம் எனக்கருதி அம்மாதத்தில் சுபகாரியங்கள் எதையும் செய்வதில்லை.

இந்துக்கள் ஆடிமாததை பீடைமாதமாக கருதி, அம்மாதத்தில் சுபகாரியங்களை மேற்கொள்ளமாட்டார்கள். கடைகளில் 'ஆடித்தள்ளுபடி' என்று இருப்புகளை தள்ளிவிடுவார்கள். அதுபோல முஸ்லிம்களும் ஸஃபர் மாதத்தை தள்ளுபடி மாதமாக்கிவிட்டனர். ஒரு மாதத்தை பீடை என நம்புவது முஸ்லிம்களின் வழிமுறையல்ல. மாறாக மக்கத்து காஃபிர்களின் வழிமுறையாகும்.

அறியாமைக்காலத்தில் மக்கள் ஷவ்வால் மாதத்தை பீடைமாதமாக கருதிவந்தனர். நபி[ஸல்]அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில்தான் திருமணம் செய்தனர்.ஷவ்வால் மாதத்தில்தான் நபியவர்களுடன் இல்லறவாழ்வை தொடங்கினேன். என்னைவிட நபியவர்களுக்கு விருப்பமான மனைவி யாரும் உண்டா? என்று அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் அறிவிக்கும் செய்தி முஸ்லீம்,அபூதாவூத் ஆகிய கிரந்தங்களில் இடம்பெற்றுள்ளது.

பீடைமாதம்  என்று கருதப்பட்ட மாதத்தில், அதை உடைத்து எரியும்வன்னம் நபியவர்கள் ஆயிஷா[ரலி]அவர்களை திருமணம் செய்து, சிறப்புற வாழ்ந்துகாட்டி,அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் மடியிலேயே உயிர்துறந்தார்களே! இதிலிருந்து விளங்கவில்லையா? பீடைஎன்று எதுவுமில்லை என்று.

மேலும், ஒருநேரத்தில் உலகத்திலுள்ள அனைவருக்கும் நல்லது மட்டும் நடக்கும் நேரம் ஏதாவது உண்டா? ஒருநேரத்தில் உலகத்திலுள்ள அனைவருக்கும் தீயது மட்டும் நடக்கும் நேரம் ஏதாவது உண்டா? உதாரணத்திற்கு பத்துமணிக்கு எனக்கு குழந்தை பிறக்கிறது. இந்தநேரம் எனக்கு மகிழ்ச்சியான நேரம். என்வீட்டிற்கு நாலுவீடுதள்ளி ஒருவரின் குழந்தை அதேநேரத்தில் இறந்துவிடுகிறது. இது அவருக்கு சோகமான நேரம். ஒருநிமிடத்தில் உலகத்தில் அனைவருக்கும் ஒரேமாதிரி சம்பவங்கள் நிகழாதபோது, ஒருமாதத்தை பீடைஎன ஒதுக்குவது பகுத்தறிவிற்கு ஏற்றதா?

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன். [புகாரி]

மேலும் இம்மாதத்தில் பீடையை போக்குகிறேன் என்ற பெயரில் மாவிலையில் எழுதிக்குடிப்பது, கடலில் குளிப்பது, புல்வெளியை மிதிப்பது இப்படியான மூடபழக்கங்களும் அரங்கேறுகிறது. இது நிச்சயமாக மார்க்கம் காட்டித்தராத வழியாகும். மேலும் ஒடுக்கத்துப்புதன் என்ற ஒரு வார்த்தையைக்கூட அல்-குர்'ஆனிலோ, ஹதீஸிலோ காணஇயலாது.

எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள் மற்றும் மனிதர்களின் சாபம் உண்டாகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அலி (ரலி) ஆதாரம் : அபூதாவூத், நஸாயீ)

எனவே, ஒருகாலத்தில் முஸ்லிம்களுக்கும்-மார்க்கத்திற்கும் மத்தியில் இருந்த இடைவெளியை பயன்படுத்தி வயிறையும்,பாக்கெட்டையும் ஒருசேர நிரப்ப எண்ணியவர்களின் கண்டுபிடிப்பே  ஸஃபர் பீடையும், ஒடுக்கத்துபுதனும் என்பதை விளங்கி இந்த மூடநம்பிக்கையிலிருந்து முஸ்லிம்கள் விலகவேண்டும். மேலும், ஜாஹிலியாக்களின் அறியாமையை நபி[ஸல்] அவர்கள் எப்படி செயல்வடிவில் உடைத்து எரிந்தார்களோ அதுபோல, தவ்ஹீத்வாதிகள் இந்த ஸஃபர்மூட நம்பிக்கையை உடைத்தெறிய, ஸஃபர்மாதத்தில் தங்கள் குடும்ப திருமண மற்றும் சுபகாரியங்களை நடத்த முன்வரவேண்டும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் மார்க்கத்தில் உள்ளதை மட்டும் நம்பக்கூடிய,அதனடிப்படையில் அமல் செய்யக்கூடியவர்களாக ஆக்கியருள்வானாக!

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

முத்தத்திலும் முன்னோனின் சான்று!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின்  படைப்பினங்களில் மனிதர்கள் மட்டுமன்றி, விலங்குகள்-பறவைகள்- ஏன் தாவரங்கள் கூட ஒவ்வொன்றும் ஜோடி-ஜோடியாக படைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எந்த ஒரு ஆண் விலங்கும் இன்னொரு ஆண் விலங்கை நாடி இணைவதில்லை. அது பெண் விலங்கை மட்டுமே நாடுகிறது. எந்த ஒரு ஆண்  பறவையும் இன்னொரு ஆண் பறவையுடன் இணைவதில்லை. பெண் பறவையை மட்டுமே நாடுகிறது.  ஐந்தறிவுள்ள இந்த ஜீவன்கள் கூட இறைவனின்  ஏற்பாட்டின் படியே, தத்தமது இணையைத் தேடி இன்புற்று, இனவிருத்தி செய்கின்றன. ஆனால் ஆறறிவு உள்ளவன், அபரிதமான ஆற்றல் வழங்கப்பட்டவனான  மனிதன் மட்டும் நாகரீகத்தின் பெயரால் இறைவனின் நியதிக்கு மாற்றமான இணையை தேடுகிறான்.
ஆம்! இன்றைய நாகரிக வளர்ச்சியில் ஓரினச்சேர்க்கை என்பது ஏறக்குறைய குற்றமில்லை  என்று கருதும் அளவுக்கு வந்துவிட்டது. மேற்கத்திய நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்கள் பெரும்பாலான நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. இத்தகைய ஓரினச்சேர்க்கை இயல்பாகவே காலாச்சார சீரழிவு என்றாலும் 'முற்போக்கு' முலாம் பூசி மறைக்கின்றனர். ஆனால் ஒரு ஆணும்- பெண்ணும் இணைவதுதான் சிறந்தது என்பதற்கு எராளமான சான்றுகள் இருந்தாலும் சமீபத்தில் 'முத்தம்' மூலம் மற்றொரு சான்றும் வெளியாகியுள்ளது.
''ஆணும்-பெண்ணும் உதட்டோடு உதடு சேர்த்து வழங்கும் முத்தத்தில், முத்தம் கொடுக்கும் அந்த நேரத்தில் வாயில் ஊறும் உமிழ்நீர் நோய்க் கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்டது. இதன் மூலம் பற்களில் உள்ள பாக்டீரியாக்களை  போக்கி விடுகிறது. இத்தனை முன்னேற்பாடுகளும் வாய் மூலமாக, ஆணிடமிருந்து பெண்ணிற்கோ- பெண்ணிடமிருந்து ஆணிற்கோ கிருமிகள் பரவிவிடக் கூடாது என்பதற்காக இயற்கை[இறைவன்] செய்த முன்னேற்பாடு என்று கூறும் மருத்துவ உலகம், அடுத்து சொல்வதுதான் முக்கியமாக கவனிக்கவேண்டிய அம்சமாகும். அதாவது இந்த கிருமிகளை கொல்லும் சக்தி, ஆணும்-பெண்ணும் முத்தமிடும்போது மட்டுமே ஏற்படுகிறது என்ற மிகப்பெரிய ஆச்சரியத்தை சொல்கிறது  மருத்துவ உலகம்.
இதன் மூலம் அறிவது என்ன? இறைவன் ஏற்பாட்டின்படி இணைவதில்தான் இன்பம் என்பதோடு, அதுதான் பாதுகாப்பானது  என்பதை உணரமுடிகிறது. இனியேனும் நாகரீகம் என்றபெயரில் கால்நடைகளை விட கேவலமாக செல்லும் செயலிலிருந்து மனிதன் திருந்திக்கொள்ளுதல் நன்று.

தொலைந்த பிள்ளை கிடைத்தது; ஆனால் மார்க்கம்....?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

''விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான  (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கே சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை [இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.

மேலும், அபூ ஹுரைரா(ரலி) 'எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான] இயற்கை
மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலின் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்" என்ற (திருக்குர்ஆன் 30:30) வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள்.[நூல்;புகாரி எண்; 1358 ]
 
மேற்கண்ட நபிமொழியை  உண்மைப்படுத்தும் சம்பவம் ஒன்றை சமீபத்தில் செய்திகளில் பார்த்தோம். ஆந்திராவை சேர்ந்த முரான்பாய்- பேகம் தம்பதிகளின் மகன் சபீர். முன்பு சபீருக்கு 5 வயது. அப்போது வீட்டு அருகேயுள்ள ரெயில் நிலையத்தில் சபீர் விளையாடிக் கொண்டிருந்தான். ரெயிலில் ஏறி விளையாட ஆசை ஏற்பட்டதால் அங்கு நின்று கொண்டிருந்த ரெயிலில் ஏறினான்.
 
அந்த ரெயில் திடீரென கிளம்பியது. இதனால் சபீர் அதிர்ச்சி அடைந்தான். ரெயில் வேகமாக சென்ற தால் அவனால் கீழே இறங்க முடியவில்லை. அழுது கொண்டே ரெயிலில் அமர்ந் திருந்தான். இதற்கிடையே அந்த ரெயில் சென்னை வந்தது. ரெயில் நிலையத்தில் வந்திறங்கிய சபீருக்கு எங்கு செல்வதென்று தெரியவில்லை.
 
சபீர் அழுது கொண்டிருப்பதை பார்த்து ரெயில் நிலையத்தில் நின்றவர்கள் அவனை ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்த்தனர். அந்த தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கிய சபீர் 10-ம் வகுப்பு வரை படித்தான். அதன் பிறகு தொண்டு நிறுவனத்தில் இருந்து வெளியேறிய சபீர் கிடைத்த வேலைகளை பார்த்து வயிற்றை கழுவி வந்தார்.
 
தற்போது 21 வயதான சபீர், தனக்கு அறிமுகமாவ்ர்கள் மற்றும் தன்னார்வ   தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் பெற்றோரை தேடும்  படலத்தில் இறங்கினார்.  சபீர் தனது 5 வயதில் இருந்த ஞாபகத்தை பயன்படுத்தி ஆந்திர மாநிலத்தில் தனது வீடு இருக்கும் இடத்தை கூறினார். அதன் மூலம் 1 வாரம் கடுமையாக போராடியதன் மூலம் சபீரின் பெற்றோர் இருக்கும் இடம் தெரிந்தது. இதையடுத்து சபீரின் தந்தை முரான்பாய், தாய் பேகம் ஆகியோர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு பெற்றோரிடம் சபீர் ஒப்படைக்கப்பட்டார்.  
 
மகனை பார்த்த பெற்றோரும், பெற்றோரை பார்த்த சபீரும் உணர்ச்சி பெருக்கத்தில் காணப்பட்டனர். அவர்கள் ஆனந்த கண்ணீரில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பின்னர் சபீர் கூறியதுதான் கவனிக்கவேண்டிய அம்சமாகும்.  ''எனது பெற்றோர் எப்படியாவது கிடைக்க வேண்டும் என்று சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்திருந்தேன். எனது வேண்டுதல் பலித்து விட்டது'' என்றார். அதோடு ஐயப்பனுக்கு மாலை அணிந்து, அந்த தோற்றத்தில் சபீர் இருக்கிறார். மகனின் இந்த மன[மத]மாற்றத்தை பெற்றோரும் கண்டுகொண்டதாகவோ, கவலைப் பட்டதாகவோ தெரியவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.
 
சபீர் பெற்றோரின் அரவணைப்பில்,அறிவுரையில் வாழும் வாய்ப்பை சிறுவயதிலேயே இழந்த காரணத்தால், அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள யாரை கரம்பற்றினாரோ, அவர்களின் அடிப்படையில்  அவரது மார்க்கமும் அமைந்துவிட்டது. இந்த சம்பவத்தின் மூலம்  அறியவேண்டியது என்னவெனில், பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல்  கவனம் செலுத்தி, அவர்கள் எந்த வயதில் இருந்தாலும் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கவேண்டும்.
 
அடுத்து சமுதாய அமைப்புகள், ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை  முன்மாதிரியாக கொண்டு, 'அபய இல்லங்கள்' ஏற்படுத்தி, பெற்றோரை பிரிந்து வரும் சிறார்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய உதவிகள் செய்வதன் மூலம் சமூக சீர்கேட்டிலிருந்து அவர்களை  பாதுகாத்து இஸ்லாத்தில் அவர்கள் நிலைப்பெற உதவவேண்டும்.
 
ஹூம்..! என்ன செய்ய! நம்ம சமுதாயத்தில் இதைப்பத்தியெல்லாம் கவலைப்படுபவர்களை  விட, சக சகோதரனின் அமைப்பை ஆட்டயப் போடவும், அதற்காக சமுதாயத்தின் பணத்தை கோர்ட்டில்  கொண்டுபோய் கொட்டி, நினைத்ததை சாதிப்பதைப் பற்றியும்தானே   கவலைப்படுகிறார்கள். ஆனாலும் இவர்கள் சமுதாயத் தலைவர்களாம்! எல்லாம் அவன் செயல்.

செவ்வாய், 7 டிசம்பர், 2010

முஹர்ரம் 10.செய்யவேண்டியவையும்-செய்யக்கூடாதவையும்!



பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

முஸ்லிம்களில் சிலர் முஹர்ரம் 10 வந்துவிட்டால், அந்த நாளில் என்னசெய்ய வேண்டுமென்று மார்க்கம் சொல்லியிருக்கிறது என்றெல்லாம் பார்ப்பதில்லை காலம் காலமாக நடைமுறையில் என்ன உள்ளதோ அல்லது ஆலிம்சாக்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்து நன்மைக்கு பதிலாக அல்லாஹ்விடம் பாவத்தை பெற்றுக்கொள்வதை பார்க்கிறோம்.

சில  பகுதிகளில் முஹர்ரம10. அன்று கொழுக்கட்டை சுட்டு, வீடுவாசலை நன்றாக கழுவிவிட்டு ஆலிம்சாவை கூப்பிட்டு பாத்திகா ஓதிவிட்டால் கடமை முடிந்தது என்ற பழக்கம் இருந்தது. அல்லாஹ்வின் பேரருளால் தற்போது இந்த பித்அத்  குறைந்துள்ளது. எனினும், முழுமையாக ஒழியவில்லை.

வேறு சில பகுதிகளில்  ஹுஸைன் [ரலி] அவர்கள் ஷஹீதானதை நாங்கள் நினைவு கூறுகிறோம் என்ற பெயரில், ஷியாக்களின் வழிமுறையான பஞ்சா எடுத்து, இந்துக்களின் வழிமுறையான தீ மிதிப்பதையும் முஸ்லிம்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இது தெளிவான வழிகேடாகும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக்  கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்." [புகாரி எண்; 1294 ]

முஹர்ரம் மாதத்தில் செய்யவேண்டியது என்ன என்று நபி[ஸல்] அவர்கள் நமக்கு தெளிவாக்கிவிட்டார்கள். நாம் செய்யவேண்டியது இரண்டு நோன்புகள் நோற்பது மட்டுமே நபிவழியாகும்;

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர்;இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்,

ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி  ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)

ஆஷுரா நோன்பை ஆர்வமூட்டிய அல்லாஹ்வின் தூதர்;
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;

"ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!" [புகாரி எண்; 2006 ]

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, 'இன்று ஆஷுரா  நாளாகும்; எனவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாக இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும்!" என்று அறிவிக்கச் செய்தார்கள்! [புகாரி எண்; 2007 ]

ஆஷுரா நோன்பு ரமளானுக்கு முன்னும்; பின்னும்;
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;

அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி(ஸல்) அவர்களும் நோற்றனர். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷுரா  நோன்பைவிட்டுவிட்டனர். விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர்விட்டுவிட்டனர். [புகாரி எண்; 2002 ]

எனவே, சகோதர/சகோதரிகளே! இரண்டு நோன்பை நோற்பதன் மூலம் இறை உவப்பை பெறுவோம். மேலும் அநியாயக்கார அரசனான ஃபிரவ்ன் இடமிருந்து அல்லாஹ்வின் தூதர் மூஸா[அலை] அவர்களையும் நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் காப்பாற்றினான். அதுபோல ஃபிரவ்னின் மறுவடிவமான அமெரிக்கா, இஸ்ரேல், சங்பரிவாரத்திடமிருந்தும், சக முஸ்லிம்களின் உயிர்- உடமை- மானத்தோடு விளையாடும் குழப்பவாதிகளிடமிருந்தும்  உலக முஸ்லிம்களை பாதுகாக்குமாறு அந்நாளில் துஆ செய்வோம்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

வெள்ளி, 3 டிசம்பர், 2010

இறைவழியில் தியாகப்பயணம்[பாகம்1] ...[மறுபதிப்பு]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அகிலத்திற்கோர் அருட்கொடையாம் அண்ணல்நபி[ஸல்]அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை அன்றைய அறியாமைக்கால மக்களிடம் எடுத்தியம்பியபோது பல்வேறு ஏச்சுக்களும்,பேச்சுக்களும், எள்ளிநகையாடல்களும்தான் பதிலாக பரிசாக கிடைத்தது. நாளடைவில் அல்லாஹ்வின் அருளால் சிறுக சிறுக மக்கள் தூய இஸ்லாத்தை தழுவியபோது,அன்றைய குறைசிகளும், ஏனைய இறைமறுப்பாளர்களும் முஸ்லிம்களை சொல்லொணா துன்பத்திற்கு உள்ளாக்கினர்.

இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்திற்காக அருமை பிலால்[ரலி],அம்மார்[ரலி],யாசிர்[ரலி] உள்ளிட்ட சகாபாக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள். உச்சகட்டமாக யாசிர்[ரலி] சுமைய்யா[ரலி] உள்ளிட்ட சகாபாக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக தங்கள் இன்னுயிரையும் இழக்கும் நிலை ஏற்ப்பட்டது.

இப்படிப்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில்தான் நபித்துவத்தின் நான்காம் ஆண்டு நடுவில் அல்லது இறுதியில் முஸ்லிம்கள் மீது நிராகரிப்பவர்கள் வரம்பு மீற ஆரம்பித்தனர். தொடக்கத்தில் குறைவாகத் தென்பட்ட துன்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றன. ஐந்தாம் ஆண்டின் நடுவில் சோதனைகள் மலையாக உருவெடுக்கவே அதிலிருந்து விடுதலைபெற வழி என்ன என்று சிந்திக்கத் தொடங்கினார்கள். இச்சூழ்நிலையில்தான்

قُلْ يَا عِبَادِ الَّذِينَ آمَنُوا اتَّقُوا رَبَّكُمْ لِلَّذِينَ أَحْسَنُوا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةٌ وَأَرْضُ اللَّهِ وَاسِعَةٌ إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُم بِغَيْرِ حِسَابٍ
(நபியே!) நீர் கூறும்; "ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் - அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள். (அல்குர்ஆன் 39:10) என்ற வசனம் இறங்கியது.

நபியவர்களின்கட்டளை;

ஹபஷாவின் மன்னராக இருந்த 'அஸ்மஹா நஜ்ஜாஷி நீதமானவர். அவர் யாருக்கும் அநியாயம் இழைக்கமாட்டார் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். எனவே, உயிரையும் மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செய்யுமாறு முஸ்லிம்களை நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி நபித்தோழர்களின் ஒரு குழுவினர் முதலாவதாக ஹபஷாவிற்கு நாடு துறந்து செல்ல இருந்தார்கள். இதனை குறைஷிகள் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக இரவின் நடுநிசியில் புறப்பட்டு 'ஷ{அய்பா துறைமுகத்தை அடைந்தனர். வியாபாரக் கப்பல்கள் இரண்டு அங்கு முகாமிட்டிருந்தன. எப்படியோ மோப்பம் பிடித்த குறைஷிகள், இவர்களைத் தேடி அந்த துறைமுகத்திற்கு வந்துவிட்டார்கள். அதற்குள் முஸ்லிம்கள் வியாபாரக் கப்பல்களில் ஏறி ஹபஷாவுக்கு புறப்பட்டு விட்டார்கள். இதனால் குறைஷிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

நாடு துறந்து சென்ற குழுவில் பன்னிரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் இருந்தனர். அவர்களுக்கு தலைவராக உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) இருந்தார்கள். இப்பயணத்தில் அவர்களின் மனைவியான (நபி (ஸல்) அவர்களின் மகள்) ருகையாவும் (ரழி) உடன் இருந்தார்கள். நபி இப்றாஹீம் (அலை), நபி லூத் (அலை) ஆகிய இருவருக்குப் பின் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரா செய்த முதல் குடும்பம் இதுதான்" என்று இவ்விருவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம்கள் ஹபஷாவில் வாழ்வை நிம்மதியாகக் கழித்தார்கள். இது நபித்துவம் பெற்ற ஐந்தாம் ஆண்டின் ரஜப் மாதத்தில் நடைபெற்றது. (ஜாதுல் மஆது)

இந்நிலையில்,குறைசிகள் முஸ்லிமாகி விட்டனர் என்ற தவறான தகவல் அபிசீனியாவில் உள்ள முஸ்லிம்களிடம் பரவ அதனால் அதே ஆண்டு ஷவ்வால் மாதத்தில் அந்த முஸ்லிம்கள் மக்காவிற்குத் திரும்பினர். மக்காவிற்கு சற்று முன்னதாகவே உண்மை நிலவரம் முஸ்லிம்களுக்குத் தெரிய வந்தவுடன் சிலர் ஹபஷாவிற்கே திரும்பிவிட்டனர். சிலர் எவருக்கும் தெரியாமல் மக்காவிற்குள் சென்றுவிட்டனர். மற்றும் சிலர் குறைஷிகள் சிலர் பாதுகாப்பில் மக்காவிற்குள் நுழைந்தனர்.

மெல்ல மெல்ல குறைஷிகள் இவர்களையும் மற்ற முஸ்லிம்களையும் கடுமையாக வேதனை செய்தனர். அவர்களது நெருங்கிய உறவினர்களும் கூட அவர்களுக்குக் கொடுமை செய்தனர். இந்நிலையில் மறுமுறையும் ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செல்லுங்கள் என தங்களது தோழர்களுக்கு ஆலோசனை கூற வேண்டிய கட்டாயம் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது.

இரண்டாவது ஹிஜ்ரா;
முஸ்லிம்கள் பெருமளவில் ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செல்ல ஆயத்தமானார்கள். ஆனால் இந்த இரண்டாவது ஹிஜ்ரா முந்திய ஹிஜ்ராவை விட மிக சிரமமாகவே இருந்தது. முஸ்லிம்களின் இப்பயணத்தை குறைஷிகள் அறிந்து கொண்டதால் அத்திட்டத்தை அழிக்க வேண்டுமென்பதற்காக தீவிரமான முயற்சியில் இறங்கினர். ஆனால், அல்லாஹ்வின் அருளால் பயணம் அவர்களுக்குச் சாதகமாகி, நிராகரிப்பவர்கள் தங்களது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாகவே பயணத்தைத் துதப்படுத்தி ஹபஷா மன்னர் நஜ்ஜாஷியை அடைந்தனர்.
இம்முறை 83 ஆண்களும் 18 அல்லது 19 பெண்களும் ஹபஷா சென்றனர். (சிலர் அம்மார் (ரழி) இப்பயணத்தில் செல்லவில்லை. எனவே, ஆண்களில் 82 நபர்கள்தான் என்றும் கூறுகின்றனர்.) (ஜாதுல் மஆது)

குறைஷியர்களின் சூழ்ச்சி;
முஸ்லிம்கள் தங்களது உயிருக்கும் மார்க்கத்திற்கும் பாதுகாப்புள்ள இடமான ஹபஷாவில் நிம்மதியாக வசிப்பது இணைவைப்பவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவர்களில் நுண்ணறிவும், வீரமுமிக்க அம்ரு இப்னு ஆஸ், அப்துல்லாஹ் இப்னு அபி ரபீஆ ஆகிய இருவரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் நஜ்ஜாஷியையும் அவரது மத குருக்களையும் சந்தித்துப் பேசி, முஸ்லிம்களை நாடு கடத்தும்படி வேண்டுகோள் வைக்கும்போது அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு மதிப்புமிக்க வெகுமதிகளுடன் ஹபஷா அனுப்பி வைத்தனர்.

முதலில் அவ்விருவரும் மத குருக்களிடம் சென்று அவர்களுக்குரிய அன்பளிப்புகளை கொடுத்து முஸ்லிம்களை வெளியேற்றுவதற்காக தகுந்த காரணங்களைக் கூறினர். அந்த மத குருக்களும் அதனை ஏற்று, முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு நஜ்ஜாஷியிடம் ஆலோசனை கூறுவோம் என்று ஒப்புக் கொண்டனர். பிறகு அவ்விருவரும் நஜ்ஜாஷியிடம் வந்து அவருக்குரிய அன்பளிப்புகளைச் சமர்ப்பித்து அவரிடம் இது குறித்து பேசினர்.

'அரசே! தங்கள் நாட்டுக்கு சில அறிவற்ற வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்களது இனத்தவர்களின் மார்க்கத்தைவிட்டு வெளியேறிவிட்டனர். உங்களது மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் உங்களுக்கும் நமக்கும் தெரியாத ஒரு புதிய மார்க்கத்தை பின்பற்றுகின்றனர். இவர்களது இனத்திலுள்ளவர்கள் அதாவது இவ்வாலிபர்களின் பெற்றோர்கள், பெற்றோர்களின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள் அனைவரும் இவர்களை அழைத்து வருவதற்காக எங்களை இங்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் இவர்களை நன்கு கண்காணிப்பார்கள்பாதுகாப்பார்கள். அவர்களைப் பற்றி இவர்கள் கூறிய குறைகளை, நிந்தனைகளை அவர்களே நன்கறிந்தவர்கள். ஆகவே, நீங்கள் அவர்களை எங்களுடன் திருப்பி அனுப்பிவிடுங்கள்!" என்று கூறினர்.

 உடனே அங்கிருந்த மத குருக்களும் 'அரசே! இவ்விருவரும் உண்மைதான் கூறுகின்றனர். அவர்களை இவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்களது இனத்தவர்களிடம் இவர்கள் அவர்களை அழைத்து செல்வார்கள்" என்றனர்.
ஆனால், பிரச்சனையைத் தீர விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து நஜ்ஜாஷி முஸ்லிம்களை அவைக்கு வரவழைத்தார். எதுவாக இருப்பினும் உண்மையே சொல்ல வேண்டும் என்ற ஒரே முடிவில் முஸ்லிம்கள் அங்கு சென்றனர்.

முஸ்லிம்களிடம் 'உங்களது இனத்தை விட்டுப் பிரிந்து எனது மார்க்கத்தையும் மற்றவர்களின் மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் புதுமையான மார்க்கத்தை ஏற்றிருக்கிறீர்களே! அது என்ன மார்க்கம்?" என்று நஜ்ஜாஷி கேட்டார்.
முஸ்லிம்களின் பேச்சாளராக இருந்த ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரழி) பதில் கூறினார்கள்: '

அரசே! நாங்கள் அறியாமைக் காலத்தில் இருந்தோம். சிலைகளை வணங்கினோம். இறந்த பிராணிகளைச் சாப்பிட்டோம். மானக்கேடான காரியங்களைச் செய்தோம். உறவுகளைத் துண்டித்து அண்டை வீட்டாருக்கு கெடுதிகள் விளைவித்து வந்தோம். எங்களிலுள்ள எளியோரை வலியோர் விழுங்கி வந்தனர் (அழித்து வந்தனர்.) இப்படியே நாங்கள் வாழ்ந்து வரும்போதுதான் எங்களில் உள்ள ஒருவரையே அல்லாஹ் எங்களுக்குத் தூதராக அனுப்பினான்.

அவரது வமிசத்தையும், அவர் உண்மையாளர், நம்பகத்தன்மை மிக்கவர், மிக ஒழுக்கசீலர் என்பதையும் நாங்கள் நன்கு அறிவோம். நாங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். நாங்களும் எங்களது மூதாதையர்களும் வணங்கி வந்த கற்சிலைகள், புனித ஸ்தலங்கள் போன்றவற்றிலிருந்து நாங்கள் விலக வேண்டும். உண்மையே உரைக்க வேண்டும். அமானிதத்தை நிறைவேற்ற வேண்டும். உறவினர்களோடு சேர்ந்து வாழவேண்டும். அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் தடைசெய்தவற்றையும் கொலைக் குற்றங்களையும் விட்டு விலகிவிடவேண்டும் என அத்தூதர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.

மேலும் மானக்கேடானவைகள், பொய் பேசுதல், அனாதையின் சொத்தை அபகரித்தல், பத்தினியான பெண்கள்மீது அவதூறு போன்றவற்றிலிருந்து எங்களைத் தடுத்தார். அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு இணைவைக்கக் கூடாது தொழ வேண்டும். ஏழை வரி (ஜகாத்து) கொடுக்க வேண்டும். நோன்பு நோற்க வேண்டும் என்றும் அத்தூதர் எங்களுக்கு கட்டளையிட்டார் (ஜஅஃபர் இன்னும் பல இஸ்லாமிய கடமைகளைப் பற்றிய விவரங்களை கூறினார்.)

நாங்கள் அவரை உண்மையாளராக நம்பினோம். அவரை விசுவாசித்தோம். அவர் எங்களுக்கு அறிமுகப்படுத்திய அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றினோம். அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம். அவனுக்கு இணை வைப்பதை விட்டுவிட்டோம். அவன் எங்களுக்கு விலக்கியதிலிருந்து விலகிக் கொண்டோம். அவன் எங்களுக்கு ஆகுமாக்கியதை அப்படியே ஏற்றுக் கொண்டோம். இதனால் எங்களது இனத்தவர் எங்கள் மீது அத்துமீறினர். எங்களை வேதனை செய்தனர். அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்டு சிலைகளை வணங்க வேண்டும். முன்பு போலவே கெட்டவைகளைச் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தித்து எங்களை எங்களது மார்க்கத்திலிருந்து திருப்ப முயற்சித்தனர். எங்களை அடக்கி அநியாயம் செய்து நெருக்கடியை உண்டாக்கி எங்களது மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கும் மார்க்க(மத) சுதந்திரத்துக்கும் அவர்கள் தடையானபோது உங்களது நாட்டுக்கு நாங்கள் வந்தோம். உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். உங்களிடம் தங்குவதற்கு விருப்பப்பட்டோம். அரசே! எங்களுக்கு இங்கு அநீதி இழைக்கப்பட மாட்டாதென்று நம்புகிறோம்" என இவ்வாறு ஜஅஃபர் (ரழி) கூறி முடித்தார்.

'அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர் கொண்டு வந்த ஏதாவது உம்மிடம் இருக்கிறதா?" என்று ஜஅஃபடம் நஜ்ஜாஷி வினவினார். அதற்கு ஜஅஃபர் 'ஆம்! இருக்கின்றது" என்றார். நஜ்ஜாஷி, 'எங்கே எனக்கு அதை காட்டு" என்றார். காஃப்-ஹா-யா-ஐன்-ஸாத் எனத் தொடங்கும் 'மர்யம் எனும் அத்தியாயத்தின் முற்பகுதியை ஜஅஃபர் (ரழி) ஓதிக் காண்பித்தார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! தாடி நனையும் அளவு நஜ்ஜாஷி அழுதார். அவையில் உள்ளவர்களும் ஜஅஃபர் (ரழி) ஓதியதைக் கேட்டு தங்களின் கையிலுள்ள ஏடுகள் நனையுமளவு அழுதனர். பிறகு நஜ்ஜாஷி, இதுவும் நபி ஈஸா (அலை) கொண்டு வந்த மார்க்கமும் ஒரே மாடத்திலிருந்து வெளியானது
(முஸ்லிம்களை அழைக்க வந்த இருவரையும் நோக்கி) 'நீங்கள் இருவரும் சென்று விடுங்கள். உங்களிடம் நான் இவர்களை ஒப்படைக்கமாட்டேன்" என்று கூறினார்.

அவையில் இருந்த எவரும் அவ்விருவரிடமும் பேசுவதற்குத் தயாராகவில்லை.
அவ்விருவரும் வெளியேறி வந்தவுடன் அம்ர் இப்னு ஆஸ் தமது நண்பர் அப்துல்லாஹ் இப்னு அப+ரபீஆவிடம் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர்களை அடியோடு வேரறுப்பதற்குண்டான வேலையை நான் நாளை செய்வேன்" என்று கூறினார். 'ஆனால் அப்படி செய்துவிடாதே! அவர்கள் நமக்கு மாறு செய்தாலும் நமது இரத்த பந்தங்களே ஆவார்கள்" என்று அப்துல்லாஹ் கூறினார். ஆனால், அம்ரு தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

மறுநாள் அம்ரு நஜ்ஜாஷியிடம் வந்து 'அரசே! இவர்கள் ஈஸாவின் விஷயத்தில் அபாண்டமான வார்த்தையை கூறுகிறார்கள்" என்று கூறினார். 'அப்படியா! அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்" என்றார் நஜ்ஜாஷி. இதை அறிந்தவுடன் சற்று பயமேற்பட்டாலும் உண்மையே சொல்ல வேண்டும் என்ற முடிவுடன் முஸ்லிம்கள் அவைக்கு வந்தனர். நஜ்ஜாஷி அவர்களிடம் அது பற்றி விசாரணை செய்தார்.

'எங்களது நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கூறியதைத்தான் நாம் அவர் விஷயத்தில் கூறுகிறோம்: அவர் அல்லாஹ்வின் அடிமை அவனது தூதர். அவனால் உயிர் ஊதப்பட்டவர். கண்ணியமிக்க கன்னிப்பெண் மர்யமுக்கு அல்லாஹ்வின் சொல்லால் பிறந்தவர்" என்று ஜஅஃபர் (ரழி) கூறினார்.
நஜ்ஜாஷி கீழேயிருந்து ஒரு குச்சியை எடுத்து 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! மர்யமின் மகன் ஈஸா (அலை) இக்குச்சியின் அளவுகூட நீ கூறியதைவிட அதிகமாக கூறியதில்லை" என்றார். இதைக் கேட்ட அவரது மத குருமார்கள் முகம் சுழித்தனர். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் முகம் சுழித்தாலும் இதுவே உண்மை" என்று நஜ்ஜாஷி கூறிவிட்டார்.

பிறகு நஜ்ஜாஷி முஸ்லிம்களை நோக்கி 'நீங்கள் செல்லலாம்! எனது பூமியில் நீங்கள் முழு பாதுகாப்புப் பெற்றவர்கள். உங்களை ஏசியவர் தண்டனைக்குரியவர். தங்கத்தின் மலையை எனக்கு கொடுத்தாலும் உங்களைத் துன்புறுத்த நான் விரும்பமாட்டேன்" என்று கூறினார். தனது அவையில் உள்ளவர்களிடம் அவ்விருவர்கள் கொண்டு வந்த அன்பளிப்புகளை அவர்களிடமே திரும்ப கொடுத்து விடுங்கள். எனக்கு அதில் எவ்வித தேவையும் இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் முன்னர் பறிபோன எனது ஆட்சியை எனக்கு மீட்டுத் தந்தபோது என்னிடமிருந்து அவன் லஞ்சம் வாங்கவில்லை. எனவே, நான் அவன் விஷயத்தில் லஞ்சம் வாங்குவேனா? எனக்கு எதிராக அல்லாஹ் கிளர்ச்சியாளர்களுக்கு உதவாதபோது அவனுக்கு எதிராக நான் பிரச்சனையாளர்களுக்கு உதவுவேனா? (எனக்கு எதிராக என் எதிரிகளுக்கு அவன் உதவி செய்யாதபோது அவனுக்கு எதிராக நான் அவனது எதிரிகளுக்கு உதவி செய்வேனா?)" என்று கூறினார்.


இச்சம்பவத்தை அறிவிக்கும் உம்மு ஸலமா (ரழி) கூறுவதாவது: அவ்விருவரும் அங்கிருந்து கேவலப்பட்டு வெளியேறினர். அவர்களது அன்பளிப்புகளும் திரும்ப கொடுக்கப்பட்டன. நாங்கள் சிறந்த நாட்டில் சிறந்த தோழமையில் அவரிடம் தங்கியிருந்தோம். (இப்னு ஹிஷாம்)

தொடரும்...


இறைவழியில் தியாகப்பயணம்.[பாகம்2] ...[மறுபதிப்பு]

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.
முதல் பாகத்தில் சத்திய சகாபாக்கள்  அபிசீணியாநோக்கி தியாகப்பயணம் மேற்கொண்டதை அறிந்தோம். இந்த கட்டுரையில் இஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்ப்படுத்திய மதீனா ஹிஜ்ரத் பயணம் பற்றி சில முக்கிய விசயங்களை அறிந்துகொள்வோம்.

ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செய்த முஸ்லிம்களைத் திரும்பக் கொண்டு வருவதில் தோல்வியுற்ற இணைவைப்பவர்கள் கடுங்கோபத்தாலும் குரோதத்தாலும் பொங்கி எழுந்தனர். மக்காவில் மீதமிருந்த முஸ்லிம்களின் மீது தங்களது அட்யூழியங்களைக் கட்டவிழ்த்து விட்டதுடன் நபி (ஸல்) அவர்களுக்கும் கெடுதிகள் பல செய்யத் துவங்கினர். அவர்களின் செயல்பாடுகளைக் கவனிக்கும்போது அவர்களின் எண்ணப்படி இக்குழப்பத்திற்கு வேராக இருந்த நபி (ஸல்) அவர்களை ஒழித்துக் கட்டவே அவர்கள் முயற்சி செய்தனர் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.


ஹிஜ்ரா செய்தவர்கள் போக மக்காவில் முஸ்லிம்கள் மிகக் குறைவாகவே எஞ்சி இருந்தார்கள். அவர்களில் சிலர் சரியான பக்க பலத்துடனும் கோத்திர பாதுகாப்புடனும் இருந்தார்கள். மற்றும் சில முஸ்லிம்கள் சிலரின் அடைக்கலத்திலும் பாதுகாப்பிலும் இருந்தனர். ஆனால், எவரும் தங்களது இஸ்லாமை வெளிப்படுத்தாமல் மறைத்தும், வம்பர்களின் கண்களிலிருந்து முடிந்த அளவு மறைந்தும் ஒதுங்கியும் வாழ்ந்தனர். இவர்கள் எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்த போதிலும் நிராகரிப்பவர்களின் தொந்தரவிலிருந்து முழுமையாகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.

இந்நிலையில்தான் அல்லாஹ்,
فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ
ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!15:94என்ற வசனத்தை இறக்கியவுடன்
நபியவர்கள் தன்னுடைய பிரச்சாரத்தை வெளிப்படையாக செய்ய ஆரம்பித்தவுடன் நபியவர்களுக்கும்,ஏனைய சகாபாக்களுக்கும் பல்வேறு இன்னல்களை மக்கத்து குறைசிகள் தந்தார்கள் ஒருகட்டத்தில் குறைசிகளின் தொந்தரவால் அபூபக்கர்[ரலி]அவர்கள் ஹபஷாவை நோக்கி ஹிஜ்ரத் செய்ய தீர்மானித்தார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;

எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாகவே என் பெற்றோர் முஸ்லிம்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் பகலின் இரண்டு ஓரங்களான காலையிலும் மாலையிலும் எங்களிடம் வராமல் ஒரு நாளும் கழிந்தது இல்லை. முஸ்லிம்கள் (எதிரிகளின் கொடுமைகளால்) சோதனைக் குள்ளாக்கப்பட்டபோது, அபூ பக்ர்(ரலி) தாயகம் துறந்து அபிஸினியாவை நோக்கி சென்றார்கள். 'பர்குல் ஃம்மாத்' எனும் இடத்தை அவர்கள் அடைந்தபோது அப்பகுதியின் தலைவர் இப்னு தம்னா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களிடம், 'எங்கே செல்கிறீர்?' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி) 'என் சமுதாயத்தவர் என்னை வெளியேற்றிவிட்டனர்; எனவே பூமியில் பயணம் (செய்து வேறுபகுதிக்குச்) சென்று என் இறைவனை வணங்கப் போகிறேன்! என்று கூறினார்கள். அதற்கு இப்னு தம்னா, 'உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது' வெளியேற்றப்படவும் கூடாது; வெளியேற்றப்படவும்கூடாது! ஏனெனில் நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர்; உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்; பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர்; விருத்தினர்களை உபசரிக்கிறீர். எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன்! எனவே, திரும்பி உம்முடைய ஊருக்குச் சென்று இறைவனை வணங்குவீராக!' எனக் கூறினார்.
[ஹதீஸ் சுருக்கம்,நூல்;புஹாரி,எண் 2297 ]

இதற்கிடையில் நபியவர்கள் தாயிப் போன்ற சுற்றுப்புறங்களில் தன்னுடைய அழைப்புப்பணியை விரிவுபடுத்தியதோடு,ஹஜ்ஜுடைய காலம் நெருங்கியபோது மக்கள் அனைவரும் பல திசைகளிலிருந்து ஹஜ்ஜு கடமையை நிறைவேற்றுவதற்காக மக்காவிற்கு வந்த வண்ணமிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு கோத்திரத்திற்கும் சென்று அவர்களுக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்தி, அதன்பக்கம் அழைப்புக் கொடுத்தார்கள்.

நபித்துவத்தின் நான்காவது ஆண்டிலிருந்து இப்படித்தான் அம்மக்களை இஸ்லாமின் பக்கம் அழைத்து வந்தார்கள். ஆனால், இந்த பத்தாவது ஆண்டு மேலும் ஒரு கோரிக்கையையும் அவர்களுக்கு முன் வைத்தார்கள். அதாவது, நான் அல்லாஹ்வின் மார்க்கத்தை எடுத்து வைப்பதற்கு எனக்கு இடம் கொடுத்து உதவி செய்து எதிரிகளிடமிருந்து எனக்கு பாதுகாப்பு அளியுங்கள் என்று அம்மக்களிடம் கேட்டுக்கொண்டார்கள்.

அடுத்து நபி (ஸல்) மினாவில் அகபா என்ற இடத்திற்கு சென்றபோது அங்கு சில ஆண்களின் பேச்சுக் குரல் கேட்டவுடன் அவர்களிடம் சென்று பேச விரும்பினார்கள். அவர்கள் கஸ்ரஜ் கிளையாரைச் சேர்ந்த மதீனாவில் உள்ள ஆறு இளைஞர்களாவர்.
அவர்கள்,
1) அஸ்அது இப்னு ஜுராரா (நஜ்ஜார் குடும்பம்)
2) அவ்ஃப் இப்னு ஹாரிஸ் (நஜ்ஜார் குடும்பம்)
3) ராஃபிஃ இப்னு மாலிக் (ஜுரைக் குடும்பம்)
4) குத்பா இப்னு ஆமிர் இப்னு ஹதீதா (ஸலமா குடும்பம்)
5) உக்பா இப்னு ஆமிர் இப்னு நாபி (ஹராம் இப்னு கஅப் குடும்பம்)
6) ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஆப் (உபைத் இப்னு கனம் குடும்பம்)

மதீனாவாசிகளுக்கும் யூதர்களுக்கும் சண்டை மூளும்போது 'கடைசி காலத்தில் ஒரு நபி வருவார். அவருடன் சேர்ந்து நாங்கள் உங்களைக் கடுமையாகக் கொலை செய்வோம்" என்று அந்த யூதர்கள் மதீனாவாசிகளைப் பார்த்துக் கூறுவார்கள். இவ்வாறு யூதர்கள் கூறுவதை பலமுறை மதீனாவாசிகள் கேட்டிருந்தனர். எனவே, இப்போது நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்தியபோது அவர்களை அறிந்து கொள்வது மதீனாவாசிகளுக்கு மிக எளிதாக இருந்தது. (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

இவர்கள் மதீனாவுக்கு இஸ்லாமிய அழைப்பை எடுத்துச் சென்றார்கள். அங்கு மதீனாவாசிகள் ஒவ்வொருவரின் வீட்டிலும் நபி (ஸல்) அவர்கள் பற்றியே பேசப்பட்டது. (இப்னு ஹிஷாம்)

இதை அடுத்து நபித்துவத்தின் பனிரெண்டாம் ஆண்டு ஹஜ் காலத்தில் (கி.பி. 621 ஜூலையில்) மதீனாவிலிருந்து நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் (பைஆ) செய்வதற்காக 15 நபர்கள் வந்திருந்தனர். முந்தைய ஆண்டு வந்த ஆறு நபர்களில் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஆபைத் தவிர மற்ற ஐந்து பேர்களும், அவர்களுடன் புதிதாக ஏழு நபர்களும் இச்சமயம் வந்திருந்தனர். அந்த ஏழு நபர்களில் முந்திய ஐந்து பேர் கஸ்ரஜ் கிளையையும் பிந்திய இருவர் அவ்ஸ் கிளையையும் சேர்ந்தவர்கள்.
1) முஆத் இப்னு ஹாரிஸ் (ரழி) - நஜ்ஜார் குடும்பம்.
2) தக்வான் இப்னு அப்துல் கைஸ் (ரழி) - ஜுரைக் குடும்பம்.
3) உபாதா இப்னு ஸாமித் (ரழி) - கன்ம் குடும்பம்.
4) யஜீது இப்னு ஸஃலபா (ரழி) -கன்ம் குடும்ப நண்பர்களில் ஒருவர்.
5) அப்பாஸ் இப்னு உபாதா இப்னு நழ்லா (ரழி) - ஸாலிம் குடும்பம்.
6) அபுல் ஹைஸம் இப்னு தய்ம்ஹான் (ரழி) -அப்துல் அஷ்ஹல் குடும்பம்.
7) உவைம் இப்னு ஸாம்தா (ரழி) - அம்ர் இப்னு அவ்ஃப் குடும்பம்.
இவர்கள் அனைவரும் மினாவில் அகபா என்ற இடத்திற்கு அருகில் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்தார்கள். (இப்னு ஹிஷாம்)

நபியவர்களிடம் பைஅத் செய்த மேற்கண்டவர்களோடு நபி (ஸல்) தனது முதல் இஸ்லாமிய அழைப்பாளரை மதீனாவிற்கு அனுப்பினார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்புவதற்கும் மார்க்க ஞானங்களை கற்றுக் கொடுப்பதற்காகவும் இந்த அழைப்பாளர் அனுப்பப்பட்டார். இப்பணிக்காக முதலாவதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவரான முஸ்அப் இப்னு உமைர் (ரழி) என்ற வாலிபரை நபி (ஸல்) தேர்ந்தெடுத்தார்கள். இந்தசகாபிதான் முதன்முதலில் மதினாவில் கால்வைத்த முஹாஜிர் ஆவார்.

இப்படி நபியவர்களின் அசுரவளர்ச்சியை பொறுக்கமுடியாத குறைஷிகள் உச்சகட்டமாக நபியவர்களை கொலைசெய்வது என தீர்மானித்தார்கள்.இதற்காக அபூஜஹ்ல்   உள்ளிட்ட குறைஷிகளின் முக்கியப்பிரமுகர்களின் ஆலோசனைக்கூட்டத்தில் அபூஜஹ்ல்,

'அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் ஒரு யோசனை இருக்கின்றது. அது உங்களுக்குத் தோன்றியிருக்காது" என்று அபூஜஹ்ல் கூற, 'அபுல் ஹிகமே! அது என்ன யோசனை" என்றனர் மக்கள். அதற்கு அபூஜஹ்ல் 'நாம் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் நல்ல வீரமிக்க, குடும்பத்தில் சிறந்த, ஒரு வாலிபரைத் தேர்வு செய்து, ஒவ்வொரு வாலிபனுக்கும் மிகக் கூர்மையான வாள் ஒன்றையும் கொடுப்போம். அவர்கள் அனைவருமாக சேர்ந்து அவரை ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கொன்றுவிடட்டும். அவர் இறந்துவிட்டால் நாம் நிம்மதி பெருமூச்சு விடலாம். கொலை செய்தவர்கள் பல கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவரது உறவினர்களான அப்து மனாஃப் கிளையினர் பழிக்கு யாரையும் கொல்ல முடியாது. முழு அரபு சமுதாயத்தினரையும் பகைத்துக் கொண்டு அப்து மனாஃப் கிளையினர் நம்மீது போர் தொடுக்க முடியாது. எனவே, கொலைக்குப் பகரமாக அபராதத் தொகையை நிர்பந்தமாக ஏற்றுக் கொள்வார்கள். நாமும் அவர்களுக்கு அந்த அபராதத்தைக் கொடுத்து விடலாம்" என்று அரக்கன் அபூஜஹ்ல் கூறிமுடித்தான்.
நஜ்து தேச அயோக்கியக் கிழவன் (அவன்தான் இப்லீஸ்) இதைக் கேட்டுவிட்டு 'ஆஹா! இதல்லவா யோசனை! இதுதான் சரியான யோசனை! இதைத் தவிர வேறெதுவும் சரியான யோசனையல்ல" என்று கூறினான். (இப்னு ஹிஷாம்)


மதீனா ஹிஜ்ரத்திற்கான அல்லாஹ்வின் அனுமதி;


குறைஷிகளின் சதித்திட்டத்தை நபி (ஸல்) அவர்களிடம் அறிவிப்பதற்காக அல்லாஹ்வின் புறத்திலிருந்து வானவர் ஜிப்ரீல் இறங்கி வந்தார். 'நீங்கள் ஹிஜ்ரா செய்ய அல்லாஹ் அனுமதி கொடுத்து விட்டான். அதற்குரிய நேரத்தையும் நிர்ணயம் செய்துள்ளான். குறைஷிகளின் இத்திட்டத்தை முறியடிப்பதற்குரிய வழியையும் தெளிவுபடுத்தி இருக்கின்றான். எனவே, இன்று இரவு நீங்கள் வழக்கமாக தூங்கும் விரிப்பில் தூங்க வேண்டாம்" என்று வானவர் ஜிப்ரீல் கூறினார். (இப்னு ஹிஷாம்)


அபூபக்கர்[ரலி]அவர்களுடன் நபிகளார் ஆலோசனை;


ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;  நபி(ஸல்) அவர்கள் (மக்காவில் இருந்த காலத்தில்) காலையிலோ மாலையிலோ என் தந்தை அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டிற்கு வராமல் இருந்த நாள்கள் மிகக் குறைவாகவே இருக்கும்! மதீனாவிற்கு (ஹிஜ்ரத் செய்து) புறப்பட நபி(ஸல்) அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டபோது, நண்பகலில் நபி(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. நபி(ஸல்) அவர்கள் வந்திருக்கும் விஷயம் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அபூ பக்ர்(ரலி) 'புதிதாக ஏதோ பிரச்சினை ஏற்பட்டிருப்பதால் தான், இந்நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் நம்மிடம் வந்திருக்கிறார்கள்!" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்ததும், 'உங்களுடன் இருப்பவர்களை வெளியேற்றுங்கள்!" என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அஸ்மா, ஆயிஷா ஆகிய என்னுடைய இரண்டு புதல்வியர் மட்டுமே உள்ளனர்!" என்று அபூ பக்ர்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(மதீனாவிற்குப்) புறப்பட (ஹிஜ்ரத் செய்ய) எனக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது உமக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! '(தாங்கள் புறப்படும் (ஹிஜ்ரத்தின்)போது நானும் தங்களுடன் வர விரும்புகிறேன்!" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் என்னுடன் வருதை நானும் விரும்புகிறேன்!" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் என்னுடன் வருவதை நானும் விரும்புகிறேன்!" என்றார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நான் பயணத்திற்காகத் தயார்படுத்தி வைத்திருக்கும் இரண்டு ஒட்டகங்கள் என்னிடம் உள்ளன் அவற்றில் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்!' எனக் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அதை நான் விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்!" என்றார்கள்.
நூல்;புஹாரி,எண் 2138


தனது தோழருடன் தியாகப்பயணத்தை தொடங்கிவிட்ட நபி[ஸல்];


ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்; (மக்காவைத் துறந்து, ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்குச் சென்ற போது) நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் பனூ அப்து இப்னு அதீ குலத்தைச் சேர்ந்த ஒருவரை (வழிகாட்டியாகக்) கூலிக்கு அமர்த்தினார்கள். அவர் தேர்ந்த வழிகாட்டியாக இருந்தார். அம்மனிதர் ஆஸ்பின் வாயிலின் குடும்பத்தாரிடம் உடன்படிக்கை செய்திருந்தார். மேலும், அவர் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் மார்க்கத்தில் இருந்தார். நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் அவரை நம்பித் தம் ஒட்டகங்களை அவரிடம் ஒப்படைத்து, மூன்று நாள்கள் கழித்து ஸவ்ர் குகையில் வந்து சேரும்படி கூறினார்கள். அம்மனிதர் மூன்றாம் நாள் காலையில் ஒட்டகங்களுடன் அவர்களிடம் வந்தார். உடனே, நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் (மதீனாவை நோக்கிப்) புறப்பட்டார்கள். அவர்களுடன் ஆமிர் இப்னு ஃபுஹைரா என்பாரும் சேர்ந்து கொண்டார். பனூதீல் கூட்டத்தைச் சேர்ந்த அந்த வழிகாட்டி அம்மூவரையும் மக்காவிற்குக் கீழே கடற்கரை வழியாக அழைத்துச் சென்றார்.
நூல்;புஹாரி,எண் 2263


பயனத்திபோது நபியவர்கள் பட்ட கஷ்டங்களும், மதினாவில் நடந்த முக்கிய நிகழ்வுகளும் ...
தொடரும்....

இறைவழியில் தியாகப்பயணம்[பாகம்3]...[மறுபதிப்பு]


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


தனது ஆருயிர் தோழர் அபூபக்கர்[ரலி] அவர்களுடனும், ஆமிர் இப்னு ஃபுஹைரா[ரலி]  அவர்கள் சகிதமாக அருள்செய்யப்பட்ட மதினா நோக்கி நபியவர்கள் பயணப்பட்ட செய்தி மக்கத்து குறைஷிகளுக்கு எட்டியது.இதற்கிடையில் நபி[ஸல்]அவர்களும், அபூபக்கர்[ரலி] அவர்களும் ஸவ்ர் என்ற குகையை அடைந்துவிட்டனர் அந்த குகையில் நபியவர்கள் ஓய்வெடுப்பதற்காக அபூபக்கர்[ரலி] சுத்தம் செய்திட அபூபக்கர்[ரலி] அவர்களின் மடிமீது தலைவைத்து மாநபி[ஸல்]அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். மறுபுறம் குறைஷிகள் முஹம்மது விசயத்தில் நாம் தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறோமே என மனம் புழுங்கி அவசர ஆலோசனை நடத்துகிறார்கள்.

ஆலோசனை முடிவில்,
'நபி (ஸல்) அபுபக்ர் (ரழி) இவ்விருவரில் ஒவ்வொருவரின் தலைக்கும் நூறு ஒட்டகங்கள் பரிசாக அளிக்கப்படும் இவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ யார் மக்காவிற்கு கொண்டு வருகிறார்களோ அவர் யாராக இருப்பினும் சரிஅவருக்கு இந்தப் பரிசுஉண்டு" என்று பொது அறிவிப்பு செய்தனர். (ஸஹீஹுல் புகாரி).

எதிரிகள் நபி (ஸல்) அவர்களைத் தேடி அலைந்து அவர்கள் தங்கியிருந்த குகைவாசலை வந்தடைந்தனர். அபூபக்ர் (ரழி) கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுடன் குகையில் தங்கியிருந்தபோது எனது தலையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது எதிரிகளின் பாதங்கள் தெரிந்தன. நான் அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் யாராவது தங்களது பார்வையைத் தாழ்த்தினால் நம்மை பார்த்துவிடுவார்களே" என்று கூறினேன். நபி (ஸல்) 'அபூபக்ரே! சும்மா இருங்கள். நம் இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கின்றான்." என்று கூறினார்கள்.(ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய அல்லாஹ் மாபெரும் அற்புதமாகும் இது. சில எட்டுகளே நபி (ஸல்) அவர்களுக்கும் எதிரிகளுக்கும் இருந்தன. எனினும், தேடி வந்தவர்களால் நபி (ஸல்) அவர்களையும், அவர்களுடைய தோழரையும் பார்க்க முடியாமல் திரும்பிவிட்டனர்.

நபியவர்களும், அபூபக்கர்[ரலி]அவர்களும், ஸவ்ர் குகையிலிருந்து வெளியேறி வழிகாட்டியின் வழிகாட்டுதல்படி மதினா நோக்கி சென்று கொண்டிருக்கையில், அபூபக்கர்[ரலி] அவர்களை அறிந்திருந்த, நபியவர்களை அறிந்திராத சிலர் அபூபக்கர்[ரலி]இடம் நபியவர்களை காட்டி, யார் இவர் என வினவ இக்கட்டான சூழ்நிலையில் அதே நேரத்தில் பொய்யுரைக்காமல் அபூபக்கர்[ரலி] அவர்கள், இவர்கள்[நபி ஸல்]எனது வழிகாட்டி என்றார்கள். கேட்டவர்களோ எதோ பாதை காட்டுபவர் போலும் என எண்ணி சென்றுவிட்டனர்.[புஹாரி]

மேலும்,குறைஷிகளின் பரிசுக்கு ஆசைப்பட்ட சுரக்கா இப்னு மாலிக் என்பவர் நபியவர்களை பிடிக்கும் நோக்கில், நபியவர்கள் பயணித்த திசையை அறிந்து நபியவர்களை நெருங்கும் வேளையில், நடந்த விஷயத்தை சுரக்கா இப்னுமாலிக் வார்த்தையிலேயே  கேளுங்கள்;

நபி (ஸல்) அவர்களுக்கு நெருக்கத்தில் வந்தவுடன் எனது குதிரை தடுமாறவே நான் குதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டேன். பின்பு எழுந்து, எனது அம்புக் கூட்டிலிருந்து நான் அவர்களுக்குத் தீங்கு செய்யட்டுமா? வேண்டாமா? என்று குறிபார்க்கும் எண்ணத்தில் ஓர் அம்பை எடுத்தபோது 'வேண்டாம்" என்ற அம்பு வந்தது. அதில் எனக்கு திருப்தி ஏற்படாததால் மீண்டும் குதிரையில் ஏறி அவர்களை நெருங்க ஆரம்பித்தேன். நபி (ஸல்) ஓதும் சப்தத்தை கேட்கும் அளவிற்கு நான் அவர்களை நெருங்கி விட்டேன். நபி (ஸல்) திரும்பி பார்க்காமல் சென்றார்கள். ஆனால், அபூபக்ரோஅதிகம் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்கள். அப்போது எனது குதிரையின் முன்னங்கால்கள் முழங்கால் வரை பூமியில் புதைந்து கொண்டன. நான் குதிரையிலிருந்து கீழே விழுந்தேன்.

பின்பு எழுந்து, எனது குதிரையை விரட்டவே, அது மிகச் சிரமத்துடன் கால்களை வெளியே எடுத்தது. அது நேராக நின்றவுடன் வானத்திலிருந்து புகை போன்று வந்த ஒரு புழுதி அதன் முன்னங்கால்களில் காயத்தை ஏற்படுத்தியது. நான் என்ன செய்யலாம் என்று குறிபார்க்க அம்பை எடுத்தபோது எனக்குப் பிடிக்காத அம்பே இப்போதும் வந்தது. நான் அவர்களை எனக்கு பாதுகாப்புத் தரக்கோரி கூவி அழைத்தேன். எனது சப்தத்தைக் கேட்டு அவர்கள் நின்று விட்டார்கள். நான் குதிரையில் ஏறி அவர்களிடம் வந்தேன். நான் அவர்களை நெருங்குவதற்கு தடை ஏற்படுவதிலிருந்தே நிச்சயமாக நபி (ஸல்) அவர்களின் மார்க்கம் மிகைத்தே தீரும் என்று உறுதிகொண்டேன்.

நபி (ஸல்) அவர்களிடம் 'உங்களது கூட்டத்தினர் உங்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குச் சன்மானம் உண்டு என அறிவிப்புச் செய்திருக்கிறார்கள். எனவே, மக்கள் உங்களை பிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற வெறியில் உள்ளனர்" என்று கூறினேன். நான் அவர்களிடம் என்னிடம் இருந்த பிரயாண உணவையும், சாமான்களையும் அவர்கள் எடுத்துக் கொள்வதற்காக அவர்கள் முன் வைத்தேன். ஆனால், அவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. மேற்கொண்டு என்னிடம் எதுவும் விசாரிக்கவும் இல்லை. இருப்பினும் 'எங்களின் செய்திகளை மறைத்துவிடு" என்று மட்டும் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் எனக்காக பாதுகாப்புப் பத்திரம் ஒன்று கொடுக்குமாறு கூறினேன். நபி (ஸல்) ஆமிர் இப்னு புஹைராவிடம் கூறவே அவர் எனக்கு சிறிய துண்டுத் தோலில் எழுதிக் கொடுத்தார். பின்பு நபி (ஸல்) சென்று விட்டார்கள். ( புகாரி)

இவ்வாறாக பல்வேறு சோதனைகளை இறைவனின் அற்புதத்தால் வென்று நபியவர்களும் அபூபக்கர்[ரலி] அவர்களும் புனித மதினாவில் பாதம் பதித்தனர். நபியவர்களை கண்ட மதினத்து பெருமக்கள் மட்டில்லா ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்கள்;

நபி(ஸல்) அவர்கள(து வருகைய)ால், மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை நான் கண்டதில்லை. எந்த அளவிற்கென்றால், (மதீனாவிலுள்ள) சிறுமியரும் சிறுவர்களும், 'இதோ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள்' என்று கூறினர். நூல்;புஹாரி,எண் 4941

இவ்வாறாக நபியவர்களின் ஹிஜ்ரத்பயணம் அமைந்தது. மதினாவிற்கு முதன்முதலாக அழைப்பு பணிக்காக அனுப்பபட்ட முஸ்அப் இப்னு உமைர்[ரலி] அவர்களின் தியாத்தை இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்;

கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார்கள்;

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலனளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. அதன் (உலகப்) பலன்களில் எதையுமே அனுபவிக்காமல் சென்றுவிட்டவர்களும் எங்களிடையே உண்டு. முஸ்அப் இப்னு உமைர்(ரலி) அத்தகையவர்களில் ஒருவர் தாம். அவர் உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டார். அவரைக் கஃபனிடுவதற்கு (அவரின்) கோடிட்ட வண்ணத் துணி ஒன்றைத் தவிர வேறெதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தத் துணியினால் நாங்கள் அவரின் தலையை மூடியபோது அவரின் கால்கள் இரண்டும் வெளியே தெரியலாயின் அவரின் கால்கள் இரண்டையும் நாங்கள் மூடியபோது அவரின் தலை வெளியே தெரியலாயிற்று. எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்தத் துணியால் அவரின் தலையை மூடி விடும்படியும் அவரின் கால்கள் இரண்டின் மீதும் 'இத்கிர்' புல்லைச் சிறிது போட்டு (மறைத்து) விடும்படியும் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்ததற்கான இவ்வுலகப்) பலன் கனிந்து அதைப் பறித்து (சுவைத்து)க் கொண்டிருப்பவர்களும் எங்களில் உள்ளனர். நூல்;புஹாரி,எண் 3914

சத்திய மார்க்கத்திற்காக இம்மையை விற்று மறுமையை விலைக்கு வாங்கிய மாநபி[ஸல்] வழியிலும், மகத்தான சகாபாக்கள் வழியிலும் மறுமையை இலக்காகக்கொண்டு தொடரட்டும் நமது பயணம்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
                                                                                                                                    முற்றும்.