அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தொடை மறைக்க வேண்டிய பகுதியா..? பீஜே அன்றும் இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
2005 ஆம் ஆண்டு 'தொடை தெரிய டவுசர் போட்டு தொழலாம்' என்ற ஃபத்வாவை வழங்கி புரட்சி செய்த மவ்லவி பீஜே அவர்கள், தொடையை மறைப்பது குறித்து i987 ஜூன் மாதம் அந்நஜாத் இதழில் அபூ  முஹம்மத் என்ற பெயரில் இஸ்லாத்தில் புறத்தோற்றம் -6  என்ற தொடரில் எழுதியவை உங்கள் பார்வைக்கு;
 

மறைக்கப்பட வேண்டியவை

"ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை மறைக்க வேண்டும்" என்பதைத்தவிர மற்ற உறுப்புக்களை கட்டாயம் மறைக்க வேண்டியதில்லை. அதற்குரிய ஆதாரங்களைக் கீழே காண்போம்.

"உங்களில் எவரேனும் தன்னுடைய வேலைக்காரனுக்கோ, அடிமைக்கோ மணமுடிக்கும் காலம் வரும்போது தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியையும், முழங்காலுக்கு மேலு உள்ள பகுதியையும் பார்க்க வேண்டாம்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்ரு இப்னு ஷுஐபு(ரழி) நூல் : அபூதாவூது

தனது ஆண் அடிமையின் தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியை முழங்காலுக்கு மேலே உள்ள பகுதியைக் கூட பார்க்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்து அந்தப் பகுதிகளை ஆண்கள் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பது தெளிவு.

குறிப்பாக தொடைப் பகுதியைக் கட்டாயம் மறைக்க வேண்டும் "அலியே! உன் இரு தொடைகளையும் நீ வெளிப் படுத்தாதே!" என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அலி(ரழி) நூல்கள் : அபூதாவூது, இப்னுமாஜா

"மஃமர்(ரழி) என்பவரை நபி(ஸல்) அவர்கள் கடந்து செல்லும்போது அவரது இரு தொடைகளும் திறந்திருக்கக் கண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் மஃமரே! உன் தொடைகளை மூடிக்கொள் ஏனெனில் இரு தொடைகளும் மறைக்கப் படவேண்டிய பகுதிகளாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மது இப்னு ஐஹ்ஷ்(ரழி) நூல் : அஹ்மத்

இதுபோன்ற கருத்துக்களைக் கொண்ட பல ஹதீஸ்கள் உள்ளன. எனவே ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை அவசியம் மறைக்கப் கடமைப் பட்டுள்ளனர். குறிப்பாகத் தொடை பகுதியை அவசியம் மறைக்க வேண்டும்.

இவ்வாறு மறைக்க வேண்டும் என்ற விதியிலிருந்து இல்லற நேரத்தில் மனைவியுடன் தனித்திருக்கும் நேரம் விலக்குப் பெறும். அந்த நேரத்தில் மறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

"அல்லாஹ்வின் தூதரே! எங்கள் மறைவான உறுப்புக்களை எந்த நேரத்தில் மறைக்க வேண்டும்? எந்த நேரத்தில் மறைக்காது விட்டு விடலாம்? என்று நான் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள் "உன் மனைவியிடமும் உன் அடிமைப் பெண்ணிடமும் தவிர மற்ற நேரங்களில் மறைவுப் பகுதிகளை மறைத்துக் கொள்!" என்றனர். எங்களில் எவரும் தனித்திருக்கும் போதுமா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "(ஆம்! வெட்கப் படுவதற்கு அல்லாஹ் மிகவும் தகுதியானவன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பஹ்ல் இப்னு ஹகீம்(ரழி)

நூல்கள் : அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா

இதுதவிர மற்ற நேரங்களில் மேற்குறிப்பிட்ட பகுதிகளை அவசியம் மறைத்தாக வேண்டும்.

 
தொப்புளிலிருந்து முழங்கால் வரை மறைக்க வேண்டும் மறைக்கப்பட்ட வேண்டியவையே என்று அன்று ஆணித்தரமாக ஆதாரப்பூர்வமாக சொன்ன அறிஞர் பீஜே,  அன்று அவர் சொன்னதற்கு மாற்றமாக இன்று அந்தர் பல்டியடித்து தொடை தெரிய தொழலாம் என்று ஃபத்வா வழங்குகிறார். முன்பு எழுதியவை எல்லாம் மாயமாய் மறைந்து விடும் என்று எண்ணி விட்டாரா? இப்படி நாம் கேட்டவுடன் அன்று சரியென தெரிந்த பல விஷயங்களை இன்று நாம் ஆதாரம் கிடைத்தவுடன் மாற்றியுள்ளோம். அது போலத்தான் இதுவும் என்று பீஜெயோ அவரது அபிமானிகளோ சொல்ல முன்வருவார்களானால், இன்று தொடை தெரிய தொழலாம் என்பதற்கு எந்த ஹதீஸ்களை ஆதாரமாக பீஜே காட்டுகிறாரோ அதே ஹதீஸ்களை அன்றே அவர் ஆய்வு செய்து, கீழ்கண்டவாறு இப்படி கூறுகிறார்;  

''தொடையைத் திறந்திருப்பதை நபி(ஸல்) அவர்களே வன்மையாகக் கண்டித்துள்ளதால், தொடை தெரிந்ததாக வரும்  ஹதீஸ்களில் கூறப்படுபவை தற்செயலாக திட்டமிடாமல் நடந்ததாகத்தான் கருத வேண்டும். என்கிறார்.

இன்று தொடை மறைக்கப் படவேண்டிய பகுதியல்ல என்பதற்கு ஆதாரமாக வைக்கும் ஹதீஸ்களை பற்றி மேற்கண்ட அதே  தொடரில் பீஜே எழுதியுள்ளதை படியுங்கள்;

ஒரு சில அறிஞர்கள் "இந்த அளவுகூட மறைக்க வேண்டியதில்லை; முன் துவாரம், பின் துவாரம் இவைகளை மறைத்துக் கொண்டால் போதுமானது" என்று கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸ்களை எடுத்து வைக்கின்றனர்.

1) "கைபர் போரின் போது, நபி(ஸல்) அவர்கள் தமது கைலியை தொடைப் பகுதியை விட்டும் நீக்க நேரிட்டது. அவர்களின் தொடையின் வெண்மைப் பகுதியை நான் கண்டேன்"

அறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல்கள் : புகாரி, அஹ்மத்

2) "நபி(ஸல்) அவர்கள் ஈரமான ஒரு இடத்தில் முழங்கால்களைத் திறந்தவர்களாக இருந்தனர். உஸ்மான்(ரழி) அவர்கள் நுழைந்த போது அதை மூடிக் கொண்டனர்"

அறிவிப்பவர் : அபூமூஸா(ரழி) நூல் : புகாரி.

3) நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது தன் முழங்கால் தெரியும் அளவுக்கு தன் ஆடையின் ஒரு பகுதியைத் தூக்கிப் பிடித்தவராக அபூபக்ரு(ரழி) அவர்கள் வந்தார்கள். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் "உங்கள் தோழர் ரொம்பவும் ஆத்திரத்துடன் வருகிறார்" என்று கூறினார்கள் . (இந்த ஹதீஸில் உமர்(ரழி) அவர்களுக்கும், அபூபக்ரு (ரழி) அவர்களுக்கும் ஏற்பட்ட ஒரு தகராறில் அபூபக்ரு(ரழி) அவர்கள் மிகவும் ஆத்திரத்துடன் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட வருவது கூறப்படுகிறது.

அறிவிப்பவர் : அபுத்தர்தா(ரழி) நூல்கள் : புகாரி, அஹ்மத்

4) ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தொடைப் பகுதி வெளியில் தெரிந்த நிலையில் அமர்ந்திருந்தனர். அவர்களைக் காண அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் அப்படியே அமர்ந்திருந்தனர். உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் தன் ஆடையைச் சரி செய்து கொண்டனர். இதைக் கண்ட ஆயிஷா(ரழி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் சும்மா இருந்த நீங்கள் , உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் ஆடையைச் சரி செய்து கொண்டீர்களே! (இது ஏன்?) என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மலக்குகளே அவரைக் கண்டு வெட்கப்படும் போது நான் வெட்கப்பட வேண்டாமா?

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல் : அஹ்மத்

(இதே கருத்தில் முஸ்லிமிலும், பைஹகீயிலும் ஹதீஸ்கள் உண்டு)

இந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு சில அறிஞர்கள் "தொடைப் பகுதியை மறைக்க வேண்டியது அவசியமில்லை" என்கின்றனர். அவர்கள் எடுத்துக் காட்டுகின்ற ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதில் சந்தேகம் இல்லை, எனினும் நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் வந்திருக்காவிட்டால் இந்தக் கருத்தை ஏற்கலாம்.

தொடையைத் திறந்திருப்பதை நபி(ஸல்) அவர்களே வன்மையாகக் கண்டித்துள்ளதால், இந்த ஹதீஸ்களில் கூறப்படுபவை தற்செயலாக திட்டமிடாமல் நடந்ததாகத்தான் கருத வேண்டும்.

அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கும் முதல் ஹதீஸில் கூறப்படுவது 'கைபர்' போரில் நடந்தது. போர்க்களத்தில் ஈடுபட்டிருக்கும்போது அவ்வாறு அவர்களை அறியாமல் விலகி இருக்கலாம்.

இரண்டாவது ஹதீஸில் ஈரமான இடத்தில் ஆடை நனைந்துவிடக்கூடாது என்று சற்று கைலியை உயர்த்தி இருந்த போது முழங்கால் தென்பட்டதாக தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது ஹதீஸில் அபூபக்ரு(ரழி) அவர்கள் உமர்)ரழி) அவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கோபத்துடன் தங்கள் ஆடையின் ஒரு பகுதியைத் தூக்கியவர்களாக வந்தபோது அவர்களின் முழங்கால் தெரிந்துள்ளது.

நான்காவது ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் தன் தொடைப் பகுதி வெளியில் தெரிவதை அறியாமலிருக்கலாம். சிலர் முன்னிலையில் சிலர் அதிகப்படியான வெட்க உணர்வுடன் இருப்பதை நான் சாதாரணமாகக் காணலாம். அந்த அடிப்படையில் உஸ்மான்(ரழி) அவர்கள் வந்த போது தனது ஆடைகளைச் சரி செய்திருக்கலாம். இவ்வாறு நாம் கருதவதற்குக் காரணம், நபி(ஸல்) அவர்கள் தொடையை மறைக்கும்படி பலமான உத்திரவு பிறப்பித்துள்ளதால், அவர்களே அந்த உத்திரவுக்கு மாற்றமாக நடந்திருக்க மாட்டார்கள் என்பது தான்.

நம்மை அறியாமல் தற்செயலாகத் தெரிந்து விட்டால் அதில் தவறில்லை என்று தான் இந்த ஹதீஸிகளிலிருந்து நாம் முடிவெடுக்க முடியும். "நிரந்தரமாக எப்பொதும் அப்படி இருக்கலாம்" என்று கூறுவோர் நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களை நிராகரித்தவர்களாக ஆக நேரும்.

ஃபத்வா விசயத்தில் மனோஇச்சைப்படி அவ்வப்போது மாற்றி மார்க்கத்தை வளைப்பவர் இந்த பீஜே என்பதற்கு இந்த 'தொடை' விஷயம் தெளிவான விடையாக உள்ளது. சிந்திப்பவர்கள் தெளிவு பெறுவார்கள் இன்ஷா அல்லாஹ்.

 

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

இறையச்சத்தின் அடித்தளமே நோன்பு!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அல்லாஹ்வின் அருள் நிறைந்த புனிதமிக்க ரமலான் மாதம் நம்மை வந்தடைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ். இந்த ரமலானில் நோன்பு நோற்கவேண்டும் என்று அறிந்துவைத்துள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் இந்த நோன்பின் தாத்பரியத்தையும்- சட்டங்களையும் அறியாதவர்களாகவும், இன்னும் சிலர் பேணுதல் என்ற பெயரில் இந்த நோன்பை சிரமமானதாக மாற்றிக்கொள்வதையும் பார்க்கிறோம். எனவே, அப்படிப்பட்டவர்கள் தெளிவு பெறவேண்டும் என்பதற்காக இந்த ஆக்கம் வரையப்பட்டுள்ளது .

நோன்பு கடமையாக்கப்பட்டது ஏன்?
நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது என்று நம்மவர்களில் சிலரிடம் கேட்டால், ஏழைகளின் பசியை வசதி படைத்தவர்கள் உணரவேண்டும் என்பதற்காகத்தான் கடமையாக்கப்பட்டது என்பார்கள். ஒரு பாடகர் கூட, 'மண் வீட்டின் பசியை மாளிகைகள் உணர்ந்து மனிதாபிமானம் கொள்ள போதிப்பது நோன்பு' என்று பாடுவார். ஆனால் உண்மை அதுவல்ல. ஏனெனில், ஏழைகளின் பசியை வசதிபடைத்தவர்கள் உணர்வதுதான் நோன்பின் நோக்கம் என்றால், பணக்காரர்களுக்கு மட்டும் கடமையாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் வல்ல இறைவன் கூறுகின்றான்;

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்.
[அல்-குர்ஆன்2:185 ]

இந்த வசனத்தில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கவேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். இதில் ஏழைகள்-பணக்காரர்கள் என்ற வேறுபாடு கிடையாது அனைவர் மீதும் கடமை. சரி! வேறு என்னதான் காரணம்?

அல்லாஹ் கூறுகின்றான்;

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.[அல்-குர்ஆன் 2:183 ]

இந்த வசனத்தில் நோன்பு கடமையாக்கப்பதின் நோக்கம் நாம் இறையச்சமுடையவர்களாக ஆகவேண்டும் என்பதுதான் என்பது தெளிவாக புரிகிறது. சரி! மற்ற அமல்களில் வராத இறையச்சம் இந்த நோன்பில் மட்டும் வந்துவிடுமா என்றால் உண்மையான நோன்பாளியாக இருந்தால் கண்டிப்பாக வரும். எப்படியெனில்,
 
ஒருவன் தொழுகையாளியா-ஜகாத் கொடுப்பவனா-ஹஜ் செய்தவனா என்று நாம் வெளிப்படையாக அறியமுடியும். ஆனால் நோன்பை பொறுத்தவரையில், ஒருவன் நோன்பு நோற்காமலேயே நான் நோன்பாளி என்று கூறினால் நம்மால் கண்டுபிடிக்கமுடியாது. எனவே இறைவனுக்கு அஞ்சுபவன் மட்டுமே நோன்பு பிடிப்பான்.
 
மேலும் நோன்பு நோற்ற ஒருவன் அவனது வீட்டில் அவனது உழைப்பால் உருவான உணவு இருக்கும். அவன் நினைத்தால் கதவை சாத்திவிட்டு ஒரு வெட்டு வெட்டிவிட்டு வாயை துடைத்துக்கொண்டு வெளியே வந்தால் யாரும் கண்டுகொள்ள முடியாது. ஆனாலும் ஒரூ நோன்பாளி அவ்வாறு செய்வதில்லை. ஏனெனில், நமது உணவாக இருந்தாலும், நாம் சாப்பிடுவதை பருகுவதை மனிதர்கள் யாரும் பார்க்காவிட்ட்டாலும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் எனவே நாம் சாப்பிடக்கூடாது என்று அவன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்கிறானே  அதுதான் இறையச்சம்! தனது சொந்த உழைப்பில் உருவான உணவையே இறைவனுக்கு பயந்து தவிர்ந்துகொண்டவன், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படமாட்டான். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கலில் நேர்மையாக இருப்பான். இவ்வாறு மாற்றியது நோன்பின் மூலம் பெறும் இறையச்சம்தானே!
அடுத்து, நோன்புடைய காலங்களில் பகலில் இல்லற வாழ்க்கை கூடாது. கணவன்-மனைவி மட்டும் இருக்கிறார்கள். அவ்விருவரும் நோன்பு நோற்றிருக்கிறார்கள். இந்நிலையில் அவ்விருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டால் அவர்களை யாரும் கண்டுகொள்ளமுடியாது. ஆனாலும் அவர்கள் இறைவன் தடுத்திருக்கிறான் என்ற பயத்தின் காரணமாக தவிர்ந்து கொள்கிறார்களே தங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்கிறார்களே இதுதான் இறையச்சம்! இப்படி தனக்கு சொந்தமான மனைவியை இறைவன் சொல்லிவிட்டான் என்பதற்காக தவிர்ந்துகொன்டவன், அந்நிய பெண்ணை ஏறெடுத்தும் பார்ப்பானா? எந்த இறைவனுக்கு பயந்து நோன்புடைய பகல் நேரத்தில் நம்முடைய சொந்த மனைவியை தவிர்ந்து கொண்டோமோ, அதே இறைவன்தான் கூறுகின்றான்; விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்; அன்னிய பெண்ணை பார்க்கும் போது பார்வையை தாழ்த்திக்கொள்ளுங்கள் என்று. எனவே நாம் அந்த தவறை செய்யக்கூடாது என்று தன்னை தடுத்துக்கொள்வான். இந்த இறையச்சத்தை வழங்கியது நோன்பு அல்லவா? எனவே உள்ளச்சத்துடன் நோன்பு நோற்றால் இறையச்சம் நிச்சயம் வரும் இன்ஷா அல்லாஹ். அத்தகைய இறையச்சத்தை இந்த வருட நோன்பின் மூலம் நாம் அடைவோமாக!

வெள்ளி, 17 ஜூன், 2011

மக்களால் மாசுறும் மகிமைமிகு ரஜப் மாதம்!

பிஸ்மில்லாஹ்....

கட்டுரையாளர்;முஹம்மட் அர்ஷாத் அல் அதரி arshathalathary@gmail.com

‘வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை.’ (அல்குர்ஆன் 09:36)

ரஜப் புனிதமிக்க மாதம்
ரஜப் என்பது இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டின் ஏழாவது மாதம் ஆகும். அம்மாதத்தினைப் பற்றி அருள்மறைக்குர்ஆன் குறிப்பிடும் போது,

‘வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!’ (அல்குர்ஆன் 09:36)

அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகின்ற புனிதமான அந்த நான்கு மாதங்கள் துல்கஃதா துல்ஹஜ் முஹர்ரம் ரஜப் என அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்கள்;

‘வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக் கூடியவை. அவை – துல்கஅதா துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூபக்ரா (ரழி நூல்: ஸஹீஹுல் புஹாரி- 3197)


இவ்வாறாக அருள்மறைக் குர்ஆனும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் சிறப்பித்துக் கூறுகின்ற ரஜப் மாதத்திற்கென ஏதேனும் விஷேட வணக்க வழிபாடுகள் நமக்கு கற்றுத் தரப்பட்டிருக்கின்றதா? என நோக்குவோமாயின் திருமறைக் குர்ஆனிலோ ஆதாரபூர்வமான நபி மொழிகளிலோ ரஜப் மாதத்திற்கென பிரத்தியேக வணக்க வழிபாடுகள் எதுவும் கற்றுத் தரப்படவில்லை என்பதனை அறிந்து கொள்ளலாம்.

ரஜப் மாதமும் அரங்கேற்றப்படும் அநாச்சாரங்களும்

எமது இஸ்லாமிய சமுதாய மக்களால்; ரஜப் மாதத்தின் பெயரால் பல்வேறு அநாச்சாரங்கள் அரங்கேற்றப்படுகின்றன. மேலும் கண்ணியமிகு மார்க்க அறிஞர்களால் ரஜப் மாதத்தின் பெயரால் மிம்பர் மேடைகளிலும் சொற்பொழிவுகளிலும் பல்வேறு ஆதாரபூர்வமற்ற செய்திகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரால் கூறப்படுகின்றன. அவ்வாறான ஆதாரபூர்வமற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் சிலவற்றை நோக்குவோம்.


  • ‘நிச்சயமாக சுவனத்தில் ஓர் ஆறு உண்டு. அதற்கு ரஜப் என்று சொல்லப்படும். அதன் நீர் பாலை விடக் கடும் வெண்மையானதும் தேனைவிட சுவையானது மாகும். எவரொருவர் ரஜப் மாதத்தில் ஒரு நாள் நோன்பு நோற்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் அவ்வாற்றிலிருந்து நீர் புகட்டுவான்.’
இச் செய்தியில் ‘மூஸா மன்ஸுர் பின் யதீத்’ என்கின்ற யாரென்று அறியப்படாத இரண்டு நபர்கள் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘ரஜப் மாதம் வந்து விட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்; அல்லாஹ்வே! ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக! மேலும் வெள்ளிக்கிழமை இரவு வெண்மையானதும் அதன் பகல் பசுமையானதும் எனக் கூறுவார்கள்.’
இச் செய்தியில் ‘ஸாயிதா பின் அபிர்ருக்காத்’ என்கின்ற ஹதீஸ்கலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அறிவிப்பாளர் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘ரஜப் மாதம் அல்லாஹ்வின் மாதமாகும். ஷஃபான் எனது மாதமாகும். ரமழான் எனது சமூகத்தினரின் மாதமாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
இச் செய்தியில் இடம்பெறும் ‘அல்கமா’ என்பவர் நபித்தோழர் அபூஸயீத் அல்குத்ரி (ரழி) அவர்களிடமிருந்து எதனையும் செவியுறவில்லை. மேலும் இச் செய்தியில் இடம்பெறும் ‘ஹிசாயி’ என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘ஏனைய மாதங்களோடு ஒப்பிடுகையில் ரஜப் மாதத்தின் சிறப்பு ஏனைய திக்ருகளை விட குர்ஆனுக்கு இருக்கின்ற சிறப்பை போன்றதாகும்.’
மேலுள்ள செய்தியில் நபிமொழிகளை இட்டுக்கட்டி கூறுபவர் என இமாம்களுக்கு மத்தியில் பிரபல்யமான ‘ஹிபத்துழ்ழாஹ் இப்னுல் முபாரக் அஸ்ஸக்தி’ என்பவர் இடம்பெறுவதால் இது ஆதாரப்பூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்திற்குப் பின் ரஜபிலும் ஷஃபானிலும் நோன்பு நோற்பார்கள்.’
இச் செய்தியில் ‘யூசுப் பின் அதிய்யா’ என்கின்ற ஹதீஸ் கலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட்ட அறிவிப்பாளர் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘ரஜப் மாதம் அல்லாஹ்வின் மாதமாகும். யார் ரஜப் மாதத்தின் ஒரு தினத்தில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கின்றாரோ அவருக்கு மிகப்பெரும் இறைதிருப்தி கிடைப்பது கடமையாகி விடும்.’
மேலுள்ள செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ‘அபூஹாரூன்’ எனும் ‘மத்ரூக்’ ‘கைவிடப்பட்டவர்’ என ஹதீஸ்கலை அறிஞர்களால் ஓரங்கட்டப்பட்ட ஒருவர் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘யார் ரஜப் மாதத்தின் முதலாவது இரவில் மஃரிப் தொழுகையைத் தொழுது பின்னர் 20 ரக்அத்துகளைத் தொழுது ஒவ்வொரு ரக்அத்திலும் சூறா பாத்திஹாவையும் இஹ்லாஸ் அத்தியாயத்தை ஒரு தடவையும் ஓதி ஒவ்வொரு ரக்அத்திலும் பத்து முறை ஸலவாத்துச் சொன்னால் அவருக்கு கிடைக்கும் வெகுமதிகளை நீங்கள் அறிவீர்களா? என வினவிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரையும் அவரது குடும்பத்தினரையும் அவரது பொருளாதாரத்தையும் அவரது குழந்தைகளையும் பாதுகாப்பதோடு கப்ரின் வேதனையை விட்டும் அல்லாஹ் அவரைப் பாதுகாக்கின்றான். மேலும் அவர் எவ்வித வேதனையோ கேள்வி கணக்கோ இன்றி மின்னல் வேகத்தில் ‘ஸிராத்’ எனும் பாலத்தைக் கடந்து செல்வார் எனக் கூறினார்கள்.’
இச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அதிகமான அறிவிப்பாளர்கள் யாரென அறியப்படாதவர்கள் என்றும் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் ஷாபி மத்ஹபின் மிகப்பிரபல்யமான இமாமான அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். எனவே இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘எவரொருவர் ரஜப் மாதத்தின் மூன்று நாட்கள் நோன்பு நோற்கிறாரோ அவருக்கு ஒரு மாதம் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் எழுதி விடுகின்றான். ஒருவர் ஏழு தினங்கள் நோன்பு நோற்றால் அவரை விட்டும் நரகத்தின் ஏழு வாயில்களையும் மூடிவிடுகின்றான்.’
இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ‘அம்ருப்னு அஸ்ஹர்’ பொய்யரென இமாம் ‘யஹ்யா இப்னு மயீன்’ மற்றுமுள்ள ஹதீஸ் கலை அறிஞர்களும் குற்றம் சாட்டியுள்ளதால் இச் செய்தி ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘நிச்சயமாக ரஜப் மாதம் மகத்தான மாதமாகும். யார்; அதில் ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ அவருக்கு ஆயிரம் வருடங்கள் நோற்பு நோற்ற நன்மையை அல்லாஹ் எழுதுகின்றான்.’
மேலுள்ள செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ‘இஸ்ஹாக் பின் இப்றாஹிம் அல்குத்தலி’ என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களின் ஒருமித்த கருத்துப்படி பலவீனமானவர் ஆகையால் இச்செய்தி ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘எவரொருவர் ரஜப் மாதம் நோன்பு நோற்று அதில் நான்கு ரக்அத்துகள் தொழுதால் சுவனத்தில் அவரது தங்குமிடத்தைக் காணும் வரை அல்லது அவருக்கு காண்பிக்கப்படும் வரை மரணிக்கமாட்டார்.’
இச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அதிகமான அறிவிப்பாளர்கள் யாரென அறியப்படாதவர்கள் என்றும் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் ஷாபி மத்ஹபின் மிகப்பிரபல்யமான இமாமான அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். மேலும் இச்செய்தியில் இடம்பெறும் உஸ்மான் பின் அதாஃ என்பவர் ஹதீஸ் கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர். ஆகையால் இச்செய்தி ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.

ரஜப் மாதமும் விஷேட உம்ராக்களும்
ரஜப் மாதம் வந்துவிட்டால் முஸ்லிம்கள் விஷேட உம்ரா பயணம் மேற்கொள்கின்றனர். உம்ரா பயணம் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியமே. ஆனால் அதனை ரஜப் மாதத்தில் நிறைவேற்றுவது சிறப்புக்குரியது எனக் கருதுவது நபிகளாரின் வழிமுறைக்கு மாற்றமான செயலாகும்.

 அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்க கூடிய நபிமொழி ரஜப் மாதத்தை தெரிவு செய்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விஷேட உம்ராக்கள் எதனையும் நிறைவேற்றவில்லை என்பதனை தெளிவுபடுத்துகின்றது.


‘ஆயிஷா (ரழி) அவர்களிடம் நான் (நபிகளாரின்; உம்ரா பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்யவில்லை! என்றார்கள்.’ (அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்] நூல்: ஸஹீஹுல் புஹாரி-1777)


கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளை இமாம் இப்னு ஜவ்ஸி (ரஹ்) தமது மவ்லூஆத் என்ற நூலில் தொகுத்தளித்துள்ளார்கள்.

நன்றி;அல்-அதர் இஸ்லாமிய மாத இதழ்.

புதன், 16 மார்ச், 2011

ஜூதி மலைமீது தங்கிய நூஹ் நபியின் கப்பலும்; வீட்டின் மாடி மீது அமர்ந்த ஜப்பான் கப்பலும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


பின்னர்; "பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்" என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.[11 ;44 ]

ஞாயிறு, 6 மார்ச், 2011

முஸ்லிம்மங்கையராய் பிறப்பதற்கே நல்லமாதவம் செய்திடல்வேண்டும்!

லக மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்8.ல் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மகளிர் முன்னேற்றம் குறித்த கருத்தரங்கங்களும், விழிப்புணர்வு பிரச்சாரங்களும் ஆங்காங்கே நடைபெறும். ஆனாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்தான் குறைந்தபாடில்லை. இதற்கு காரணம் பெண்கள் சுதந்திரம்குறித்த தெளிவான பார்வையின்மைதான்.

பெண் என்பவள் ஆணுக்கு நிகர் என்ற வெறியூட்டப்பட்டு, ஆண்களுக்கு நிகரான ஏன் அதையும் தாண்டிய குறைந்த அளவு ஆடையில் வலம்வருவது, பணிக்கு செல்வது இவை மட்டும்தான் பெண்களின் முன்னேற்றம் என்ற குறுகிய வட்டத்துக்குள் நின்றதுதான். இதையும்தாண்டி பெண்கள் சோபிக்கவேண்டிய முக்கியமான குடும்பக்கட்டமைப்பு இன்று பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் சிதைந்துள்ளது.

ஒரு காலத்தில் விவாகரத்து என்பது அரிதான ஒன்றாக இருந்தது. இன்று என்ன நிலை? ஒரு சிறு பிரச்சினை என்றாலும் கணவனுக்கு முன்பாக குடும்பநல நீதிமன்றத்தின் படியேறுவது பெண்தான். இதை பெருகிவரும் விவாகரத்து வழக்குகள் உறுதிப்படுத்துகிறது. சென்னையில் விவாகரத்து வழக்குகளை விசாரிப்பதற்காக 3 குடும்ப நலக்கோர்ட்டுகள் உள்ளன. கடந்த 2008-ம் ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 905 விவாகரத்து வழக்குகள் தாக்கலாகியுள்ளன. மாதமொன்றுக்கு அதிகபட்சம் 412 வழக்குகளும், குறைந்தபட்சம் 250 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.அதாவது சராசரியாக மாதம் ஒன்றுக்கு 350 வழக்குகளும், நாளொன்றுக்கு 17 வழக்குகளும் தாக்கல் செய்யப்படுகின்றன. சென்னையில் மட்டுமே இவ்வளவு எனில், ஏனைய மாவட்டங்கள்- மாநிலங்களின் நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.

இந்த அளவுக்கு விவாகரத்து மலிந்ததற்கு ஆண்கள் ஒரு காரணம். ஆனால் ஆண்கள் மட்டுமே காரணமில்லை. சுதந்திரம் என்ற பெயரில் கணவன் திட்டினாலே, அவனை கம்பி எண்ண வைக்கும் மனைவிகள் உண்டு. 'அடிமைத்தளையை அறுக்கிறேன் என்றபெயரில் அன்பான குடும்பத்தின் குரல்வளையை அறுக்கவைத்ததும் இந்த போலிபெண் சுதந்திரமே! அதுபோன்று சரிநிகர்சமானம் என்ற பெயரில், குடும்பப்பொறுப்புகளையும், குழந்தைகள் பராமரிப்பையும் புறந்தள்ளி பணிக்கு செல்லும் பெண்களில் சிலர் தாமும் சம்பாதிப்பதால் கணவனுக்கும், ஏனைய குடும்ப உறுப்பினர்களுக்கும் மரியாதை தரமறுப்பதும்அதனால் பிரச்சினைகள் எழுவதையும் முடிவில் விவாகரத்தில் முடிவதையும் நாம் பார்க்கிறோம்.

பெண் சுதந்திரம் என்ற பெயரில் அரைகுறை ஆட்கள் அணிந்து வலம்வரும் சில பெண்களால் நாட்டில் கற்பழிப்பு எண்ணிக்கை அதிகமாவதையும் நாம் மறுக்கமுடியாது. கற்பழிக்கும் எண்ணத்தோடு திட்டமிட்டு செயல்படுபவரைவிட, சில பெண்கள் அணியும் ஆடைகளால் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நடக்கும் கற்பழிப்புகளே அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் நம்நாட்டில் சுமார் இருபதாயிரம் கற்பழிப்புகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், சுதந்திரம் என்ற பெயரில், ஆண்களுடன் பணியாற்றுவதாலும், ஆண்களுடன் சுற்றுவதாலும் காதல்வயப்பட்டு கற்பிழக்கும் பெண்களின் எண்ணிக்கையும் கணக்கிலடங்கா. இப்படி சுதந்திரம் என்றபெயரில் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் பெண்ணினத்திற்கு, இஸ்லாம் உண்மையான சுதந்திரத்தையும்- பாதுகாப்பையும் வழங்கியிருக்கிறது.

பிறப்பதற்கு உரிமை;
கணினி உலகிலும் கருவிலேயே பெண்குழந்தையை அழிக்கும் நிலையில், அன்றே பெண் குழந்தைகளை சிறப்பித்து வரவேற்ற மார்க்கம் இஸ்லாம்;இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்;

தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப் பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சகள் பேசுவதையும் அதிகமாக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான்.
நூல்;புஹாரி,எண் 2408

கல்வி கற்பதில் சுதந்திரம்;

(நாங்கள் உங்களை அணுகி மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்' என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக் கட்டளைகளை) ஏவினார்கள். அவர்கள் தங்களின் அறிவுரையில் 'உங்களில் ஒரு பெண் தன் குழந்தைகளில் மூவரை (மரணத்தின் மூலம்) இழந்துவிட்டாள் என்றால் அந்தக் குழந்தைகள் அப்பெண்ணை நரகத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடக் கூடியவர்களாக இருப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண், 'இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இரண்டு, குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டாலும் தான்' என்று கூறினார்கள்" அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
நூல்;புஹாரி,எண் 101;

மணமகனை தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம்;

கன்சா(ரழி)அறிவிக்கிறார்கள்; எனது தந்தை கிதாம்(ரழி) அவர்கள் எனக்கு பிடிக்காத இடத்தில் மணமுடித்துக் கொடுத்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இதனைக் கூறியபோது அந்த திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்து செய்தார்கள். இதே நிகழ்ச்சியை இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள். (முஅத்தாமாலிகி, புகாரி, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா, பைஹகீ)


விவாகரத்தில் உரிமை;

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ஸாபித் இப்னு கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறைகூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டே இறைநிராகரிப்புக்குரிய செயல்களைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்' என்று கூறினார். அப்போது, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஸாபித் உனக்கு (மணக்கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?' என்று கேட்டார்கள் அவர், 'ஆம் (தந்து விடுகிறேன்)' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), 'தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!' என்று கூறினார்கள்.
நூல்;புஹாரி,எண் 5273

இது போக கணவனின் சொத்தில் உரிமை, தந்தையின் சொத்தில் உரிமை இப்படி ஏராளமான உரிமைகளையும், உண்மையான சுதந்திரத்தையும் வழங்கியதோடு, இவை எல்லாவற்றிற்கும் மகுடம் சூட்டியது போன்று ஒரு பெண்ணைத்தான் முஸ்லிம்களுக்கு முன்னுதாரணமாக அல்லாஹ் சொல்லிக்காட்டி பெண்ணினத்தை உச்சத்தில் வைத்து பாராட்டுகிறான்;

وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا اِمْرَأَةَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِن فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ

மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் "இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக" என்று (பிரார்த்தித்துக்) கூறினார். (66:11)

இப்ப மறுபடியும் தலைப்பை படியுங்கள்.

சனி, 5 பிப்ரவரி, 2011

'சமூகத் தீமைகள்' ஒரு பார்வை!




بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ'
 
மனிதனின் அத்தியாவசியத் தேவையான உணவிற்காக, வயல்வெளியில் நடப்படும் தானியங்களின் வளர்ச்சியைக் கெடுக்க, அழையா  விருந்தாளியாக வந்து முளைக்கும் களைபோல, மனிதனின் இம்மை-மறுமை வாழ்வை நாசமாக்க, 'சமூகத் தீமைகள்' சங்கற்பமேற்று, மனித வாழ்வில்  சதிராட்டம் ஆடுகின்றன. இதில் வேதனை என்னவெனில், இத்தகைய சமூகத் தீமைகளை சக தோழனாக ஏற்று, மனிதன் அரவணைத்து ஆபத்தை  உணராமல் அன்றாட வாழ்வை  அழிவுக்குள்ளாக்கி  கொள்கிறான்  என்பதுதான். இத்தகைய சமூகத் தீமைகள் ஏராளம் உண்டெனினும், அதில் பிரதானமாக, வட்டி-வரதட்சனை-தீண்டாமை-ஆபாசம்-லஞ்சம்-ஊழல்-மது-புகையிலை-
சுரண்டல் ஆகியவை உள்ளன.
இவைகளிப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில், 'சமூகத்தீமைகள்' எதிர்ப்பு மாதம் பிப்-2011 என அறிவித்து, மக்களைக்  காக்க புறப்பட்டுள்ளது சமூக நலனில் அக்கறை கொண்ட இந்திய தவ்ஹீத்ஜமாஅத்.
 இத்தகைய சமூகத்தீமைகளின் விளைவை சுருக்கமாக காண்பதற்கு முன்னால், இறைத்தூதர்[ஸல்] அவர்களின் இனியமொழியைப்  பார்ப்போம்;
 
''அல்லாஹ் தன் வேதத்தில் எவற்றை  ஆகுமாக்கியுள்ளானோ அவை அனுமதிக்கப்பட்டதாகும். எவற்றை தடுத்துள்ளானோ அவை தடை செய்யப்பட்டதாகும். எவை பற்றி அவன் ஒன்றும் கூறவில்லையோ அவை சலுகையாகும். அல்லாஹ் அளித்திருக்கும் சலுகையை ஏற்றுக் கொள்ளுங்கள். நிச்சயமாக! அல்லாஹ் எதையும் மறப்பவனல்ல என்று கூறிவிட்டு, 'உமது இறைவன் எதையும் மறப்பவனல்ல'[19 ;64 ] என்ற வசனத்தை  ஓதிக்காட்டினார்கள்.
[நூல்; ஹாகிம்]
 
மேற்கண்ட பொன்மொழி, அல்லாஹ் தனது கூறிய ஏவல்-விலக்கல்களை மனிதன் கடைபிடிக்கவேண்டும் என நமக்கு உணர்த்துகிறது. அதுமட்டுமன்றி, '[இத்தூதர்] தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்குகிறார்; தூய்மைஇல்லாதவற்றை  அவர்களுக்கு தடை செய்கிறார்'[7 ;157 ] என்று கூறி, மனிதர்கள் மீது ஒன்றை ஆகுமாக்குவதற்கும், தடுப்பதற்கும், நபியவர்களுக்கு அதிகாரமுண்டு என்று அல்லாஹ் கூறுகின்றான்.எனவே நாம் செய்யும் செயல்கள் சிறியதோ- பெரியதோ அவை, அல்லாஹ்வின் வேதத்திற்கும்- அல்லாஹ்வின் தூதரின் வழிமுறைக்கும் உகந்ததா என்பதை மனித சமூகம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளது. அவ்வாறு சிந்திக்காததின்  விளைவே, சமூகத்தீமைகள்  சமூகத்தை ஆட்கொண்டதற்கு முதற்காரணமாகும். இந்த அடிப்படையை மனதில் கொண்டு சில தீமைகளை இப்போது அலசுவோம்.
 
வட்டி;
வட்டி என்பது மிகப்பெரிய பொருளாதார சுரண்டல் என்பது யாவரும் அறிந்த உண்மையே. மாதவட்டி- நாள்வட்டி-மீட்டர்வட்டி- சூப்பர்பாஸ்ட்  வட்டி என பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் இந்த வட்டி மனிதனை சுரண்டுவதால்,உலக வங்கியில் வட்டிக்கு கடன் வாங்கி அரசு நடத்தும் அரசாங்கமே, கந்துவட்டிக்கு எதிராக சட்டம் கொண்டு வரும் அளவுக்கு கொடுமையான தீமையாக உள்ளது. இந்த வட்டி ஏழைகளுக்கு ஒரு உயிர்க்கொல்லி நோய் போன்றதாகும். மேலும், சிலர் பிறர் மெச்சவேண்டும் என்பதற்காக ஆடம்பர பொருட்கள் வாங்கிட- ஆடம்பரமாக திருமணம் நடத்திட- ஆடம்பர  சொகுசு வாழ்க்கை வாழ்ந்திட என இந்த வட்டி எனும் முதலை வாயில் தலை வைத்து, பின் வட்டி கழுத்தை இருக்கும் நிலை வருகையில் கயிற்றால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்துகொள்கின்றனர். இன்னும் சிலர் வட்டி எனும் புலிவாலை பிடித்து விடமுடியாமல் தவிக்கின்றனர். வட்டிக்கு கொடுத்த பாவி வாசலில் நின்று கேட்டு, படிப்படியாக படுக்கையறை வந்து பங்குபோடும்  அவலமும் ஏற்படுகிறது. இத்தகைய மாபாதக வட்டியை மாபெரும் பாவம் என வர்ணிக்கிறது மாமறை;
 

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள் நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.[2 ;278 ,279 ]

எனவே வட்டியை விட்டொழிப்போம். சிலர், 'வட்டிக்கு கொடுத்தால்தான் பாவம்;வட்டிக்கு வாங்கினால் பாவமல்ல' என்று கூறுவர். ஆனால் உண்மை  அதுவல்ல. இதோ உண்மைநபி[ஸல்] அவர்கள் பொன்மொழியை கவனியுங்கள்;

வட்டி வாங்குபவனையும்-வட்டிக்கு கொடுப்பவனையும்-அதற்கு கணக்கு எழுதுபவனையும்- சாட்சியாக இருப்பவனையும் நபியவர்கள் சபித்துவிட்டு, அக்குற்றத்தில் அனைவரும் சமமானவர்களே என்று கூறினார்கள்.[நூல்;முஸ்லிம்]

எனவே வட்டியைவிட்டும் எட்டி நிற்போம்.

வரதட்சனை;

இறைவனின்  படைப்பில் ஆண்-பெண் என இருபாலர் உண்டு. இவ்விருவரில் ஒருவரைவிட மற்றொருவர் மறையோனின் பார்வையில் மட்டமானவர்களில்லை.ஆனால், ஆண் ஏதோ  வாங்கப் பிறந்தவன் போன்றும், பெண் ஏதோ கொடுக்கப் பிறந்தவள் போன்றும் சமூகத்தில் ஒரு தோற்றத்தை உருவாக்கியதுதான் வரதட்சனை என்பதாகும். திருமணம் செய்யும் ஆணுக்கு, ரொக்கப்பணம்-நகைகள்-சீர்வரிசைகள்-கார்-வீடு- இவ்வாறு மணப்பெண் தரும் அவலநிலை. மார்க்கெட்டில் மாட்டிற்கு விலை ஏறுகிறதோ இல்லையோ,மாப்பிள்ளைக்கு விலை தாறுமாறாக எகிறுகிறது. படிப்பிற்கு ஏற்ப செய்யும் தொழிலுக்கு ஏற்ப மாப்பிள்ளை விலை உள்ளது. வசதிபடைத்த  கண்ணியர் கரையேறுகிறார்கள். வசதியற்ற கண்ணியர் கண்ணீரில் கரைகிறார்கள்.எதற்காகவும் எவரிடத்திலும் கையேந்தாத பெண்ணின் தந்தை, மகளின் மணவாழ்க்கையில் மாப்பிள்ளைக்கு வாய்க்கரிசி[வரதட்சனை] போட, [பள்ளி]வாசல் தோறும் கையேந்துகிறான். இத்தகைய சமூகத்தின் இழிவுக்கு காரணாமான வரதட்சனை பாவமாக கூட பார்க்கப்படாமல், கவுரவத்தின் அடையாளமாக காணப்படுவதுதான் வேதனையின் உச்சகட்டம். இதோ வல்ல ரஹ்மான் தன் வேதத்தில்;

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.[4 ;4] என்று கூறுகின்றான்.

அய்யகோ! இவ்வசனத்தை மேடைதோறும் முழங்கும் தவ்ஹீத்[வாதிகள்]வியாதிகள் சிலர், மணமகனாக வீற்றிருக்கும் வேளையில் வசதியாக மறப்பதுதான் வேடிக்கையாகும். எனவே வரதட்சனை ஒழித்து, பெண்ணுக்கு தட்சனை[மஹர் ] தந்து மணமுடிப்போம்.

தீண்டாமை;

'தீண்டாமை ஒரு பாவச்செயல்- தீண்டாமை ஒரு பெருங்குற்றம்- தீண்டாமை ஒரு மணிதத் தன்மையற்ற  செயல்' என்று பாடப்புத்தகம் நமக்கு பாடம் புகட்டினாலும், நடைமுறையில் இன்னும் இரட்டைக் குவளைகளும்- 'திண்ணியம்'களும்- தீண்டாமைசுவர்களும் இருக்கவே செய்கின்றன. மனிதன் எவராகினும், அவனது உதிரம் சிவப்பு  என்ற உயர்ந்தோனின் படைப்பில், ஏற்றத் தாழ்வு கற்பித்து, சூத்திர வர்ணம் பூசி ஒரு சாராரை தீண்டத்தகாதவர்களாக ஆக்கியது  மனுநீதி[!]. அத்தகைய தாழ்த்தப் பட்டவர்கள் என கருதப்பட்ட சமூகம், இன்று படிப்பு-பதவி என உயர்ந்த  நிலைக்கு வந்த பின்னும் அவர்கள் மீது பூசப்பட்ட தீண்டாமை வர்ணம் இன்னும் மாறவில்லை என்பதே உண்மை.இன்றைய சனாதனவாதிகளையும் தாண்டிய குலப்பெருமை கொண்ட அறியாமைக்கால மக்களுக்கு அழகாய் சொன்னது அருள்மறை;

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்.[4 ;1]

இந்த அறைகூவல்தான், உயந்த குலம் என அறியப்பட்ட குறைஷிக்குலத்தைச்  சேர்ந்த உமர்[ரலி] எனும் வேங்கை, எத்தியோப்பிய கருப்புநிற அடிமையான பிலால்[ரலி] அவர்களை 'என் தலைவர்' என சொல்லச்செய்து, ஒருதாய் மக்களாக்கி, தீண்டாமை சுவருடைத்து, தீன் சுடர் ஒளிரச்செய்தது. ஆம்! தீண்டாமை ஒழிப்போம்.
 
ஆபாசம்;
 ஆபாசம் இன்றைக்கு அவசியப் பொருளோ என அஞ்சும் அளவுக்கு மனிதனின் வாழ்வில் இரண்டற கலந்துவிடும் அபாய நிலையில் உள்ளது. ஒரு காலத்தில் முழம் கணக்கில் கட்டப்பட்ட சேலை, பின்னர் மீட்டர்களாகி, மிடிகளாகி, இப்போது இரு கச்சைகளில் நிற்கிறது. ஒரு பெண் சற்றே அரைகுறை ஆடையணிந்து தெருவில் வந்தால், ஆபாசம் என அலறுபவர்கள் கூட, இரு கச்சைகளுடன் ஒரு பெண் திரையில் வந்தால் 'கலை' என்கிறார்கள். ஒரு பெண் பல ஆண்களுடன் தொடர்பு கொண்டால், அவளை 'பரத்தை' என்பவர்கள் கூட, பரந்த திரையில் 'படுக்கையறை' காட்சிவரை நடிப்பவரை பாராட்டி பதக்கம் அளிக்கின்றனர். ஆக ஆபாசம் பெயர் மாற்றப்பட்டு சேட்டிலைட் வழியாக நமது வரவேற்பறையில் வந்து அமர்ந்துவிட்டது.  இத்தகைய ஆபாசத்தின் நுழைவாயில் தவறான பார்வையாகும். முடிவு விபச்சாரமும்- பரிசு எயிட்ஸ் ஆகவும் உள்ளது. எனவே இந்த ஆபாசத்தை நுனிமுதல் அடிவரை கிள்ளி எறிகிறது மார்க்கம்;
 
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.[24 ;30 ,31]
 
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.[17 ;32 ]
 
எனவே ஆபாசத்தை அடியோடு ஒழிப்போம்.
 
ஊழல்;
உழைக்காமல் பொருளீட்டுவதற்கும், தவறானவற்றை நியாயப் படுத்துவதற்கும் உருவானதுதான் ஊழல். சில நூறுகளில் தொடங்கிய ஊழல் இப்போது கோடிகளில்தான் எனும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த அளவுக்கு லஞ்சம்-ஊழல் தலைவிரித்து ஆடுவதற்கு காரணம், என்னதான் விசாரணை-கைது என்றாலும், சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிவிடலாம் என்ற அசாத்திய நம்பிக்கையே.சில நூறு ரூபாய்கள் கையூட்டு பெற்றவன் மீது காட்டும் கடுமை, கோடிகளை சுருட்டிய கேடிகள் மீது காட்டப்படுவதில்லை. முறைகேடாக பொருளீட்டிய பல இந்தியர்களின் கருப்புப் பணம் பலகோடிகள் பன்னாட்டு வங்கிகளில் பதுங்கிக் கிடக்கிறது என்பதுதான் பரபரப்பு செய்தியாக உள்ளது. நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை என்ற ஒன்று இருந்தாலும், அதனால் பெரிய அளவில் எந்த பலனுமில்லை.இத்தகைய லஞ்சம்-ஊழல் ஊற்றுக் கண்களை உறுதியாக அடைக்கிறது இஸ்லாம்;

அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.[2;188 ]

அது மட்டுமன்றி, 'எந்த வழியில் சம்பாதித்தாய்; எந்த வழியில் செலவு செய்தாய்' என்றும் மறுமையில்  விசாரிக்கப்படும் என்றும் கூறி, தவறான வழியில் பொருளீட்டுவதை தடுக்கிறது இஸ்லாம்.எனவே லஞ்சம்-ஊழல் எனும் சமூகத்தீமையை ஒழித்திடுவோம்.

மது;
'மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உடலுக்கு கேடு' என்று ஒருபுறம் எழுதிவைத்துக்கொண்டு அத்தகைய கேடானதை விற்பதற்கென 'டாஸ்மாக்' நிலையங்களை உருவாக்கி அதில் படித்த பட்டதாரிகளையும் பணியாளர்களாக்கி அரசு கஜானாவை நிறைத்துவருகிறது தமிழக அரசு. அரசின் பட்ஜெட் தேவையை நிறைவேற்றுவதில் மது வியாபாரம் முக்கிய இடத்தில் இருந்து வருகிறது. இந்த மது அருந்துபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதையும், வரும் பத்தாண்டுகளில் மது அருந்ததாதவர்களை காண்பது அரிதாகிவிடும் என்று ஆய்வுகள் சொல்லும் அளவுக்கு, பெரியவர்களில் தொடங்கி, சிறார்கள் வரை இந்த மது எனும் சமூகத்தீமை ஆட்கொண்டுள்ளது.அது மட்டுமன்றி நாகீகம் என்ற பெயரில் மது பென்களையும் கவர ஆரம்பித்துள்ளது ஆபத்தின்  அறிகுறியாகும். இத்தகைய மதுவை ஒருகாலத்தில் மறைந்திருந்து குடித்தவர்கள், இன்று பட்டப்பகலில் தேநீர் அருந்துவதுபோல் பொது  இடத்தில் அருந்துகின்ற அளவுக்கு இந்த தீமை சகஜமாகிவிட்டது. மதுவால் எத்தனை லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன. எத்தனை குற்றங்களுக்கு இந்த மது காரணியாக உள்ளது என்பதைப் பற்றி எல்லாம் எவரும் கவலை கொள்ளும் நிலையில் இல்லை. ஆனால் இத்தகைய சமூகத்தீமையான  மதுவை,  குடம் குடமாக குடித்த மதுப்பிரியர்களை ஒரு வசனத்தின் மூலம், திருத்திக் காட்டியது இஸ்லாம்;

அனஸ்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்;
நான் அபூ தல்ஹா(ரலி) வீட்டில் மக்களுக்கு மது பரிமாறுபவனாக இருந்தேன். அந்த நாள்களில் பேரீச்சம் பழ மதுவை (பேரீச்ச மரக்கள்ளை)யே அவர்கள் குடித்து வந்தனர். (மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பட்டவுடன்), இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, '(மக்களே!) மது தடை செய்யப்பட்டுவிட்டது" என்று அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள். அபூ தல்ஹா(ரலி) என்னிடம், 'வெளியே சென்று இதை ஊற்றிவிடு" என்று கூறினார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றி விட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது.
[நூல்;புகாரி]

இத்தகைய மதுவின் தீமைகளை மக்களுக்கு சொல்லவேண்டிய   முஸ்லிம்களில் சிலரும் மது அருந்துபவர்களாக  இருப்பது வேதனைக்குரியதாகும். எனவே குடியைக் கெடுக்கும் குடியை ஒழிக்க முன்வருவோம்.

புகையிலை-புகை;

புகையிலையை பயன்படுத்துவதுநாகரீகத்தின் அடையாளமாக கருதும் அளவுக்கு பெரும்பாலோரை ஆட்கொண்டுள்ளது. இந்த புகையிலை நாகரிக வளர்ச்சிக்கேற்ப பல்வேறு பரிமாணங்களில் தனது உயிர்கொல்லி வேலைகளை கச்சிதமாக செய்துவருகிறது. ஒரு காலத்தில் புகையிலையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்து, பின்பு சுருட்டாக, பின்பு பீடியாக, சிகரெட்டாக, பான்பராக்காக, குத்காவாக, போதை தரும் பீடாக்களாக இவ்வாறான பல்வேறு முகங்கள் இந்த புகையிலைக்கு உண்டு. இதில் புகையிலையை, புகையிலையாக பீடாக்களாக பான்பராக்குகளாக பயன்படுத்துவதை பொருத்தமட்டில், யார் அதை உட்கொள்கிறாரோ அவரை மட்டுமே பாதிக்கும். ஆனால் புகைப்பதை பொருத்தமட்டில், புகைப்பவர் மட்டுமல்லாது அவருக்கு அருகாமையில் உள்ளவரையும் சேர்த்தே பாதிக்கும். 

ஒரு புகைபிடிப்பவர் அருகே புகை பிடிக்காதவர் ஒருவர் இருந்தால், புகைப்பவர் விடும் புகையை இவர் சுவாசித்து, புகைக்காத மனிதருக்கும் நோய் வரும் நிலை. சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் பேர் பலியாகி வருவது தெரிய வந்துள்ளது. அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 30 சதவீதம் ஆண், பெண் அடங்குவர்.

மேலும், இதயநோயினால் 3 லட்சத்து 79 பேரும், 1 லட்சத்து 65 பேர் மூச்சு கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும், 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்துமாவினாலும், 21 ஆயிரத்து 400 பேர் நுரை யீரல் புற்று நோயினாலும் ஆண்டுதோறும் மடிகின்றனர்.
புகைப்பவர் ஒரு முஸ்லிமாக இருந்தால் அவர் மற்றவருக்கு தீங்கை நாடுவதால் அவர் சிறந்த முஸ்லிமாக ஆகமாட்டார். 

நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
'பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தா
ர்.[நூல்;புஹாரி]
எனவே புகையிலை-புகைப்பழக்கம் ஒழிப்போம்.

இறுதியாக மேற்கண்ட தீமைகள் மட்டுமல்லாது ஏராளமான சமூகத் தீமைகள் நமக்கு மத்தியிலே மலிந்து காணப்படுகின்றது. அத்தகைய தீமைகளை செய்யாமல் வாழும் சில நல்லவர்கள், நாம்தான் எந்த தீமையும் செய்வதில்லையே; எவன் எக்கேடுகெட்டுப் போனால் நமக்கென்ன..? என்று பாராமுகமாக ஒதுங்கிச்செல்வதை பார்க்கிறோம். ஒரு முஸ்லிம்  இவ்வாறு ஒதுங்கிச்செல்ல முடியாது. ஏனெனில் அல்லாஹ்,

[நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக் குள்ளாக்கினோம்

(அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், "அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்); "எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்.

அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்.[7 ;163-166 ]

என்று கூறுகின்றான். 

எனவே சமூகத்தீமைகளை களமிறங்கி ஒழித்து, சமூகத்தை பாதுகாப்போம். இறைவனின் பாதுகாப்பைப் பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

ரபியுல்-அவ்வல் மாதமும்-மவ்லிதும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ரபியுல்-அவ்வல் மாதம் வந்துவிட்டாலே, இருசாரார் கச்சைகட்டி கிளம்புவார்கள். ஒரு சாரார் 'இந்த மாசம் ஏதாவது தேத்துனாத்தான் உண்டு' என்று மவ்லிது கச்சேரிவாசிப்பவர்கள். இன்னொரு சாரார் 'இது பித்'அத்' மவ்லிது ஓதுபவர்கள் நரகவாதிகள் என்று பத்வா கொடுப்பவர்கள். இருசாராருமே நடுநிலையோடு மார்க்கத்தை அணுகுவதில்லை. முதல்சாராரின் வாதத்தை பார்ப்போம்.

#நாங்கள் நபி[ஸல்]அவர்களின்மீது நேசம்வைத்துள்ளோம். எனவே அவர்கள் பிறந்த இந்த மாதத்தில் அவர்களை புகழ்ந்து கவிபாடுகிறோம்


முதலாவதாக நபி[ஸல்]அவர்கள் ரபியுல்அவ்வல் பிறை 12.ல் தான் பிறந்தார்கள் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை. வரலாறுகளில் பல்வேறு கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பிரதானமானது ரபியுல்அவ்வல் ஒன்பது அன்று நபியவர்கள் பிறந்தார்கள் என்பதுதான்.

இறைத்தூதர்[ஸல்] மக்காவில் பனூ ஹாஷிம் கிளையில்  ரபீவுல் அவ்வல் மாதம், 9ஆம் நாள் திங்கட்கிழமை (கி.பி. 571 ஏப்ரல் மாதம் 20 அல்லது 22ம் தேதி) அதிகாலையில் பிறந்தார்கள். அது யானைச் சம்பவம் நடைபெற்ற முதலாவது ஆண்டு. மேலும் ~அனூ ஷேர்வான் என்ற கிஸ்ராவின் ஆட்சி முடிவுக்கு வந்த நாற்பதாம் ஆண்டு.
இக்கருத்தையே அறிஞர் முஹம்மது ஸுலைமான் உறுதிப்படுத்துகிறார். (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)

ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதாக இருந்தால் அவரின் பிறந்தநாள் உறுதியாக அறியப்பட்டிருக்கவேண்டும். பலமான, ஒத்தகருத்துடைய ஆதாரமில்லாமல் ரபியுல்அவ்வல் 12. என்று முடிவெடுத்தது எப்படி?

அடுத்து ரசூல்[ஸல்]அவர்களின்மீது நேசம் வைப்பது எப்படி என்றால் மவ்லிது கவிபாடி அல்ல. இதோ நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;

'உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்கள்.
நூல்;புஹாரி,எண் 15

நபி[ஸல்] வர்களின் மீது அன்பு செலுத்துவது என்பது அவர்களை நம் உயிரினும் மேலாக மதிப்பதுதான். இதோ சத்திய சகாபாக்கள் நபியவர்களை நேசித்த விதம்பாரீர்;

கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார்கள்;

நான் அறியாமைக் காலத்தில் கருமானாக இருந்தேன். எனக்கு ஆஸ் இப்னு வாயில் என்பவன் சில திர்ஹம்கள் கொடுக்க வேண்டியிருந்தது. அதைக் கொடுத்து விடும்படி கேட்டு அவனிடம் சென்றேன். அவன், 'நீ முஹம்மதை நிராகரிக்காதவரை நான் உனக்குக் கடன் தீர்க்க மாட்டேன்" என்று கூறினான். நான், 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, பிறகு உயிராக்கி எழுப்பும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்" என்று கூறினேன். அதற்கு அவன், 'அப்படியென்றால் நான் இறந்து மீண்டும் உயிராக்கி எழுப்பப்படும் வரை என்னைவிட்டுவிடு. அப்போது எனக்குச் செல்வமும் குழந்தைகளும் கொடுக்கப்படும். பிறகு நான் உன் கடனைத் தீர்ப்பேன்" என்று கூறினான்.
அப்போதுதான், 'எவன் நம்முடைய சான்றுகளை மறுக்கிறானோ, மேலும் 'பொருள் செல்வமும் மக்கள் செல்வமும் எனக்கு வழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்' என்றும் கூறுகிறானோ அவனை (நபியே!) நீங்கள் பார்த்தீர்களா? அவன் மறைவான உண்மைகளை அறிந்து கொண்டானா? அல்லது கருணை மிக்க இறைவனிடம் ஏதேனும் உடன்படிக்கை செய்தானா? அப்படியொன்றுமில்லை. அவன் பிதற்றுவதை நாம் எழுதி வைத்துக் கொள்வோம். அவனுக்குத் தண்டனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்..." (திருக்குர்ஆன் 19:77-80) என்னும் திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டது.
நூல்;புஹாரி,எண் 2425

இதுதான் உண்மையில் நபியவர்கள் மீது செலுத்தும் நேசமேயன்றி, 'நீங்கள்தான் பாவங்களை மன்னிக்கக்கூடியவர்' ' நீங்கள்தான் பாவங்களை மன்னித்து, மறைக்கக்கூடியவர்' என்று அல்லாஹ்வின் தண்மைகளை அல்லாஹ்வின் தூதரைநோக்கி பாடுவதல்ல என்பதை மவ்லிது அபிமானிகள் விளங்கிக்கொள்ளவேண்டும்.

இப்படி நாம் கூறினால் இவர்கள் அடுத்து ஒரு வாதம் வைப்பார்கள். அதாவது ஹஸ்ஸான் இப்னு தாபித்[ரலி] அவர்கள் கவிபாடினார்களே என்பார்கள். ஹஸ்ஸான்[ரலி] அவர்கள் பாடிய கவி என்ன?

ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார்கள்;

மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) கவிபாடிக் கொண்டிருக்க, உமர்(ரலி) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான்(ரலி) பள்ளிவாசலில் கவிபாடுவதை உமர்(ரலி) கண்டித்தார்கள்) ஹஸ்ஸான்(ரலி), 'நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி(ஸல்) அவர்கள்) இருக்கும் போதே கவிபாடிக் கொண்டிருந்தேன்" என்று கூறிவிட்டு, அபூ ஹுரைரா(ரலி) பக்கம் திரும்பி, 'அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ்(தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக!" என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா(ரலி), 'ஆம் (செவியுற்றிருக்கிறேன்)" என்று பதிலளித்தார்கள்.
நூல்;புஹாரி,எண் 3212

ஹஸ்ஸான்[ரலி]அவர்கள் இஸ்லாமிய எதிரிகளை நபியவர்களின் அனுமதியோடு கவிநடையில் பதிலளித்தது, நபியவர்களை அல்லாஹ்வின் தன்மைகளை சூடி பாடக்கூடிய 'சுப்ஹானமவ்லிதுக்கு எப்படி ஆதாரமாகும்? சிந்திக்க மாட்டீர்களா? வேண்டுமானால், இந்த ஆதாரத்தை வைத்து புஷ், அத்வானி உள்ளிட்ட இஸ்லாமிய எதிரிகளை நோக்கி கவிதை நடையில் பதிலளியுங்கள் நாங்கள் தடுக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதரை நேசிப்பது என்பது அவர்களை இயன்றவரை அணு அணுவாக பின்பற்றுவதும் அவர்கள் மீது சலவாத்தை  அதிகமதிகம் மொழிவதும்தான்! அல்லாஹ் பூமியில் சிலவானவர்களை ஏற்படுத்தியிருக்கிறான். என்மீது சலவாத் கூறப்பட்டால் அதை எனக்கு எடுத்துக்காட்டுவார்கள் என்ற நபிமொழியின் மூலம் மரணித்துவிட்ட நபியவர்களுக்கு சொல்லப்படும் சலவாத்கள்தான் அவர்களை சென்றடையுமேயன்றி, மவ்லிது கவிகள் அல்ல. எனவே மவ்லிது என்பது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

மவ்லிதும் மார்க்கம்தான் என்று வரட்டுவாதம் பேசாமல், மவ்லிதுகளில் உள்ள தவறான அர்த்தம்தரும் வார்த்தைகளை நீக்கிவிட்டு, பக்தி முலாம் பூசாமல் வேண்டுமானால் பொழுதுபோக்குக்கு வேண்டுமானால் பாடிக்கொண்டு திரியுங்கள்.

அடுத்து மவ்லிதை எதிர்ப்பவர்கள், ஒரு சாரார் அறிந்தோ-அறியாமலோ மவ்லிது ஓதுகிறார்கள் என்பதற்காக அவர்களை நரகவாதிகள் என்று சொல்வது அப்பட்டமான வரம்புமீரலாகும். ஏனெனில், யார் சொர்க்கம் செல்வர் யார் நரகம் செல்வர் என்று தீர்மானிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. நபியவர்கள் பாவங்களை மன்னிப்பார்கள் என்று கவிபாடினால் அது ஷிர்க். ஆனால் இறைவனின் தன்மையான தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கையிலெடுத்து ஒரு சாராரை நரகவாதிகள் என்று கூறுவதற்கு பெயரென்ன? எனவே, மென்மையாக எடுத்துச்சொல்லி தவறான செய்கையிலிருந்து மக்களை மீட்டெடுக்க முயற்சிப்பதே அறிவுப்பூர்வமானதாகும்.

(மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்க வாசிகள் சொர்க்கத்திலும் நரக வாசிகள் நரகத்திலும் நுழைந்து விடுவார்கள். பின்னர் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் எனும் இறைநம்பிக்கை இருப்பவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு 'ஹயாத்' என்ற ஆற்றில் போடப்படுவார்கள். இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான மாலிக், ஆற்றின் பெயர் 'ஹயா' என்று நபி(ஸல்) கூறினார்களோ என்று சந்தேகப்படுகிறார்... அவ்வாறு அவர்கள் அந்த ஆற்றில் போடப்பட்டதும் பெரும் வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் விதைகள் முளைப்பது போன்று பொலிவடைவார்கள். அவை வளைந்து மஞ்சள் நிறமாக இருப்பதை நீர் பார்த்ததில்லையா?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்கள்.
நூல்; புஹாரி,எண்; 22

அல்லாஹ்வே  மிக அறிந்தவன்.

வெள்ளி, 31 டிசம்பர், 2010

ஸஃபர் மாதமும் முஸ்லிம்களும்!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.

இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருநேரத்தை, ஒருநாளை,ஒருமாதத்தை, ஒருஆண்டை சிறப்பித்து சொல்வதாக இருந்தாலும் அல்லது மேற்கண்ட விசயங்களை கெட்டவை என்று கருதுவதாக இருந்தாலும் அவை அல்லாஹ்வாலோ,அல்லது ரசூல்[ஸல்] அவர்களாலோ சொல்லப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு சொல்லப்படாத எதுவும் மார்க்கமாகாது என்பதுதான்  அடிப்படையான விஷயமாகும்.

12 மாதங்களில் இஸ்லாம் நான்கு மாதங்களை புணிதமாதம் என்று அடையாளம் காட்டி இந்த மாதங்களில் போர்செய்வது கூடாது என்று தடுத்திருக்கிறது. அவை முறையே துல்கஃதா,துல்ஹஜ்,முஹர்ரம்,ரஜப் ஆகியவையாகும். அதுபோல பீடை மாதங்கள் என்று ஏதாவது ஒருமாதம் மார்க்கத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளதா? என்றால் இல்லை. ஆனால் இன்று முஸ்லிம்  சமுதாயம் ஸஃபர் மாதத்தை பீடைமாதம் எனக்கருதி அம்மாதத்தில் சுபகாரியங்கள் எதையும் செய்வதில்லை.

இந்துக்கள் ஆடிமாததை பீடைமாதமாக கருதி, அம்மாதத்தில் சுபகாரியங்களை மேற்கொள்ளமாட்டார்கள். கடைகளில் 'ஆடித்தள்ளுபடி' என்று இருப்புகளை தள்ளிவிடுவார்கள். அதுபோல முஸ்லிம்களும் ஸஃபர் மாதத்தை தள்ளுபடி மாதமாக்கிவிட்டனர். ஒரு மாதத்தை பீடை என நம்புவது முஸ்லிம்களின் வழிமுறையல்ல. மாறாக மக்கத்து காஃபிர்களின் வழிமுறையாகும்.

அறியாமைக்காலத்தில் மக்கள் ஷவ்வால் மாதத்தை பீடைமாதமாக கருதிவந்தனர். நபி[ஸல்]அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில்தான் திருமணம் செய்தனர்.ஷவ்வால் மாதத்தில்தான் நபியவர்களுடன் இல்லறவாழ்வை தொடங்கினேன். என்னைவிட நபியவர்களுக்கு விருப்பமான மனைவி யாரும் உண்டா? என்று அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் அறிவிக்கும் செய்தி முஸ்லீம்,அபூதாவூத் ஆகிய கிரந்தங்களில் இடம்பெற்றுள்ளது.

பீடைமாதம்  என்று கருதப்பட்ட மாதத்தில், அதை உடைத்து எரியும்வன்னம் நபியவர்கள் ஆயிஷா[ரலி]அவர்களை திருமணம் செய்து, சிறப்புற வாழ்ந்துகாட்டி,அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் மடியிலேயே உயிர்துறந்தார்களே! இதிலிருந்து விளங்கவில்லையா? பீடைஎன்று எதுவுமில்லை என்று.

மேலும், ஒருநேரத்தில் உலகத்திலுள்ள அனைவருக்கும் நல்லது மட்டும் நடக்கும் நேரம் ஏதாவது உண்டா? ஒருநேரத்தில் உலகத்திலுள்ள அனைவருக்கும் தீயது மட்டும் நடக்கும் நேரம் ஏதாவது உண்டா? உதாரணத்திற்கு பத்துமணிக்கு எனக்கு குழந்தை பிறக்கிறது. இந்தநேரம் எனக்கு மகிழ்ச்சியான நேரம். என்வீட்டிற்கு நாலுவீடுதள்ளி ஒருவரின் குழந்தை அதேநேரத்தில் இறந்துவிடுகிறது. இது அவருக்கு சோகமான நேரம். ஒருநிமிடத்தில் உலகத்தில் அனைவருக்கும் ஒரேமாதிரி சம்பவங்கள் நிகழாதபோது, ஒருமாதத்தை பீடைஎன ஒதுக்குவது பகுத்தறிவிற்கு ஏற்றதா?

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன். [புகாரி]

மேலும் இம்மாதத்தில் பீடையை போக்குகிறேன் என்ற பெயரில் மாவிலையில் எழுதிக்குடிப்பது, கடலில் குளிப்பது, புல்வெளியை மிதிப்பது இப்படியான மூடபழக்கங்களும் அரங்கேறுகிறது. இது நிச்சயமாக மார்க்கம் காட்டித்தராத வழியாகும். மேலும் ஒடுக்கத்துப்புதன் என்ற ஒரு வார்த்தையைக்கூட அல்-குர்'ஆனிலோ, ஹதீஸிலோ காணஇயலாது.

எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள் மற்றும் மனிதர்களின் சாபம் உண்டாகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அலி (ரலி) ஆதாரம் : அபூதாவூத், நஸாயீ)

எனவே, ஒருகாலத்தில் முஸ்லிம்களுக்கும்-மார்க்கத்திற்கும் மத்தியில் இருந்த இடைவெளியை பயன்படுத்தி வயிறையும்,பாக்கெட்டையும் ஒருசேர நிரப்ப எண்ணியவர்களின் கண்டுபிடிப்பே  ஸஃபர் பீடையும், ஒடுக்கத்துபுதனும் என்பதை விளங்கி இந்த மூடநம்பிக்கையிலிருந்து முஸ்லிம்கள் விலகவேண்டும். மேலும், ஜாஹிலியாக்களின் அறியாமையை நபி[ஸல்] அவர்கள் எப்படி செயல்வடிவில் உடைத்து எரிந்தார்களோ அதுபோல, தவ்ஹீத்வாதிகள் இந்த ஸஃபர்மூட நம்பிக்கையை உடைத்தெறிய, ஸஃபர்மாதத்தில் தங்கள் குடும்ப திருமண மற்றும் சுபகாரியங்களை நடத்த முன்வரவேண்டும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் மார்க்கத்தில் உள்ளதை மட்டும் நம்பக்கூடிய,அதனடிப்படையில் அமல் செய்யக்கூடியவர்களாக ஆக்கியருள்வானாக!

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

முத்தத்திலும் முன்னோனின் சான்று!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின்  படைப்பினங்களில் மனிதர்கள் மட்டுமன்றி, விலங்குகள்-பறவைகள்- ஏன் தாவரங்கள் கூட ஒவ்வொன்றும் ஜோடி-ஜோடியாக படைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எந்த ஒரு ஆண் விலங்கும் இன்னொரு ஆண் விலங்கை நாடி இணைவதில்லை. அது பெண் விலங்கை மட்டுமே நாடுகிறது. எந்த ஒரு ஆண்  பறவையும் இன்னொரு ஆண் பறவையுடன் இணைவதில்லை. பெண் பறவையை மட்டுமே நாடுகிறது.  ஐந்தறிவுள்ள இந்த ஜீவன்கள் கூட இறைவனின்  ஏற்பாட்டின் படியே, தத்தமது இணையைத் தேடி இன்புற்று, இனவிருத்தி செய்கின்றன. ஆனால் ஆறறிவு உள்ளவன், அபரிதமான ஆற்றல் வழங்கப்பட்டவனான  மனிதன் மட்டும் நாகரீகத்தின் பெயரால் இறைவனின் நியதிக்கு மாற்றமான இணையை தேடுகிறான்.
ஆம்! இன்றைய நாகரிக வளர்ச்சியில் ஓரினச்சேர்க்கை என்பது ஏறக்குறைய குற்றமில்லை  என்று கருதும் அளவுக்கு வந்துவிட்டது. மேற்கத்திய நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்கள் பெரும்பாலான நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. இத்தகைய ஓரினச்சேர்க்கை இயல்பாகவே காலாச்சார சீரழிவு என்றாலும் 'முற்போக்கு' முலாம் பூசி மறைக்கின்றனர். ஆனால் ஒரு ஆணும்- பெண்ணும் இணைவதுதான் சிறந்தது என்பதற்கு எராளமான சான்றுகள் இருந்தாலும் சமீபத்தில் 'முத்தம்' மூலம் மற்றொரு சான்றும் வெளியாகியுள்ளது.
''ஆணும்-பெண்ணும் உதட்டோடு உதடு சேர்த்து வழங்கும் முத்தத்தில், முத்தம் கொடுக்கும் அந்த நேரத்தில் வாயில் ஊறும் உமிழ்நீர் நோய்க் கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்டது. இதன் மூலம் பற்களில் உள்ள பாக்டீரியாக்களை  போக்கி விடுகிறது. இத்தனை முன்னேற்பாடுகளும் வாய் மூலமாக, ஆணிடமிருந்து பெண்ணிற்கோ- பெண்ணிடமிருந்து ஆணிற்கோ கிருமிகள் பரவிவிடக் கூடாது என்பதற்காக இயற்கை[இறைவன்] செய்த முன்னேற்பாடு என்று கூறும் மருத்துவ உலகம், அடுத்து சொல்வதுதான் முக்கியமாக கவனிக்கவேண்டிய அம்சமாகும். அதாவது இந்த கிருமிகளை கொல்லும் சக்தி, ஆணும்-பெண்ணும் முத்தமிடும்போது மட்டுமே ஏற்படுகிறது என்ற மிகப்பெரிய ஆச்சரியத்தை சொல்கிறது  மருத்துவ உலகம்.
இதன் மூலம் அறிவது என்ன? இறைவன் ஏற்பாட்டின்படி இணைவதில்தான் இன்பம் என்பதோடு, அதுதான் பாதுகாப்பானது  என்பதை உணரமுடிகிறது. இனியேனும் நாகரீகம் என்றபெயரில் கால்நடைகளை விட கேவலமாக செல்லும் செயலிலிருந்து மனிதன் திருந்திக்கொள்ளுதல் நன்று.

தொலைந்த பிள்ளை கிடைத்தது; ஆனால் மார்க்கம்....?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

''விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான  (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கே சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை [இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.

மேலும், அபூ ஹுரைரா(ரலி) 'எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான] இயற்கை
மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலின் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்" என்ற (திருக்குர்ஆன் 30:30) வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள்.[நூல்;புகாரி எண்; 1358 ]
 
மேற்கண்ட நபிமொழியை  உண்மைப்படுத்தும் சம்பவம் ஒன்றை சமீபத்தில் செய்திகளில் பார்த்தோம். ஆந்திராவை சேர்ந்த முரான்பாய்- பேகம் தம்பதிகளின் மகன் சபீர். முன்பு சபீருக்கு 5 வயது. அப்போது வீட்டு அருகேயுள்ள ரெயில் நிலையத்தில் சபீர் விளையாடிக் கொண்டிருந்தான். ரெயிலில் ஏறி விளையாட ஆசை ஏற்பட்டதால் அங்கு நின்று கொண்டிருந்த ரெயிலில் ஏறினான்.
 
அந்த ரெயில் திடீரென கிளம்பியது. இதனால் சபீர் அதிர்ச்சி அடைந்தான். ரெயில் வேகமாக சென்ற தால் அவனால் கீழே இறங்க முடியவில்லை. அழுது கொண்டே ரெயிலில் அமர்ந் திருந்தான். இதற்கிடையே அந்த ரெயில் சென்னை வந்தது. ரெயில் நிலையத்தில் வந்திறங்கிய சபீருக்கு எங்கு செல்வதென்று தெரியவில்லை.
 
சபீர் அழுது கொண்டிருப்பதை பார்த்து ரெயில் நிலையத்தில் நின்றவர்கள் அவனை ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்த்தனர். அந்த தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கிய சபீர் 10-ம் வகுப்பு வரை படித்தான். அதன் பிறகு தொண்டு நிறுவனத்தில் இருந்து வெளியேறிய சபீர் கிடைத்த வேலைகளை பார்த்து வயிற்றை கழுவி வந்தார்.
 
தற்போது 21 வயதான சபீர், தனக்கு அறிமுகமாவ்ர்கள் மற்றும் தன்னார்வ   தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் பெற்றோரை தேடும்  படலத்தில் இறங்கினார்.  சபீர் தனது 5 வயதில் இருந்த ஞாபகத்தை பயன்படுத்தி ஆந்திர மாநிலத்தில் தனது வீடு இருக்கும் இடத்தை கூறினார். அதன் மூலம் 1 வாரம் கடுமையாக போராடியதன் மூலம் சபீரின் பெற்றோர் இருக்கும் இடம் தெரிந்தது. இதையடுத்து சபீரின் தந்தை முரான்பாய், தாய் பேகம் ஆகியோர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு பெற்றோரிடம் சபீர் ஒப்படைக்கப்பட்டார்.  
 
மகனை பார்த்த பெற்றோரும், பெற்றோரை பார்த்த சபீரும் உணர்ச்சி பெருக்கத்தில் காணப்பட்டனர். அவர்கள் ஆனந்த கண்ணீரில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பின்னர் சபீர் கூறியதுதான் கவனிக்கவேண்டிய அம்சமாகும்.  ''எனது பெற்றோர் எப்படியாவது கிடைக்க வேண்டும் என்று சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்திருந்தேன். எனது வேண்டுதல் பலித்து விட்டது'' என்றார். அதோடு ஐயப்பனுக்கு மாலை அணிந்து, அந்த தோற்றத்தில் சபீர் இருக்கிறார். மகனின் இந்த மன[மத]மாற்றத்தை பெற்றோரும் கண்டுகொண்டதாகவோ, கவலைப் பட்டதாகவோ தெரியவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.
 
சபீர் பெற்றோரின் அரவணைப்பில்,அறிவுரையில் வாழும் வாய்ப்பை சிறுவயதிலேயே இழந்த காரணத்தால், அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள யாரை கரம்பற்றினாரோ, அவர்களின் அடிப்படையில்  அவரது மார்க்கமும் அமைந்துவிட்டது. இந்த சம்பவத்தின் மூலம்  அறியவேண்டியது என்னவெனில், பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல்  கவனம் செலுத்தி, அவர்கள் எந்த வயதில் இருந்தாலும் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கவேண்டும்.
 
அடுத்து சமுதாய அமைப்புகள், ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை  முன்மாதிரியாக கொண்டு, 'அபய இல்லங்கள்' ஏற்படுத்தி, பெற்றோரை பிரிந்து வரும் சிறார்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய உதவிகள் செய்வதன் மூலம் சமூக சீர்கேட்டிலிருந்து அவர்களை  பாதுகாத்து இஸ்லாத்தில் அவர்கள் நிலைப்பெற உதவவேண்டும்.
 
ஹூம்..! என்ன செய்ய! நம்ம சமுதாயத்தில் இதைப்பத்தியெல்லாம் கவலைப்படுபவர்களை  விட, சக சகோதரனின் அமைப்பை ஆட்டயப் போடவும், அதற்காக சமுதாயத்தின் பணத்தை கோர்ட்டில்  கொண்டுபோய் கொட்டி, நினைத்ததை சாதிப்பதைப் பற்றியும்தானே   கவலைப்படுகிறார்கள். ஆனாலும் இவர்கள் சமுதாயத் தலைவர்களாம்! எல்லாம் அவன் செயல்.

செவ்வாய், 7 டிசம்பர், 2010

முஹர்ரம் 10.செய்யவேண்டியவையும்-செய்யக்கூடாதவையும்!



பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

முஸ்லிம்களில் சிலர் முஹர்ரம் 10 வந்துவிட்டால், அந்த நாளில் என்னசெய்ய வேண்டுமென்று மார்க்கம் சொல்லியிருக்கிறது என்றெல்லாம் பார்ப்பதில்லை காலம் காலமாக நடைமுறையில் என்ன உள்ளதோ அல்லது ஆலிம்சாக்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்து நன்மைக்கு பதிலாக அல்லாஹ்விடம் பாவத்தை பெற்றுக்கொள்வதை பார்க்கிறோம்.

சில  பகுதிகளில் முஹர்ரம10. அன்று கொழுக்கட்டை சுட்டு, வீடுவாசலை நன்றாக கழுவிவிட்டு ஆலிம்சாவை கூப்பிட்டு பாத்திகா ஓதிவிட்டால் கடமை முடிந்தது என்ற பழக்கம் இருந்தது. அல்லாஹ்வின் பேரருளால் தற்போது இந்த பித்அத்  குறைந்துள்ளது. எனினும், முழுமையாக ஒழியவில்லை.

வேறு சில பகுதிகளில்  ஹுஸைன் [ரலி] அவர்கள் ஷஹீதானதை நாங்கள் நினைவு கூறுகிறோம் என்ற பெயரில், ஷியாக்களின் வழிமுறையான பஞ்சா எடுத்து, இந்துக்களின் வழிமுறையான தீ மிதிப்பதையும் முஸ்லிம்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இது தெளிவான வழிகேடாகும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக்  கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்." [புகாரி எண்; 1294 ]

முஹர்ரம் மாதத்தில் செய்யவேண்டியது என்ன என்று நபி[ஸல்] அவர்கள் நமக்கு தெளிவாக்கிவிட்டார்கள். நாம் செய்யவேண்டியது இரண்டு நோன்புகள் நோற்பது மட்டுமே நபிவழியாகும்;

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர்;இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்,

ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி  ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)

ஆஷுரா நோன்பை ஆர்வமூட்டிய அல்லாஹ்வின் தூதர்;
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;

"ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!" [புகாரி எண்; 2006 ]

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, 'இன்று ஆஷுரா  நாளாகும்; எனவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாக இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும்!" என்று அறிவிக்கச் செய்தார்கள்! [புகாரி எண்; 2007 ]

ஆஷுரா நோன்பு ரமளானுக்கு முன்னும்; பின்னும்;
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;

அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி(ஸல்) அவர்களும் நோற்றனர். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷுரா  நோன்பைவிட்டுவிட்டனர். விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர்விட்டுவிட்டனர். [புகாரி எண்; 2002 ]

எனவே, சகோதர/சகோதரிகளே! இரண்டு நோன்பை நோற்பதன் மூலம் இறை உவப்பை பெறுவோம். மேலும் அநியாயக்கார அரசனான ஃபிரவ்ன் இடமிருந்து அல்லாஹ்வின் தூதர் மூஸா[அலை] அவர்களையும் நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் காப்பாற்றினான். அதுபோல ஃபிரவ்னின் மறுவடிவமான அமெரிக்கா, இஸ்ரேல், சங்பரிவாரத்திடமிருந்தும், சக முஸ்லிம்களின் உயிர்- உடமை- மானத்தோடு விளையாடும் குழப்பவாதிகளிடமிருந்தும்  உலக முஸ்லிம்களை பாதுகாக்குமாறு அந்நாளில் துஆ செய்வோம்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

வெள்ளி, 3 டிசம்பர், 2010

இறைவழியில் தியாகப்பயணம்[பாகம்1] ...[மறுபதிப்பு]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அகிலத்திற்கோர் அருட்கொடையாம் அண்ணல்நபி[ஸல்]அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை அன்றைய அறியாமைக்கால மக்களிடம் எடுத்தியம்பியபோது பல்வேறு ஏச்சுக்களும்,பேச்சுக்களும், எள்ளிநகையாடல்களும்தான் பதிலாக பரிசாக கிடைத்தது. நாளடைவில் அல்லாஹ்வின் அருளால் சிறுக சிறுக மக்கள் தூய இஸ்லாத்தை தழுவியபோது,அன்றைய குறைசிகளும், ஏனைய இறைமறுப்பாளர்களும் முஸ்லிம்களை சொல்லொணா துன்பத்திற்கு உள்ளாக்கினர்.

இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்திற்காக அருமை பிலால்[ரலி],அம்மார்[ரலி],யாசிர்[ரலி] உள்ளிட்ட சகாபாக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள். உச்சகட்டமாக யாசிர்[ரலி] சுமைய்யா[ரலி] உள்ளிட்ட சகாபாக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக தங்கள் இன்னுயிரையும் இழக்கும் நிலை ஏற்ப்பட்டது.

இப்படிப்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில்தான் நபித்துவத்தின் நான்காம் ஆண்டு நடுவில் அல்லது இறுதியில் முஸ்லிம்கள் மீது நிராகரிப்பவர்கள் வரம்பு மீற ஆரம்பித்தனர். தொடக்கத்தில் குறைவாகத் தென்பட்ட துன்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றன. ஐந்தாம் ஆண்டின் நடுவில் சோதனைகள் மலையாக உருவெடுக்கவே அதிலிருந்து விடுதலைபெற வழி என்ன என்று சிந்திக்கத் தொடங்கினார்கள். இச்சூழ்நிலையில்தான்

قُلْ يَا عِبَادِ الَّذِينَ آمَنُوا اتَّقُوا رَبَّكُمْ لِلَّذِينَ أَحْسَنُوا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةٌ وَأَرْضُ اللَّهِ وَاسِعَةٌ إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُم بِغَيْرِ حِسَابٍ
(நபியே!) நீர் கூறும்; "ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் - அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள். (அல்குர்ஆன் 39:10) என்ற வசனம் இறங்கியது.

நபியவர்களின்கட்டளை;

ஹபஷாவின் மன்னராக இருந்த 'அஸ்மஹா நஜ்ஜாஷி நீதமானவர். அவர் யாருக்கும் அநியாயம் இழைக்கமாட்டார் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். எனவே, உயிரையும் மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செய்யுமாறு முஸ்லிம்களை நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி நபித்தோழர்களின் ஒரு குழுவினர் முதலாவதாக ஹபஷாவிற்கு நாடு துறந்து செல்ல இருந்தார்கள். இதனை குறைஷிகள் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக இரவின் நடுநிசியில் புறப்பட்டு 'ஷ{அய்பா துறைமுகத்தை அடைந்தனர். வியாபாரக் கப்பல்கள் இரண்டு அங்கு முகாமிட்டிருந்தன. எப்படியோ மோப்பம் பிடித்த குறைஷிகள், இவர்களைத் தேடி அந்த துறைமுகத்திற்கு வந்துவிட்டார்கள். அதற்குள் முஸ்லிம்கள் வியாபாரக் கப்பல்களில் ஏறி ஹபஷாவுக்கு புறப்பட்டு விட்டார்கள். இதனால் குறைஷிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

நாடு துறந்து சென்ற குழுவில் பன்னிரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் இருந்தனர். அவர்களுக்கு தலைவராக உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) இருந்தார்கள். இப்பயணத்தில் அவர்களின் மனைவியான (நபி (ஸல்) அவர்களின் மகள்) ருகையாவும் (ரழி) உடன் இருந்தார்கள். நபி இப்றாஹீம் (அலை), நபி லூத் (அலை) ஆகிய இருவருக்குப் பின் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரா செய்த முதல் குடும்பம் இதுதான்" என்று இவ்விருவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம்கள் ஹபஷாவில் வாழ்வை நிம்மதியாகக் கழித்தார்கள். இது நபித்துவம் பெற்ற ஐந்தாம் ஆண்டின் ரஜப் மாதத்தில் நடைபெற்றது. (ஜாதுல் மஆது)

இந்நிலையில்,குறைசிகள் முஸ்லிமாகி விட்டனர் என்ற தவறான தகவல் அபிசீனியாவில் உள்ள முஸ்லிம்களிடம் பரவ அதனால் அதே ஆண்டு ஷவ்வால் மாதத்தில் அந்த முஸ்லிம்கள் மக்காவிற்குத் திரும்பினர். மக்காவிற்கு சற்று முன்னதாகவே உண்மை நிலவரம் முஸ்லிம்களுக்குத் தெரிய வந்தவுடன் சிலர் ஹபஷாவிற்கே திரும்பிவிட்டனர். சிலர் எவருக்கும் தெரியாமல் மக்காவிற்குள் சென்றுவிட்டனர். மற்றும் சிலர் குறைஷிகள் சிலர் பாதுகாப்பில் மக்காவிற்குள் நுழைந்தனர்.

மெல்ல மெல்ல குறைஷிகள் இவர்களையும் மற்ற முஸ்லிம்களையும் கடுமையாக வேதனை செய்தனர். அவர்களது நெருங்கிய உறவினர்களும் கூட அவர்களுக்குக் கொடுமை செய்தனர். இந்நிலையில் மறுமுறையும் ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செல்லுங்கள் என தங்களது தோழர்களுக்கு ஆலோசனை கூற வேண்டிய கட்டாயம் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது.

இரண்டாவது ஹிஜ்ரா;
முஸ்லிம்கள் பெருமளவில் ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செல்ல ஆயத்தமானார்கள். ஆனால் இந்த இரண்டாவது ஹிஜ்ரா முந்திய ஹிஜ்ராவை விட மிக சிரமமாகவே இருந்தது. முஸ்லிம்களின் இப்பயணத்தை குறைஷிகள் அறிந்து கொண்டதால் அத்திட்டத்தை அழிக்க வேண்டுமென்பதற்காக தீவிரமான முயற்சியில் இறங்கினர். ஆனால், அல்லாஹ்வின் அருளால் பயணம் அவர்களுக்குச் சாதகமாகி, நிராகரிப்பவர்கள் தங்களது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாகவே பயணத்தைத் துதப்படுத்தி ஹபஷா மன்னர் நஜ்ஜாஷியை அடைந்தனர்.
இம்முறை 83 ஆண்களும் 18 அல்லது 19 பெண்களும் ஹபஷா சென்றனர். (சிலர் அம்மார் (ரழி) இப்பயணத்தில் செல்லவில்லை. எனவே, ஆண்களில் 82 நபர்கள்தான் என்றும் கூறுகின்றனர்.) (ஜாதுல் மஆது)

குறைஷியர்களின் சூழ்ச்சி;
முஸ்லிம்கள் தங்களது உயிருக்கும் மார்க்கத்திற்கும் பாதுகாப்புள்ள இடமான ஹபஷாவில் நிம்மதியாக வசிப்பது இணைவைப்பவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவர்களில் நுண்ணறிவும், வீரமுமிக்க அம்ரு இப்னு ஆஸ், அப்துல்லாஹ் இப்னு அபி ரபீஆ ஆகிய இருவரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் நஜ்ஜாஷியையும் அவரது மத குருக்களையும் சந்தித்துப் பேசி, முஸ்லிம்களை நாடு கடத்தும்படி வேண்டுகோள் வைக்கும்போது அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு மதிப்புமிக்க வெகுமதிகளுடன் ஹபஷா அனுப்பி வைத்தனர்.

முதலில் அவ்விருவரும் மத குருக்களிடம் சென்று அவர்களுக்குரிய அன்பளிப்புகளை கொடுத்து முஸ்லிம்களை வெளியேற்றுவதற்காக தகுந்த காரணங்களைக் கூறினர். அந்த மத குருக்களும் அதனை ஏற்று, முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு நஜ்ஜாஷியிடம் ஆலோசனை கூறுவோம் என்று ஒப்புக் கொண்டனர். பிறகு அவ்விருவரும் நஜ்ஜாஷியிடம் வந்து அவருக்குரிய அன்பளிப்புகளைச் சமர்ப்பித்து அவரிடம் இது குறித்து பேசினர்.

'அரசே! தங்கள் நாட்டுக்கு சில அறிவற்ற வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்களது இனத்தவர்களின் மார்க்கத்தைவிட்டு வெளியேறிவிட்டனர். உங்களது மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் உங்களுக்கும் நமக்கும் தெரியாத ஒரு புதிய மார்க்கத்தை பின்பற்றுகின்றனர். இவர்களது இனத்திலுள்ளவர்கள் அதாவது இவ்வாலிபர்களின் பெற்றோர்கள், பெற்றோர்களின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள் அனைவரும் இவர்களை அழைத்து வருவதற்காக எங்களை இங்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் இவர்களை நன்கு கண்காணிப்பார்கள்பாதுகாப்பார்கள். அவர்களைப் பற்றி இவர்கள் கூறிய குறைகளை, நிந்தனைகளை அவர்களே நன்கறிந்தவர்கள். ஆகவே, நீங்கள் அவர்களை எங்களுடன் திருப்பி அனுப்பிவிடுங்கள்!" என்று கூறினர்.

 உடனே அங்கிருந்த மத குருக்களும் 'அரசே! இவ்விருவரும் உண்மைதான் கூறுகின்றனர். அவர்களை இவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்களது இனத்தவர்களிடம் இவர்கள் அவர்களை அழைத்து செல்வார்கள்" என்றனர்.
ஆனால், பிரச்சனையைத் தீர விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து நஜ்ஜாஷி முஸ்லிம்களை அவைக்கு வரவழைத்தார். எதுவாக இருப்பினும் உண்மையே சொல்ல வேண்டும் என்ற ஒரே முடிவில் முஸ்லிம்கள் அங்கு சென்றனர்.

முஸ்லிம்களிடம் 'உங்களது இனத்தை விட்டுப் பிரிந்து எனது மார்க்கத்தையும் மற்றவர்களின் மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் புதுமையான மார்க்கத்தை ஏற்றிருக்கிறீர்களே! அது என்ன மார்க்கம்?" என்று நஜ்ஜாஷி கேட்டார்.
முஸ்லிம்களின் பேச்சாளராக இருந்த ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரழி) பதில் கூறினார்கள்: '

அரசே! நாங்கள் அறியாமைக் காலத்தில் இருந்தோம். சிலைகளை வணங்கினோம். இறந்த பிராணிகளைச் சாப்பிட்டோம். மானக்கேடான காரியங்களைச் செய்தோம். உறவுகளைத் துண்டித்து அண்டை வீட்டாருக்கு கெடுதிகள் விளைவித்து வந்தோம். எங்களிலுள்ள எளியோரை வலியோர் விழுங்கி வந்தனர் (அழித்து வந்தனர்.) இப்படியே நாங்கள் வாழ்ந்து வரும்போதுதான் எங்களில் உள்ள ஒருவரையே அல்லாஹ் எங்களுக்குத் தூதராக அனுப்பினான்.

அவரது வமிசத்தையும், அவர் உண்மையாளர், நம்பகத்தன்மை மிக்கவர், மிக ஒழுக்கசீலர் என்பதையும் நாங்கள் நன்கு அறிவோம். நாங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். நாங்களும் எங்களது மூதாதையர்களும் வணங்கி வந்த கற்சிலைகள், புனித ஸ்தலங்கள் போன்றவற்றிலிருந்து நாங்கள் விலக வேண்டும். உண்மையே உரைக்க வேண்டும். அமானிதத்தை நிறைவேற்ற வேண்டும். உறவினர்களோடு சேர்ந்து வாழவேண்டும். அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் தடைசெய்தவற்றையும் கொலைக் குற்றங்களையும் விட்டு விலகிவிடவேண்டும் என அத்தூதர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.

மேலும் மானக்கேடானவைகள், பொய் பேசுதல், அனாதையின் சொத்தை அபகரித்தல், பத்தினியான பெண்கள்மீது அவதூறு போன்றவற்றிலிருந்து எங்களைத் தடுத்தார். அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு இணைவைக்கக் கூடாது தொழ வேண்டும். ஏழை வரி (ஜகாத்து) கொடுக்க வேண்டும். நோன்பு நோற்க வேண்டும் என்றும் அத்தூதர் எங்களுக்கு கட்டளையிட்டார் (ஜஅஃபர் இன்னும் பல இஸ்லாமிய கடமைகளைப் பற்றிய விவரங்களை கூறினார்.)

நாங்கள் அவரை உண்மையாளராக நம்பினோம். அவரை விசுவாசித்தோம். அவர் எங்களுக்கு அறிமுகப்படுத்திய அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றினோம். அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம். அவனுக்கு இணை வைப்பதை விட்டுவிட்டோம். அவன் எங்களுக்கு விலக்கியதிலிருந்து விலகிக் கொண்டோம். அவன் எங்களுக்கு ஆகுமாக்கியதை அப்படியே ஏற்றுக் கொண்டோம். இதனால் எங்களது இனத்தவர் எங்கள் மீது அத்துமீறினர். எங்களை வேதனை செய்தனர். அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்டு சிலைகளை வணங்க வேண்டும். முன்பு போலவே கெட்டவைகளைச் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தித்து எங்களை எங்களது மார்க்கத்திலிருந்து திருப்ப முயற்சித்தனர். எங்களை அடக்கி அநியாயம் செய்து நெருக்கடியை உண்டாக்கி எங்களது மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கும் மார்க்க(மத) சுதந்திரத்துக்கும் அவர்கள் தடையானபோது உங்களது நாட்டுக்கு நாங்கள் வந்தோம். உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். உங்களிடம் தங்குவதற்கு விருப்பப்பட்டோம். அரசே! எங்களுக்கு இங்கு அநீதி இழைக்கப்பட மாட்டாதென்று நம்புகிறோம்" என இவ்வாறு ஜஅஃபர் (ரழி) கூறி முடித்தார்.

'அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர் கொண்டு வந்த ஏதாவது உம்மிடம் இருக்கிறதா?" என்று ஜஅஃபடம் நஜ்ஜாஷி வினவினார். அதற்கு ஜஅஃபர் 'ஆம்! இருக்கின்றது" என்றார். நஜ்ஜாஷி, 'எங்கே எனக்கு அதை காட்டு" என்றார். காஃப்-ஹா-யா-ஐன்-ஸாத் எனத் தொடங்கும் 'மர்யம் எனும் அத்தியாயத்தின் முற்பகுதியை ஜஅஃபர் (ரழி) ஓதிக் காண்பித்தார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! தாடி நனையும் அளவு நஜ்ஜாஷி அழுதார். அவையில் உள்ளவர்களும் ஜஅஃபர் (ரழி) ஓதியதைக் கேட்டு தங்களின் கையிலுள்ள ஏடுகள் நனையுமளவு அழுதனர். பிறகு நஜ்ஜாஷி, இதுவும் நபி ஈஸா (அலை) கொண்டு வந்த மார்க்கமும் ஒரே மாடத்திலிருந்து வெளியானது
(முஸ்லிம்களை அழைக்க வந்த இருவரையும் நோக்கி) 'நீங்கள் இருவரும் சென்று விடுங்கள். உங்களிடம் நான் இவர்களை ஒப்படைக்கமாட்டேன்" என்று கூறினார்.

அவையில் இருந்த எவரும் அவ்விருவரிடமும் பேசுவதற்குத் தயாராகவில்லை.
அவ்விருவரும் வெளியேறி வந்தவுடன் அம்ர் இப்னு ஆஸ் தமது நண்பர் அப்துல்லாஹ் இப்னு அப+ரபீஆவிடம் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர்களை அடியோடு வேரறுப்பதற்குண்டான வேலையை நான் நாளை செய்வேன்" என்று கூறினார். 'ஆனால் அப்படி செய்துவிடாதே! அவர்கள் நமக்கு மாறு செய்தாலும் நமது இரத்த பந்தங்களே ஆவார்கள்" என்று அப்துல்லாஹ் கூறினார். ஆனால், அம்ரு தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

மறுநாள் அம்ரு நஜ்ஜாஷியிடம் வந்து 'அரசே! இவர்கள் ஈஸாவின் விஷயத்தில் அபாண்டமான வார்த்தையை கூறுகிறார்கள்" என்று கூறினார். 'அப்படியா! அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்" என்றார் நஜ்ஜாஷி. இதை அறிந்தவுடன் சற்று பயமேற்பட்டாலும் உண்மையே சொல்ல வேண்டும் என்ற முடிவுடன் முஸ்லிம்கள் அவைக்கு வந்தனர். நஜ்ஜாஷி அவர்களிடம் அது பற்றி விசாரணை செய்தார்.

'எங்களது நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கூறியதைத்தான் நாம் அவர் விஷயத்தில் கூறுகிறோம்: அவர் அல்லாஹ்வின் அடிமை அவனது தூதர். அவனால் உயிர் ஊதப்பட்டவர். கண்ணியமிக்க கன்னிப்பெண் மர்யமுக்கு அல்லாஹ்வின் சொல்லால் பிறந்தவர்" என்று ஜஅஃபர் (ரழி) கூறினார்.
நஜ்ஜாஷி கீழேயிருந்து ஒரு குச்சியை எடுத்து 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! மர்யமின் மகன் ஈஸா (அலை) இக்குச்சியின் அளவுகூட நீ கூறியதைவிட அதிகமாக கூறியதில்லை" என்றார். இதைக் கேட்ட அவரது மத குருமார்கள் முகம் சுழித்தனர். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் முகம் சுழித்தாலும் இதுவே உண்மை" என்று நஜ்ஜாஷி கூறிவிட்டார்.

பிறகு நஜ்ஜாஷி முஸ்லிம்களை நோக்கி 'நீங்கள் செல்லலாம்! எனது பூமியில் நீங்கள் முழு பாதுகாப்புப் பெற்றவர்கள். உங்களை ஏசியவர் தண்டனைக்குரியவர். தங்கத்தின் மலையை எனக்கு கொடுத்தாலும் உங்களைத் துன்புறுத்த நான் விரும்பமாட்டேன்" என்று கூறினார். தனது அவையில் உள்ளவர்களிடம் அவ்விருவர்கள் கொண்டு வந்த அன்பளிப்புகளை அவர்களிடமே திரும்ப கொடுத்து விடுங்கள். எனக்கு அதில் எவ்வித தேவையும் இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் முன்னர் பறிபோன எனது ஆட்சியை எனக்கு மீட்டுத் தந்தபோது என்னிடமிருந்து அவன் லஞ்சம் வாங்கவில்லை. எனவே, நான் அவன் விஷயத்தில் லஞ்சம் வாங்குவேனா? எனக்கு எதிராக அல்லாஹ் கிளர்ச்சியாளர்களுக்கு உதவாதபோது அவனுக்கு எதிராக நான் பிரச்சனையாளர்களுக்கு உதவுவேனா? (எனக்கு எதிராக என் எதிரிகளுக்கு அவன் உதவி செய்யாதபோது அவனுக்கு எதிராக நான் அவனது எதிரிகளுக்கு உதவி செய்வேனா?)" என்று கூறினார்.


இச்சம்பவத்தை அறிவிக்கும் உம்மு ஸலமா (ரழி) கூறுவதாவது: அவ்விருவரும் அங்கிருந்து கேவலப்பட்டு வெளியேறினர். அவர்களது அன்பளிப்புகளும் திரும்ப கொடுக்கப்பட்டன. நாங்கள் சிறந்த நாட்டில் சிறந்த தோழமையில் அவரிடம் தங்கியிருந்தோம். (இப்னு ஹிஷாம்)

தொடரும்...


இறைவழியில் தியாகப்பயணம்.[பாகம்2] ...[மறுபதிப்பு]

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.
முதல் பாகத்தில் சத்திய சகாபாக்கள்  அபிசீணியாநோக்கி தியாகப்பயணம் மேற்கொண்டதை அறிந்தோம். இந்த கட்டுரையில் இஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்ப்படுத்திய மதீனா ஹிஜ்ரத் பயணம் பற்றி சில முக்கிய விசயங்களை அறிந்துகொள்வோம்.

ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செய்த முஸ்லிம்களைத் திரும்பக் கொண்டு வருவதில் தோல்வியுற்ற இணைவைப்பவர்கள் கடுங்கோபத்தாலும் குரோதத்தாலும் பொங்கி எழுந்தனர். மக்காவில் மீதமிருந்த முஸ்லிம்களின் மீது தங்களது அட்யூழியங்களைக் கட்டவிழ்த்து விட்டதுடன் நபி (ஸல்) அவர்களுக்கும் கெடுதிகள் பல செய்யத் துவங்கினர். அவர்களின் செயல்பாடுகளைக் கவனிக்கும்போது அவர்களின் எண்ணப்படி இக்குழப்பத்திற்கு வேராக இருந்த நபி (ஸல்) அவர்களை ஒழித்துக் கட்டவே அவர்கள் முயற்சி செய்தனர் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.


ஹிஜ்ரா செய்தவர்கள் போக மக்காவில் முஸ்லிம்கள் மிகக் குறைவாகவே எஞ்சி இருந்தார்கள். அவர்களில் சிலர் சரியான பக்க பலத்துடனும் கோத்திர பாதுகாப்புடனும் இருந்தார்கள். மற்றும் சில முஸ்லிம்கள் சிலரின் அடைக்கலத்திலும் பாதுகாப்பிலும் இருந்தனர். ஆனால், எவரும் தங்களது இஸ்லாமை வெளிப்படுத்தாமல் மறைத்தும், வம்பர்களின் கண்களிலிருந்து முடிந்த அளவு மறைந்தும் ஒதுங்கியும் வாழ்ந்தனர். இவர்கள் எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்த போதிலும் நிராகரிப்பவர்களின் தொந்தரவிலிருந்து முழுமையாகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.

இந்நிலையில்தான் அல்லாஹ்,
فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ
ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!15:94என்ற வசனத்தை இறக்கியவுடன்
நபியவர்கள் தன்னுடைய பிரச்சாரத்தை வெளிப்படையாக செய்ய ஆரம்பித்தவுடன் நபியவர்களுக்கும்,ஏனைய சகாபாக்களுக்கும் பல்வேறு இன்னல்களை மக்கத்து குறைசிகள் தந்தார்கள் ஒருகட்டத்தில் குறைசிகளின் தொந்தரவால் அபூபக்கர்[ரலி]அவர்கள் ஹபஷாவை நோக்கி ஹிஜ்ரத் செய்ய தீர்மானித்தார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;

எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாகவே என் பெற்றோர் முஸ்லிம்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் பகலின் இரண்டு ஓரங்களான காலையிலும் மாலையிலும் எங்களிடம் வராமல் ஒரு நாளும் கழிந்தது இல்லை. முஸ்லிம்கள் (எதிரிகளின் கொடுமைகளால்) சோதனைக் குள்ளாக்கப்பட்டபோது, அபூ பக்ர்(ரலி) தாயகம் துறந்து அபிஸினியாவை நோக்கி சென்றார்கள். 'பர்குல் ஃம்மாத்' எனும் இடத்தை அவர்கள் அடைந்தபோது அப்பகுதியின் தலைவர் இப்னு தம்னா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களிடம், 'எங்கே செல்கிறீர்?' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி) 'என் சமுதாயத்தவர் என்னை வெளியேற்றிவிட்டனர்; எனவே பூமியில் பயணம் (செய்து வேறுபகுதிக்குச்) சென்று என் இறைவனை வணங்கப் போகிறேன்! என்று கூறினார்கள். அதற்கு இப்னு தம்னா, 'உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது' வெளியேற்றப்படவும் கூடாது; வெளியேற்றப்படவும்கூடாது! ஏனெனில் நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர்; உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்; பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர்; விருத்தினர்களை உபசரிக்கிறீர். எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன்! எனவே, திரும்பி உம்முடைய ஊருக்குச் சென்று இறைவனை வணங்குவீராக!' எனக் கூறினார்.
[ஹதீஸ் சுருக்கம்,நூல்;புஹாரி,எண் 2297 ]

இதற்கிடையில் நபியவர்கள் தாயிப் போன்ற சுற்றுப்புறங்களில் தன்னுடைய அழைப்புப்பணியை விரிவுபடுத்தியதோடு,ஹஜ்ஜுடைய காலம் நெருங்கியபோது மக்கள் அனைவரும் பல திசைகளிலிருந்து ஹஜ்ஜு கடமையை நிறைவேற்றுவதற்காக மக்காவிற்கு வந்த வண்ணமிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு கோத்திரத்திற்கும் சென்று அவர்களுக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்தி, அதன்பக்கம் அழைப்புக் கொடுத்தார்கள்.

நபித்துவத்தின் நான்காவது ஆண்டிலிருந்து இப்படித்தான் அம்மக்களை இஸ்லாமின் பக்கம் அழைத்து வந்தார்கள். ஆனால், இந்த பத்தாவது ஆண்டு மேலும் ஒரு கோரிக்கையையும் அவர்களுக்கு முன் வைத்தார்கள். அதாவது, நான் அல்லாஹ்வின் மார்க்கத்தை எடுத்து வைப்பதற்கு எனக்கு இடம் கொடுத்து உதவி செய்து எதிரிகளிடமிருந்து எனக்கு பாதுகாப்பு அளியுங்கள் என்று அம்மக்களிடம் கேட்டுக்கொண்டார்கள்.

அடுத்து நபி (ஸல்) மினாவில் அகபா என்ற இடத்திற்கு சென்றபோது அங்கு சில ஆண்களின் பேச்சுக் குரல் கேட்டவுடன் அவர்களிடம் சென்று பேச விரும்பினார்கள். அவர்கள் கஸ்ரஜ் கிளையாரைச் சேர்ந்த மதீனாவில் உள்ள ஆறு இளைஞர்களாவர்.
அவர்கள்,
1) அஸ்அது இப்னு ஜுராரா (நஜ்ஜார் குடும்பம்)
2) அவ்ஃப் இப்னு ஹாரிஸ் (நஜ்ஜார் குடும்பம்)
3) ராஃபிஃ இப்னு மாலிக் (ஜுரைக் குடும்பம்)
4) குத்பா இப்னு ஆமிர் இப்னு ஹதீதா (ஸலமா குடும்பம்)
5) உக்பா இப்னு ஆமிர் இப்னு நாபி (ஹராம் இப்னு கஅப் குடும்பம்)
6) ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஆப் (உபைத் இப்னு கனம் குடும்பம்)

மதீனாவாசிகளுக்கும் யூதர்களுக்கும் சண்டை மூளும்போது 'கடைசி காலத்தில் ஒரு நபி வருவார். அவருடன் சேர்ந்து நாங்கள் உங்களைக் கடுமையாகக் கொலை செய்வோம்" என்று அந்த யூதர்கள் மதீனாவாசிகளைப் பார்த்துக் கூறுவார்கள். இவ்வாறு யூதர்கள் கூறுவதை பலமுறை மதீனாவாசிகள் கேட்டிருந்தனர். எனவே, இப்போது நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்தியபோது அவர்களை அறிந்து கொள்வது மதீனாவாசிகளுக்கு மிக எளிதாக இருந்தது. (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

இவர்கள் மதீனாவுக்கு இஸ்லாமிய அழைப்பை எடுத்துச் சென்றார்கள். அங்கு மதீனாவாசிகள் ஒவ்வொருவரின் வீட்டிலும் நபி (ஸல்) அவர்கள் பற்றியே பேசப்பட்டது. (இப்னு ஹிஷாம்)

இதை அடுத்து நபித்துவத்தின் பனிரெண்டாம் ஆண்டு ஹஜ் காலத்தில் (கி.பி. 621 ஜூலையில்) மதீனாவிலிருந்து நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் (பைஆ) செய்வதற்காக 15 நபர்கள் வந்திருந்தனர். முந்தைய ஆண்டு வந்த ஆறு நபர்களில் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஆபைத் தவிர மற்ற ஐந்து பேர்களும், அவர்களுடன் புதிதாக ஏழு நபர்களும் இச்சமயம் வந்திருந்தனர். அந்த ஏழு நபர்களில் முந்திய ஐந்து பேர் கஸ்ரஜ் கிளையையும் பிந்திய இருவர் அவ்ஸ் கிளையையும் சேர்ந்தவர்கள்.
1) முஆத் இப்னு ஹாரிஸ் (ரழி) - நஜ்ஜார் குடும்பம்.
2) தக்வான் இப்னு அப்துல் கைஸ் (ரழி) - ஜுரைக் குடும்பம்.
3) உபாதா இப்னு ஸாமித் (ரழி) - கன்ம் குடும்பம்.
4) யஜீது இப்னு ஸஃலபா (ரழி) -கன்ம் குடும்ப நண்பர்களில் ஒருவர்.
5) அப்பாஸ் இப்னு உபாதா இப்னு நழ்லா (ரழி) - ஸாலிம் குடும்பம்.
6) அபுல் ஹைஸம் இப்னு தய்ம்ஹான் (ரழி) -அப்துல் அஷ்ஹல் குடும்பம்.
7) உவைம் இப்னு ஸாம்தா (ரழி) - அம்ர் இப்னு அவ்ஃப் குடும்பம்.
இவர்கள் அனைவரும் மினாவில் அகபா என்ற இடத்திற்கு அருகில் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்தார்கள். (இப்னு ஹிஷாம்)

நபியவர்களிடம் பைஅத் செய்த மேற்கண்டவர்களோடு நபி (ஸல்) தனது முதல் இஸ்லாமிய அழைப்பாளரை மதீனாவிற்கு அனுப்பினார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்புவதற்கும் மார்க்க ஞானங்களை கற்றுக் கொடுப்பதற்காகவும் இந்த அழைப்பாளர் அனுப்பப்பட்டார். இப்பணிக்காக முதலாவதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவரான முஸ்அப் இப்னு உமைர் (ரழி) என்ற வாலிபரை நபி (ஸல்) தேர்ந்தெடுத்தார்கள். இந்தசகாபிதான் முதன்முதலில் மதினாவில் கால்வைத்த முஹாஜிர் ஆவார்.

இப்படி நபியவர்களின் அசுரவளர்ச்சியை பொறுக்கமுடியாத குறைஷிகள் உச்சகட்டமாக நபியவர்களை கொலைசெய்வது என தீர்மானித்தார்கள்.இதற்காக அபூஜஹ்ல்   உள்ளிட்ட குறைஷிகளின் முக்கியப்பிரமுகர்களின் ஆலோசனைக்கூட்டத்தில் அபூஜஹ்ல்,

'அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் ஒரு யோசனை இருக்கின்றது. அது உங்களுக்குத் தோன்றியிருக்காது" என்று அபூஜஹ்ல் கூற, 'அபுல் ஹிகமே! அது என்ன யோசனை" என்றனர் மக்கள். அதற்கு அபூஜஹ்ல் 'நாம் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் நல்ல வீரமிக்க, குடும்பத்தில் சிறந்த, ஒரு வாலிபரைத் தேர்வு செய்து, ஒவ்வொரு வாலிபனுக்கும் மிகக் கூர்மையான வாள் ஒன்றையும் கொடுப்போம். அவர்கள் அனைவருமாக சேர்ந்து அவரை ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கொன்றுவிடட்டும். அவர் இறந்துவிட்டால் நாம் நிம்மதி பெருமூச்சு விடலாம். கொலை செய்தவர்கள் பல கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவரது உறவினர்களான அப்து மனாஃப் கிளையினர் பழிக்கு யாரையும் கொல்ல முடியாது. முழு அரபு சமுதாயத்தினரையும் பகைத்துக் கொண்டு அப்து மனாஃப் கிளையினர் நம்மீது போர் தொடுக்க முடியாது. எனவே, கொலைக்குப் பகரமாக அபராதத் தொகையை நிர்பந்தமாக ஏற்றுக் கொள்வார்கள். நாமும் அவர்களுக்கு அந்த அபராதத்தைக் கொடுத்து விடலாம்" என்று அரக்கன் அபூஜஹ்ல் கூறிமுடித்தான்.
நஜ்து தேச அயோக்கியக் கிழவன் (அவன்தான் இப்லீஸ்) இதைக் கேட்டுவிட்டு 'ஆஹா! இதல்லவா யோசனை! இதுதான் சரியான யோசனை! இதைத் தவிர வேறெதுவும் சரியான யோசனையல்ல" என்று கூறினான். (இப்னு ஹிஷாம்)


மதீனா ஹிஜ்ரத்திற்கான அல்லாஹ்வின் அனுமதி;


குறைஷிகளின் சதித்திட்டத்தை நபி (ஸல்) அவர்களிடம் அறிவிப்பதற்காக அல்லாஹ்வின் புறத்திலிருந்து வானவர் ஜிப்ரீல் இறங்கி வந்தார். 'நீங்கள் ஹிஜ்ரா செய்ய அல்லாஹ் அனுமதி கொடுத்து விட்டான். அதற்குரிய நேரத்தையும் நிர்ணயம் செய்துள்ளான். குறைஷிகளின் இத்திட்டத்தை முறியடிப்பதற்குரிய வழியையும் தெளிவுபடுத்தி இருக்கின்றான். எனவே, இன்று இரவு நீங்கள் வழக்கமாக தூங்கும் விரிப்பில் தூங்க வேண்டாம்" என்று வானவர் ஜிப்ரீல் கூறினார். (இப்னு ஹிஷாம்)


அபூபக்கர்[ரலி]அவர்களுடன் நபிகளார் ஆலோசனை;


ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;  நபி(ஸல்) அவர்கள் (மக்காவில் இருந்த காலத்தில்) காலையிலோ மாலையிலோ என் தந்தை அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டிற்கு வராமல் இருந்த நாள்கள் மிகக் குறைவாகவே இருக்கும்! மதீனாவிற்கு (ஹிஜ்ரத் செய்து) புறப்பட நபி(ஸல்) அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டபோது, நண்பகலில் நபி(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. நபி(ஸல்) அவர்கள் வந்திருக்கும் விஷயம் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அபூ பக்ர்(ரலி) 'புதிதாக ஏதோ பிரச்சினை ஏற்பட்டிருப்பதால் தான், இந்நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் நம்மிடம் வந்திருக்கிறார்கள்!" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்ததும், 'உங்களுடன் இருப்பவர்களை வெளியேற்றுங்கள்!" என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அஸ்மா, ஆயிஷா ஆகிய என்னுடைய இரண்டு புதல்வியர் மட்டுமே உள்ளனர்!" என்று அபூ பக்ர்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(மதீனாவிற்குப்) புறப்பட (ஹிஜ்ரத் செய்ய) எனக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது உமக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! '(தாங்கள் புறப்படும் (ஹிஜ்ரத்தின்)போது நானும் தங்களுடன் வர விரும்புகிறேன்!" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் என்னுடன் வருதை நானும் விரும்புகிறேன்!" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் என்னுடன் வருவதை நானும் விரும்புகிறேன்!" என்றார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நான் பயணத்திற்காகத் தயார்படுத்தி வைத்திருக்கும் இரண்டு ஒட்டகங்கள் என்னிடம் உள்ளன் அவற்றில் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்!' எனக் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அதை நான் விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்!" என்றார்கள்.
நூல்;புஹாரி,எண் 2138


தனது தோழருடன் தியாகப்பயணத்தை தொடங்கிவிட்ட நபி[ஸல்];


ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்; (மக்காவைத் துறந்து, ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்குச் சென்ற போது) நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் பனூ அப்து இப்னு அதீ குலத்தைச் சேர்ந்த ஒருவரை (வழிகாட்டியாகக்) கூலிக்கு அமர்த்தினார்கள். அவர் தேர்ந்த வழிகாட்டியாக இருந்தார். அம்மனிதர் ஆஸ்பின் வாயிலின் குடும்பத்தாரிடம் உடன்படிக்கை செய்திருந்தார். மேலும், அவர் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் மார்க்கத்தில் இருந்தார். நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் அவரை நம்பித் தம் ஒட்டகங்களை அவரிடம் ஒப்படைத்து, மூன்று நாள்கள் கழித்து ஸவ்ர் குகையில் வந்து சேரும்படி கூறினார்கள். அம்மனிதர் மூன்றாம் நாள் காலையில் ஒட்டகங்களுடன் அவர்களிடம் வந்தார். உடனே, நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் (மதீனாவை நோக்கிப்) புறப்பட்டார்கள். அவர்களுடன் ஆமிர் இப்னு ஃபுஹைரா என்பாரும் சேர்ந்து கொண்டார். பனூதீல் கூட்டத்தைச் சேர்ந்த அந்த வழிகாட்டி அம்மூவரையும் மக்காவிற்குக் கீழே கடற்கரை வழியாக அழைத்துச் சென்றார்.
நூல்;புஹாரி,எண் 2263


பயனத்திபோது நபியவர்கள் பட்ட கஷ்டங்களும், மதினாவில் நடந்த முக்கிய நிகழ்வுகளும் ...
தொடரும்....

இறைவழியில் தியாகப்பயணம்[பாகம்3]...[மறுபதிப்பு]


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


தனது ஆருயிர் தோழர் அபூபக்கர்[ரலி] அவர்களுடனும், ஆமிர் இப்னு ஃபுஹைரா[ரலி]  அவர்கள் சகிதமாக அருள்செய்யப்பட்ட மதினா நோக்கி நபியவர்கள் பயணப்பட்ட செய்தி மக்கத்து குறைஷிகளுக்கு எட்டியது.இதற்கிடையில் நபி[ஸல்]அவர்களும், அபூபக்கர்[ரலி] அவர்களும் ஸவ்ர் என்ற குகையை அடைந்துவிட்டனர் அந்த குகையில் நபியவர்கள் ஓய்வெடுப்பதற்காக அபூபக்கர்[ரலி] சுத்தம் செய்திட அபூபக்கர்[ரலி] அவர்களின் மடிமீது தலைவைத்து மாநபி[ஸல்]அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். மறுபுறம் குறைஷிகள் முஹம்மது விசயத்தில் நாம் தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறோமே என மனம் புழுங்கி அவசர ஆலோசனை நடத்துகிறார்கள்.

ஆலோசனை முடிவில்,
'நபி (ஸல்) அபுபக்ர் (ரழி) இவ்விருவரில் ஒவ்வொருவரின் தலைக்கும் நூறு ஒட்டகங்கள் பரிசாக அளிக்கப்படும் இவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ யார் மக்காவிற்கு கொண்டு வருகிறார்களோ அவர் யாராக இருப்பினும் சரிஅவருக்கு இந்தப் பரிசுஉண்டு" என்று பொது அறிவிப்பு செய்தனர். (ஸஹீஹுல் புகாரி).

எதிரிகள் நபி (ஸல்) அவர்களைத் தேடி அலைந்து அவர்கள் தங்கியிருந்த குகைவாசலை வந்தடைந்தனர். அபூபக்ர் (ரழி) கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுடன் குகையில் தங்கியிருந்தபோது எனது தலையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது எதிரிகளின் பாதங்கள் தெரிந்தன. நான் அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் யாராவது தங்களது பார்வையைத் தாழ்த்தினால் நம்மை பார்த்துவிடுவார்களே" என்று கூறினேன். நபி (ஸல்) 'அபூபக்ரே! சும்மா இருங்கள். நம் இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கின்றான்." என்று கூறினார்கள்.(ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய அல்லாஹ் மாபெரும் அற்புதமாகும் இது. சில எட்டுகளே நபி (ஸல்) அவர்களுக்கும் எதிரிகளுக்கும் இருந்தன. எனினும், தேடி வந்தவர்களால் நபி (ஸல்) அவர்களையும், அவர்களுடைய தோழரையும் பார்க்க முடியாமல் திரும்பிவிட்டனர்.

நபியவர்களும், அபூபக்கர்[ரலி]அவர்களும், ஸவ்ர் குகையிலிருந்து வெளியேறி வழிகாட்டியின் வழிகாட்டுதல்படி மதினா நோக்கி சென்று கொண்டிருக்கையில், அபூபக்கர்[ரலி] அவர்களை அறிந்திருந்த, நபியவர்களை அறிந்திராத சிலர் அபூபக்கர்[ரலி]இடம் நபியவர்களை காட்டி, யார் இவர் என வினவ இக்கட்டான சூழ்நிலையில் அதே நேரத்தில் பொய்யுரைக்காமல் அபூபக்கர்[ரலி] அவர்கள், இவர்கள்[நபி ஸல்]எனது வழிகாட்டி என்றார்கள். கேட்டவர்களோ எதோ பாதை காட்டுபவர் போலும் என எண்ணி சென்றுவிட்டனர்.[புஹாரி]

மேலும்,குறைஷிகளின் பரிசுக்கு ஆசைப்பட்ட சுரக்கா இப்னு மாலிக் என்பவர் நபியவர்களை பிடிக்கும் நோக்கில், நபியவர்கள் பயணித்த திசையை அறிந்து நபியவர்களை நெருங்கும் வேளையில், நடந்த விஷயத்தை சுரக்கா இப்னுமாலிக் வார்த்தையிலேயே  கேளுங்கள்;

நபி (ஸல்) அவர்களுக்கு நெருக்கத்தில் வந்தவுடன் எனது குதிரை தடுமாறவே நான் குதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டேன். பின்பு எழுந்து, எனது அம்புக் கூட்டிலிருந்து நான் அவர்களுக்குத் தீங்கு செய்யட்டுமா? வேண்டாமா? என்று குறிபார்க்கும் எண்ணத்தில் ஓர் அம்பை எடுத்தபோது 'வேண்டாம்" என்ற அம்பு வந்தது. அதில் எனக்கு திருப்தி ஏற்படாததால் மீண்டும் குதிரையில் ஏறி அவர்களை நெருங்க ஆரம்பித்தேன். நபி (ஸல்) ஓதும் சப்தத்தை கேட்கும் அளவிற்கு நான் அவர்களை நெருங்கி விட்டேன். நபி (ஸல்) திரும்பி பார்க்காமல் சென்றார்கள். ஆனால், அபூபக்ரோஅதிகம் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்கள். அப்போது எனது குதிரையின் முன்னங்கால்கள் முழங்கால் வரை பூமியில் புதைந்து கொண்டன. நான் குதிரையிலிருந்து கீழே விழுந்தேன்.

பின்பு எழுந்து, எனது குதிரையை விரட்டவே, அது மிகச் சிரமத்துடன் கால்களை வெளியே எடுத்தது. அது நேராக நின்றவுடன் வானத்திலிருந்து புகை போன்று வந்த ஒரு புழுதி அதன் முன்னங்கால்களில் காயத்தை ஏற்படுத்தியது. நான் என்ன செய்யலாம் என்று குறிபார்க்க அம்பை எடுத்தபோது எனக்குப் பிடிக்காத அம்பே இப்போதும் வந்தது. நான் அவர்களை எனக்கு பாதுகாப்புத் தரக்கோரி கூவி அழைத்தேன். எனது சப்தத்தைக் கேட்டு அவர்கள் நின்று விட்டார்கள். நான் குதிரையில் ஏறி அவர்களிடம் வந்தேன். நான் அவர்களை நெருங்குவதற்கு தடை ஏற்படுவதிலிருந்தே நிச்சயமாக நபி (ஸல்) அவர்களின் மார்க்கம் மிகைத்தே தீரும் என்று உறுதிகொண்டேன்.

நபி (ஸல்) அவர்களிடம் 'உங்களது கூட்டத்தினர் உங்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குச் சன்மானம் உண்டு என அறிவிப்புச் செய்திருக்கிறார்கள். எனவே, மக்கள் உங்களை பிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற வெறியில் உள்ளனர்" என்று கூறினேன். நான் அவர்களிடம் என்னிடம் இருந்த பிரயாண உணவையும், சாமான்களையும் அவர்கள் எடுத்துக் கொள்வதற்காக அவர்கள் முன் வைத்தேன். ஆனால், அவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. மேற்கொண்டு என்னிடம் எதுவும் விசாரிக்கவும் இல்லை. இருப்பினும் 'எங்களின் செய்திகளை மறைத்துவிடு" என்று மட்டும் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் எனக்காக பாதுகாப்புப் பத்திரம் ஒன்று கொடுக்குமாறு கூறினேன். நபி (ஸல்) ஆமிர் இப்னு புஹைராவிடம் கூறவே அவர் எனக்கு சிறிய துண்டுத் தோலில் எழுதிக் கொடுத்தார். பின்பு நபி (ஸல்) சென்று விட்டார்கள். ( புகாரி)

இவ்வாறாக பல்வேறு சோதனைகளை இறைவனின் அற்புதத்தால் வென்று நபியவர்களும் அபூபக்கர்[ரலி] அவர்களும் புனித மதினாவில் பாதம் பதித்தனர். நபியவர்களை கண்ட மதினத்து பெருமக்கள் மட்டில்லா ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்கள்;

நபி(ஸல்) அவர்கள(து வருகைய)ால், மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை நான் கண்டதில்லை. எந்த அளவிற்கென்றால், (மதீனாவிலுள்ள) சிறுமியரும் சிறுவர்களும், 'இதோ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள்' என்று கூறினர். நூல்;புஹாரி,எண் 4941

இவ்வாறாக நபியவர்களின் ஹிஜ்ரத்பயணம் அமைந்தது. மதினாவிற்கு முதன்முதலாக அழைப்பு பணிக்காக அனுப்பபட்ட முஸ்அப் இப்னு உமைர்[ரலி] அவர்களின் தியாத்தை இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்;

கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார்கள்;

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலனளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. அதன் (உலகப்) பலன்களில் எதையுமே அனுபவிக்காமல் சென்றுவிட்டவர்களும் எங்களிடையே உண்டு. முஸ்அப் இப்னு உமைர்(ரலி) அத்தகையவர்களில் ஒருவர் தாம். அவர் உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டார். அவரைக் கஃபனிடுவதற்கு (அவரின்) கோடிட்ட வண்ணத் துணி ஒன்றைத் தவிர வேறெதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தத் துணியினால் நாங்கள் அவரின் தலையை மூடியபோது அவரின் கால்கள் இரண்டும் வெளியே தெரியலாயின் அவரின் கால்கள் இரண்டையும் நாங்கள் மூடியபோது அவரின் தலை வெளியே தெரியலாயிற்று. எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்தத் துணியால் அவரின் தலையை மூடி விடும்படியும் அவரின் கால்கள் இரண்டின் மீதும் 'இத்கிர்' புல்லைச் சிறிது போட்டு (மறைத்து) விடும்படியும் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்ததற்கான இவ்வுலகப்) பலன் கனிந்து அதைப் பறித்து (சுவைத்து)க் கொண்டிருப்பவர்களும் எங்களில் உள்ளனர். நூல்;புஹாரி,எண் 3914

சத்திய மார்க்கத்திற்காக இம்மையை விற்று மறுமையை விலைக்கு வாங்கிய மாநபி[ஸல்] வழியிலும், மகத்தான சகாபாக்கள் வழியிலும் மறுமையை இலக்காகக்கொண்டு தொடரட்டும் நமது பயணம்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
                                                                                                                                    முற்றும்.