அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

திங்கள், 12 ஏப்ரல், 2010

'கை'காட்டி ஜோசியம் பார்த்தேன்; கதை முடிவு சொல்லலியே...!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

மனிதர்களில் ஒரு கூட்டம் உண்டு. அவர்கள் தமது வீட்டில் நடக்கும் சுப காரியங்கள் ஆனாலும் சரி, ஒரு தொழில் தொடங்குவதாக இருந்தாலும் சரி, ஒரு ஜோதிடனிடம் சென்று கையை கட்டியோ, அல்லது ஜாதகம் என்ற பெயரில் ஒரு புரோகிதன் குறித்துத் தந்த குறிப்பைக் காட்டியோ ஜோதிடம் பார்த்து அந்த ஜோதிடன் சொல்லும் அறிவுரைக்கேற்ப தமது அசைவுகளை அமைத்துக் கொள்வதை நாம் பார்க்கிறோம். புரோகிதர்கள்- சாமியார்கள்- ஜோதிடர்கள் என பல்வேறு பெயர்களில் உலவும் இவர்கள் வானிலிருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. நம்மை போன்று ஒரு தாயின் வயிற்றில் பிறந்த சராசரி மனிதன்தான் என்பதை இந்த ஜோசியப்பிரியர்கள் உணர்வதில்லை. நமது வருங்கால வாழ்வை கணித்து சொல்லும் ஜோசியனுக்கு அடுத்தநோடியில் அவனுக்கு என்ன நடக்கும் என்று கணிக்கத் தெரியாது இதுதான் எதார்த்தம். ஆனாலும் இந்த குறி சொல்லும் பார்ட்டிகளை நம்பி ஏமாறும் கூட்டத்திற்கோ பஞ்சமில்லை.


இப்படித்தான், சிங்கம்புணரி அருகே
உள்ள மருதிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகு (வயது 65). இவரது மகன் ராஜா (20). இதே ஊரைச் சேர்ந்த நல்லையா மகன் அழகுராஜா (21). இவர்கள் 3 பேரும் ஜோதிடம் பார்ப்பதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் சிங்கம்புணரிக்கு வந்தனர். ஆகிய 3 பேரும் ஜோதிடம் பார்ப்பதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். சிங்கம்புணரியில் ஜோதிடம் பார்த்து விட்டு அவர்கள் அதே மோட்டார் சைக்கிளில் மருதிப்பட்டிக்கு திரும்பிச்சென்று கொண்டு இருந்தனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிள் மருதிப்பட்டியை நெருங்கியபோது ஒரு வளைவில் திரும்பியது. அப்போது மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த மினி வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி எறியப்பட்டனர். இந்த சம்பவத்தில் அழகுவின் தந்தை ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த அழகு மற்றும் அழகுராஜா ஆகியோர் படுகாயத்துடன் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகு இறந்து விட்டார். அழகுராஜாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.[தினத்தந்தி]


ஜோதிடம் உண்மையென நம்பிச்சென்ற இந்த மும்மூர்த்திகளிடம், நீங்கள் திரும்பிச்செல்லும் வழியில் உங்களுக்கு விபத்து ஏற்படும். அதில் இருவர் மரணிப்பீர்கள். ஒருவருக்கு காயம் ஏற்படும் என்று ஜோசியனால் சொல்லமுடிந்ததா..? சொல்லமுடியாது. ஏனெனில் எந்த மனிதனுக்கும் அல்லாஹ் மறைவான ஞானத்தை வழங்கவில்லை. மறைவான ஞானம் என்பது அல்லாஹ்வின் தனிப்பட்ட உரிமையாகும். இதுபற்றி உலகப்பொது மறையாம் அல் குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்;


அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.[6:59 ]


நிச்சயமாக! அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.[31:34 ]


எனவே மனிதனை மனிதனாக மட்டும் பார்ப்போம். இனியும் அவனிடம் அதீத சக்தியுள்ளதாக நம்பும் மூடத்தனத்தை விட்டொழிப்போம். அதிலும் குறிப்பாக ஜோசியம் எனும் மூடத்தனத்தை நம்பும் முஸ்லிம்களுக்கு இதில் மிகப்பெரும் படிப்பினை உள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ் பகுத்தறிவு மார்க்கமாம் இஸ்லாத்தை புரிந்து நடந்திட அருள்புரிவானாக!