அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 8 மே, 2009

சிறுமைப்படுத்தி நரகில் தள்ளும் பெருமை!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
மனிதர்களில் சிலர் பெருமைக்காக வாழ்பவர்கள் உண்டு. இவர்கள் ஒரு சிறு துரும்பை அசைத்தாலும், அதை மலையளவில் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி பெருமைப்பட்டுக்கொள்வார்கள். இன்னும் சிலர் உண்மையிலேயே உதவும் உள்ளத்தோடு சில உதவிகளை சிலருக்கு செய்வார்கள்.இவர்கள் பெருமைக்காக செய்வதில்லை ஆனால், இவர்கள் செய்த உதவிகளை பெற்றுக்கொண்டவர்கள் அல்லது இவர்கள் செய்த உதவிகளை காணும் சிலர், இவர்களின் இந்த பணியை புகழ்ந்துரைக்கும்போது அவர்களின் உள்ளத்தில் பெருமை குடிகொண்டுவிடும். அதுபோல வசதிபடைத்தவர்களும், தங்களை உயர்ந்த படைப்பாக கருதிக்கொண்டிருப்பவர்களும், ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்படுபவர்களை விடதங்களை தாங்களே பெருமைக்குரியவர்களாக கருதுபவர்களையும் பார்க்கலாம். அதுபோல் சாதாரணமாக எளிமையாக இருப்பவர்கள் தங்களுக்கென ஒரு அமைப்பும், ஒரு கூட்டமும் உருவாகிவிட்டால் தங்களை மிஞ்ச ஆளில்லை என்ற பெருமையும் கர்வமும் கொள்கிறார்கள். மேலும் மார்க்கத்தில் சிலவிஷயங்களில் தெளிவு இருக்கின்ற காரணத்தால், எதோ முழுமையாக இஸ்லாத்தை கரைத்து குடித்துவிட்டவர்களை போல கர்வம் பிடித்து அலைபவர்களையும் அறிஞர்கள் என்ற போர்வையில் காணலாம். இவ்வாறாக பெருமை ஏதேனும் ஒரு வடிவில் பெரும்பாலோரை ஆட்டிவைக்கும் நிலையில் பெருமை பற்றிய சில விஷயங்களை பார்க்கலாம்.
பெருமை என்பது ஷைத்தானின் குணம்;
அல்லாஹ் ஆதம்[அலை] அவர்களை படைத்த பின் ஆதம்[அலை] அவர்களுக்கு ஸஜ்தா செய்யுமாறு அல்லாஹ் பணித்தபோது ஷைத்தான் இறைவனின் கட்டளையைபுறக்கணித்து மறுத்ததோடு, கர்வத்தோடு கூறியதை இறைவனின் இறைவனின் அருள்மறையில் சொல்லிக்காட்டுகிறான்;


وَإِذْ قُلْنَا لِلْمَلآئِكَةِ اسْجُدُواْ لآدَمَ فَسَجَدُواْ إَلاَّ إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا
இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம் மலக்குகளிடம் "ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்" என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ "களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்?" என்று கூறினான்.[17:61]


قَالَ يَا إِبْلِيسُ مَا مَنَعَكَ أَن تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَيَّ أَسْتَكْبَرْتَ أَمْ كُنتَ مِنَ الْعَالِينَ
"இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத்தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?" என்று (அல்லாஹ்) கேட்டான். (38:75)
قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِي مِن نَّارٍ وَخَلَقْتَهُ مِن طِينٍ
"நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்" என்று (இப்லீஸ்) கூறினான். (38:76)
قَالَ فَاخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌ
(அப்போது இறைவன்) "இதிலிருந்து நீ வெளியேறு! ஏனெனில் நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாகி விட்டாய்" எனக் கூறினான். (38:77)
وَإِنَّ عَلَيْكَ لَعْنَتِي إِلَى يَوْمِ الدِّينِ
"இன்னும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்வரை உன்மீது என் சாபம் இருக்கும்" (எனவும் இறைவன் கூறினான்). (38:78)
இறைவனின் கட்டளையை புறக்கணித்து பெருமையடித்த ஷைத்தான், யுகமுடிவு நாள்வரை இறைவனின் சாபத்திற்குரியவனாக மாறிவிட்டான். அவ்வாறு அவனை மாற்றியது பெருமைதான். எனவேதான் பெருமை என்பது ஷைத்தானின் குணம் எனபது தெளிவு.
பெருமையடிக்க மனிதனுக்கு அருகதையில்லை;

وَلاَ تَمْشِ فِي الأَرْضِ مَرَحًا إِنَّكَ لَن تَخْرِقَ الأَرْضَ وَلَن تَبْلُغَ الْجِبَالَ طُولاً
மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.[17:37]
அற்பமான விந்துதுளியில் இருந்து படைக்கப்பட்டு, பலவீனமான நிலையில் வாழ்ந்து மரணிக்கும் மனிதனுக்கு பெருமை கொள்வதில் எந்த தகுதியும் இல்லை எனபதை மேற்கண்ட வசனம் தெளிவாக உணர்த்துகிறது.
பெருமை அல்லாஹ்வுக்கே தனிப்பட்ட காப்புரிமையாகும்;

وَلَهُ الْكِبْرِيَاء فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
இன்னும், வானங்களிலும், பூமியிலுமுள்ள பெருமை அவனுக்கே உரியது மேலும், அவன் தான் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கோன்.[45:37]
பெருமை எனபது தனக்கே உரியது என்று இறைவன் சொல்லிக்காட்டியுள்ள நிலையில், அவனால் படைக்கப்பட்ட அற்பமான மனிதர்கள் பெருமையடிப்பது அறிவீனமில்லையா?
செல்வத்தை கொண்டு பெருமையடிக்காதீர்;

إِنَّ قَارُونَ كَانَ مِن قَوْمِ مُوسَى فَبَغَى عَلَيْهِمْ وَآتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ إِذْ قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ
நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்; "நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்" என்று கூறினார்கள். (28:76)
وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ وَلَا تَنسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا وَأَحْسِن كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ
"மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிரு;நது மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை" (என்றும் கூறினார்கள்). (28:77)
قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ عِندِي أَوَلَمْ يَعْلَمْ أَنَّ اللَّهَ قَدْ أَهْلَكَ مِن قَبْلِهِ مِنَ القُرُونِ مَنْ هُوَ أَشَدُّ مِنْهُ قُوَّةً وَأَكْثَرُ جَمْعًا وَلَا يُسْأَلُ عَن ذُنُوبِهِمُ الْمُجْرِمُونَ
(அதற்கு அவன்) கூறினான்; "எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!" இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள். (28:78)
فَخَرَجَ عَلَى قَوْمِهِ فِي زِينَتِهِ قَالَ الَّذِينَ يُرِيدُونَ الْحَيَاةَ الدُّنيَا يَا لَيْتَ لَنَا مِثْلَ مَا أُوتِيَ قَارُونُ إِنَّهُ لَذُو حَظٍّ عَظِيمٍ
அப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன் தன் சமூகத்தரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்; "ஆ! காரூனுக்கு கொடுக்கப்படடதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்"' என்று கூறினார்கள். (28:79)
وَقَالَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَيْلَكُمْ ثَوَابُ اللَّهِ خَيْرٌ لِّمَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا وَلَا يُلَقَّاهَا إِلَّا الصَّابِرُونَ
கல்வி ஞானம் பெற்றவர்களோ "உங்களுக்கென்ன கேடு! ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்" என்று கூறினார்கள். (28:80)
فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِن فِئَةٍ يَنصُرُونَهُ مِن دُونِ اللَّهِ وَمَا كَانَ مِنَ المُنتَصِرِينَ
ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. (28:81)
وَأَصْبَحَ الَّذِينَ تَمَنَّوْا مَكَانَهُ بِالْأَمْسِ يَقُولُونَ وَيْكَأَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاء مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ لَوْلَا أَن مَّنَّ اللَّهُ عَلَيْنَا لَخَسَفَ بِنَا وَيْكَأَنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ
முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், "ஆச்சரியம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் சித்தியடைய மாட்டார்கள்" என்று கூறினார்கள். (28:82)
ஆடை அணிகலன்களில் பெருமையடிக்காதீர்;
அல்லாஹ் அழகானவன்.அவன் அழகை விரும்பக்கூடியவன் எனவே நமக்கு அல்லாஹ் அழகான ஆடை அணிகலன்களை தந்திருந்தால் அதை அணிவதில் தவறில்லை. ஆனால் அதைக்கொண்டு பெருமையடிக்கக்கூடது. சிலர் தனது ஆடையை கரண்டைக்கு கீழாக தரையை பரசும் அளவுக்கு அணிந்துகொண்டு பெருமையாக நடந்துவருவதை காணலாம். இவ்வாறு ஆடை விசயத்தில் பெருமையடிப்பவரின் நிலை பற்றி நபி[ஸல்] அவர்களின் கூற்றை பாரீர்;

நபி(ஸல்) அவர்கள்' அல்லது 'அபுல் காசிம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒரு மனிதன் (தனக்குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்துகொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன் மறுமை நாள் வரை (அவ்வாறே பூமிக்குள்) குலுங்கிய படி அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.[நூல்;புஹாரி,எண் 5789 ]

மற்றொரு ஹதீஸில்,
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், 'யார் தன்னுடைய ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கிறரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்' என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! நான் கவனமாக இல்லாவிட்டால் என்னுடைய கீழங்கியின் இரண்டு பக்கங்களில் ஒன்று கீழே சரிந்து விழுகிறது' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவரல்லர்' என்று கூறினார்கள்[நூல்;புஹாரி எண் 5784 ]
அடுத்தவரின் நற்செயலை முகத்துக்கு நேரே புகழாதீர்கள்;
ஒரு தடவை நபிகளார் (ஸல்) முன்னிலையில் சபையிலிருந்த மனிதரைப் பற்றி மற்றவர் புகழ்ந்து கூறினார். இதனைக் கண்டித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புகழ்ந்தவரைப் பார்த்து நீ உனது நண்பனின் தலையை வெட்டி விட்டாயே என கண்டித்ததோடு நீங்கள் யாரையாவது புகழ நினைத்தால் நான் இன்னாரை பற்றி இப்படி நினைக்கிறேன் , ஆனால் அல்லாஹ்தான் அவரைப் பற்றி தீர்மானிக்க கூடியவன் என கூறுங்கள். யாரையும் தூய்மையாளர் என புகழாதீர்கள் என அறிவுறுத்தினார்கள்.[நூல்;புஹாரி-முஸ்லீம்]
பெருமையடிப்பவர்களின் மறுமை நிலை;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண்டன. அப்போது நரகம், 'பெருமையடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன்' என்று சொன்னது. சொர்க்கம், 'எனக்கு என்ன நேர்ந்தோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினருமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்' என்று கூறியது.[நூல்;புஹாரி எண் 4850 ]
நிரந்தர நரகம்;

قِيلَ ادْخُلُوا أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا فَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ
"நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" என்று (அவர்களுக்குக்) கூறப்படும்; பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது.[அல்-குர்ஆன்39:72]
மூமீன்களின் பண்பு;

إِنَّمَا يُؤْمِنُ بِآيَاتِنَا الَّذِينَ إِذَا ذُكِّرُوا بِهَا خَرُّوا سُجَّدًا وَسَبَّحُوا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ
நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள்.[அல்-குர்ஆன்32:15 ]

இறைவனுக்கு மட்டுமே உரித்தான பெருமையை நிரப்பமாக அவனுக்கே உரித்தாக்கி, அவனை 'பெருமைப்படுத்துவதன்' மூலம் சொர்க்கத்தை அடைவோம்.

تِلْكَ الدَّارُ الْآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوًّا فِي الْأَرْضِ وَلَا فَسَادًا وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ
அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு.[அல்-குர்ஆன்28:83 ]





கருத்துகள் இல்லை: