அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 26 நவம்பர், 2010

ஆதாரப்பூர்வமான ஹதீஸில் ஆரம்பித்த பீஜேயின் 'தள்ளுபடி' அங்கீகாரம் வரை....

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை புறம்தள்ளவேண்டும் என்பது  ஒட்டுமொத்த அறிஞர்களின் நிலை என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஹதீஸ்களை  பொருந்தாக் காரணம்  கூறி புறந்தள்ளியவர் பீஜே  என்பதையும்  நாடறியும். அவர் இப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் அங்கீகாரத்தில் கைவைக்கும் அளவுக்கு புதிய பரிமானம் எடுத்துள்ளார்.

மார்க்கத்தில் குர்ஆணுக்கு அடுத்தபடியாக அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் சொல்- செயல்- அங்கீகாரம் இவை மூன்றும் பின்பற்றப் படவேண்டியவையாகும். நபியவர்களின் சொல்லில் இல்லாத, செயலில் இல்லாத ஒன்றை, ஒரு நபித்தோழர் செய்கையில் அதை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் தடை செய்யவில்லையாயின் அதுவும் மார்க்கம்தான் என்பது  பீஜேயும் ஒப்புக்கொண்ட உண்மையாகும். ஆனால் இப்போது அதற்கு மாற்றமாக, அல்லாஹ்வின் தூதர்[[ஸல்] அவர்கள் ஒரு விஷயத்திற்கு  அங்கீகாரம் அளித்திருந்தாலும், அந்த விஷயத்தை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் செய்திருந்தாலோ, அல்லது செய்யுமாறு   கட்டளையிருந்தால்தான் மார்க்கமாகும்  என்ற கருத்தை லேசாக திணிக்க முற்படுகிறார்.

இமாமை பின்பற்றும் தொழுகையில், அவர் ஸமி அல்லாஹு லிமன் ஹiதா எனக் கூறும்போது நீங்கள் ரப்பனா வலக்கல் ஹம்து எனக் கூறுங்கள்.
என்பது அல்லாஹ்வின் தூதர்[ஸல்]  அவர்களின் கட்டளையாகும். இந்நிலையில், ஒருநாள்,


நாங்கள் நபி(ஸல்) அவர்களின் பின்னே ஒரு நாள் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியபோது 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒருவர் 'ரப்பனா வ லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி' என்று கூறினார். தொழுது முடித்ததும் 'இந்த வார்த்தைகளைக் கூறியவர் யார்?' என்று நபி(ஸல்) கேட்டார்கள். அந்த மனிதர் 'நான்' என்றார். 'முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதைப் பதிவு செய்வதில் போட்டி போட்டதை கண்டேன்" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
[புகாரி 799 ]

இந்த ஹதீஸில் நபித்தோழர் ஒருவர், இதுவரை நபியவர்கள் கட்டளையிடாத ஒரு வார்த்தையை கூற, அந்த இடத்தில் இந்த வார்த்தை சொல்லக்கூடாது என்று இருக்குமானால், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் தடுத்திருப்பார்கள். ஆனால் அவ்வாறு செய்யாமல் அந்த நபித்தோழர் கூறிய வார்த்தைகளை அங்கீகரிக்கும் வகையில், நீங்கள் கூறிய இந்த வார்த்தையை பதிவு செய்வதில் முப்பதுக்கும் மேற்பட்ட  வானவர்கள் போட்டி போட்டார்கள்   என்று சிலாகித்து சொல்கிறார்கள் என்றால், நபித்தோழரின் அந்த வார்த்தையை, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் அங்கீகரிக்கிறார்கள் என்பது தெளிவு. அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் அங்கீகரித்த அந்த வார்த்தையை  நாமும் இன்று சொல்லலாம் என்பதுதான் மார்க்கம்.


ஆனால் இந்த பீஜே, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் அங்கீகாரத்தை பெற்ற இந்த அமலை மறுப்பதற்காக, முஸ்லிமில் இடம்பெறும் கீழ்கண்ட ஹதீஸை காட்டி, சில சொந்த வியாக்கியானங்களை திணிக்கிறார்.

ஒரு மனிதர் மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகை வரிசையில் சேர்ந்து,

"அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி' (தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் "உங்களில் இவ்வார்த்தைகளை மொழிந்தவர் யார்?'' என்று கேட்டார்கள். மக்கள் (பதிலளிக்காமல்)
அமைதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்),"உங்களில் இதை மொழிந்தவர் யார்? ஏனெனில், அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை'' என்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் "நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில் சேர்ந்தேன். ஆகவே, இவ்வாறு சொன்னேன்'' என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே "இதை எடுத்துச் செல்பவர் யார்' எனும் விஷயத்தில் போட்டியிட்டுக்கொண்டிருந்ததை நான் கண்டேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), முஸ்லிம் (1051)

அந்த மனிதர் ருகூவுக்குப் பின் இதைக் கூற வேண்டும் என்பதற்காக இப்படிச்
சொல்லவில்லை. மாறாக ருகூவு கிடைக்குமோ அல்லது தவறி விடுமோ என்று அவர் மூச்சிறைக்க வேகமாக வருகிறார். அவர் வேகமாக வந்ததால் ருகூவு கிடைத்து விடுகிறது. இந்த மகிழ்ச்சியில் அல்லாஹ்வைப் புகழ்வதற்காகத் தான் மேற்கண்ட வாசகத்தைக் கூறினார் என்பது இதிலிருந்து தெரிகிறது. நமக்கு ஒரு நன்மை கிடைக்கும் போது அதற்கு நன்றி செலுத்துவதற்காக இந்த வாசகத்தைக் கூறுவது மிகச் சிறந்தது என்று தான் இந்த ஹதீஸிலிருந்து சட்டம் எடுக்க வேண்டும்.


ருகூவிற்குப் பிறகு இவ்வாறு கூறுவது மிகச் சிறந்தது என்று சட்டம் எடுப்பது கூடாது. ஏனென்றால் ருகூவிற்குப் பிறகு இதைக் கூற வேண்டும் என்று அந்த நபித்தோழர் நாடவில்லை. இந்த வாசகத்தைக் கூறினால் வானவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு இதை அல்லாஹ்விடம் கொண்டு செல்வதாக நபி (ஸல்) அவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

இந்த வாசகத்தை ருகூவிற்குப் பிறகு சொன்னால் தான் இந்த சிறப்பு கிடைக்குமென்றால் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இப்படிப்பட்ட சிறப்பைப் பெற்றுத் தரும் இந்த வாசகத்தை கூறாமல் இருந்திருக்க மாட்டார்கள். மேலும், இனிமேல் எல்லோரும் இன்று முதல் ருகூவிற்குப் பிறகு அவர் சொன்ன அதே வாசகத்தைத் தான் கூற வேண்டும் என்ற கட்டளையும் நபிகளார் பிறப்பிக்கவில்லை. குறிப்பிட்ட அந்த நபித்தோழராவது ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இந்த வாசகத்தை சொல்லி வந்தார் என்பதற்கும் எந்தச் சன்றையும் நம்மால் காண முடியவில்லை. வானவர்கள் எடுத்துச் செல்ல போட்டி போடுகின்றார்கள் என்று சொல்லக் கூடிய அளவுக்கு சிலாகித்துச் சொன்ன பிறகும் அந்த வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையிலுமோ, அல்லது எப்போதாவது, ஏதாவது ஒரு தொழுகையின் போதோ கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை.

அதாவது நபி[ஸல்] அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அந்த வார்த்தைக்கு, நபியவர்களின் சொல்லிலும் செயலிலும் ஆதாரம் கானக்கிடைக்கததால், அல்லாஹ்வின் தூதரால், அங்கீகரிக்கப்பட்ட  அந்த துஆவை அந்த இடத்தில் சொல்லத் தேவையில்லை என்கிறார். அப்படியாயின் நாம் அவரை நோக்கி ஒரே ஒரு கேள்வியை வைக்கிறோம்.

அதாவது ஒரு நபித்தோழர் மார்க்கத்தில் ஒரு விஷயத்தை செய்து, அந்த நபித்தோழரின் அந்த செயலை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அங்கீகரித்து, அந்த செயலை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் சொல்லிலும், செயலிலும் செயல்படுத்த வில்லையாயின், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் அங்கீகரித்த அமலை விட்டுவிடலாமா?  என்பதற்கு பீஜே பதிலளிக்கவேண்டும்.

அடுத்து, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்ற,
''ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ'' என்ற துஆவை, இமாம் 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா'  என்று கூறியபின் இந்த துஆவையும் கூறலாம் என்று பீஜேயின் மாணவரும், மார்க்க அறிஞருமான சகோதரர் எம்.ஐ.சுலைமான் அவர்கள், தனது 'நபி வழியில் தொழுகை சட்டங்கள்' என்ற நூலில் குறிப்பிடுகிறார். தனது மாணவருக்கு பீஜே அளிக்கும் பதில் என்ன? அவரையும் மார்க்கத்தை விளங்காதவர் என்று கூறப்போகிறாரா? அல்லது
''அது நேற்று- இது இன்று என்று வியாக்கியானம்  அளிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.


ஆக, கடல் அலை கரையை அரிப்பது போன்று, அண்ணனின் ஆய்வு[?] மார்க்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து வருகிறது  என்பதை கண்கூடாக காண்கிறோம். மார்க்கம் முழுமையாக கரைவதற்கு முன்னால், மார்க்க அறிஞர்கள் விழித்துக் கொண்டால் நன்று.

1 கருத்து:

ஜாஃபர் சொன்னது…

"அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி"
மேற்படி வாசகத்தைத் தான் கூற வேண்டும் என்ற கட்டளையை நபி (ஸல்) அவர்கள் பிறப்பிக்கவில்லை என்ற பீ.ஜையின் வாதத்தை நாம் ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். தொழுகையில் அவ்வாறு கூற கூடாது என்றிருந்தால் அவ்வாறு கூறுவதைத் தடுத்திருந்திருப்பார்களே. அவ்வாறு தடுக்கவில்லை என்பதால் தான் நாமும் அவ்வாசகத்தை சொல்லலாம் என்பது மார்க்கம் (சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை). இது சிறு பிள்ளைகளுக்குக் கூட நன்றாகத் தெரியும். குழப்பம் செய்வதே பீ.ஜைக்கு வாடிக்கையாகி விட்டது.