அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
ரமலான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரமலான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 ஜூலை, 2012

புனித ரமலானும்- புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

அல்லாஹ்வின் அருள் நிறைந்த புனிதமிக்க ரமலான் மாதம் நம்மை வந்தடைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ். இந்த ரமலானில் நோன்பு நோற்கவேண்டும் என்று அறிந்துவைத்துள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் இந்த நோன்பின் தாத்பரியத்தையும்- சட்டங்களையும் அறியாதவர்களாகவும், இன்னும் சிலர் பேணுதல் என்ற பெயரில் இந்த நோன்பை சிரமமானதாக மாற்றிக்கொள்வதையும் பார்க்கிறோம். எனவே, அப்படிப்பட்டவர்கள் தெளிவு பெறவேண்டும் என்பதற்காக இந்த ஆக்கம் வரையப்பட்டுள்ளது .

நோன்பு கடமையாக்கப்பட்டது ஏன்?நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது என்று நம்மவர்களில் சிலரிடம் கேட்டால், ஏழைகளின் பசியை வசதி படைத்தவர்கள் உணரவேண்டும் என்பதற்காகத்தான் கடமையாக்கப்பட்டது என்பார்கள். ஒரு பாடகர் கூட, 'மண் வீட்டின் பசியை மாளிகைகள் உணர்ந்து மனிதாபிமானம் கொள்ள போதிப்பது நோன்பு' என்று பாடுவார். ஆனால் உண்மை அதுவல்ல. ஏனெனில், ஏழைகளின் பசியை வசதிபடைத்தவர்கள் உணர்வதுதான் நோன்பின் நோக்கம் என்றால், பணக்காரர்களுக்கு மட்டும் கடமையாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் வல்ல இறைவன் கூறுகின்றான்;

شَهْرُ رَمَضَانَ الَّذِيَ أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்[அல்-குர்ஆன்2:185 ]

இந்த வசனத்தில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கவேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். இதில் ஏழைகள்-பணக்காரர்கள் என்ற வேறுபாடு கிடையாது அனைவர் மீதும் கடமை. சரி! வேறு என்னதான் காரணம்?

அல்லாஹ் கூறுகின்றான்;


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.[அல்-குர்ஆன் 2:183 ]

இந்த வசனத்தில் நோன்பு கடமையாக்கப்பதின் நோக்கம் நாம் இறையச்சமுடையவர்களாக ஆகவேண்டும் என்பதுதான் என்பது தெளிவாக புரிகிறது. சரி! மற்ற அமல்களில் வராத இறையச்சம் இந்த நோன்பில் மட்டும் வந்துவிடுமா என்றால் உண்மையான நோன்பாளியாக இருந்தால் கண்டிப்பாக வரும்.

எப்படியெனில், ஒருவன் தொழுகையாளியா-ஜக்காத் கொடுப்பவனா-ஹஜ் செய்தவனா என்று நாம் வெளிப்படையாக அறியமுடியும். ஆனால் நோன்பை பொறுத்தவரையில், ஒருவன் நோன்பு நோற்காமலேயே நான் நோன்பாளி என்று கூறினால் நம்மால் கண்டுபிடிக்கமுடியாது. எனவே இறைவனுக்கு அஞ்சுபவன் மட்டுமே நோன்பு பிடிப்பான். மேலும் நோன்பு நோற்ற ஒருவன் அவனது வீட்டில் அவனது உழைப்பால் உருவான உணவு இருக்கும். அவன் நினைத்தால் கதவை சாத்திவிட்டு ஒரு வெட்டு வெட்டிவிட்டு வாயை துடைத்துக்கொண்டு வெளியே வந்தால் யாரும் கண்டுகொள்ள முடியாது. ஆனாலும் ஒரூ நோன்பாளி அவ்வாறு செய்வதில்லை. ஏனெனில், நமது உணவாக இருந்தாலும், நாம் சாப்பிடுவதை பருகுவதை மனிதர்கள் யாரும் பார்க்காவிட்ட்டாலும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் எனவே நாம் சாப்பிடக்கூடாது என்று அவன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்கிரானே அதுதான் இறையச்சம்! தனது சொந்த உழைப்பில் உருவான உணவையே இறைவனுக்கு பயந்து தவிர்ந்துகொண்டவன், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படமாட்டான். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கலில் நேர்மையாக இருப்பான். இவ்வாறு மாற்றியது நோன்பின் மூலம் பெறும் இறையச்சம்தானே!

அடுத்து, நோன்புடைய காலங்களில் பகலில் இல்லற வாழ்க்கை கூடாது. கணவன்-மனைவி மட்டும் இருக்கிறார்கள். அவ்விருவரும் நோன்பு நோற்றிருக்கிறார்கள். இந்நிலையில் அவ்விருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டால் அவர்களை யாரும் கண்டுகொள்ளமுடியாது. ஆனாலும் அவர்கள் இறைவன் தடுத்திருக்கிறான் என்ற பயத்தின் காரணமாக தவிர்ந்து கொள்கிறார்களே தங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்கிறார்களே இதுதான் இறையச்சம்! இப்படி தனக்கு சொந்தமான மனைவியை இறைவன் சொல்லிவிட்டான் என்பதற்காக தவிர்ந்துகொன்டவன், அந்நிய பெண்ணை ஏறெடுத்தும் பார்ப்பானா? எந்த இறைவனுக்கு பயந்து நோன்புடைய பகல் நேரத்தில் நம்முடைய சொந்த மனைவியை தவிர்ந்து கொண்டோமோ, அதே இறைவன்தான் கூறுகின்றான்; விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்; அன்னிய பெண்ணை பார்க்கும் போது பார்வையை தாழ்த்திக்கொள்ளுங்கள் என்று. எனவே நாம் அந்த தவறை செய்யக்கூடாது என்று தன்னை தடுத்துக்கொள்வான். இந்த இறையச்சத்தை வழங்கியது நோன்பு அல்லவா? எனவே உள்ளச்சத்துடன் நோன்பு நோற்றால் இறையச்சம் நிச்சயம் வரும்.

இந்த மாதத்தின் சிறப்புகளில் சில;

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். [புஹாரி 1901]


"ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.[புஹாரி எண் 1898 ]


"ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன் நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்." [புஹாரி எண் 1899 ]


நோன்பாளியின் சிறப்புகள்; கிடைக்கும் பரிசுகள்;


நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்![புஹாரிஎண் 1894 ]


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!" [புஹாரி எண் 1896 ]


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!" என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக மகிழ்ச்சியடைகிறான்." [புஹாரி எண் 1904 ]


நோன்பாளி செய்யவேண்டியவை;

தான தர்மங்களை வாரிவழங்குதல்;

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் - ரமலான் முடியும்வரை - நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்[புஹாரி எண் 1902 ]


ஸஹர் உணவை உட்கொள்ளுதல்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!" [புஹாரி எண் 1923 ]

பெரும்பாலானோர் இரவின் முற்பகுதியிலேயே சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுவார். ஸஹர் நேரத்தில் எழும்புவதில்லை. சாப்பிடுவதுமில்லை. இவர்களில் சிலர் 'பஜ்ர்தொழாமல் தூங்குபவர்களும் உண்டு. எனவே இதுபோன்ற செயல்களை விட்டு, ஸஹர் நேரத்தில் சாப்பிடும் நபிவழியை அமுல்படுத்தவேண்டும்.

நோன்பு திறப்பதை விரைவு படுத்துதல்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!" [புஹாரி எண் 1957 ]


நோன்பு நிறைப்பதை பொருத்தமட்டில் தவ்ஹீத்வாதிகள் நீங்கலாக, மற்றவர்கள் சூரியன் மறையும்நேரத்தையும் தாண்டி பேணுதல் என்ற பெயரில் பத்துநிமிடம் தள்ளிவைத்து பின்பு nabi [ஸல்] அவர்களால் காட்டித்தரப்படாத நிய்யத்தை சொல்ல ஐந்துநிமிடம் இவ்வாறாக தாமதப்படுத்தி நோன்பு திறப்பதை பார்க்கிறோம். இது தவறாகும். எனவே சூரியன் மறைந்தவுடன் நோன்பு திறப்பதுதான் சிறந்ததாகும்.

பிரார்த்தனைகளை அதிகமாக செய்தல்.

நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் இறைவனால் அங்கீகரிக்கப்படும் என்பது நபிமொழியாகும்.


நோன்பாளி செய்யக்கூடாதவை;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை[புஹாரி]

இந்த பொன்மொழியில் நம்முடைய நோன்பு அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில் பொய்யான பேச்சுக்கள்-செயல்களை விட்டு விலகவேண்டும். ஆனால் நடப்பது என்ன? ஸஹர் இறுதி நேரம் வரை பகலில் அடிக்கும் 'தம்'மையும் சேர்த்து அடிப்பது. பகலில் வழக்கம் போல் பொய்யான பேச்சுக்களை பேசுவது பின்பு நோன்பு திறந்தவுடன் முதல்வேலையாக ஒரு பாக்கெட் சிகரெட்டை காலிசெய்வது. பின்பு வழக்கம்போல் மானாட-மயிலாட-குயிலாட என்று தொலைக்காட்சியில் குதூகலிப்பது. இப்படியான செயல்களை செய்பவர்கள் நோன்பிருந்து எந்த புண்ணியமுமில்லை. எனவே இந்த செயல்களை தவிர்ந்துகொள்ளவேண்டும்

நோன்பை முறிப்பவை;
உண்ணுதல்;பருகுதல்;உடலுறவு கொள்ளுதல்.

நோன்பை முறிக்காதவை;

மறதியாக உண்பதும்-பருகுவதும்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப்படுத்தட்டும்; ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்." [புஹாரி எண் 1933 ]

முள் குத்தியோ, காயமோ ஏற்பட்டு ரத்தம் வந்தால்;

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது இரத்தம் குத்தி எடுத்தார்கள்[புஹாரிஎண் 1939 ]

பல் துலக்குவதால்;

நபி[ஸல்] அவர்கள் நோன்பு நோற்றிருந்தபொது என்னால் எண்ணிச்சொல்ல முடியாத அளவுக்கு பல் துலக்கியதை பார்த்தேன். அறிவிப்பவர்;ஆமிர் இப்னு ரபிஆ [நூல்;திர்மிதி]

எச்சிலை விழுங்குவதால்;

எச்சிலை விழுங்கினால் நோன்பு முறிந்துவிடும் என்று சிலர் தவறாக விளங்கிக்கொண்டு எப்ப பார்த்தாலும் எச்சிலை துப்பிக்கொண்டே திரிவார்கள். எச்சில் விழுங்கினால் நோன்பு முறியும் என்று நபி[ஸல்] அவர்கள் ஒருபோதும் சொன்னதில்லை.

வாந்தி எடுத்தால்;

தானாக ஒருவருக்கு வாந்தி வந்தால் அவர் [நோன்பை]களா செய்யவேண்டியதில்லை. வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் அவர் நோன்பை களா செய்யவேண்டும் என்று நபி[ஸல்] அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா [ரலி] அறிவிக்கும் செய்தி அஹ்மத் போன்ற நூல்களில் உள்ளது.

வாசனை திரவியங்கள் பூசிக்கொள்வதால் நோன்பு முறியும் என்ற நம்பிக்கையும்தவறானது.

எல்லாம் வல்ல அல்லாஹ் நோன்பை பரிபூரணமாக நோற்று அதன் மூலம் இறையச்சத்தை பெற்று சுவனத்தை பெறுபவர்களாக ஆக்கியருள்வானாக!

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நரகிலிருந்து புனித ரமளானில் பாதுகாப்புத் தேடுவோம்!

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்தின் அருட்கொடை நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி வாழ்ந்த, வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!
புனிதமிக்க ரமலானின் இறுதிக் காலகட்டத்தை அடைந்துள்ளோம். ஆயிரம் மாதங்களைவிட சிறந்த லைலத்துல் கதர் எனும் சிறப்புமிக்க இரவை தாங்கி வரும் இந்த இறுதிப் பத்தில், இறைவன் நிராகரிப்பாளர்களுக்காகவும்-இணைவைப்பாளர்களுக்காகவும்-பாவிகளுக்ககவும் சித்தப்படுத்தியுள்ள நரகத்திலிருந்து பாதுகாப்புப்பெற எஞ்சியுள்ள புனித ரமலானை நாம் பயன்படுத்த முன்வரவேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக அமல்களை கொண்டு அழகுபடுத்த வேண்டிய இந்த நாட்களை, அழகான ஆடைகள் எடுப்பதிலும், அழகுசாதன பொருட்களை வாங்குவதிலும், வீட்டை அழகுபடுத்துவதிலும் சமுதாய மக்கள்  கூடுதல் கவனம் செலுத்துவதை பார்க்கிறோம். இதற்கு காரணம் நரகம் எவ்வளவு கடுமையானது என்பதை அறியாமலிருப்பதுதான். இன்னும் சிலர் நரகத்தை வேடிக்கையாககருதுவதையும் பார்க்கிறோம்.

சமீபத்தில் ஒரு அறிஞர் தலைமை தாங்கிய இஸ்லாமிய பட்டிமன்றம் பார்த்தோம். அதில் நகைச்சுவைக்காக சுவனத்தையும்-நரகத்தையும் பற்றி ஒருதம்பதியர் சம்பாஷணையில் இப்படி வர்ணிக்கிறார்

கணவன்;[மனைவியிடம்] அடியே! மவ்த்துக்கு பின்னால், நீ சொர்க்கத்துக்கு செல்வாயா? நரகத்துக்கு செல்வாயா?

மனைவி; நான் சொர்க்கத்துக்குத்தான் செல்வேன் என்று சொல்லிவிட்டு, கணவனை நோக்கி; நீங்கள் சொர்க்கத்திற்கு செல்வீர்களா? நரகத்திற்கு செல்வீர்களா?

கணவன்; நான் நரகத்திற்குத்தான் செல்வேன் ஏனெனில், நீ போன பின்னாடி சொர்க்கம் சொர்க்கமாவாஇருக்கும்?

மனைவி; அப்ப நானும் நரகத்திற்கு வருவேன்.

கணவன்; என்மீது உனக்கு அவ்வளவு பாசமா?

மனைவி; பாசமும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. நீங்கள் நரகில் படும் வேதனையை நான் பார்த்து ரசிக்கத்தான்..!


இப்படியாக நகைச்சுவை என்ற பெயரில் சொர்க்கம்-நரகை பற்றி ஏளனமாக வர்ணிக்கிறார். இவர் மட்டுமல்ல சமுதாயத்தில் பெரும்பாலோர் நரகின் வேதனை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. காரணம் நரகத்தின் வேதனைகளை தெளிவாக அறியாததினால்தான். நரகத்தின் வேதனையை பற்றி வர்ணித்தால் அது பல பக்கங்களை எட்டும். எனவே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல, நரகின் கடுமையை அறிய ஒரே ஒரு பொன்மொழி;


அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்களிடம் அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள், 'அவருக்கு என் பரிந்துரை மறுமை நாளில் பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரின் (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள் வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவரின் மூளையின் மூலப்பகுதி (தகித்துக்) கொதிக்கும்' என்று சொல்ல கேட்டேன்.[புஹாரி]



மிக குறைவான தண்டனையை அனுபவிக்கும்  அபூதாலிப் அவர்களின் மூளைகொதிக்கும் என்றால், அதிகப்படியான தண்டனை பெறுபவர்களின் நிலை என்ன என்பதை யோசித்து பார்க்கவேண்டும். இப்படிப்பட்ட நரகிலிருந்து நம்மை காத்துக்கொள்ள இந்த இறுதிப்பத்தில் செய்யவேண்டியவைகள்;


லைலத்துல் கத்ரை தேடுதல்;

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். (97:1)
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? (97:2)
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். (97:3)
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். (97:4)
سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ
சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (97:5)




ஒரு இரவில் நாம் நின்று வணங்குவதன் மூலம் ஆயிரம் மாதத்திற்கும் மேலாக வணங்கிய நன்மையை வாரித்தரும் இரவுதான் லைலத்துல் கதர் இரவு. இந்த இரவு எப்போது என்று நபி[ஸல்] அவர்கள் அறுதியிட்டுக்கூறாமல், ரமலானின் இறுதிப்பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் தேடுங்கள் என்று கூறியுள்ளார்கள்.


அந்த இரவு நோன்பு 21 -23 -25 -27 -29 ஆகியவற்றில் எதாவது ஒரு இரவில் இருக்கலாம். இத்தகைய சிறப்புவாய்ந்த இரவின் அமலை கெடுக்கும் வகையில் சுன்னத்ஜமாத் என்று தங்களை கூறிக்கொள்வோர் நோன்பு 27 அன்றுதான் லைலத்துல் கத்ர் என்று தீர்மானமாக முடிவு செய்து அமல் செய்வதை பார்க்கிறோம்.
ஒருவேளை அன்று லைலத்துல் கத்ர் இல்லாமல் முந்திய-அல்லது பிந்தைய நாளில் இருந்தால் என்னாகும் என்ற அச்சம் இவர்களுக்கு இல்லை. எனவே இவர்கள் பேச்சை கேட்டு அமலை வீணாக்கிவிடாமல், நபி[ஸல்] அவர்களின் கூற்றுப்படி இறுதிப்பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் தேட முற்படவேண்டும்.


இறுதிப்பத்தில் நபி[ஸல்] அவர்களின் அமல்;
ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!"
நூல்;புஹாரி எண் 2024 ]

முன்-பின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்ட நபி[ஸல்] அவர்களே இறுதிப்பத்தில் இல்லறத்தொடர்பு துறந்து இறைவனை வணங்குவதோடு-தமது குடும்பத்தாரையும் அல்லாஹ்வின் அருளைப்பெரும் அமல் செய்ய தூண்டுகிறார்கள் எனில், பாவங்களில் புரளும் நாம் எந்த அளவுக்கு இந்த இறுதிப்பத்தில் அமல் செய்யவேண்டும் என்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
'இஃதிகாப்' இருத்தல்;
ரமலானில் இறுதிப்பத்தில் நபி[ஸல்] அவர்கள் இஃதிகாப் இருப்பார்கள். இஃதிகாப் என்பது [அவசிய தேவைக்கன்றி] வெளியே வராமல் பள்ளிவாசலில் தங்கி அமல் செய்வதாகும். துரதிஷ்டவசமாக இந்த நபி வழியை பெரும்பாலான தவ்ஹீத்வாதிகள் கூட செய்யத்தயாரில்லை. இனியேனும் இந்த நபி வழிக்கு உயிர்கொடுக்க முன்வரவேண்டும்.
பிரார்த்தனைகளை அதிகமாக்குவது;
அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!)[திர்மிதி]


எல்லாம் வல்ல அல்லாஹ், இந்த புனித ரமலான் மூலம் பாவங்களை விட்டும் தூரமாகி, அவனது அருளுக்குரிய நல்லடியார்களாக ஆக்கியருள்வானாக!