அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 1 ஜூன், 2012

புகை நமக்கு பகை!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ண்டு தோறும் (மே-31) உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலையை பயன்படுத்துவது நாகரீகத்தின் அடையாளமாக கருதும் அளவுக்கு பெரும்பாலானோரை அது ஆட்கொண்டுள்ளது. நவநாகரீக பெண்களையும் இப்பழக்கம் சுற்றி வளைத்துள்ளது. இந்த புகையிலை நாகரீக வளர்ச்சிக்கேற்ப பல்வேறு பரிமாணங்களில் தனது உயிர் கொல்லி வேலைகளை கச்சிதமாக செய்து வருகிறது. 

ஒரு காலத்தில் புகையிலையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்து, பின்பு சுருட்டாக, பின்பு பீடியாக சிகரெட்டாக, பான்பராக்காக, குட்காவாக, போதை தரும் பீடாக்களாக இவ்வாறான பல்வேறு முகங்கள் இந்த புகையிலைக்கு உண்டு. இதில் புகையிலையை, புகையிலையாக பீடாக்களாக பான்பராக்குகளாக பயன்படுத்துவதை பொருத்தமட்டில், யார் அதை உட்கொள்கிறாரோ அவரை மட்டுமே பாதிக்கும்.

ஆனால் புகைப்பதை பொருத்தமட்டில், புகைப்பவர் மட்டுமல்லாது அவருக்கு அருகாமையில் உள்ளவரையும் சேர்த்தே பாதிக்கும். புகை பிடிப்பவர் அருகே புகை பிடிக்காதவர் ஒருவர் இருந்தால், புகைப்பவர் விடும் புகையை இவர் சுவாசித்து, புகைக்காத மனிதருக்கும் நோய் வரும் நிலை. சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டு தோறும் சுமார் 6 லட்சம் பேர் பலியாகி வருவது தெரிய வந்துள்ளது. 

அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 30 சதவீதம் ஆண், பெண் அடங்குவர். மேலும் இதயநோயினால் 3 லட்சத்து 79 பேரும், 1 லட்சத்து 65 பேர் மூச்சு கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும், 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்துமாவினாலும், 21 ஆயிரத்து 400 பேர் நுரையீரல் புற்று நோயினாலும் ஆண்டு தோறும் மடிகின்றனர். புகையிலை பொருட்களில் சிகரெட் முதலிடத்தை வகிக்கிறது. 

* சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43 வேதிப் பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. 

* உலக அளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகைப்பிடிப்பதால் மரணத்தை தழுவுகிறார். 

* ஆண்டிற்கு 60 லட்சம் பேர் சிகரெட் உள்ளிட்ட புகையிலை தயாரிப்புகளால் உயிரை துறக்கின்றனர். 

* 2030-ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை ஒரு கோடியாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. 

* வளரும் நாடுகளை சார்ந்தோர் 70 சதவீதம் பேர் இதில் அடங்குவர். 

* 10 சிகரெட் பிடிப்பவர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சு பொருளை உட் கொண்டு வெளியிடுகிறார். இவரால் மனைவி, குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். 

* பியூட்டேன், காட்மியம், ஸ்டியரிக் ஆசிப், அம்மோனியா, நாப்தலமைன், போலோனியம் உள்பட வேதிப்பொருட்கள் சிகரெட் புகையில் உள்ளன. இவை வெடிகுண்டு, பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்க பயன்படுபவை. 

* புகை பழக்கம் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்றுநோய், சர்க்கரை, பக்கவாதம், தமனிச்சுருக்கம் குறிப்பாக கால், கை தமனிகள் அடைப்பு, ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. புகை பிடிப் போருக்கு மாரடைப்பால் இளவயதிலும் திடீர் மரணம் ஏற்படலாம். 

* இது இருதய துடிப்பை யும், ரத்த கொதிப்பையும் கூட்டுகிறது. மூக்குப்பொடி, புகையிலை உண்பது, பீடி புகைப்பதும், சிகரெட்டுக்கு சமமானதே. ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், வீரியக் குறையும் ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிப்போரின் குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுத்திணறல் ஏற்படலாம். 

* சிகரெட் போன்ற புகையிலை பொருளில் புற்றுநோயை உற்பத்தி செய்யும் நச்சுப்பொருட்கள் உள்ளன. இவை வாய், தொண்டை, மூச்சுக்குழாய், உணவுக்குழாய், சிறுநீரக பாதை வரை எங்கு வேண்டுமானாலும் புற்று நோயை ஏற்படுத்தும். 

* நுரையீரல் நோய், புற்று நோய் ஏற்பட காரணம் புகை பிடிப்பதே. 

* உலக மக்கள் தொகையில் ஆஸ்துமா 15 சதவீத மக்களையும், சி.ஓ.பி.டி. என்ற இளைப்பு நோய் 5 சதவீத மக்களையும் பாதித்துள்ளது. இதற்கு புகை பிடிப்பதும் காரணம். 

* சிகரெட் புகைப்பதால் நுரையீரல், 30 வயதில் 60 வயதுக்குரிய தன்மையுடன் செயல்படும். 

* புகையிலை தொடர்பான சிகரெட், பீடி போன்ற வற்றை வாங்க தினமும் குறைந்தது 20 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளதால், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. 

இத்தகைய தீங்களிக்கும் புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர் ஒரு முஸ்லிமாக இருந்தால் அவர் மற்றவருக்கு தீங்கை நாடுவதால் அவர் சிறந்த முஸ்லிமாக ஆகமாட்டார்.

நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
'பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்கள்.[நூல்;புஹாரி]

மேலும் ஒரு முஸ்லிம் எல்லாவகையிலும் நன்மையான விஷயங்களில் பிறருக்கு முன்னுதாரணமாக திகழவேண்டும். தீமையான விஷயத்தில் முன்னுதாரணமாக திகழக்கூடாது. புகைபிடிப்பவர்கள் தன்னுடைய வீட்டில் சர்வ சாதாரணமாக புகைப்பதால், இவரை பார்த்து இவரது பிள்ளைகளுக்கும் இந்த பழக்கம் தொற்றிக்கொள்கிறது. அதுபோல் இவரது நண்பர்கள் உறவினர்கள் சிலரும் புகைப்பதற்கு இவர் காரணியாக அமைந்துவிடுவார். ஒரு முஸ்லிமை பொறுத்தவரையில், ஒரு நன்மைக்கு வழிகாட்டினால் அந்த நன்மையை உலகம் அழியும்வரை யார் செய்தாலும் அதிலும் இவருக்கு ஒருபங்கு நன்மை கிடைக்கும். தீமைக்கு வழிகாட்டினால் உலகம் அழியும்வரை இவர் காட்டிய தீமையை யாரெல்லாம் செய்கிறார்களோ அதிலிருந்து ஒரு பங்கு இவருக்கு கிடைக்கும்.

பொருளாதார வீண் விரயங்கள்;
புகைப்பிடிக்கும் ஒருவர் தான் இந்த பாழாய்ப்போன புகைக்கு செலவிட்டதை ஒரு ஆண்டு சேமித்து வைத்து பார்ப்பாரானால், அவரே பிரமிக்கும் அளவுக்கு ஒரு தொகை விரயமானதை உணர்வார். இத்தகைய வீண் விரயங்களுக்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?

நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்; [மறுமையில்] அடியானின் பாதம் நகராது நான்கு கேள்விகளுக்கு பதிலளிக்காதவரை;
அதில் ஒன்றுதான் , எந்தவழியில் சம்பாதித்தாய்; எந்தவழியில் செலவழித்தாய்..? [திர்மிதி]


நாளை மறுமையில் அல்லாஹ் மேற்கண்ட கேள்வியை கேட்கும்போது, நாம் செலவு செய்த பட்டியலில் சிகரெட் மற்றும் புகையிலைக்காக அளித்த காசும் வருமே! அதற்கு என்ன பதில் சொல்லமுடியும்? சிகரட் பிடிப்பது மார்க்கத்தில் ஆகுமானது எனவே சிகரெட்டுக்காக செலவழித்தேன் என்று கூறமுடியுமா? அல்லது சிகரெட் பிடிப்பது உடம்புக்கு நல்லது எனவே சிகரெட்டுக்காக செலவழித்தேன் என்று கூறமுடியுமா? இந்த வீண் விரையத்திற்காக இறைவன் தரும் தண்டனையை தாங்க முடியுமா? சிந்திக்க வேண்டும்.

புகை பிடிப்பவர்கள் சைத்தானின் சகோதரர்கள்;
அல்லாஹ் கூறுகின்றான்;
நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். (17:27)

சிகரெட்டுக்காக செலவழிக்கும் பணத்தை ஒரு ஆண்டு நீங்கள் சேமித்தால் எத்துனை ஆயிரங்களை விரயமாக்கியிருக்கிறோம் என்று கணக்கிடமுடியும். ஒரு பாக்கெட் சிகரெட்டுக்காக செலவிடும் காசை ஒரு ஏழைக்கு தர்மம் செய்தால் உங்கள் செல்வமும் பெருகும். மறுமையில் நன்மையும் கிடைக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இறைவன் நமக்கு பகுத்தறிவை வழங்கியுள்ளான். காசையும் கொடுத்து கெடுதியை வாங்குவதுதான் பகுத்தறிவா என்று சிந்திக்க வேண்டும்.

அரசாங்கத்தின் கவனத்திற்கு;
ஒரு மக்கள் நலன் நாடும் அரசின் நோக்கம் அரசு கஜானாவை நிரப்புவதில் மாத்திரம் இருக்கக் கூடாது. மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். புகை- போதை ஆகியவற்றின் மூலம் மக்களை நாசமாக்கி, அவர்களின் பொருளாதரத்தை திருடும் அரசு, அந்தப்பணத்தில் இலவசங்களை அளிப்பதினால் எந்த புண்ணியமும் இல்லை. எனவே உணமியில் அரசுக்கு மக்கள் நலனில் அக்கறையிருக்குமானால், 'புகையிலை தொடர்பான அனைத்து பொருள்களும் விற்க தடை' என்று சட்டம் கொண்டுவரவேண்டும். அதைவிடுத்து, அரசின் வருமானத்திற்காக புகையிலையை அனுமதிப்பது; பிறகு அதை தடுக்க 'விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்வது , பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போன்றதாகும்.

கருத்துகள் இல்லை: