அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
பகைமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பகைமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 ஏப்ரல், 2009

பகைமை எனும் களைநீக்கி பாசமெனும் விதை விதைப்போம்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
3:103
وَاعْتَصِمُواْ بِحَبْلِ اللّهِ جَمِيعًا وَلاَ تَفَرَّقُواْ وَاذْكُرُواْ نِعْمَةَ اللّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاء فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىَ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.

அன்றைய அறியாமை காலத்தில் மக்கத்து முஷ்ரிக்கீன்களுக்கு மத்தியில் சிறு பகை என்றாலும் அதை பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து பழிதீர்த்து வந்தநிலையில், அவர்களுக்கு அல்லாஹ் இஸ்லாம் என்ற சாந்தி மார்க்கம் மூலம் நேர்வழிகாட்டி தன்னுடைய அருளின்மூலம் அவர்களது உள்ளங்களை ஒன்றுபடுத்தி சகோதரர்களாக மாற்றியதை மேற்கண்ட வசனத்தில் சொல்லிக்காட்டுகிறான். அதுபோல் பல்வேறு பிரிவுகளில் இருந்த முஸ்லிம்களாகிய நமக்கு மத்தியிலும் அல்லாஹ், தவ்ஹீத் எனும் அருளை பொழிந்து நமது உள்ளங்களை ஒன்று படுத்தி நம்மை சகோதரர்களாக ஆக்கினான். அதற்கு உதாரணம் சொல்லவேண்டுமெனில், உடன்பிறந்த அண்ணனனையே பெரும்பாலும் பெயர்சொல்லி அழைக்கும் நம் சகோதரர்கள் சகோதரர் பீ.ஜே அவர்களை 'அண்ணன்' என அன்போடு அழைக்கும் அளவுக்கு நமக்கு மத்தியில் உள்ளப்பினைப்பை ஏற்படுத்தினான். ஆனால் அந்த பிணைப்பு இன்று சைத்தானின் சூழ்ச்சியால் பிளவுகளாகி பகைமை தொடர்வதை பார்க்கையில் நாம் வந்தவழியே [அறியாமைக்காலத்திற்கு] சென்று விடுவோமோ என்ற அச்சம் தலைவர்களுக்கு இல்லாவிட்டாலும் ஒவ்வொரு உண்மையான முஸ்லிமுக்கும் ஏற்படுவது இயற்கையே!

மேல்மட்ட தலைவர்களுக்கு மத்தியில் ஏற்படும் மோதல்களுக்கு 'கொள்கைமுலாம்' பூசப்பட்டு, தவ்ஹீத் சகோதரர்கள் நம்பவைக்கப்பட்டு, பிளவுகள் ஏற்பட்டு, ஒவ்வொரு பிரிவினரும் அடுத்தபிரிவினரை பகைமை கண்ணோட்டத்தோடு பார்ப்பதும், ஒரு அணியை தோற்கடிக்க நாங்கள் கடும் முயற்சி மேற்கொள்வோம் என்று சொல்லும் அளவுக்கு பகைமைஆலவிருட்சமாக வளர்ந்து நிற்கிறது. இப்படி பிரிந்து , மேற்கண்ட வசனத்தை சுட்டிக்காட்டினால் 'அல்லாஹ்வின் கயிறை பற்றி பிடித்துக்கொள்ளுங்கள்' என்பது அல்-குர்'ஆண் அல்-ஹதீஸை பின்பற்றுவது என்று அர்த்தம். நாங்கள் அல்-குர்'ஆண்-ஹதீஸை தானே பின்பற்றுகிறோம் எனவே எங்கள்மீது தவறில்லை என்பார்கள் .ஆனால் உண்மையில் தவ்ஹீத்வாதிகளின் தலைவர்கள் என சொல்லிக்கொள்ளும் இவர்கள், இந்த ஒற்றுமை விஷயத்தில் குர்'ஆண்-ஹதீஸை பின்பற்றவில்லை என்று நாம் அடித்து சொல்வோம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

புஹாரி, 6076

இந்த ஹதீஸை அமுல்படுத்திய தலைவர் யார்? பிரிந்து பல ஆண்டுகளாகியும் சந்திக்காமலும், ஸலாம் சொல்லாமலும், குறைந்த பட்சம் போனில்கூட உரையாடாத இவர்களா ஒன்றுபடப்போகிறார்கள்? ஆனால் சத்திய சகாபாக்கள் நடைமுறைப்படுத்தினார்கள்!


நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் இப்னு மாலிக் இப்னி துஃபைல்(ரஹ்) கூறினார் ஆயிஷா(ரலி) (தம் வீடு ஒன்றை) 'விற்றது தொடர்பாக' அல்லது 'நன்கொடையாக வழங்கியது தொடர்பாக' (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (அதிருப்தியடைந்து) 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும். அல்லது தான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஆயிஷா(ரலி) (தம் வீடு ஒன்றை) 'விற்றது தொடர்பாக' அல்லது 'நன்கொடையாக வழங்கியது தொடர்பாக' (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (அதிருப்தியடைந்து) 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும். அல்லது நான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஆயிஷா(ரலி), 'அவரா இப்படிக் கூறினார்?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம்' என்றனர். அப்போது ஆயிஷா(ரலி), 'இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும் பேசமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன்' என்று கூறிவிட்டார்கள். நீண்ட நாள்கள் பேச்சு வார்த்தை நின்றுபோனபோது ஆயிஷா(ரலி) அவர்களிடம் (தமக்காகப்) பரிந்து பேசுமாறு (முஹாஜிர்களை) இப்னு ஸுபைர்(ரலி) கேட்டுக்கொண்டார்கள். (அவ்வாறே அவர்கள் பரிந்து பேசியபோது) ஆயிஷா(ரலி), 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் விஷயத்தில் ஒருபோதும் நான் (எவருடைய) பரிந்துரையையும் ஏற்றுக்கொள்ளவுமாட்டேன். என் சத்தியத்தை நான் முறித்துக் கொள்ளவுமாட்டேன்' என்று கூறிவிட்டார்கள். ஆயிஷா(ரலி) இப்னு ஸுபைர் அவர்களிடம் பேச்சை நிறுத்தி நீண்ட நாள்களாம்விட்டபோது பன} ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னி அப்தி யகூஸ்(ரலி) ஆகிய இருவரிடமும் இப்னு ஸுபைர்(ரலி), 'அல்லாஹ்வை முன்வைத்து உங்கள் இருவரிடமும நான் வேண்டுகிறேன். என்னை (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லக்கூடாதா? என் உறவை முறித்துக் கொள்வதாக அவர்கள் செய்துள்ள சத்தியம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்லவே!' என்று கூறினார்கள். எனவே, மிஸ்வர்(ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்களும் தம் மேலங்கிகளை அணிந்துகொண்டு இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுடன் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றார்கள். (அங்கு சென்ற) உடனே 'அஸ்ஸலாமு அலைக்கி வ ரஹ்மத்துலலாஹி வ பரகாதுஹு' என்று சலாம் சொல்லிவிட்டு, 'நாங்கள் உள்ளே வரலாமா?' என்று அனுமதி கேட்டனர். அதற்கு ஆயிஷா(ரலி), 'உள்ளே வாருங்கள்' என்று அனுமதி வழங்கினார்கள். அப்போது அவர்கள் (மூவரும்) 'நாங்கள் அனைவரும் உள்ளே வரலாமா?' என்று கேட்டனர். ஆயிஷா(ரலி), 'ஆம்; அனைவரும் உள்ளே வாருங்கள்' என்று அவர்கள் இருவருடனும் இப்னு ஸுபைர்(ரலி) இருப்பதை அறிந்து கொள்ளாமலேயே கூறினார்கள். அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்ததும், இப்னு ஸுபைர்(ரலி) (தம் சிறிய தாயாரான ஆயிஷா இருந்த) திரைக்குள் நுழைந்து அவர்களைத் தழுவிக்கொண்டு அவர்களிடம் முறையிட்டு அழத் தொடங்கினார்கள். மிஸ்வர்(ரலி) அவர்களும் அப்துர்ரஹ்மான்(ரலி) அவர்களும் (வெளியே இருந்தபடி) இப்னு ஸுபைர்(ரலி) அவர்களிடம் பேசியே தீரவேண்டும் என்றும் அவருக்காகத் தாங்கள் செய்யும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வேண்டிக் கொண்டிருந்தனர். மேலும், அவர்கள் இருவரும், 'ஒரு முஸ்லிம் தம் சகோதரிடம் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று' என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளதை தாங்கள் அறிந்தே உள்ளீர்கள்' என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி) அவர்களிடம் (உறவைப் பேணுவதன் சிறப்பு குறித்து) கசப்பூட்டியும் அவர்கள் அதிகமாகப் பேசியபோது (தாம் செய்த சத்தியத்தைப் பற்றி) அவர்கள் இருவருக்கும் நினைவூட்டியவாறு ஆயிஷா(ரலி) அழலானார்கள். மேலும், '(நான் அவரிடம் பேசமாட்டேன் என) சத்தியம் செய்து விட்டேன். சத்தியம் மிகவும் கடுமையானதாகும்' என்று (அவர்கள் இருவரிடமும் திரும்பக் திரும்பக்) கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆயிஷா(ரலி) இருவரும் (தங்கள் கருத்தை) வலியுறுத்திக்கொண்டேயிருந்தனர். இறுதியில் ஆயிஷா(ரலி) (தம் சகோதரியின் புதல்வர்) இப்னு ஸுபைரிடம் பேசிவிட்டார்கள். தம் சத்தியத்தை முறித்துவிட்டதற்குப் பரிகாரமாக நாற்பது அடிமைகளை விடுதலை செய்தார்கள். அதற்குப் பிறகும் கூடத் தம் சத்தியத்தை நினைவுகூர்ந்து தம் முகத்திரை நனையுமளவிற்கு அவர்கள் அழுவார்கள்.

நூல்;புஹாரி,எண் 6073

'ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரைப் பார்த்து காஃபிரே! (இறைமறுப்பாளனே!) என்று அழைத்தால் அவர்கள் இருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நூல்;புஹாரி,எண் 6104

ஒரு முஸ்லிமை காஃபிர் என்று சொல்லக்கூடாது என்று நபி[ஸல்]அவர்கள் தடுத்திருக்க 'தடம்புரண்டவர்கள்' என்று பட்டியல் போட்டது குர்'ஆண் -ஹதீஸின் வழிமுறையா? கேட்டால் சொல்வார்கள் அவர்கள் ஷேய்க் அப்துல்லா ஜமாலி நிகழ்ச்சிக்கு சேர் போட்டார்கள் என்று! இது ஒன்றே அவர்கள் தடம்புரண்டுவிடார்கள் என்பதற்கு அளவுகோலாக முடியுமா? அவர்களின் உள்ளத்தை அறிவது இறைவனல்லவா?

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார் அலீ(ரலி) கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல்பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமனிலிருந்து நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள்: உயைனா இப்னு பத்ர்(ரலி), அக்ரஉ இப்னு ஹாபிஸ்(ரலி), ஸைத் அல் கைல்(ரலி) நான்காவது நபர் அல்கமா(ரலி); அல்லது ஆமிர் இப்னு துஃபைல்(ரலி) அப்போது நபித்தோழர்களில் ஒருவர், 'இதைப் பெறுவதற்கு இவர்களை விடத் தகுதி வாய்ந்தவர்கள் நாம் தாம்'' என்று கூறினார். இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க, என் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க மாட்டீர்களா? காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்த வண்ணமுள்ளன'' என்று கூறினார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் தடித்திருந்த, நெற்றி உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப் பட்டிருந்த, கீழாடையை வரிந்து கட்டியிருந்த மனிதர் ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்'' என்று கூறனிhர். உடனே நபி(ஸல்) அவர்கள், 'உனக்குக் கேடு தான். பூமியிலிருப்பவர்களில் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன்?' என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் திருமபிச் சென்றார். அப்போது காலித் இப்னு வலீத்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! நான் அவரின் தலையைக் கொய்து விடட்டுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(அவரைக் கொல்ல) வேண்டாம். அவர் தொழக்கூடியவராக இருக்கலாம்'' என்று கூறினார்கள். அதற்கு காலித்(ரலி), 'எத்தனையோ தொழுகையாளிகள் தம் இதயத்தில் இல்லாததை நாவில் மொழிகிறார்கள்'' என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மக்களின் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைக் கிழித்துப் பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை'' என்று கூறிவிட்டு, திரும்பிச் சென்று கொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்தார்கள். மேலும், கூறினார்கள்; 'இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நிறைய ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்கள், வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறி விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து வெளியேறி விடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் 'ஆது' கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் அழித்து விடுவேன்.

நூல்;புஹாரி,எண் 4351

உள்ளத்தை அதில் உள்ள எண்ணத்தை அறிவது அல்லாஹ்வின் அதிகாரத்திற்குட்பட்டதாக இருக்க, எங்களைவிட்டு பிரிந்தவர்கள் 'தடம்புரண்டவர்கள்' என பட்டியல்போடுவது குர்'ஆண்-ஹதீஸ் வழிமுறையா?

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றன. என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நூல்;புஹாரி,எண் 2442

இந்த ஹதீஸில் ஒரு முஸ்லீம் மற்றொரு முஸ்லிமுக்கு [மார்க்கத்திற்குடப்ட்டு] தேவைகளை நிறைவேற்றவேண்டும் என்றும், ஒரு முஸ்லீம் அநீதிக்கு உள்ளாவதை மற்றொரு முஸ்லீம் தடுக்கவேண்டும் என்றும், அவனது குறைகளை மறைக்கவேண்டும் என்றும் நபி[ஸல்]அவர்கள் கட்டளையிட்டிருக்க, இந்த தேர்தலில் ஒருமுஸ்லீம் அல்ல.ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயமும் புறக்கணிக்கப்பட்டு அநீதிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் நிலையில், முஸ்லிம்களை ஆதரிக்காமல் யார் முஸ்லிம்களை புறக்கனித்தாரோ அவருக்கு ஆதரவு என்பதும், முஸ்லிம்களின் 'சமுதாயதுரோகத்தை' பட்டியலிடுவோம் என்பதும், முஸ்லிம்களை தோல்வியுறச்செய்து, முஸ்லிமல்லாதவர்களை வெற்றிபெறவைப்போம் என்பதும் மேற்கண்ட ஹதீஸை புறக்கணிப்பதில்லையா?

அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார். நான் அலீ(ரலி) அவர்களிடம், '(நபிகளாரின் குடும்பத்தாராகிய) உங்களிடம் குர்ஆனில் இல்லாத ஏதேனும் (செய்தி) உள்ளதா?' என்று கேட்டேன். -அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் சில வேளைகளில் 'மக்களிடம் இல்லாத ஏதேனும் ஒன்று உங்களிடம் உள்ளதா?' என்று அபூ ஜுஹைஃபா(ரலி) அவர்கள் கேட்டார்கள் என அறிவித்தார்கள். அதற்கு அலீ(ரலி) அவர்கள், 'வித்துக்களைப் பிளந்தவனும் உயிரினங்களை உருவாக்கியவனுமான அல்லாஹ்வின் மீதாணையாக! குர்ஆனில் உள்ளதைத் தவிர வேறெதுவும் (நபிகளாரின் குடும்பத்தாராகிய) எங்களிடம் இல்லை; இறைவேதத்தில் ஒருவருக்கு அளிக்கப்படும் விளக்கத்தையும் இந்த ஏட்டில் உள்ளவற்றையும் தவிர' என்று பதிலளித்தார்கள். நான் 'இந்த ஏட்டில் என்ன இருக்கிறது?' என்று கேட்டேன். அலீ(ரலி) அவர்கள், 'இழப்பீடு (தொடர்பான விளக்கங்கள்), போர்க் கைதியை விடுவித்தல், இறைமறுப்பாளனுக்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக்கூடாது ஆகிய விஷயங்கள் இதிலுள்ளது' என்று பதிலளித்தார்கள்.59 இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நூல்;புஹாரி,எண் 6915.

மேற்கண்ட ஹதீஸில் ஒரு இறை நிராகரிப்பாலனுக்காக ஒருமுஸ்லீம் கொள்ளப்படக்கூடாது என கட்டளை உள்ளநிலையில், ஒரு இறைநிராகரிப்பாளனுக்காக ஒரு முஸ்லிமை தோற்கடிப்பது மேற்கண்ட ஹதீஸுக்கு முரணில்லையா? ஹஜ்ஜத்துல் வதாவில் நபி[ஸல்] அவர்கள், ஒரு முஸ்லிமின் உயிர், உடமை, மானம் இன்னொரு முஸ்லிமுக்கு ஹராம் என கூறவில்லையா? ஒரு முஸ்லிமை தோற்கடித்து ஒரு முஸ்லிமல்லாதவரை வெற்றிபெற வைப்பது ஒரு முஸ்லிமின் மானத்தோடு விளையாடுவதில்ல்லையா? இது நபிவழிக்கு முரணில்லையா?

எனவே, சகோதர்களே! எந்தவகையிலும் ஒரு முஸ்லிமுக்கு, ஒரு முஸ்லிமல்லாதவர் ஈடாகமாட்டார். ஒரு முஸ்லீம் என்னதான் பாவங்கள் செய்தாலும் அவனது உள்ளத்தில் கடுகளவு ஈமான் இருந்தாலும் அவர் இறுதியிலாவது சொர்க்கம் செல்வார். ஆனால் முஸ்லிமல்ல்லாதவர்கள் நிலை சொல்லி தெரியவேண்டியதில்லை. எனவே பகைமை மறந்து நமக்குள் பொதுப்பிரச்சினையிலாவது ஒன்றுபடுவோம். பலதரப்பு கொள்கையுடைய கட்சிகள் 'குறைந்தபட்ச செயல்திட்டம்' என்ற பெயரில் ஒன்றிணையும்போது, நாம் இறைவன் நமக்களித்த முஸ்லிம்கள் என்ற பெயரால் ஓரணியில் திரளுவது சாத்தியமே மனமிருந்தால்......!!!