அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

மத்ஹப் பாணியில் கரண்டைக்கு கீழ் ஆடையனிய ஃபத்வா!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ய்வு என்ற பெயரில் அவ்வப்போது மார்க்கத்தை மாற்றும் பீஜேயும் அவரது அபிமானிகளும் சமீபத்தில் கரண்டைக்கு கீழ் ஆடையணியலாம் என்ற ஃபத்வாவை  வழங்கியிருந்தனர்.  இதில் வேடிக்கை  என்னவென்றால் கரண்டைக்கு கீழ் ஆடையணியக் கூடாது  என்பதற்கு அடுக்கடுக்கான ஹதீஸ் ஆதாரங்களை அவர்களே அந்த ஆய்வில் வைத்துள்ளார்கள். அவைகளில் சில;
  1. ஹுஜைமீ குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் :
    நான் நபி (ஸல்) அவர்களிடம் கீழாடையைப் பற்றிக் கேட்டேன். நான் கீழாடையை எது வரைக்கும அணியலாம் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தனது முதுகை வளைத்து தன் கெண்டைக்காலின் எலும்பைப் பிடித்து இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் இதற்குக் கீழே இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்கு மேல் இது வரை அணிந்து கொள். இதையும் நீ விரும்பாவிட்டால் பெருமையடித்து ஆணவத்துடன் நடக்கும் யாரையும் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.நூல் : அஹ்மது(15389)
  2. கெண்டைக்காலின் பாதிவரை கீழாடையை அணிந்துகொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்கள் வரை அணிந்துகொள். கீழாடையை (தரையில் படுமாறு) நீட்டுவதை விட்டும் உம்மை நான் எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்பமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : அஹ்மது (22121)
  3. உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பா விட்டால் கணுக்கால்கள் வரை (அணிந்து கொள்). கீழாடையை (தரையில்) தொங்க விடுவதை விட்டும் உம்மை எச்சரிக்கின்றேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். அல்லாஹ் (நாம்) பெருமை கொள்வதை விரும்ப மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : அபூதாவுத் (3562)
  4. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் :அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப் பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையாக உள்ள) இடமாகும். இதை நீ விரும்பா விட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்குக் கீழ் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்கள்.நூல் : திர்மிதி (1705)
  5. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
    இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்கால்களின் சதைப்பகுதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் அவரது கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்லும் ஆடை நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : அஹ்மது (7519)
  6. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக் கால்கள் வரை (அணிந்து கொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.அறிவிப்பவர் : ஜாபிர் பின் சுலைம் (ரலி)நூல் : அபூதாவுத் (3562)

  7. மேற்கண்ட ஹதீஸ்கள் மட்டுமன்றி இன்னும் இதுபோன்ற  சில ஹதீஸ்களையும் வைத்து விட்டு, கடைசியில் தங்களது வழக்கமான பாணியான வார்த்தை விளையாட்டை நடத்தியுள்ளார்கள். கரண்டைக்கு கீழ் ஆடையணியக் கூடாது என்று வரும் ஹதீஸ்களில் 'இஸ்பால்' செய்யக் கூடாது என்று கூறுகிறது. இஸ்பால் என்றால் தரையைத் தொடும் அளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது என்பது பொருள் என அரபு அகராதி நூல்களும் அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர் என்று கூறிவிட்டு,
கீழாடை தரையில் படுமாறு ஆடையை இறக்கி அணிவதையே மார்க்கம் தடை செய்கின்றது. கணுக்கால்கள் வரை ஆடை அணியலாம் என்பதன் கருத்து ஆடை தரையில் இழுபடாத வகையில் அணியலாம் என்பதாகும். கணுக்கால்களுக்குக் கீழ் ஆடை செல்லக் கூடாது என்பதன் கருத்து தரையில் ஆடை படுமாறு அணியக் கூடாது என்பதாகும்.
கணுக்கால்களின் முன் பகுதியே கீழாடையின் இறுதி எல்லை என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவை. கணுக்கால்களின் மீது ஆடை படும் வகையில் அணிந்தால் தவறில்லை என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
எனவே ஒருவர் தன் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வழிமுறையாகும்.என்று தீர்ப்பளித்துள்ளனர்.
கவனமாக கவனிக்கக் வேண்டும். கணுக்கால் வரை ஆடையணிய அனுமதித்த நபி[ஸல்] அவர்கள், 'இஸ்பால்' செய்வதை விட்டும் அதாவது கணுக்காலுக்கு கீழே தரையை தொடும் அளவுக்கு ஆடையனிவதை எச்சரிக்கிறேன் என்று சொல்கிறார்கள்.  கணுக்கால் வரை என்று சட்டம் சொன்ன நபியவர்களுக்கு தரையை தொடாமல் ஆடையணிந்து கொள் என்று சொல்லத் தெரியாதா? இதிலிருந்து தெரிவது என்ன? கீழாடையின்  அதிக பட்ச எல்லை என்பது கணுக்கால் வரை தானே?
ஒருவர் சொல்கிறார் தொண்டி எல்லையோடு நின்று கொள்; இதைவிட்டும் தாண்டுவதை நான் எச்சரிக்கிறேன் என்கிறார். இதிலிருந்து என்ன சட்டம் எடுக்க முடியும்? தொண்டி தான் இறுதி எல்லை அதை விட்டும் தாண்டக் கூடாது என்பதுதானே!ஆனால் ஆய்வாளர்  
பீஜேயின் மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. உடனே ஒருவரிடம், ''தொண்டி எல்லையை தாண்டக்கூடாது  என்பதின் அர்த்தம்  என்ன? என்று கேட்கிறார். அவரோ தொண்டி எல்லையை தாண்டுதல் என்றால் தொண்டிக்கு அடுத்த ஊரை நெருங்குவதாகும் என்கிறார். அப்படியானால் அந்த ஊரைத் தொடாமல் ஒரு அடி  முன்னால்  நின்று கொள்வது தவறில்லை என்று பீஜே சட்டம் சொல்லி விட்டார் என்றால் 'தொண்டியை தாண்டாதே  என்று கட்டளையிட்டதற்கு மதிப்புண்டா?
மேலும், இவர்கள் அடிக்கடி மேடையில் மத்ஹபை குறித்து ஒன்று சொல்வார்கள். அதிகமாக சாப்பிட்டால் போதை தருவதை குறைவாக சாப்பிட்டால் ஹராம் இல்லை. அதாவது பத்துக் கிளாஸ் அடித்தால் தான் போதை ஏறும் என்றால், ஒன்பது கிளாஸ் அடிப்பது  தவறில்லை என்று மத்ஹபு சட்டம் சொல்கிறது என்று கிண்டலடிப்பார்கள். அதே பாணியில் இவர்களின் இந்த தீர்ப்பு குறித்து சொல்வதாக இருந்தால், 'கரண்டைக்கு கீழ் ஆடையணிதல் என்பது தரையில் இழுபட்டால் ஹராம். தரையை தொட்டால் ஹராமில்லை' என்பதுதான்.
மேலும், இவர்கள் வைத்துள்ள அகராதிப் படி பார்த்தால்  கூட 'இஸ்பால்' என்பது ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுதலாகும் என்பதுதானே! ஆனால் இவர்களோ அதையும் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை  என்று தீர்ப்பளிப்பது மனோ இச்சையின் வெளிப்பாடுதானே? தரையை தொடுவதற்கும், தரையில் இழுபடுவதற்கும் வேறுபாடு கூட விளங்க வில்லையா?
கரண்டைக்கு கீழே ஆடையணிதல் நரகத்திற்கு இட்டுச் செல்லும் செயல், பெருமைக்குரிய செயல், அல்லாஹ் விரும்பாத செயல் என்றெல்லாம் தெளிவாக இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சொல்லியிருக்க, அல்லாஹ்வின் தூதருக்கு மாற்றமாக தரையில் இழுபடாமல் ஆடை அணிந்தால் தவறில்லை என்று ஃ பத்வா வழங்கும் இவர்களை சமுதாயம் என்று அடையாளம் காணப் போகிறது?

அதெல்லாம் சரி! தொழுகைக்கு 'டவுசர்' போதும்; மற்ற நேரங்களில் தரையை தொடும் அளவுக்கு ஆடையணியனுமா?

-எண்ணம்; சகோதரர் பக்ருதீன்.
எழுத்து; முகவைஅப்பாஸ்.

புதன், 17 ஆகஸ்ட், 2011

பெண்கள் ஜியாரத் செய்யலாமா? பீஜே அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா? என்றால் செய்யக் கூடாது என்று அறிஞர் பீஜே உட்பட அவர் தரப்பு ஆதரவாளர்கள் பல காலமாக எழுத்திலும் பேச்சிலும் செய்துவந்ததை அனைவரும் அறிவோம். எந்த அளவுக்கென்றால் இறந்தவர்கள்  கபுருகளுக்கு பெண்கள் ஜியாரத்து செய்யலாம் என்று சொல்பவர்களை 'பறேலவிகள்' என்று கடுமையாக அன்று அந்நஜாத்தில்  விமர்சித்தார் அறிஞர் பீஜே. ஆனால் இன்று ஆய்வு என்ற பெயரில் பெண்கள் ஜியாரத் கூடும் என்ற ஃபத்வாவை வழங்கி இவரே 'பரேலவி'யாக காட்சி தருகிறார். பெண்கள் கப்ர் ஜியாரத் கூடும் என்பதற்கு இவர் வைத்துள்ள ஆதாரம்;

1 .ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் "அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அஸ்ஸலாமு அலா அஹ்ரித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்ரிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்" என்று சொல்" என்றார்கள்.
(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்ரிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங் களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)
நூல் முஸ்­லிம் 1774

இறந்தவர் கபுருகளுக்கு பெண்கள் ஜியாரத்து செய்ய இன்று பீஜே ஆதாரமாக காட்டும் மேற்கண்ட ஹதீஸ் குறித்து அந்நஜாத்தில் 1987 மே மாதம் செய்த  விமர்சனம் பாரீர்;

"இறந்தவர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்" என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். "மூமின்களாகிய கபுருவாசிகள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் நம்மில் முன் சென்றவர்களுக்கும் இனி வருபவர்களுக்கும் அல்லாஹ் மன்னிக்கட்டும்". (என்ற பொருள் கொண்ட வார்த்தைகளை) ஓதும்படி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள் : முஸ்லிம், நஸயீ

இது பெண்கள் ஜியாரத்தை ஆதரிப்பவர்களின் இரண்டாவது ஆதாரம். இதில் அவர்களின் கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை எவரும் உணரலாம். ஏனெனினல் "கபுரை ஜியாரத்து செய்யும் போது நான் என்ன ஓத வேண்டும்" என்று ஆயிஷா(ரழி) கேட்கவில்லை. மாறாக கபுராளிகளுக்காக (இறந்தவர்களுக்காக) நான் என்ன கூற வேண்டும் என்று தான் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த அந்த துஆவை வீட்டிலிருந்து கொண்டே இறந்தவர்களுக்காக நாம் ஒதலாம். கபுருக்கு சென்று ஜியாரத்து செய்வது பற்றி இதில் குறிப்பிடப்படவே இல்லை . மேலும் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸ் நீண்ட ஹதீஸின் இறுதிப் பகுதியாகும். அதன் முன் பகுதிகளையும் நாம் கவனித்தால் பெண்கள் ஜியாரத்து கூடாது என்ற முடிவுக்கே வரமுடியும். அந்த முற்பகுதியைப் பார்ப்போம்:

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-

என் இல்லத்தில் நபி(ஸல்) அவர்கள் தங்கி இருக்கும் போது தங்கள் மேலங்கியைக் களைந்து, செருப்பைக் கழற்றி, காலருக்கே வைத்து பூ, தங்கள் படுக்கையின் மீது ஒருக்களித்துப் படுத்தார்கள். அவர்கள் தீடிரென மேலங்கிளை அணிந்து கொண்டு, செருப்பை மாட்டிக் கொண்டு கதவைத் திறந்து கொண்டு வெளியேறினார்கள். நானும் முக்காடிட்டுக் கொண்டு உடலை மறைத்துக் கொண்டு அவர்களின் அடிச்சுவட்டைத் தொடர்ந்தேன். "பகீஃ" என்ற கபரஸ்தானுக்கு வந்தார்கள். அவர்களுக்காக துஆச் செய்தார்கள்.

அவர்கள் திரும்பும் போது நானும் திரும்பினேன், அவர்கள் வேகமாக நடக்க நான் (அதைவிட ) வேகமாக வந்தேன். (எப்படியோ) அவர்களுக்கு முன்பே வீடு வந்து ஒருக்களித்துப் படுத்தேன். உடன் அவர்களும் வந்தனர். என்னைக் கண்ட அவர்கள் "ஆயிஷா! ஏன் உனக்கு மூச்சிரைக்கிறது?" என்று கேட்டார்கள்'. (அதாவது வேகமாக விரைந்து வந்ததால் ஆயிஷா(ரழி) மூச்சு இறைக்கப்படுத்திருந்தார்கள்)

நான், ஒன்றுமில்லை என்று கூறினேன். காரணத்தை நீ கூறாவிட்டால் அல்லாஹ் எனக்கு அறிவிப்பான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் நடந்ததைக் கூறினேன். உடனே எனக்கு வேதனை ஏற்படும் விதமாக என் நெஞ்சில் அறைந்தார்கள், பிறகு தான் கபரஸ்தானுக்குச் சென்ற காரணத்தைப் பின்வருமாறு கூறினார்கள். ஜிப்ரில்(அலை) அவர்கள் வந்து "பகீஃ" கபரஸ்தானில் அடங்கப்பட்டவர்களுக்காக அங்கே வந்து பாவமன்னிப்புக் கோரும் படி உன் இறைவன் கட்டளையிட்டான் என்று கூறினார்கள். (அதனால் அங்கே சென்று அவர்களுக்காக மன்னிப்புக் கோரினேன்)

"அவர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்" என்று கேட்டேன்.

"முமீன்களாகிய கபுர்வாசிகள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் . நம்மில் முன் செல்பவர்களுக்கும், இனி வருபவர்களுக்கும் அல்லாஹ் மன்னிக்கட்டும் என்ற பொருள் கொண்ட வார்த்தையைச் சொல்!" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸின் முற்பகுதியை (எதிர்த்தரப்பினர் அதைக் குறிப்பிட மாட்டார்கள்) க்கவனித்தால் பெண்கள் ஜியாரத் கூடாது என்று கருதத்தான் ஆதாரமுள்ளது. அன்னை ஆயிஷா(ரழி) நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் சென்று விட்டு, அவர்களுக்குத் தெரியாமலே விரைந்து வந்து ஒன்றும் நடவாதது போல் இருந்து விடப் பார்க்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் கேட்ட போதும் "ஒன்றுமில்லை" என்றே பதில் கூறுகிறார்கள். இதிலிருந்தே பெண்கள் கப்ருகளுக்குச் செல்வதை நபி(ஸல்) அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நன்கு தெரியவரும். நடந்ததைக் கூறியதும் நெஞ்சில் வேதனை ஏற்படும் அளவுக்கு அறைகிறார்கள் என்ற வாசகமும் கவனிக்கத்தக்கது.

இந்த ஹதீஸிலும் பெண்கள் ஜியாரத் செய்யலாம் என்பதற்கு நேரடியான ஆதாரமும் இல்லை. சுற்றி வளைத்துக் கொண்டாவது அதற்கு ஆதாரம் உண்டா என்றால் அதுவுமில்லை. மாறாக கூடாது" என்று கருதத்தான் அதில் இடம் உண்டு.என்று அன்று சொன்ன அறிஞர் பீஜே இன்று அதை மறந்து அதே ஹதீஸை பெண்கள் ஜியாரத்துக்கு  ஆதாரமாக காட்டுகிறார் என்றால் இவரின் முரண்பாட்டை விளங்கிக் கொள்ளுங்கள்.

பீஜேயின் ஆதாரம் 2 ;

நீங்கள் கபுருகளை ஜியாரத்து செய்ய நான் ஏற்கனவே தடை விதித்திருக்கிறேன். இனி நீங்கள் கபுருகளை ஜியாரத் செய்யுங்கள். அறிவிப்பவர் : புரைதா(ரழி) நூல் : முஸ்லிம்

மேற்கண்ட ஹதீஸை குறித்து அன்று பீஜே செய்த விமர்சனம் பாரீர்;

பெண்களுக்கு ஜியாரத்து செய்வதை தடுக்கப்பட்டு தெளிவான பல ஹதீஸ்கள் வந்திருக்காவிட்டால் இவர்களின் இந்த வாதத்தில் நியாயமிருக்கும். ஆனால் தடை செய்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன. அவற்றை பார்ப்போம்.

"நபி(ஸல்) அவர்கள் கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை 'லஃனத்' செய்தனர்.

இது நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி. இந்த நபிமொழியை இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்), இமாம் திர்மிதீ, இமாம் இப்னுமாஜா ஆகிய மூவரும் மூன்று வழிகளில் அறிவிக்கின்றனர். அபுஹுரைரா(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி) ஹஸ்ஸான்(ரழி) ஆகிய மூன்று சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து இதை அறிவிக்கின்றர். இந்த மூன்று ஹதீஸ்களையும் மேற்கூறிய மூன்று இமாம்களும் தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர்.

மேலும் இமாம் நஸயீ, இமாம் இப்னு ஹிப்பான் இருவரும், இப்னு அப்பாஸ்(ரழி) மூலமாகவும், அபூஹுரைரா(ரழி) அவர்கள் மூலமாகவும் இந்த நபி மொழியை அறிவிக்கின்றனர்.

இமாம் அபூதாவுது அவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி) மூலமாக இதை அறிவிக்கின்றனர்.

இத்தனை வழிகளில் அறிவிக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தான் நாம் மேலே எடுத்துக் காட்டிய ஹதீஸ்.

இந்த ஹதீஸில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லாமல் பெண்கள் ஜியாரத் லஃனத்துக்கு உரியது. அதுவும் அல்லாஹ்வின் திருத்தூதரின் லஃனத்துக்கு உரியது என்பது தெளிவாக்கப்படுகிறது. -[அந்நஜாத் 1987 மே]

கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபியவர்கள் சபித்தார்கள் என்ற ஹதீஸ் இருப்பதால், நீங்கள் கபுருகளை ஜியாரத்து செய்ய நான் ஏற்கனவே தடை விதித்திருக்கிறேன். இனி நீங்கள் கபுருகளை ஜியாரத் செய்யுங்கள். என்ற ஹதீஸை வைத்து பெண்களுக்கு ஜியாரத்துக்கான  பொது அனுமதியாக கருத  முடியாது என்று அன்று சொன்ன  பீஜே, இன்று அந்த ஹதீஸை பலவீனம் என்கிறார்.

கப்ருகளை தரிசிக்கும் பெண்களை அல்லாஹ் சபிப்பானாக என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூஹீரைரா ர­லி அவர்கள் அறிவித்த செய்தி திர்மிதியில் 976 ல் இடம் பெற்றுள்ளது.

ஆனால் இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அம்ரு பின் அபீ ஸலமா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் தீர்பளித்திருக்கிறார்கள்.  

என்று கூறி  பெண்களுக்கு கப்ர் ஜியாரத் கூடும் என்கிறார். அன்று வழிகளில் அறிவிக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று சொன்னவர், இன்று தனது நிலைப்பாட்டிற்காக அந்த ஹதீஸ் பலவீனமானதாக கூறுகிறார். இப்படி ஒவ்வொரு மஸாயில் பிரச்சினையிலும் நாளுக்கொரு முரண்பாட்டை கடைபிடிக்கும் இவரை மக்களே புரிந்து கொள்ளுங்கள்.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடலாமா? பீஜே அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
திருக்குர்'ஆன் மொழிபெயர்ப்புகளில் பீஜே மொழிபெயர்ப்பு நீங்கலாக மற்ற எல்லா மொழிபெயர்ப்புகளிலும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கு மேலும் 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறு குறிப்பிடப்படுவது சரியா? என்ற கேள்விக்கு அந்நஜாத் இதழில் அறிஞர் பீஜே அன்று சொன்ன பதில் உங்கள் பார்வைக்கு;
 
'யாராக இருந்தாலும் ஆதாரம் கேளுங்கள்' என்று எழுதி இருந்தீர்கள்! குர்ஆனில் மக்கீ, மதனீ என்று கூறுவதற்கு ஆதாரம் உண்டா?
-மவ்லவி A.R. முஹம்மது அஸ்அது, அம்மாபட்டினம்.
 
இதில் என்ன ஆதாரம் கேட்கிறீர்கள்? மக்கீ என்றால் மக்காவில் இறங்கியது என்று பொருள் மதனீ என்றால் மதீனா வாழ்வில் இறங்கியது என்று பொருள். மக்கா வாழ்க்கையில் இறங்கிய வசனங்களை மக்காவில் இறங்கியது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்? பாரசீக நாட்டில் பிறந்த ஸல்மான் அவர்களை ஸல்மான் 'பார்ஸீ' என்று சொல்லவில்லையா? அவை எங்கே இறங்கின என்ற சரித்திரக் குறிப்பை உணர்த்துவதற்கு அப்படிக் கூறுகிறோம்.[1987 மே,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!  அந்நஜாத்]
 
மேற்கண்ட அறிஞர் பீஜேயின்  பதிலை நிதானமாக  படித்தால், ஒவ்வொரு அத்தியாயத்திற்கு மேலும் 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடுவது தவறு அல்ல என்றும், அதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை என்றும் கூறியதோடு,  மக்கா வாழ்க்கையில் இறங்கிய வசனங்களை மக்காவில் இறங்கியது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்? பாரசீக நாட்டில் பிறந்த ஸல்மான் அவர்களை ஸல்மான் 'பார்ஸீ' என்று சொல்லவில்லையா? என்று அறிவுப்பூர்வமாக வாதம் வைத்த அறிஞர் பீஜே, இன்று 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடுவது தவறு என்கிறார்.
 
''எனவே ஒரு அத்தியாயம் முழுவதும் மக்காவில் அருளப்பட்டது என்றோ, மதீனாவில் அருளப்பட்டது என்று குறிப்பிடுவதாக இருந்தால் அதற்கு தெளிவான ஆதாரங்கள்  இருக்க வேண்டும். இத்தகைய ஆதாரங்கள்  எதுவுமின்றியே மக்காவில் அருளப்பட்டவை  மதீனாவில் அருளப்பட்டவை  என்று அத்தியாயங்களின் துவக்கத்தில் அச்சிடுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது' என்கிறார்.
 
நன்றாக கவனிக்க வேண்டும் 'மக்கீ' அல்லது 'மதனீ'  என்று குறிப்பிடுவதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை என்றவர், இன்று தெளிவான ஆதாரம்  வேண்டும் என்கிறார். அன்று சரியாக தெரிந்ததை  மாற்ற இன்று இவர் எந்த ஆதாரத்தை கண்டு விட்டார்? ஏனிந்த முரண்பாடு? எல்லாம் மனோ இச்சையின் வெளிப்பாடு.  

எட்டுத்திக்கும் 'ஏகத்துவ' வெற்றி முரசம் ஒலித்திட வித்திட்ட பத்ர் யுத்தம்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும் சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த- வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!
அல்லாஹ்வின் திருத்தூதர்[ஸல்] அவர்கள், மக்காவில் ஏகத்துவக்கொள்கையை எடுத்தியம்பியபோது அதை ஏற்றுக்கொள்ளாத மக்கத்து இணைவைப்பாளர்கள் அருமை நபி[ஸல்] அவர்களுக்கும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கும் பல்வேறு கடுமையான துன்பங்களை தந்தனர். ஓரிறைக்கொள்கையை ஏற்ற ஒரே காரணத்திற்காக பல சஹாபாக்கள் உயிர்களையும் பறித்தனர் பாவிகள். ஒருகட்டத்தில் தங்களது ஈமானை பாதுகாக்கும் நோக்கில் அபிசீனியாவிற்கு சகாபாக்கள் சிலரும், பின்னால் நபி[ஸல்] அவர்கள் தலைமையில் மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்யும் நிலை ஏற்பட்டது. மதீனா வந்த பின்னும் எப்படியேனும் முஹம்மதையும் அவரது தோழர்களையும் ஒழிக்கவேண்டும் என்று அதற்கான தருணம் பார்த்துக்கொண்டிருந்தனர் மக்கத்து குறைஷிகள்.

இதற்கிடையில் மக்கத்து குறைஷிகளின் பொருட்கள் அடங்கிய வாகனக்கூட்டத்தை அபூசுப்யான்[ரலி] அவர்கள், [அபூ சுப்யான்[ரலி] அப்போது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை] சிரியாவிலிருந்து மதீனாவை அடுத்துள்ள பத்ர் மார்க்கமாக மக்காவை நோக்கி வழிநடத்தி சென்று கொண்டிருந்தார்கள். இந்த செய்தி நபி[ஸல்] அவர்களுக்கு எட்டியவுடன், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக நம்முடைய சொத்து பத்துக்களை இழந்து நாடு துறக்கும் நிலைக்கு ஆளாக்கிய குறைஷிகள் இந்த செல்வங்களும் கிடைக்கப்பெற்றால் இன்னும் வலிமை பெற்று இஸ்லாத்திற்கு எதிராக களம் காண்பார்கள். எனவே இந்த வாகன கூட்டத்தை வழிமறிக்கவேண்டும் என்ற ரீதியில் நபித்தோழர்களிடம் ஆலோசனை நடத்தினார்கள். நபியவர்களின் இந்த ஆலோசனையை அறிந்துகொண்ட அபூசுப்யான்[ரலி] அவர்கள், முஹம்மதும் அவரது தோழர்களும் உங்களது வணிகபொருட்களை அபகரிக்க திட்டம் தீட்டியுள்ளனர். எனவே உங்களின் பொருட்களை பாதுகாக்க படை திரட்டி வாருங்கள் என்று ழம்ழம் இப்னு அல் கிபாரி என்பவன் மூலமாக குறைஷிகளுக்கு தூது அனுப்பிவிட்டு, தனது பயணத்தின் பாதையை மாற்றி பத்திரமாக பொருட்களுடன் மக்கா வந்து சேர்ந்தார். [இப்னு ஹிஷாம்]

இதற்கிடையில் குறைஷிகள் படை மக்காவிலிருந்து கிளம்பி பத்ர் அருகே நெருங்கிவிட்டிருந்தனர். இதையறிந்த அபூசுப்யான்[ரலி] அவர்கள், தானும், உங்களது பொருட்களும் பத்திரமாக மக்கா வந்தடைந்து விட்டோம். எனவே உடனடியாக திரும்பி வாருங்கள் என்று குறைஷிகூட்டத்திற்கு அபூசுப்யான்[ரலி] அவர்கள் தகவல் அனுப்பினார். சில கோத்திரத்தார் அபூசுப்யான்[ரலி] அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மக்கா திரும்ப எஞ்சிய படைகளுடன் அபூஜஹல் மறுத்து பிடிவாதமாக பத்ரை வந்தடைந்தான்.[இப்னு ஹிஷாம்]

மறுபுறம் அபூசுப்யானின் வாகன கூட்டத்தை முற்றுகையிட ஆயத்தமாகிக் கொண்டிருந்த நபி[ஸல்] அவர்களுக்கு, குறைஷிகளின் படை மதினாவை நோக்கி பத்ரில் மைய்யம் கொண்டுள்ள தகவல் கிடைக்கிறது. அபூசுப்யான் மக்காவை சென்றடைந்த தகவல் நபி[ஸல்] அவர்கள் அறியவில்லை. எனவே இப்போது வாகனக்கூட்டத்தை முற்றுகைஇடுவதா? அல்லது குறைஷிகளை எதிர்த்து போர் புரிவதா? என்ற இரு நிலைமைகள் பற்றி நபி[ஸல்] அவர்கள் தனது தோழர்களிடம் ஆலோசனை செய்கிறார்கள். அப்போது அபூபக்கர்[ரலி], உமர்[ரலி] போன்ற பெரும்பாலான நபித்தோழர்கள் போர் செய்வதையே வலியுறுத்தினார்கள்.[முஸ்லிம்]
மேலும் அல்லாஹ்,
وَإِذْ يَعِدُكُمُ اللّهُ إِحْدَى الطَّائِفَتِيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ وَيُرِيدُ اللّهُ أَن يُحِقَّ الحَقَّ بِكَلِمَاتِهِ وَيَقْطَعَ دَابِرَ الْكَافِرِينَ
(அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூ ஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.
(8:7)

என்ற வசனம் மூலமாக இரண்டில் ஒன்றை அது எதுவாக இருந்தாலும் வெற்றி உண்டு. எனினும் அல்லாஹ் காபிர்களை வேரறுக்கவே நாடுகிறான் என்ற வசனம் தெளிவாக்குகிறது. இறுதியாக போர் செய்யும் முடிவுக்கு வந்து நபி[ஸல்] அவர்களின் படை பத்ரில் மைய்யம் கொள்கிறது. அன்று இரவில் நபி[ஸல்] அவர்களுக்காக அமைக்கப்பட கூடாரத்தில் நபி[ஸல்] அவர்கள் அல்லாஹ்விடம் மனம் உருகி பிரார்த்தித்தார்கள்;

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;
 நபி(ஸல்) அவர்கள் பத்ருப்போரின்போது தம் கூடாரமென்றில் இருந்தபடி, '(இறைவா! எங்களுக்கு வெற்றியளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதி மொழியையும், உன் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) உன்னிடம் கோருகிறேன். இறைவா! (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் இனி ஒருபோதும் (உலகில்) இருக்கப் போவதில்லை' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு, 'போதும்! இறைத்தூதர் அவர்களே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள்' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கவச உடையில் இருந்தார்கள். பிறகு, 'இந்த (இறைநிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும்' எனும் (திருக்குர்ஆன் 54:45,46) வசனங்களை ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள். [புஹாரி எண் 4877 ]

இறை நிராகரிப்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி நபியவர்களுக்கு புது தெம்பை தந்தது. அதை அதிகரிக்கும் வகையில் சகாபாக்களின் ஒத்துழைப்பும் இருந்தது.
மிக்தாத் இப்னு அஸ்வத் -ரலி - அவர்கள் கூறினார்கள்:)
நான், நபி(ஸல்) அவர்கள் இணைவைப்போருக்கெதிராகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது சென்றேன். அப்போது நான், '(இறைத்தூதர்) மூஸாவின் சமுதாயத்தார், 'நீங்களும் உங்களுடைய இறைவனும் போய்ப் போரிடுங்கள்' என்று (நகைப்பாகக்) கூறியது போன்று நாங்கள் கூற மாட்டோம். மாறாக, நாங்கள் தங்களின் வலப்பக்கமும், இடப்பக்கமும், முன்னாலும், பின்னாலும் நின்று (தங்கள் எதிரிகளிடம்) போரிடுவோம்" என்று சொன்னேன். (இதைக் கேட்டதும்) நபி(ஸல்) அவர்களின் முகம் ஒளிர்ந்ததை கண்டேன். (என்னுடைய சொல்) அவர்களை மகிழச் செய்தது. [புஹாரி எண் 3952 ]

இறுதியாக போரின் தொடக்கத்தில் முஸ்லிம்கள் தரப்பில் அதிகபட்சமாக 319 வீரர்களும், குறைஷிகள் தரப்பில் ஆயிரம் பேர்களும் இருந்தனர்.[முஸ்லிம்]
அல்லாஹ்வின் உதவிகள்;
  • போருக்கு முன்பாக சகாபாக்களை அமைதிப்படுத்தும் வகையில் தூக்கத்தையும்-மழையையும்வழங்கி அருளியது.
  • அணியணியாக திரளும் ஆயிரம் வானவர்களை ஜிப்ரீல்[அலை] அவர்கள் தலைமையில் அனுப்பி உதவியது.
இறுதியாக ரமலான் பிறை 17 அன்று நடந்த போரில் முஸ்லிம்கள் தரப்பில் 14 பேர் ஷகீதானார்கள். காபிர்கள் தரப்பில் 70 நபர்கள் கொல்லப்பட்டார்கள். அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மாபெரும் வெற்றியை தந்தான். அபூஜஹல் உள்ளிட்ட முக்கிய குறைஷி தலைவர்கள் அனைவரும் இதில் கொல்லப்பட்டனர். இதில் அபூஜஹல், முஆத், முஅவ்வித் என்ற இரு இளைஞர்களால் இழிவாக கொல்லப்பட்டான்.

இந்த பத்ர் போரில் பெறவேண்டிய படிப்பினைகள்;
  • இறை நிராகரிப்பாளர்கள் வசதி வாய்ப்புகளோடும்- வலிமையோடும் இருந்தாலும் அவர்களுக்கு இம்மையிலும் இழிவுண்டு. மறுமையிலும் மகத்தான வேதனையுண்டு.
  • இஸ்லாத்தைகாக்க சிறிய படைகிளம்பினாலும், பென்னம் பெரிய படையை அது இறையருளால் வெல்லும்.
  • சிலர் கூறுவது போன்று, எதிரியின் எண்ணிக்கையில் பாதியளவு இருந்தாலே போர் கடமை என்பது தவறாகும். ஏனெனில், இந்த போரில் எதிரியின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி நபர்களை கொண்டே போர் தொடுத்து அதில் வெற்றியும் பெறப்பட்டுள்ளது. இந்த போர் மட்டுமல்ல நபி[ஸல்] அவர்களின் எந்த போரிலும் எதிரிகளின் தலையை எண்ணி பின்பு போருக்கு சென்றதில்லை. எனவே எண்ணிக்கை என்று சொல்லி முஸ்லிம்களிடமிருந்து போர் சிந்தனையை அகற்றுபவர்களின் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.
  • முறையான வாகனமும்-வலுவான ஆயுதமும் இன்றி, குறைவான எண்ணிக்கையில் இருந்த போதும் நிறைவான இறையச்சத்தால் வெற்றிவாகை சூடிய அந்த மாவீரர்களின் வழிமுறையில், 'இஸ்லாத்தின் லட்சியம் காக்கும் நிலை வருமாயின்,எங்களின் இன்னுயிரையும் இரையாக்குவோம்' என்ற சிந்தனை நம் உள்ளத்தில் ஆழமாக பதியவேண்டும்.

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா? பீஜே அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு அந்நஜாத் செப்டம்பர் 1986 இதழில் அறிஞர் பீஜே அவர்கள் அளித்த பதில்;
 
கேள்வி: நபி(ஸல்) அவர்களுக்கே சூனியம் செய்யப்பட்டதாக ஒரு ஆலிம் சொன்னாரே! அது உண்மையா? உண்மை என்றால் மன உறுதி உள்ளவர்களையும் அது பாதிக்குமா?
M. சேகு இஸ்மாயில் , தொண்டி.
 
பதில்: நபி(ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி புகாரி உட்பட பல ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது. அது உண்மைதான். நபி(ஸல்) அவர்களுக்கு இவ்வாறு ஏற்படுத்தியதன் மூலம் நாம் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள முடிகின்றது. சூனியம் என்று சொல்லிக் கொண்டு கப்ருகளுக்கு செல்பவர்கள், "அங்கே சூனியம் நீக்கப்படும்" என்று கூறுவது பொய் என்பதை இதன் மூலம் புரியலாம். நபி(ஸல்) அவர்களே தனக்கு வைக்கப்பட்ட சூனியத்திலிருந்து தானே தப்பித்துக் கொள்ள முடியவில்லை எனும் போது மற்ற நல்லடியார்களால் என்ன செய்ய இயலும்? பலக், நாஸ் ஆகிய இரு சூராக்களும் போதிக்கின்ற அடிப்படையில் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருங்கள்! அது தான் நாம் செய்ய வேண்டியது.
 
நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது உண்மைதான் என்று அன்று சொன்ன அறிஞர் பீஜே, இன்று நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்படவில்லை என்று மறுக்கிறார். பார்க்க; http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/357/
 
நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதற்கு ஆதாரமாக அன்று அவர் ஏற்றுக்கொண்ட புகாரி உள்ளிட்ட ஹதீஸ்கள் இன்று பலவீனமாகி விட்டதால் மறுக்கிறாரா என்றால் இல்லை. அந்த  ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரப் பூர்வமனவைதான் என்று இன்றும் சொல்கிறார். பிறகு மறுப்பதற்கான முகாந்திரம் என்ன? இந்த ஹதீஸ்கள்  எல்லாம் குர்'ஆனோடு மோதுகிறது என்கிறார். 1986 ல் குர்'ஆனோடு மோதாத ஹதீஸ்கள், 2002 ல் 'பிரேக்' பிடிக்காமல் குர்'ஆனோடு மோதி விட்டதா?  மேலும் குர்'ஆனோடு நபிமொழி ஒரு காலத்திலும் மோதாது என்று இவரே வழங்கியுள்ள ஃபத்வாவை படிக்க;http://mugavai-abbas.blogspot.com/2011/08/blog-post_14.html
இப்படி மார்க்கத்தை இஷ்டத்திற்கு வளைக்கும் இவரது செயலுக்கு ஒரே ஆதாரம் வழக்கம் போல மனோஇச்சை தானே. சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

திருக்குர்ஆனோடு நபியின் கூற்று முரண்படுமா? பீஜே; அன்றும்-இன்றும்!


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
திருக்குர்'ஆனோடு ஹதீஸ் ஒரு காலத்திலும் முரண்படாது என்று அறிஞர் பீஜே அன்று சொன்னது;
 
கேள்வி: குர்ஆன் வசனங்கள் ஸஹீஹான ஹதீஸ்களோடு சில நேரங்களில் முரண்படுகிறதே! உதாரணத்திற்கு "இறந்தவர்களை நீங்கள் செவியேற்கச் செய்ய முடியாது", "கப்ரில் உள்ளவர்களை கேட்க வைப்பவராக நீர் இல்லை" என்ற குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமாக நபி(ஸல்) அவர்கள் பத்ருப் போர்க்களத்தில் எதிரிகளின் சடலங்களைப் பாழடைந்த கிணற்றுக்குள் போட்டு அவர்களை நோக்கி "உங்களிறைவன் உங்களுக்கு வாக்களித்ததைப் பெற்றுக் கொண்டீர்களா?", என்று கூறிய போது உமர்(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இறந்தவர்களுடன் பேசுகிறீர்களே" என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "அவர்கள் இப்போது கேட்கிறார்கள்" என்று கூறினர். இங்கே ஆயத்தும் ஹதீதும் முரண்படுகிறதல்லவா?

O.P. அப்துல் மஜீது, சென்னை .

பதில்: அல்லாஹ்வின் கூற்றோடு அவனது தூதரின் கூற்று ஒரு காலத்திலும் முரண்படாது. மேலோட்டமாகப் பார்த்தால் சிலருக்கு அப்படித் தோன்றலாம். சற்று சிந்தித்துப் பார்த்தால், குர்ஆன் வசனத்தை விளக்கம் செய்யக் கூடியதாகவே ஹதீஸ் அமைந்திருக்கும். முதலில் நீங்கள் குறிப்பிட்ட குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம். "அல்லாஹ், தான் நாடியவர்களுக்குக் கேட்கச் செய்பவராக இல்லை" (அல்குர்ஆன்)

இதுதான் அந்தக் குர்ஆன் வசனம். இந்த வசனத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ் நாடியவர்களுக்குக் கேட்க செய்கிறான்" என்று குறிப்பிடுவதன் மூலம் இயற்கையாக அவர்களால் செவியுற முடியாது. ஒரு சில சந்தர்ப்பங்களில் அல்லாஹ் நாடினால் செவியேற்கச் செய்வான் என்பதை உணர முடிகின்றது. அதற்கு விளக்கமாக நபி(ஸல்) அவர்கள் கூறிய சொல் அமைந்துள்ளது. "அவர்கள் இப்போது நான் சொல்வதைச் செவியேற்கிறார்கள" என்ற சொல்லை, நீங்கள் உற்று நோக்குங்கள்! 'இப்போது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதன் மூலம் எப்போதும் அவர்களால் செவியுற முடியாது, என்பதை விளங்கலாம். அந்தக் காபிர்கள் கப்ரில் வேதனையை மேலும் அதிகமாக்குவது இறைவனின் விருப்பமாக இருக்கலாம். இதை நன்றாகப் புரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம். நீங்கள் அணிந்துள்ள செருப்பு உங்கள் பேச்சைக் கேட்காது. ஆனால், அல்லாஹ் நாடினால் அதையும் செவியுறச் செய்ய முடியும் அல்லவா? ஒரு சந்தர்ப்பத்தில் "அல்லாஹ் தன் நாட்டப்படி செருப்பைச் செவியுறச் செய்கிறான்" என்று வைத்துக் கொள்வோம். அதிலிருந்து அந்த செருப்பு எப்போதும் நீங்கள் சொல்வதை செவியேற்றுக் கொண்டே இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த பத்ரு நிகழ்ச்சி அது போன்ற ஒரு அற்புத நிகழ்ச்சியாகும். அல்லாஹ் நாடினால், எது, எதையும் கேட்க இயலாமல் இருக்கின்றதோ அதனையும் சில நேரங்களில் கேட்கச் செய்து தனது ஆற்றலை வெளிப்படுத்துகின்றான். இங்கே முரண்பாடு எதுவுமில்லை. விளக்கமாகத்தான் அமைந்துள்ளது
[மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன்அந்நஜாத் செப்டம்பர்,1986 செப்டம்பர்,ஐயமும்! தெளிவும்!!]
அல்லாஹ்வின் கூற்றோடு அவனது தூதரின் கூற்று இன்று மட்டுமல்ல ஒரு காலத்திலும் முரண்படாது என்று அன்று ஆணித்தரமாக முழங்கிய அறிஞர், குர்'ஆனோடு நேரடியாக மோதுவது போன்ற ஹதீஸுக்கு விளக்கமளித்து குர்'ஆணுடன் நபிமொழி ஒரு காலத்திலும் முரண்படாது என்று நிலைநாட்டியவர்,  இன்று என்ன சொல்கிறார்?
 
''மிகச்சில ஹதீஸ்கள் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அதன் கருத்து குர்'ஆனுக்கு மாற்றமாக இருப்பதால் நபி[ஸல்] அவர்கள் இதை கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்கிறார்.
 
ஏனிந்த மாற்றம்? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த மாற்றம்? 'குர்'ஆணுடன்  மோதுவது போன்ற கருத்துடைய ஹதீஸ் வந்தால் அது நான் சொல்லியதல்ல அதை புறக்கணியுங்கள் என்று நபியவர்கள் சொன்ன ஹதீஸை கண்டதால் வந்த மாற்றமா? இல்லை சகோதரர்களே! மனோ இச்சையால் வந்த மாற்றம் மார்க்கத்தை வளைக்குமாறு இந்த அறிஞரை தூண்டியுள்ளது. சிந்திப்பவர்கள் இவரின் முரண்பாட்டை விளங்கிக் கொள்வார்கள்.
 
 

சனி, 13 ஆகஸ்ட், 2011

இந்திய சுதந்திரமும்- இஸ்லாமிய சுதந்திரமும்!

ன்னும் இரு தினங்களில் இந்தியாவின் 65 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது . சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் படு வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில்,சுதந்திர தினத்தை முன்னிட்டு சில முஸ்லிம் சகோதரர்கள் தங்களுக்கிடையே வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறார்கள். இந்த மாதிரி வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வது சரியா என்றால், இல்லை என்பதுதான் சரியாகும். முஸ்லிம்களை பொறுத்தவரையில் கொண்டாடக்கூடிய திருநாள்கள் இரண்டுமட்டுமே!
1 . ஈகைத்திருநாள்.
2 .தியாகத்திருநாள்
.
இவையல்லாத எந்த ஒரு நாளையும் நபி[ஸல்] அவர்கள் கொண்டாடியதாகவோ, வாழ்த்துக்களை பரிமாரிக்கொண்டதாகவோ ஹதீஸ்களில் காணமுடியாது. அவ்வளவு ஏன்! இதே சுதந்திரம் சம்மந்தப்பட்டதுதான் மக்கா வெற்றி. மக்காவிலிருந்து முஷ்ரிக்கீன்களின் தொல்லை காரணமாக மதீனா வந்த நபி[ஸல்] அவர்கள், சில ஆண்டுக்களில் மக்காவை நோக்கி படையுடன் புறப்பட்டு சென்று கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமின்றி மக்காவை, தன் சொந்த மண்ணை முஷ்ரிக்கீன்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்டு தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்தார்களே! அந்த புனித நகரம் சுதந்திரம் பெற்ற நாளை நபி[ஸல்] அவர்கள் கொண்டாடியது உண்டா? இல்லையே! நாட்டை நேசிப்பதை காட்டுவதற்காக சுதந்திரதினத்தை கொண்டாடுகிறோம் என்று சிலர் கூறுகிறார்கள். ஒரு முஸ்லிம் முதன்முதலில் நேசிக்கவேன்டியது புனித பூமியான மக்கா அல்லவா? அப்படியாயின் மக்கா வெற்றி நாளை கொண்டாடாதது ஏன்? நாட்டை நேசிப்பது என்பது வெறுமனே வாழ்த்துகளை கூறுவதோ, அல்லது அன்றைய தினம் கிடைக்கும் விடுமுறையை அனுபவிப்பதோ, அல்லது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுதந்திரப்போராட்ட தியாகிகளான[?] கூத்த்தாடிகளின் நிகழ்ச்சிகளை ரசிப்பதோ அல்ல. மாறாக நாட்டை நேசிப்பது என்பது நாட்டிற்கு ஆபத்தென்றால் நாட்டை காப்பதில், நாட்டை சீரழிக்கும் தீமைகளை நாட்டிலிருந்து களைவதில் உறுதியாக முன்வருவதுதான் உண்மையான நேசமாகும்.அடுத்து இந்தியாவில் சுதந்திரம் எந்த அளவுக்கு உள்ளது என்பதையும்- இஸ்லாம் வழங்கும் சுதந்திரத்தையும் பார்ப்போம்.

இந்தியக்கொடியில் மூவர்ணம் இருக்கும். அதாவது பச்சை-வெள்ளை-ஆரஞ்சு. இந்த கலர்கள் மும்மதத்தை குறிக்கும் என்று சிலர் கூற கேட்டதுண்டு. அதாவது பச்சை முஸ்லிம்களையும், வெள்ளை கிறிஸ்தவர்களையும், ஆரஞ்சு[காவி] இந்துக்களையும் குறிக்கும் என்று! இப்படி கொடியில் மும்மதமும் சமம் என்று காட்ட முற்படுபவர்கள் மும்மதத்தினரும் சமமான சுதந்திரத்துடன்தான் வாழ்கிறார்களா என்பதை கவனிக்க தவறிவிட்டனர்.

முதலாவது இந்து மதத்தை எடுத்துக்கொள்வோம். இந்து மதத்தை சார்ந்த ஒரு பிரிவினரை தாழ்த்தப்பட்டவர்களாக-தீண்டத்தகாதவர்களாக கருதுவதை பார்க்கிறோம். இவ்வாறு பிறப்பின் அடிப்படையில் தனது மதத்தை சார்ந்தவர்களையே பேதம் பார்க்கும் இந்த செயல் பாமரர்கள் மட்டுமன்றி படித்தவர்கள்- உயர் பதவி வகித்தவர்களிடம் கூட இருந்ததை நாம் கடந்த கால நிகழ்வுகளில் காணமுடியும். மத்திய அமைச்சராக இருந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த ஒருவர், காந்தியின் சிலையை திறந்துவைத்தார். இவர் திறந்துவைத்ததால் அந்த சிலை தீட்டுப்பட்டு விட்டதாக ஒரு கூட்டம் கருதி கங்கை நீரை கொண்டுவந்து சிலையை கழுவியதாக நாம் அறிந்துள்ளோம். அவ்வளவு ஏன் ? தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று கல்வியிலும்- உயர்பதவிகளிலும் உயர்வான நிலையை அடைந்துவிட்டாலும், இன்னும் சமத்துவபுரங்கள் என்ற பெயரிலும், சேரி என்ற பெயரிலும் இவர்களை சமூகம் ஒதுக்கித்தானே வைத்துள்ளது. இதில் எங்கே வாழ்கிறது சுதந்திரம்?

இப்போது இஸ்லாம் வழங்கியுள்ள சுதந்திரம் பாரீர்;

'நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அருகிலுள்ள ) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: 'அபூதர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்" என அபூதர் கூறினார்" என மஃரூர் கூறினார்.[புஹாரி எண் 30 ]

எந்த வித உரிமையும் இல்லாத அடிமையை நபித்தோழர் அபூதர்[ரலி] அவர்கள் திட்டியதற்காக, அபூதர்[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் கண்டிக்கிறார்கள். அன்றிலிருந்து அந்த அடிமையை தனது சகோதரன் போல பாவித்து தான் அணியும் ஆடை போன்றே தனது அடிமைக்கும் அணிவித்து மகிழும் அளவுக்கு அபூதர்[ரலி] அவர்களை மாற்றியது எது இஸ்லாம் அல்லவா? மனிதனுக்கு மத்தியில் ஏற்ற தாழ்வை நீக்கியது இஸ்லாமிய சுதந்திரமல்லவா? இவை எல்லாவற்றிற்கும் மேலாக கருப்பு நிற ஹபஷி அடிமையாக இருந்த பிலால்[ரலி] அவர்களை தனது காரியதரிசியாக-தோழராக- தொழுகைக்கு அழைக்கும் அழைப்பாளராக ஆக்கி, அங்கும் வர்ண பேதத்தை ஒழித்த நபி[ஸல்] அவர்கள் ஒரு முன்மாதிரியல்லவா?

அடுத்து கிறிஸ்தவர்கள்-முஸ்லிம்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கிரார்களா? என்றால், சுதந்திரமாக அவர்கள் இருப்பதுபோல் தோற்றமளித்தாலும் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு நியாயம் கிடைப்பது அரிதாகவே உள்ளது. ஒரிசாவில் கிறிஸ்தவ பாதிரியார் தனது மூன்று பிள்ளைகளுடன் உயிரோடு இந்துத்துவாக்களால் கொளுத்தப்பட்டார். கொளுத்தியவனுக்கு 'தேச பக்தர்' என்று நற்சான்று அளித்தார் அன்றைய துணைப்பிரதமர். இன்றுவரை இந்த அநீதிக்கு நியாயம் வழங்கப்பட்டுள்ளதா?

மும்பை-கோவை குண்டுவெடிப்பு குற்றங்களை செய்தார்கள் என்று முஸ்லிம்கள் சிலருக்கு தண்டனை கூட விதிக்கப்பட்டது. வரவேற்கிறோம். ஆனால், அதே மும்பை- கோவையில் முஸ்லிம்களை கருவறுத்த சங்க்பரிவார கும்பல் ஜாலியாக நடமாடுகிறதே இதுதான் இந்திய சுதந்திரம். குஜராத்தில் கோத்ரா ரயிலை எரித்தார்கள் என்ற குற்றச்சாட்டை கூறி பல நூறு முஸ்லிம்களை பொடாவில் தள்ளியது குஜராத் அரசு. அதே குஜராத்தில் சங்க்பரிவார கும்பலால் கற்பழிக்கப்பட்ட, உயிரோடு கொளுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்கப்பட்டதா? இல்லையே! மாறாக பெயருக்கு கைது செய்து வைக்கப்பட்டிருந்த சிலரையும் சமீபத்தில் கோர்ட் விடுதலை செய்கிறது. ஆக பட்டபகலில் பலபேர் சாட்சியாக முஸ்லிமை ஒருவன் கொன்றால் அவன் ஜாலியாக நடமாடலாம். அவனயோ சட்டம் ஒன்றும் செய்யாது இதுதானே இந்திய சுதந்திரம்! இப்போது நீதி விஷயத்தில் இஸ்லாமிய சுதந்திரத்தை பாருங்கள்;

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;
ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம் 'உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்க மேன்மை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று ஏதோ ஒரு விஷயத்தில் சத்தியமிட்டுப் பேசினார். அதற்கு அந்த யூதர், 'உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று (பதிலுக்கு) கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்ட) அந்த முஸ்லிம் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். உடனே அந்த யூதர், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து தமக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்தவற்றைத் தெரிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (அந்த முஸ்லிமை அழைத்து வரச் சொல்லி) 'மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள்.[நூல்;புஹாரி]

இந்த செய்தியை நன்றாக பாருங்கள்; அடித்தவர் ஒரு முஸ்லிம் , அடிவாங்கியவர் ஒரு யூதர். வழக்கு நபி[ஸல்] அவர்களிடம் வந்தபோது, தன்னை உயர்த்திக்கூறி தானே யூதனை முஸ்லீம் அறைந்தார் என்று முஸ்லிமுக்கு நபியவர்கள் 'சப்போர்ட்' செய்யவில்லை. மாறாக யூதர் எந்த மூஸா நபியை சிறந்தவர் என்று சொன்னாரோ, அதே மூஸா நபியைவிட நான் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள் என்று தனது தோழருக்கு அதாவது முஸ்லிமுக்கு அறிவுரை வழங்கினார்கள் என்றால் இஸ்லாம், நீதி விசயத்தில் நீதியை மட்டுமே பார்க்குமேயன்றி சாதியை பார்க்காது இதுதான் இஸ்லாமிய சுதந்திரம்.

காந்தி சொன்னார், ஒரு பெண் நள்ளிரவில் தன்னந்தனியாக சுதந்திரமாக நடமாடும் நாளே உண்மையான சுதந்திர நாள் என்று! இன்று நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கணக்கிலடங்குமா? கிரிமினல்கள்தான் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறார்களா என்றால் சட்டத்தை நிலை நாட்டும் பொறுப்பில் உள்ள காவல்துறையினரில் சிலரும்-ராணுவத்தில் சிலரும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவதை பார்க்கும்போது, எங்கே வாழ்கிறது சுதந்திரம்? நபி[ஸல்] காலத்தில் வழிப்பறி பற்றி புகார் கூறப்பட்டபோது வழிப்பறி செய்பவர்களுக்கு மாறுகால் மாறுகை வாங்கப்படும் என்ற தண்டனையை அறிவித்துவிட்டு நபி[ஸல்]சொன்னார்கள்; ஹீரா எனும் இடத்திலிருந்து கஃபா வரை ஒரு பெண் தன்னந்தனியாக பயணித்து அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் சென்றுவருவதை பார்பீர்கள் என்றார்கள்.[புஹாரி] அந்த நிலையை உருவாக்கியும் காட்டினார்கள். இதுதான் இஸ்லாமிய சுதந்திரம்.

அட! இதையெல்லாம் விடுங்கள். சுதந்திர தினத்தன்று சுதந்திரமாக பிரதமரும்-முதல் அமைச்சரும் கொடியேற்ற முடிகிறதா? தமிழகத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்புடன் முதல்வர் கொடியேற்றுகிறார் எனில், சுதந்திரத்தை புரிந்து கொள்ளலாம். குவைத் போன்ற அரபு நாடுகள் சிலவற்றில் சுதந்திரதினம் கொண்டாடுகிறார்கள். இங்கு எந்த அடுக்கு பாதுகாப்பும் இல்லை எந்த பயமும் இல்லாமல் கொண்டாடுகிறார்கள். எனவே மக்களின் நிம்மதியான பயமற்ற வாழ்க்கை உறுதி செய்யப்பட்டு, அனைத்து மதத்தவரும் சமமாக பாவிக்கப்பட்டு, அனைவருக்கும் சமநீதி வழங்கப்படும் நாளே சுதந்திரதினம். அந்த நாளை எதிர்நோக்கி இறைவனிடம் கையேந்துவோம்.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தொடை மறைக்க வேண்டிய பகுதியா..? பீஜே அன்றும் இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
2005 ஆம் ஆண்டு 'தொடை தெரிய டவுசர் போட்டு தொழலாம்' என்ற ஃபத்வாவை வழங்கி புரட்சி செய்த மவ்லவி பீஜே அவர்கள், தொடையை மறைப்பது குறித்து i987 ஜூன் மாதம் அந்நஜாத் இதழில் அபூ  முஹம்மத் என்ற பெயரில் இஸ்லாத்தில் புறத்தோற்றம் -6  என்ற தொடரில் எழுதியவை உங்கள் பார்வைக்கு;
 

மறைக்கப்பட வேண்டியவை

"ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை மறைக்க வேண்டும்" என்பதைத்தவிர மற்ற உறுப்புக்களை கட்டாயம் மறைக்க வேண்டியதில்லை. அதற்குரிய ஆதாரங்களைக் கீழே காண்போம்.

"உங்களில் எவரேனும் தன்னுடைய வேலைக்காரனுக்கோ, அடிமைக்கோ மணமுடிக்கும் காலம் வரும்போது தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியையும், முழங்காலுக்கு மேலு உள்ள பகுதியையும் பார்க்க வேண்டாம்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்ரு இப்னு ஷுஐபு(ரழி) நூல் : அபூதாவூது

தனது ஆண் அடிமையின் தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியை முழங்காலுக்கு மேலே உள்ள பகுதியைக் கூட பார்க்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்து அந்தப் பகுதிகளை ஆண்கள் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பது தெளிவு.

குறிப்பாக தொடைப் பகுதியைக் கட்டாயம் மறைக்க வேண்டும் "அலியே! உன் இரு தொடைகளையும் நீ வெளிப் படுத்தாதே!" என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அலி(ரழி) நூல்கள் : அபூதாவூது, இப்னுமாஜா

"மஃமர்(ரழி) என்பவரை நபி(ஸல்) அவர்கள் கடந்து செல்லும்போது அவரது இரு தொடைகளும் திறந்திருக்கக் கண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் மஃமரே! உன் தொடைகளை மூடிக்கொள் ஏனெனில் இரு தொடைகளும் மறைக்கப் படவேண்டிய பகுதிகளாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மது இப்னு ஐஹ்ஷ்(ரழி) நூல் : அஹ்மத்

இதுபோன்ற கருத்துக்களைக் கொண்ட பல ஹதீஸ்கள் உள்ளன. எனவே ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை அவசியம் மறைக்கப் கடமைப் பட்டுள்ளனர். குறிப்பாகத் தொடை பகுதியை அவசியம் மறைக்க வேண்டும்.

இவ்வாறு மறைக்க வேண்டும் என்ற விதியிலிருந்து இல்லற நேரத்தில் மனைவியுடன் தனித்திருக்கும் நேரம் விலக்குப் பெறும். அந்த நேரத்தில் மறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

"அல்லாஹ்வின் தூதரே! எங்கள் மறைவான உறுப்புக்களை எந்த நேரத்தில் மறைக்க வேண்டும்? எந்த நேரத்தில் மறைக்காது விட்டு விடலாம்? என்று நான் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள் "உன் மனைவியிடமும் உன் அடிமைப் பெண்ணிடமும் தவிர மற்ற நேரங்களில் மறைவுப் பகுதிகளை மறைத்துக் கொள்!" என்றனர். எங்களில் எவரும் தனித்திருக்கும் போதுமா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "(ஆம்! வெட்கப் படுவதற்கு அல்லாஹ் மிகவும் தகுதியானவன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பஹ்ல் இப்னு ஹகீம்(ரழி)

நூல்கள் : அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா

இதுதவிர மற்ற நேரங்களில் மேற்குறிப்பிட்ட பகுதிகளை அவசியம் மறைத்தாக வேண்டும்.

 
தொப்புளிலிருந்து முழங்கால் வரை மறைக்க வேண்டும் மறைக்கப்பட்ட வேண்டியவையே என்று அன்று ஆணித்தரமாக ஆதாரப்பூர்வமாக சொன்ன அறிஞர் பீஜே,  அன்று அவர் சொன்னதற்கு மாற்றமாக இன்று அந்தர் பல்டியடித்து தொடை தெரிய தொழலாம் என்று ஃபத்வா வழங்குகிறார். முன்பு எழுதியவை எல்லாம் மாயமாய் மறைந்து விடும் என்று எண்ணி விட்டாரா? இப்படி நாம் கேட்டவுடன் அன்று சரியென தெரிந்த பல விஷயங்களை இன்று நாம் ஆதாரம் கிடைத்தவுடன் மாற்றியுள்ளோம். அது போலத்தான் இதுவும் என்று பீஜெயோ அவரது அபிமானிகளோ சொல்ல முன்வருவார்களானால், இன்று தொடை தெரிய தொழலாம் என்பதற்கு எந்த ஹதீஸ்களை ஆதாரமாக பீஜே காட்டுகிறாரோ அதே ஹதீஸ்களை அன்றே அவர் ஆய்வு செய்து, கீழ்கண்டவாறு இப்படி கூறுகிறார்;  

''தொடையைத் திறந்திருப்பதை நபி(ஸல்) அவர்களே வன்மையாகக் கண்டித்துள்ளதால், தொடை தெரிந்ததாக வரும்  ஹதீஸ்களில் கூறப்படுபவை தற்செயலாக திட்டமிடாமல் நடந்ததாகத்தான் கருத வேண்டும். என்கிறார்.

இன்று தொடை மறைக்கப் படவேண்டிய பகுதியல்ல என்பதற்கு ஆதாரமாக வைக்கும் ஹதீஸ்களை பற்றி மேற்கண்ட அதே  தொடரில் பீஜே எழுதியுள்ளதை படியுங்கள்;

ஒரு சில அறிஞர்கள் "இந்த அளவுகூட மறைக்க வேண்டியதில்லை; முன் துவாரம், பின் துவாரம் இவைகளை மறைத்துக் கொண்டால் போதுமானது" என்று கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸ்களை எடுத்து வைக்கின்றனர்.

1) "கைபர் போரின் போது, நபி(ஸல்) அவர்கள் தமது கைலியை தொடைப் பகுதியை விட்டும் நீக்க நேரிட்டது. அவர்களின் தொடையின் வெண்மைப் பகுதியை நான் கண்டேன்"

அறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல்கள் : புகாரி, அஹ்மத்

2) "நபி(ஸல்) அவர்கள் ஈரமான ஒரு இடத்தில் முழங்கால்களைத் திறந்தவர்களாக இருந்தனர். உஸ்மான்(ரழி) அவர்கள் நுழைந்த போது அதை மூடிக் கொண்டனர்"

அறிவிப்பவர் : அபூமூஸா(ரழி) நூல் : புகாரி.

3) நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது தன் முழங்கால் தெரியும் அளவுக்கு தன் ஆடையின் ஒரு பகுதியைத் தூக்கிப் பிடித்தவராக அபூபக்ரு(ரழி) அவர்கள் வந்தார்கள். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் "உங்கள் தோழர் ரொம்பவும் ஆத்திரத்துடன் வருகிறார்" என்று கூறினார்கள் . (இந்த ஹதீஸில் உமர்(ரழி) அவர்களுக்கும், அபூபக்ரு (ரழி) அவர்களுக்கும் ஏற்பட்ட ஒரு தகராறில் அபூபக்ரு(ரழி) அவர்கள் மிகவும் ஆத்திரத்துடன் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட வருவது கூறப்படுகிறது.

அறிவிப்பவர் : அபுத்தர்தா(ரழி) நூல்கள் : புகாரி, அஹ்மத்

4) ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தொடைப் பகுதி வெளியில் தெரிந்த நிலையில் அமர்ந்திருந்தனர். அவர்களைக் காண அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் அப்படியே அமர்ந்திருந்தனர். உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் தன் ஆடையைச் சரி செய்து கொண்டனர். இதைக் கண்ட ஆயிஷா(ரழி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் சும்மா இருந்த நீங்கள் , உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் ஆடையைச் சரி செய்து கொண்டீர்களே! (இது ஏன்?) என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மலக்குகளே அவரைக் கண்டு வெட்கப்படும் போது நான் வெட்கப்பட வேண்டாமா?

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல் : அஹ்மத்

(இதே கருத்தில் முஸ்லிமிலும், பைஹகீயிலும் ஹதீஸ்கள் உண்டு)

இந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு சில அறிஞர்கள் "தொடைப் பகுதியை மறைக்க வேண்டியது அவசியமில்லை" என்கின்றனர். அவர்கள் எடுத்துக் காட்டுகின்ற ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதில் சந்தேகம் இல்லை, எனினும் நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் வந்திருக்காவிட்டால் இந்தக் கருத்தை ஏற்கலாம்.

தொடையைத் திறந்திருப்பதை நபி(ஸல்) அவர்களே வன்மையாகக் கண்டித்துள்ளதால், இந்த ஹதீஸ்களில் கூறப்படுபவை தற்செயலாக திட்டமிடாமல் நடந்ததாகத்தான் கருத வேண்டும்.

அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கும் முதல் ஹதீஸில் கூறப்படுவது 'கைபர்' போரில் நடந்தது. போர்க்களத்தில் ஈடுபட்டிருக்கும்போது அவ்வாறு அவர்களை அறியாமல் விலகி இருக்கலாம்.

இரண்டாவது ஹதீஸில் ஈரமான இடத்தில் ஆடை நனைந்துவிடக்கூடாது என்று சற்று கைலியை உயர்த்தி இருந்த போது முழங்கால் தென்பட்டதாக தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது ஹதீஸில் அபூபக்ரு(ரழி) அவர்கள் உமர்)ரழி) அவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கோபத்துடன் தங்கள் ஆடையின் ஒரு பகுதியைத் தூக்கியவர்களாக வந்தபோது அவர்களின் முழங்கால் தெரிந்துள்ளது.

நான்காவது ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் தன் தொடைப் பகுதி வெளியில் தெரிவதை அறியாமலிருக்கலாம். சிலர் முன்னிலையில் சிலர் அதிகப்படியான வெட்க உணர்வுடன் இருப்பதை நான் சாதாரணமாகக் காணலாம். அந்த அடிப்படையில் உஸ்மான்(ரழி) அவர்கள் வந்த போது தனது ஆடைகளைச் சரி செய்திருக்கலாம். இவ்வாறு நாம் கருதவதற்குக் காரணம், நபி(ஸல்) அவர்கள் தொடையை மறைக்கும்படி பலமான உத்திரவு பிறப்பித்துள்ளதால், அவர்களே அந்த உத்திரவுக்கு மாற்றமாக நடந்திருக்க மாட்டார்கள் என்பது தான்.

நம்மை அறியாமல் தற்செயலாகத் தெரிந்து விட்டால் அதில் தவறில்லை என்று தான் இந்த ஹதீஸிகளிலிருந்து நாம் முடிவெடுக்க முடியும். "நிரந்தரமாக எப்பொதும் அப்படி இருக்கலாம்" என்று கூறுவோர் நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களை நிராகரித்தவர்களாக ஆக நேரும்.

ஃபத்வா விசயத்தில் மனோஇச்சைப்படி அவ்வப்போது மாற்றி மார்க்கத்தை வளைப்பவர் இந்த பீஜே என்பதற்கு இந்த 'தொடை' விஷயம் தெளிவான விடையாக உள்ளது. சிந்திப்பவர்கள் தெளிவு பெறுவார்கள் இன்ஷா அல்லாஹ்.

 

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

இறையச்சத்தின் அடித்தளமே நோன்பு!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அல்லாஹ்வின் அருள் நிறைந்த புனிதமிக்க ரமலான் மாதம் நம்மை வந்தடைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ். இந்த ரமலானில் நோன்பு நோற்கவேண்டும் என்று அறிந்துவைத்துள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் இந்த நோன்பின் தாத்பரியத்தையும்- சட்டங்களையும் அறியாதவர்களாகவும், இன்னும் சிலர் பேணுதல் என்ற பெயரில் இந்த நோன்பை சிரமமானதாக மாற்றிக்கொள்வதையும் பார்க்கிறோம். எனவே, அப்படிப்பட்டவர்கள் தெளிவு பெறவேண்டும் என்பதற்காக இந்த ஆக்கம் வரையப்பட்டுள்ளது .

நோன்பு கடமையாக்கப்பட்டது ஏன்?
நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது என்று நம்மவர்களில் சிலரிடம் கேட்டால், ஏழைகளின் பசியை வசதி படைத்தவர்கள் உணரவேண்டும் என்பதற்காகத்தான் கடமையாக்கப்பட்டது என்பார்கள். ஒரு பாடகர் கூட, 'மண் வீட்டின் பசியை மாளிகைகள் உணர்ந்து மனிதாபிமானம் கொள்ள போதிப்பது நோன்பு' என்று பாடுவார். ஆனால் உண்மை அதுவல்ல. ஏனெனில், ஏழைகளின் பசியை வசதிபடைத்தவர்கள் உணர்வதுதான் நோன்பின் நோக்கம் என்றால், பணக்காரர்களுக்கு மட்டும் கடமையாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் வல்ல இறைவன் கூறுகின்றான்;

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்.
[அல்-குர்ஆன்2:185 ]

இந்த வசனத்தில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கவேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். இதில் ஏழைகள்-பணக்காரர்கள் என்ற வேறுபாடு கிடையாது அனைவர் மீதும் கடமை. சரி! வேறு என்னதான் காரணம்?

அல்லாஹ் கூறுகின்றான்;

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.[அல்-குர்ஆன் 2:183 ]

இந்த வசனத்தில் நோன்பு கடமையாக்கப்பதின் நோக்கம் நாம் இறையச்சமுடையவர்களாக ஆகவேண்டும் என்பதுதான் என்பது தெளிவாக புரிகிறது. சரி! மற்ற அமல்களில் வராத இறையச்சம் இந்த நோன்பில் மட்டும் வந்துவிடுமா என்றால் உண்மையான நோன்பாளியாக இருந்தால் கண்டிப்பாக வரும். எப்படியெனில்,
 
ஒருவன் தொழுகையாளியா-ஜகாத் கொடுப்பவனா-ஹஜ் செய்தவனா என்று நாம் வெளிப்படையாக அறியமுடியும். ஆனால் நோன்பை பொறுத்தவரையில், ஒருவன் நோன்பு நோற்காமலேயே நான் நோன்பாளி என்று கூறினால் நம்மால் கண்டுபிடிக்கமுடியாது. எனவே இறைவனுக்கு அஞ்சுபவன் மட்டுமே நோன்பு பிடிப்பான்.
 
மேலும் நோன்பு நோற்ற ஒருவன் அவனது வீட்டில் அவனது உழைப்பால் உருவான உணவு இருக்கும். அவன் நினைத்தால் கதவை சாத்திவிட்டு ஒரு வெட்டு வெட்டிவிட்டு வாயை துடைத்துக்கொண்டு வெளியே வந்தால் யாரும் கண்டுகொள்ள முடியாது. ஆனாலும் ஒரூ நோன்பாளி அவ்வாறு செய்வதில்லை. ஏனெனில், நமது உணவாக இருந்தாலும், நாம் சாப்பிடுவதை பருகுவதை மனிதர்கள் யாரும் பார்க்காவிட்ட்டாலும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் எனவே நாம் சாப்பிடக்கூடாது என்று அவன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்கிறானே  அதுதான் இறையச்சம்! தனது சொந்த உழைப்பில் உருவான உணவையே இறைவனுக்கு பயந்து தவிர்ந்துகொண்டவன், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படமாட்டான். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கலில் நேர்மையாக இருப்பான். இவ்வாறு மாற்றியது நோன்பின் மூலம் பெறும் இறையச்சம்தானே!
அடுத்து, நோன்புடைய காலங்களில் பகலில் இல்லற வாழ்க்கை கூடாது. கணவன்-மனைவி மட்டும் இருக்கிறார்கள். அவ்விருவரும் நோன்பு நோற்றிருக்கிறார்கள். இந்நிலையில் அவ்விருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டால் அவர்களை யாரும் கண்டுகொள்ளமுடியாது. ஆனாலும் அவர்கள் இறைவன் தடுத்திருக்கிறான் என்ற பயத்தின் காரணமாக தவிர்ந்து கொள்கிறார்களே தங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்கிறார்களே இதுதான் இறையச்சம்! இப்படி தனக்கு சொந்தமான மனைவியை இறைவன் சொல்லிவிட்டான் என்பதற்காக தவிர்ந்துகொன்டவன், அந்நிய பெண்ணை ஏறெடுத்தும் பார்ப்பானா? எந்த இறைவனுக்கு பயந்து நோன்புடைய பகல் நேரத்தில் நம்முடைய சொந்த மனைவியை தவிர்ந்து கொண்டோமோ, அதே இறைவன்தான் கூறுகின்றான்; விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்; அன்னிய பெண்ணை பார்க்கும் போது பார்வையை தாழ்த்திக்கொள்ளுங்கள் என்று. எனவே நாம் அந்த தவறை செய்யக்கூடாது என்று தன்னை தடுத்துக்கொள்வான். இந்த இறையச்சத்தை வழங்கியது நோன்பு அல்லவா? எனவே உள்ளச்சத்துடன் நோன்பு நோற்றால் இறையச்சம் நிச்சயம் வரும் இன்ஷா அல்லாஹ். அத்தகைய இறையச்சத்தை இந்த வருட நோன்பின் மூலம் நாம் அடைவோமாக!

வெள்ளி, 17 ஜூன், 2011

மக்களால் மாசுறும் மகிமைமிகு ரஜப் மாதம்!

பிஸ்மில்லாஹ்....

கட்டுரையாளர்;முஹம்மட் அர்ஷாத் அல் அதரி arshathalathary@gmail.com

‘வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை.’ (அல்குர்ஆன் 09:36)

ரஜப் புனிதமிக்க மாதம்
ரஜப் என்பது இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டின் ஏழாவது மாதம் ஆகும். அம்மாதத்தினைப் பற்றி அருள்மறைக்குர்ஆன் குறிப்பிடும் போது,

‘வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!’ (அல்குர்ஆன் 09:36)

அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகின்ற புனிதமான அந்த நான்கு மாதங்கள் துல்கஃதா துல்ஹஜ் முஹர்ரம் ரஜப் என அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்கள்;

‘வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக் கூடியவை. அவை – துல்கஅதா துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூபக்ரா (ரழி நூல்: ஸஹீஹுல் புஹாரி- 3197)


இவ்வாறாக அருள்மறைக் குர்ஆனும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் சிறப்பித்துக் கூறுகின்ற ரஜப் மாதத்திற்கென ஏதேனும் விஷேட வணக்க வழிபாடுகள் நமக்கு கற்றுத் தரப்பட்டிருக்கின்றதா? என நோக்குவோமாயின் திருமறைக் குர்ஆனிலோ ஆதாரபூர்வமான நபி மொழிகளிலோ ரஜப் மாதத்திற்கென பிரத்தியேக வணக்க வழிபாடுகள் எதுவும் கற்றுத் தரப்படவில்லை என்பதனை அறிந்து கொள்ளலாம்.

ரஜப் மாதமும் அரங்கேற்றப்படும் அநாச்சாரங்களும்

எமது இஸ்லாமிய சமுதாய மக்களால்; ரஜப் மாதத்தின் பெயரால் பல்வேறு அநாச்சாரங்கள் அரங்கேற்றப்படுகின்றன. மேலும் கண்ணியமிகு மார்க்க அறிஞர்களால் ரஜப் மாதத்தின் பெயரால் மிம்பர் மேடைகளிலும் சொற்பொழிவுகளிலும் பல்வேறு ஆதாரபூர்வமற்ற செய்திகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரால் கூறப்படுகின்றன. அவ்வாறான ஆதாரபூர்வமற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் சிலவற்றை நோக்குவோம்.


  • ‘நிச்சயமாக சுவனத்தில் ஓர் ஆறு உண்டு. அதற்கு ரஜப் என்று சொல்லப்படும். அதன் நீர் பாலை விடக் கடும் வெண்மையானதும் தேனைவிட சுவையானது மாகும். எவரொருவர் ரஜப் மாதத்தில் ஒரு நாள் நோன்பு நோற்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் அவ்வாற்றிலிருந்து நீர் புகட்டுவான்.’
இச் செய்தியில் ‘மூஸா மன்ஸுர் பின் யதீத்’ என்கின்ற யாரென்று அறியப்படாத இரண்டு நபர்கள் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘ரஜப் மாதம் வந்து விட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்; அல்லாஹ்வே! ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக! மேலும் வெள்ளிக்கிழமை இரவு வெண்மையானதும் அதன் பகல் பசுமையானதும் எனக் கூறுவார்கள்.’
இச் செய்தியில் ‘ஸாயிதா பின் அபிர்ருக்காத்’ என்கின்ற ஹதீஸ்கலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அறிவிப்பாளர் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘ரஜப் மாதம் அல்லாஹ்வின் மாதமாகும். ஷஃபான் எனது மாதமாகும். ரமழான் எனது சமூகத்தினரின் மாதமாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
இச் செய்தியில் இடம்பெறும் ‘அல்கமா’ என்பவர் நபித்தோழர் அபூஸயீத் அல்குத்ரி (ரழி) அவர்களிடமிருந்து எதனையும் செவியுறவில்லை. மேலும் இச் செய்தியில் இடம்பெறும் ‘ஹிசாயி’ என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘ஏனைய மாதங்களோடு ஒப்பிடுகையில் ரஜப் மாதத்தின் சிறப்பு ஏனைய திக்ருகளை விட குர்ஆனுக்கு இருக்கின்ற சிறப்பை போன்றதாகும்.’
மேலுள்ள செய்தியில் நபிமொழிகளை இட்டுக்கட்டி கூறுபவர் என இமாம்களுக்கு மத்தியில் பிரபல்யமான ‘ஹிபத்துழ்ழாஹ் இப்னுல் முபாரக் அஸ்ஸக்தி’ என்பவர் இடம்பெறுவதால் இது ஆதாரப்பூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்திற்குப் பின் ரஜபிலும் ஷஃபானிலும் நோன்பு நோற்பார்கள்.’
இச் செய்தியில் ‘யூசுப் பின் அதிய்யா’ என்கின்ற ஹதீஸ் கலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட்ட அறிவிப்பாளர் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘ரஜப் மாதம் அல்லாஹ்வின் மாதமாகும். யார் ரஜப் மாதத்தின் ஒரு தினத்தில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கின்றாரோ அவருக்கு மிகப்பெரும் இறைதிருப்தி கிடைப்பது கடமையாகி விடும்.’
மேலுள்ள செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ‘அபூஹாரூன்’ எனும் ‘மத்ரூக்’ ‘கைவிடப்பட்டவர்’ என ஹதீஸ்கலை அறிஞர்களால் ஓரங்கட்டப்பட்ட ஒருவர் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘யார் ரஜப் மாதத்தின் முதலாவது இரவில் மஃரிப் தொழுகையைத் தொழுது பின்னர் 20 ரக்அத்துகளைத் தொழுது ஒவ்வொரு ரக்அத்திலும் சூறா பாத்திஹாவையும் இஹ்லாஸ் அத்தியாயத்தை ஒரு தடவையும் ஓதி ஒவ்வொரு ரக்அத்திலும் பத்து முறை ஸலவாத்துச் சொன்னால் அவருக்கு கிடைக்கும் வெகுமதிகளை நீங்கள் அறிவீர்களா? என வினவிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரையும் அவரது குடும்பத்தினரையும் அவரது பொருளாதாரத்தையும் அவரது குழந்தைகளையும் பாதுகாப்பதோடு கப்ரின் வேதனையை விட்டும் அல்லாஹ் அவரைப் பாதுகாக்கின்றான். மேலும் அவர் எவ்வித வேதனையோ கேள்வி கணக்கோ இன்றி மின்னல் வேகத்தில் ‘ஸிராத்’ எனும் பாலத்தைக் கடந்து செல்வார் எனக் கூறினார்கள்.’
இச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அதிகமான அறிவிப்பாளர்கள் யாரென அறியப்படாதவர்கள் என்றும் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் ஷாபி மத்ஹபின் மிகப்பிரபல்யமான இமாமான அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். எனவே இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘எவரொருவர் ரஜப் மாதத்தின் மூன்று நாட்கள் நோன்பு நோற்கிறாரோ அவருக்கு ஒரு மாதம் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் எழுதி விடுகின்றான். ஒருவர் ஏழு தினங்கள் நோன்பு நோற்றால் அவரை விட்டும் நரகத்தின் ஏழு வாயில்களையும் மூடிவிடுகின்றான்.’
இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ‘அம்ருப்னு அஸ்ஹர்’ பொய்யரென இமாம் ‘யஹ்யா இப்னு மயீன்’ மற்றுமுள்ள ஹதீஸ் கலை அறிஞர்களும் குற்றம் சாட்டியுள்ளதால் இச் செய்தி ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘நிச்சயமாக ரஜப் மாதம் மகத்தான மாதமாகும். யார்; அதில் ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ அவருக்கு ஆயிரம் வருடங்கள் நோற்பு நோற்ற நன்மையை அல்லாஹ் எழுதுகின்றான்.’
மேலுள்ள செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ‘இஸ்ஹாக் பின் இப்றாஹிம் அல்குத்தலி’ என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களின் ஒருமித்த கருத்துப்படி பலவீனமானவர் ஆகையால் இச்செய்தி ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.


  • ‘எவரொருவர் ரஜப் மாதம் நோன்பு நோற்று அதில் நான்கு ரக்அத்துகள் தொழுதால் சுவனத்தில் அவரது தங்குமிடத்தைக் காணும் வரை அல்லது அவருக்கு காண்பிக்கப்படும் வரை மரணிக்கமாட்டார்.’
இச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அதிகமான அறிவிப்பாளர்கள் யாரென அறியப்படாதவர்கள் என்றும் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் ஷாபி மத்ஹபின் மிகப்பிரபல்யமான இமாமான அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். மேலும் இச்செய்தியில் இடம்பெறும் உஸ்மான் பின் அதாஃ என்பவர் ஹதீஸ் கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர். ஆகையால் இச்செய்தி ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.

ரஜப் மாதமும் விஷேட உம்ராக்களும்
ரஜப் மாதம் வந்துவிட்டால் முஸ்லிம்கள் விஷேட உம்ரா பயணம் மேற்கொள்கின்றனர். உம்ரா பயணம் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியமே. ஆனால் அதனை ரஜப் மாதத்தில் நிறைவேற்றுவது சிறப்புக்குரியது எனக் கருதுவது நபிகளாரின் வழிமுறைக்கு மாற்றமான செயலாகும்.

 அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்க கூடிய நபிமொழி ரஜப் மாதத்தை தெரிவு செய்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விஷேட உம்ராக்கள் எதனையும் நிறைவேற்றவில்லை என்பதனை தெளிவுபடுத்துகின்றது.


‘ஆயிஷா (ரழி) அவர்களிடம் நான் (நபிகளாரின்; உம்ரா பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்யவில்லை! என்றார்கள்.’ (அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்] நூல்: ஸஹீஹுல் புஹாரி-1777)


கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளை இமாம் இப்னு ஜவ்ஸி (ரஹ்) தமது மவ்லூஆத் என்ற நூலில் தொகுத்தளித்துள்ளார்கள்.

நன்றி;அல்-அதர் இஸ்லாமிய மாத இதழ்.

புதன், 16 மார்ச், 2011

ஜூதி மலைமீது தங்கிய நூஹ் நபியின் கப்பலும்; வீட்டின் மாடி மீது அமர்ந்த ஜப்பான் கப்பலும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


பின்னர்; "பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்" என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.[11 ;44 ]

ஞாயிறு, 6 மார்ச், 2011

முஸ்லிம்மங்கையராய் பிறப்பதற்கே நல்லமாதவம் செய்திடல்வேண்டும்!

லக மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்8.ல் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மகளிர் முன்னேற்றம் குறித்த கருத்தரங்கங்களும், விழிப்புணர்வு பிரச்சாரங்களும் ஆங்காங்கே நடைபெறும். ஆனாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்தான் குறைந்தபாடில்லை. இதற்கு காரணம் பெண்கள் சுதந்திரம்குறித்த தெளிவான பார்வையின்மைதான்.

பெண் என்பவள் ஆணுக்கு நிகர் என்ற வெறியூட்டப்பட்டு, ஆண்களுக்கு நிகரான ஏன் அதையும் தாண்டிய குறைந்த அளவு ஆடையில் வலம்வருவது, பணிக்கு செல்வது இவை மட்டும்தான் பெண்களின் முன்னேற்றம் என்ற குறுகிய வட்டத்துக்குள் நின்றதுதான். இதையும்தாண்டி பெண்கள் சோபிக்கவேண்டிய முக்கியமான குடும்பக்கட்டமைப்பு இன்று பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் சிதைந்துள்ளது.

ஒரு காலத்தில் விவாகரத்து என்பது அரிதான ஒன்றாக இருந்தது. இன்று என்ன நிலை? ஒரு சிறு பிரச்சினை என்றாலும் கணவனுக்கு முன்பாக குடும்பநல நீதிமன்றத்தின் படியேறுவது பெண்தான். இதை பெருகிவரும் விவாகரத்து வழக்குகள் உறுதிப்படுத்துகிறது. சென்னையில் விவாகரத்து வழக்குகளை விசாரிப்பதற்காக 3 குடும்ப நலக்கோர்ட்டுகள் உள்ளன. கடந்த 2008-ம் ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 905 விவாகரத்து வழக்குகள் தாக்கலாகியுள்ளன. மாதமொன்றுக்கு அதிகபட்சம் 412 வழக்குகளும், குறைந்தபட்சம் 250 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.அதாவது சராசரியாக மாதம் ஒன்றுக்கு 350 வழக்குகளும், நாளொன்றுக்கு 17 வழக்குகளும் தாக்கல் செய்யப்படுகின்றன. சென்னையில் மட்டுமே இவ்வளவு எனில், ஏனைய மாவட்டங்கள்- மாநிலங்களின் நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.

இந்த அளவுக்கு விவாகரத்து மலிந்ததற்கு ஆண்கள் ஒரு காரணம். ஆனால் ஆண்கள் மட்டுமே காரணமில்லை. சுதந்திரம் என்ற பெயரில் கணவன் திட்டினாலே, அவனை கம்பி எண்ண வைக்கும் மனைவிகள் உண்டு. 'அடிமைத்தளையை அறுக்கிறேன் என்றபெயரில் அன்பான குடும்பத்தின் குரல்வளையை அறுக்கவைத்ததும் இந்த போலிபெண் சுதந்திரமே! அதுபோன்று சரிநிகர்சமானம் என்ற பெயரில், குடும்பப்பொறுப்புகளையும், குழந்தைகள் பராமரிப்பையும் புறந்தள்ளி பணிக்கு செல்லும் பெண்களில் சிலர் தாமும் சம்பாதிப்பதால் கணவனுக்கும், ஏனைய குடும்ப உறுப்பினர்களுக்கும் மரியாதை தரமறுப்பதும்அதனால் பிரச்சினைகள் எழுவதையும் முடிவில் விவாகரத்தில் முடிவதையும் நாம் பார்க்கிறோம்.

பெண் சுதந்திரம் என்ற பெயரில் அரைகுறை ஆட்கள் அணிந்து வலம்வரும் சில பெண்களால் நாட்டில் கற்பழிப்பு எண்ணிக்கை அதிகமாவதையும் நாம் மறுக்கமுடியாது. கற்பழிக்கும் எண்ணத்தோடு திட்டமிட்டு செயல்படுபவரைவிட, சில பெண்கள் அணியும் ஆடைகளால் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நடக்கும் கற்பழிப்புகளே அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் நம்நாட்டில் சுமார் இருபதாயிரம் கற்பழிப்புகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், சுதந்திரம் என்ற பெயரில், ஆண்களுடன் பணியாற்றுவதாலும், ஆண்களுடன் சுற்றுவதாலும் காதல்வயப்பட்டு கற்பிழக்கும் பெண்களின் எண்ணிக்கையும் கணக்கிலடங்கா. இப்படி சுதந்திரம் என்றபெயரில் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் பெண்ணினத்திற்கு, இஸ்லாம் உண்மையான சுதந்திரத்தையும்- பாதுகாப்பையும் வழங்கியிருக்கிறது.

பிறப்பதற்கு உரிமை;
கணினி உலகிலும் கருவிலேயே பெண்குழந்தையை அழிக்கும் நிலையில், அன்றே பெண் குழந்தைகளை சிறப்பித்து வரவேற்ற மார்க்கம் இஸ்லாம்;இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்;

தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப் பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சகள் பேசுவதையும் அதிகமாக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான்.
நூல்;புஹாரி,எண் 2408

கல்வி கற்பதில் சுதந்திரம்;

(நாங்கள் உங்களை அணுகி மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்' என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக் கட்டளைகளை) ஏவினார்கள். அவர்கள் தங்களின் அறிவுரையில் 'உங்களில் ஒரு பெண் தன் குழந்தைகளில் மூவரை (மரணத்தின் மூலம்) இழந்துவிட்டாள் என்றால் அந்தக் குழந்தைகள் அப்பெண்ணை நரகத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடக் கூடியவர்களாக இருப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண், 'இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இரண்டு, குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டாலும் தான்' என்று கூறினார்கள்" அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
நூல்;புஹாரி,எண் 101;

மணமகனை தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம்;

கன்சா(ரழி)அறிவிக்கிறார்கள்; எனது தந்தை கிதாம்(ரழி) அவர்கள் எனக்கு பிடிக்காத இடத்தில் மணமுடித்துக் கொடுத்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இதனைக் கூறியபோது அந்த திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்து செய்தார்கள். இதே நிகழ்ச்சியை இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள். (முஅத்தாமாலிகி, புகாரி, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா, பைஹகீ)


விவாகரத்தில் உரிமை;

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ஸாபித் இப்னு கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறைகூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டே இறைநிராகரிப்புக்குரிய செயல்களைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்' என்று கூறினார். அப்போது, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஸாபித் உனக்கு (மணக்கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?' என்று கேட்டார்கள் அவர், 'ஆம் (தந்து விடுகிறேன்)' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), 'தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!' என்று கூறினார்கள்.
நூல்;புஹாரி,எண் 5273

இது போக கணவனின் சொத்தில் உரிமை, தந்தையின் சொத்தில் உரிமை இப்படி ஏராளமான உரிமைகளையும், உண்மையான சுதந்திரத்தையும் வழங்கியதோடு, இவை எல்லாவற்றிற்கும் மகுடம் சூட்டியது போன்று ஒரு பெண்ணைத்தான் முஸ்லிம்களுக்கு முன்னுதாரணமாக அல்லாஹ் சொல்லிக்காட்டி பெண்ணினத்தை உச்சத்தில் வைத்து பாராட்டுகிறான்;

وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا اِمْرَأَةَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِن فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ

மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் "இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக" என்று (பிரார்த்தித்துக்) கூறினார். (66:11)

இப்ப மறுபடியும் தலைப்பை படியுங்கள்.

சனி, 5 பிப்ரவரி, 2011

'சமூகத் தீமைகள்' ஒரு பார்வை!




بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ'
 
மனிதனின் அத்தியாவசியத் தேவையான உணவிற்காக, வயல்வெளியில் நடப்படும் தானியங்களின் வளர்ச்சியைக் கெடுக்க, அழையா  விருந்தாளியாக வந்து முளைக்கும் களைபோல, மனிதனின் இம்மை-மறுமை வாழ்வை நாசமாக்க, 'சமூகத் தீமைகள்' சங்கற்பமேற்று, மனித வாழ்வில்  சதிராட்டம் ஆடுகின்றன. இதில் வேதனை என்னவெனில், இத்தகைய சமூகத் தீமைகளை சக தோழனாக ஏற்று, மனிதன் அரவணைத்து ஆபத்தை  உணராமல் அன்றாட வாழ்வை  அழிவுக்குள்ளாக்கி  கொள்கிறான்  என்பதுதான். இத்தகைய சமூகத் தீமைகள் ஏராளம் உண்டெனினும், அதில் பிரதானமாக, வட்டி-வரதட்சனை-தீண்டாமை-ஆபாசம்-லஞ்சம்-ஊழல்-மது-புகையிலை-
சுரண்டல் ஆகியவை உள்ளன.
இவைகளிப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில், 'சமூகத்தீமைகள்' எதிர்ப்பு மாதம் பிப்-2011 என அறிவித்து, மக்களைக்  காக்க புறப்பட்டுள்ளது சமூக நலனில் அக்கறை கொண்ட இந்திய தவ்ஹீத்ஜமாஅத்.
 இத்தகைய சமூகத்தீமைகளின் விளைவை சுருக்கமாக காண்பதற்கு முன்னால், இறைத்தூதர்[ஸல்] அவர்களின் இனியமொழியைப்  பார்ப்போம்;
 
''அல்லாஹ் தன் வேதத்தில் எவற்றை  ஆகுமாக்கியுள்ளானோ அவை அனுமதிக்கப்பட்டதாகும். எவற்றை தடுத்துள்ளானோ அவை தடை செய்யப்பட்டதாகும். எவை பற்றி அவன் ஒன்றும் கூறவில்லையோ அவை சலுகையாகும். அல்லாஹ் அளித்திருக்கும் சலுகையை ஏற்றுக் கொள்ளுங்கள். நிச்சயமாக! அல்லாஹ் எதையும் மறப்பவனல்ல என்று கூறிவிட்டு, 'உமது இறைவன் எதையும் மறப்பவனல்ல'[19 ;64 ] என்ற வசனத்தை  ஓதிக்காட்டினார்கள்.
[நூல்; ஹாகிம்]
 
மேற்கண்ட பொன்மொழி, அல்லாஹ் தனது கூறிய ஏவல்-விலக்கல்களை மனிதன் கடைபிடிக்கவேண்டும் என நமக்கு உணர்த்துகிறது. அதுமட்டுமன்றி, '[இத்தூதர்] தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்குகிறார்; தூய்மைஇல்லாதவற்றை  அவர்களுக்கு தடை செய்கிறார்'[7 ;157 ] என்று கூறி, மனிதர்கள் மீது ஒன்றை ஆகுமாக்குவதற்கும், தடுப்பதற்கும், நபியவர்களுக்கு அதிகாரமுண்டு என்று அல்லாஹ் கூறுகின்றான்.எனவே நாம் செய்யும் செயல்கள் சிறியதோ- பெரியதோ அவை, அல்லாஹ்வின் வேதத்திற்கும்- அல்லாஹ்வின் தூதரின் வழிமுறைக்கும் உகந்ததா என்பதை மனித சமூகம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளது. அவ்வாறு சிந்திக்காததின்  விளைவே, சமூகத்தீமைகள்  சமூகத்தை ஆட்கொண்டதற்கு முதற்காரணமாகும். இந்த அடிப்படையை மனதில் கொண்டு சில தீமைகளை இப்போது அலசுவோம்.
 
வட்டி;
வட்டி என்பது மிகப்பெரிய பொருளாதார சுரண்டல் என்பது யாவரும் அறிந்த உண்மையே. மாதவட்டி- நாள்வட்டி-மீட்டர்வட்டி- சூப்பர்பாஸ்ட்  வட்டி என பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் இந்த வட்டி மனிதனை சுரண்டுவதால்,உலக வங்கியில் வட்டிக்கு கடன் வாங்கி அரசு நடத்தும் அரசாங்கமே, கந்துவட்டிக்கு எதிராக சட்டம் கொண்டு வரும் அளவுக்கு கொடுமையான தீமையாக உள்ளது. இந்த வட்டி ஏழைகளுக்கு ஒரு உயிர்க்கொல்லி நோய் போன்றதாகும். மேலும், சிலர் பிறர் மெச்சவேண்டும் என்பதற்காக ஆடம்பர பொருட்கள் வாங்கிட- ஆடம்பரமாக திருமணம் நடத்திட- ஆடம்பர  சொகுசு வாழ்க்கை வாழ்ந்திட என இந்த வட்டி எனும் முதலை வாயில் தலை வைத்து, பின் வட்டி கழுத்தை இருக்கும் நிலை வருகையில் கயிற்றால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்துகொள்கின்றனர். இன்னும் சிலர் வட்டி எனும் புலிவாலை பிடித்து விடமுடியாமல் தவிக்கின்றனர். வட்டிக்கு கொடுத்த பாவி வாசலில் நின்று கேட்டு, படிப்படியாக படுக்கையறை வந்து பங்குபோடும்  அவலமும் ஏற்படுகிறது. இத்தகைய மாபாதக வட்டியை மாபெரும் பாவம் என வர்ணிக்கிறது மாமறை;
 

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள் நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.[2 ;278 ,279 ]

எனவே வட்டியை விட்டொழிப்போம். சிலர், 'வட்டிக்கு கொடுத்தால்தான் பாவம்;வட்டிக்கு வாங்கினால் பாவமல்ல' என்று கூறுவர். ஆனால் உண்மை  அதுவல்ல. இதோ உண்மைநபி[ஸல்] அவர்கள் பொன்மொழியை கவனியுங்கள்;

வட்டி வாங்குபவனையும்-வட்டிக்கு கொடுப்பவனையும்-அதற்கு கணக்கு எழுதுபவனையும்- சாட்சியாக இருப்பவனையும் நபியவர்கள் சபித்துவிட்டு, அக்குற்றத்தில் அனைவரும் சமமானவர்களே என்று கூறினார்கள்.[நூல்;முஸ்லிம்]

எனவே வட்டியைவிட்டும் எட்டி நிற்போம்.

வரதட்சனை;

இறைவனின்  படைப்பில் ஆண்-பெண் என இருபாலர் உண்டு. இவ்விருவரில் ஒருவரைவிட மற்றொருவர் மறையோனின் பார்வையில் மட்டமானவர்களில்லை.ஆனால், ஆண் ஏதோ  வாங்கப் பிறந்தவன் போன்றும், பெண் ஏதோ கொடுக்கப் பிறந்தவள் போன்றும் சமூகத்தில் ஒரு தோற்றத்தை உருவாக்கியதுதான் வரதட்சனை என்பதாகும். திருமணம் செய்யும் ஆணுக்கு, ரொக்கப்பணம்-நகைகள்-சீர்வரிசைகள்-கார்-வீடு- இவ்வாறு மணப்பெண் தரும் அவலநிலை. மார்க்கெட்டில் மாட்டிற்கு விலை ஏறுகிறதோ இல்லையோ,மாப்பிள்ளைக்கு விலை தாறுமாறாக எகிறுகிறது. படிப்பிற்கு ஏற்ப செய்யும் தொழிலுக்கு ஏற்ப மாப்பிள்ளை விலை உள்ளது. வசதிபடைத்த  கண்ணியர் கரையேறுகிறார்கள். வசதியற்ற கண்ணியர் கண்ணீரில் கரைகிறார்கள்.எதற்காகவும் எவரிடத்திலும் கையேந்தாத பெண்ணின் தந்தை, மகளின் மணவாழ்க்கையில் மாப்பிள்ளைக்கு வாய்க்கரிசி[வரதட்சனை] போட, [பள்ளி]வாசல் தோறும் கையேந்துகிறான். இத்தகைய சமூகத்தின் இழிவுக்கு காரணாமான வரதட்சனை பாவமாக கூட பார்க்கப்படாமல், கவுரவத்தின் அடையாளமாக காணப்படுவதுதான் வேதனையின் உச்சகட்டம். இதோ வல்ல ரஹ்மான் தன் வேதத்தில்;

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.[4 ;4] என்று கூறுகின்றான்.

அய்யகோ! இவ்வசனத்தை மேடைதோறும் முழங்கும் தவ்ஹீத்[வாதிகள்]வியாதிகள் சிலர், மணமகனாக வீற்றிருக்கும் வேளையில் வசதியாக மறப்பதுதான் வேடிக்கையாகும். எனவே வரதட்சனை ஒழித்து, பெண்ணுக்கு தட்சனை[மஹர் ] தந்து மணமுடிப்போம்.

தீண்டாமை;

'தீண்டாமை ஒரு பாவச்செயல்- தீண்டாமை ஒரு பெருங்குற்றம்- தீண்டாமை ஒரு மணிதத் தன்மையற்ற  செயல்' என்று பாடப்புத்தகம் நமக்கு பாடம் புகட்டினாலும், நடைமுறையில் இன்னும் இரட்டைக் குவளைகளும்- 'திண்ணியம்'களும்- தீண்டாமைசுவர்களும் இருக்கவே செய்கின்றன. மனிதன் எவராகினும், அவனது உதிரம் சிவப்பு  என்ற உயர்ந்தோனின் படைப்பில், ஏற்றத் தாழ்வு கற்பித்து, சூத்திர வர்ணம் பூசி ஒரு சாராரை தீண்டத்தகாதவர்களாக ஆக்கியது  மனுநீதி[!]. அத்தகைய தாழ்த்தப் பட்டவர்கள் என கருதப்பட்ட சமூகம், இன்று படிப்பு-பதவி என உயர்ந்த  நிலைக்கு வந்த பின்னும் அவர்கள் மீது பூசப்பட்ட தீண்டாமை வர்ணம் இன்னும் மாறவில்லை என்பதே உண்மை.இன்றைய சனாதனவாதிகளையும் தாண்டிய குலப்பெருமை கொண்ட அறியாமைக்கால மக்களுக்கு அழகாய் சொன்னது அருள்மறை;

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்.[4 ;1]

இந்த அறைகூவல்தான், உயந்த குலம் என அறியப்பட்ட குறைஷிக்குலத்தைச்  சேர்ந்த உமர்[ரலி] எனும் வேங்கை, எத்தியோப்பிய கருப்புநிற அடிமையான பிலால்[ரலி] அவர்களை 'என் தலைவர்' என சொல்லச்செய்து, ஒருதாய் மக்களாக்கி, தீண்டாமை சுவருடைத்து, தீன் சுடர் ஒளிரச்செய்தது. ஆம்! தீண்டாமை ஒழிப்போம்.
 
ஆபாசம்;
 ஆபாசம் இன்றைக்கு அவசியப் பொருளோ என அஞ்சும் அளவுக்கு மனிதனின் வாழ்வில் இரண்டற கலந்துவிடும் அபாய நிலையில் உள்ளது. ஒரு காலத்தில் முழம் கணக்கில் கட்டப்பட்ட சேலை, பின்னர் மீட்டர்களாகி, மிடிகளாகி, இப்போது இரு கச்சைகளில் நிற்கிறது. ஒரு பெண் சற்றே அரைகுறை ஆடையணிந்து தெருவில் வந்தால், ஆபாசம் என அலறுபவர்கள் கூட, இரு கச்சைகளுடன் ஒரு பெண் திரையில் வந்தால் 'கலை' என்கிறார்கள். ஒரு பெண் பல ஆண்களுடன் தொடர்பு கொண்டால், அவளை 'பரத்தை' என்பவர்கள் கூட, பரந்த திரையில் 'படுக்கையறை' காட்சிவரை நடிப்பவரை பாராட்டி பதக்கம் அளிக்கின்றனர். ஆக ஆபாசம் பெயர் மாற்றப்பட்டு சேட்டிலைட் வழியாக நமது வரவேற்பறையில் வந்து அமர்ந்துவிட்டது.  இத்தகைய ஆபாசத்தின் நுழைவாயில் தவறான பார்வையாகும். முடிவு விபச்சாரமும்- பரிசு எயிட்ஸ் ஆகவும் உள்ளது. எனவே இந்த ஆபாசத்தை நுனிமுதல் அடிவரை கிள்ளி எறிகிறது மார்க்கம்;
 
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.[24 ;30 ,31]
 
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.[17 ;32 ]
 
எனவே ஆபாசத்தை அடியோடு ஒழிப்போம்.
 
ஊழல்;
உழைக்காமல் பொருளீட்டுவதற்கும், தவறானவற்றை நியாயப் படுத்துவதற்கும் உருவானதுதான் ஊழல். சில நூறுகளில் தொடங்கிய ஊழல் இப்போது கோடிகளில்தான் எனும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த அளவுக்கு லஞ்சம்-ஊழல் தலைவிரித்து ஆடுவதற்கு காரணம், என்னதான் விசாரணை-கைது என்றாலும், சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிவிடலாம் என்ற அசாத்திய நம்பிக்கையே.சில நூறு ரூபாய்கள் கையூட்டு பெற்றவன் மீது காட்டும் கடுமை, கோடிகளை சுருட்டிய கேடிகள் மீது காட்டப்படுவதில்லை. முறைகேடாக பொருளீட்டிய பல இந்தியர்களின் கருப்புப் பணம் பலகோடிகள் பன்னாட்டு வங்கிகளில் பதுங்கிக் கிடக்கிறது என்பதுதான் பரபரப்பு செய்தியாக உள்ளது. நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை என்ற ஒன்று இருந்தாலும், அதனால் பெரிய அளவில் எந்த பலனுமில்லை.இத்தகைய லஞ்சம்-ஊழல் ஊற்றுக் கண்களை உறுதியாக அடைக்கிறது இஸ்லாம்;

அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.[2;188 ]

அது மட்டுமன்றி, 'எந்த வழியில் சம்பாதித்தாய்; எந்த வழியில் செலவு செய்தாய்' என்றும் மறுமையில்  விசாரிக்கப்படும் என்றும் கூறி, தவறான வழியில் பொருளீட்டுவதை தடுக்கிறது இஸ்லாம்.எனவே லஞ்சம்-ஊழல் எனும் சமூகத்தீமையை ஒழித்திடுவோம்.

மது;
'மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உடலுக்கு கேடு' என்று ஒருபுறம் எழுதிவைத்துக்கொண்டு அத்தகைய கேடானதை விற்பதற்கென 'டாஸ்மாக்' நிலையங்களை உருவாக்கி அதில் படித்த பட்டதாரிகளையும் பணியாளர்களாக்கி அரசு கஜானாவை நிறைத்துவருகிறது தமிழக அரசு. அரசின் பட்ஜெட் தேவையை நிறைவேற்றுவதில் மது வியாபாரம் முக்கிய இடத்தில் இருந்து வருகிறது. இந்த மது அருந்துபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதையும், வரும் பத்தாண்டுகளில் மது அருந்ததாதவர்களை காண்பது அரிதாகிவிடும் என்று ஆய்வுகள் சொல்லும் அளவுக்கு, பெரியவர்களில் தொடங்கி, சிறார்கள் வரை இந்த மது எனும் சமூகத்தீமை ஆட்கொண்டுள்ளது.அது மட்டுமன்றி நாகீகம் என்ற பெயரில் மது பென்களையும் கவர ஆரம்பித்துள்ளது ஆபத்தின்  அறிகுறியாகும். இத்தகைய மதுவை ஒருகாலத்தில் மறைந்திருந்து குடித்தவர்கள், இன்று பட்டப்பகலில் தேநீர் அருந்துவதுபோல் பொது  இடத்தில் அருந்துகின்ற அளவுக்கு இந்த தீமை சகஜமாகிவிட்டது. மதுவால் எத்தனை லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன. எத்தனை குற்றங்களுக்கு இந்த மது காரணியாக உள்ளது என்பதைப் பற்றி எல்லாம் எவரும் கவலை கொள்ளும் நிலையில் இல்லை. ஆனால் இத்தகைய சமூகத்தீமையான  மதுவை,  குடம் குடமாக குடித்த மதுப்பிரியர்களை ஒரு வசனத்தின் மூலம், திருத்திக் காட்டியது இஸ்லாம்;

அனஸ்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்;
நான் அபூ தல்ஹா(ரலி) வீட்டில் மக்களுக்கு மது பரிமாறுபவனாக இருந்தேன். அந்த நாள்களில் பேரீச்சம் பழ மதுவை (பேரீச்ச மரக்கள்ளை)யே அவர்கள் குடித்து வந்தனர். (மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பட்டவுடன்), இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, '(மக்களே!) மது தடை செய்யப்பட்டுவிட்டது" என்று அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள். அபூ தல்ஹா(ரலி) என்னிடம், 'வெளியே சென்று இதை ஊற்றிவிடு" என்று கூறினார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றி விட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது.
[நூல்;புகாரி]

இத்தகைய மதுவின் தீமைகளை மக்களுக்கு சொல்லவேண்டிய   முஸ்லிம்களில் சிலரும் மது அருந்துபவர்களாக  இருப்பது வேதனைக்குரியதாகும். எனவே குடியைக் கெடுக்கும் குடியை ஒழிக்க முன்வருவோம்.

புகையிலை-புகை;

புகையிலையை பயன்படுத்துவதுநாகரீகத்தின் அடையாளமாக கருதும் அளவுக்கு பெரும்பாலோரை ஆட்கொண்டுள்ளது. இந்த புகையிலை நாகரிக வளர்ச்சிக்கேற்ப பல்வேறு பரிமாணங்களில் தனது உயிர்கொல்லி வேலைகளை கச்சிதமாக செய்துவருகிறது. ஒரு காலத்தில் புகையிலையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்து, பின்பு சுருட்டாக, பின்பு பீடியாக, சிகரெட்டாக, பான்பராக்காக, குத்காவாக, போதை தரும் பீடாக்களாக இவ்வாறான பல்வேறு முகங்கள் இந்த புகையிலைக்கு உண்டு. இதில் புகையிலையை, புகையிலையாக பீடாக்களாக பான்பராக்குகளாக பயன்படுத்துவதை பொருத்தமட்டில், யார் அதை உட்கொள்கிறாரோ அவரை மட்டுமே பாதிக்கும். ஆனால் புகைப்பதை பொருத்தமட்டில், புகைப்பவர் மட்டுமல்லாது அவருக்கு அருகாமையில் உள்ளவரையும் சேர்த்தே பாதிக்கும். 

ஒரு புகைபிடிப்பவர் அருகே புகை பிடிக்காதவர் ஒருவர் இருந்தால், புகைப்பவர் விடும் புகையை இவர் சுவாசித்து, புகைக்காத மனிதருக்கும் நோய் வரும் நிலை. சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் பேர் பலியாகி வருவது தெரிய வந்துள்ளது. அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 30 சதவீதம் ஆண், பெண் அடங்குவர்.

மேலும், இதயநோயினால் 3 லட்சத்து 79 பேரும், 1 லட்சத்து 65 பேர் மூச்சு கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும், 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்துமாவினாலும், 21 ஆயிரத்து 400 பேர் நுரை யீரல் புற்று நோயினாலும் ஆண்டுதோறும் மடிகின்றனர்.
புகைப்பவர் ஒரு முஸ்லிமாக இருந்தால் அவர் மற்றவருக்கு தீங்கை நாடுவதால் அவர் சிறந்த முஸ்லிமாக ஆகமாட்டார். 

நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
'பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தா
ர்.[நூல்;புஹாரி]
எனவே புகையிலை-புகைப்பழக்கம் ஒழிப்போம்.

இறுதியாக மேற்கண்ட தீமைகள் மட்டுமல்லாது ஏராளமான சமூகத் தீமைகள் நமக்கு மத்தியிலே மலிந்து காணப்படுகின்றது. அத்தகைய தீமைகளை செய்யாமல் வாழும் சில நல்லவர்கள், நாம்தான் எந்த தீமையும் செய்வதில்லையே; எவன் எக்கேடுகெட்டுப் போனால் நமக்கென்ன..? என்று பாராமுகமாக ஒதுங்கிச்செல்வதை பார்க்கிறோம். ஒரு முஸ்லிம்  இவ்வாறு ஒதுங்கிச்செல்ல முடியாது. ஏனெனில் அல்லாஹ்,

[நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக் குள்ளாக்கினோம்

(அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், "அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்); "எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்.

அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்.[7 ;163-166 ]

என்று கூறுகின்றான். 

எனவே சமூகத்தீமைகளை களமிறங்கி ஒழித்து, சமூகத்தை பாதுகாப்போம். இறைவனின் பாதுகாப்பைப் பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

ரபியுல்-அவ்வல் மாதமும்-மவ்லிதும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ரபியுல்-அவ்வல் மாதம் வந்துவிட்டாலே, இருசாரார் கச்சைகட்டி கிளம்புவார்கள். ஒரு சாரார் 'இந்த மாசம் ஏதாவது தேத்துனாத்தான் உண்டு' என்று மவ்லிது கச்சேரிவாசிப்பவர்கள். இன்னொரு சாரார் 'இது பித்'அத்' மவ்லிது ஓதுபவர்கள் நரகவாதிகள் என்று பத்வா கொடுப்பவர்கள். இருசாராருமே நடுநிலையோடு மார்க்கத்தை அணுகுவதில்லை. முதல்சாராரின் வாதத்தை பார்ப்போம்.

#நாங்கள் நபி[ஸல்]அவர்களின்மீது நேசம்வைத்துள்ளோம். எனவே அவர்கள் பிறந்த இந்த மாதத்தில் அவர்களை புகழ்ந்து கவிபாடுகிறோம்


முதலாவதாக நபி[ஸல்]அவர்கள் ரபியுல்அவ்வல் பிறை 12.ல் தான் பிறந்தார்கள் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை. வரலாறுகளில் பல்வேறு கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பிரதானமானது ரபியுல்அவ்வல் ஒன்பது அன்று நபியவர்கள் பிறந்தார்கள் என்பதுதான்.

இறைத்தூதர்[ஸல்] மக்காவில் பனூ ஹாஷிம் கிளையில்  ரபீவுல் அவ்வல் மாதம், 9ஆம் நாள் திங்கட்கிழமை (கி.பி. 571 ஏப்ரல் மாதம் 20 அல்லது 22ம் தேதி) அதிகாலையில் பிறந்தார்கள். அது யானைச் சம்பவம் நடைபெற்ற முதலாவது ஆண்டு. மேலும் ~அனூ ஷேர்வான் என்ற கிஸ்ராவின் ஆட்சி முடிவுக்கு வந்த நாற்பதாம் ஆண்டு.
இக்கருத்தையே அறிஞர் முஹம்மது ஸுலைமான் உறுதிப்படுத்துகிறார். (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)

ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதாக இருந்தால் அவரின் பிறந்தநாள் உறுதியாக அறியப்பட்டிருக்கவேண்டும். பலமான, ஒத்தகருத்துடைய ஆதாரமில்லாமல் ரபியுல்அவ்வல் 12. என்று முடிவெடுத்தது எப்படி?

அடுத்து ரசூல்[ஸல்]அவர்களின்மீது நேசம் வைப்பது எப்படி என்றால் மவ்லிது கவிபாடி அல்ல. இதோ நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;

'உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்கள்.
நூல்;புஹாரி,எண் 15

நபி[ஸல்] வர்களின் மீது அன்பு செலுத்துவது என்பது அவர்களை நம் உயிரினும் மேலாக மதிப்பதுதான். இதோ சத்திய சகாபாக்கள் நபியவர்களை நேசித்த விதம்பாரீர்;

கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார்கள்;

நான் அறியாமைக் காலத்தில் கருமானாக இருந்தேன். எனக்கு ஆஸ் இப்னு வாயில் என்பவன் சில திர்ஹம்கள் கொடுக்க வேண்டியிருந்தது. அதைக் கொடுத்து விடும்படி கேட்டு அவனிடம் சென்றேன். அவன், 'நீ முஹம்மதை நிராகரிக்காதவரை நான் உனக்குக் கடன் தீர்க்க மாட்டேன்" என்று கூறினான். நான், 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, பிறகு உயிராக்கி எழுப்பும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்" என்று கூறினேன். அதற்கு அவன், 'அப்படியென்றால் நான் இறந்து மீண்டும் உயிராக்கி எழுப்பப்படும் வரை என்னைவிட்டுவிடு. அப்போது எனக்குச் செல்வமும் குழந்தைகளும் கொடுக்கப்படும். பிறகு நான் உன் கடனைத் தீர்ப்பேன்" என்று கூறினான்.
அப்போதுதான், 'எவன் நம்முடைய சான்றுகளை மறுக்கிறானோ, மேலும் 'பொருள் செல்வமும் மக்கள் செல்வமும் எனக்கு வழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்' என்றும் கூறுகிறானோ அவனை (நபியே!) நீங்கள் பார்த்தீர்களா? அவன் மறைவான உண்மைகளை அறிந்து கொண்டானா? அல்லது கருணை மிக்க இறைவனிடம் ஏதேனும் உடன்படிக்கை செய்தானா? அப்படியொன்றுமில்லை. அவன் பிதற்றுவதை நாம் எழுதி வைத்துக் கொள்வோம். அவனுக்குத் தண்டனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்..." (திருக்குர்ஆன் 19:77-80) என்னும் திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டது.
நூல்;புஹாரி,எண் 2425

இதுதான் உண்மையில் நபியவர்கள் மீது செலுத்தும் நேசமேயன்றி, 'நீங்கள்தான் பாவங்களை மன்னிக்கக்கூடியவர்' ' நீங்கள்தான் பாவங்களை மன்னித்து, மறைக்கக்கூடியவர்' என்று அல்லாஹ்வின் தண்மைகளை அல்லாஹ்வின் தூதரைநோக்கி பாடுவதல்ல என்பதை மவ்லிது அபிமானிகள் விளங்கிக்கொள்ளவேண்டும்.

இப்படி நாம் கூறினால் இவர்கள் அடுத்து ஒரு வாதம் வைப்பார்கள். அதாவது ஹஸ்ஸான் இப்னு தாபித்[ரலி] அவர்கள் கவிபாடினார்களே என்பார்கள். ஹஸ்ஸான்[ரலி] அவர்கள் பாடிய கவி என்ன?

ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார்கள்;

மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) கவிபாடிக் கொண்டிருக்க, உமர்(ரலி) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான்(ரலி) பள்ளிவாசலில் கவிபாடுவதை உமர்(ரலி) கண்டித்தார்கள்) ஹஸ்ஸான்(ரலி), 'நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி(ஸல்) அவர்கள்) இருக்கும் போதே கவிபாடிக் கொண்டிருந்தேன்" என்று கூறிவிட்டு, அபூ ஹுரைரா(ரலி) பக்கம் திரும்பி, 'அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ்(தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக!" என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா(ரலி), 'ஆம் (செவியுற்றிருக்கிறேன்)" என்று பதிலளித்தார்கள்.
நூல்;புஹாரி,எண் 3212

ஹஸ்ஸான்[ரலி]அவர்கள் இஸ்லாமிய எதிரிகளை நபியவர்களின் அனுமதியோடு கவிநடையில் பதிலளித்தது, நபியவர்களை அல்லாஹ்வின் தன்மைகளை சூடி பாடக்கூடிய 'சுப்ஹானமவ்லிதுக்கு எப்படி ஆதாரமாகும்? சிந்திக்க மாட்டீர்களா? வேண்டுமானால், இந்த ஆதாரத்தை வைத்து புஷ், அத்வானி உள்ளிட்ட இஸ்லாமிய எதிரிகளை நோக்கி கவிதை நடையில் பதிலளியுங்கள் நாங்கள் தடுக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதரை நேசிப்பது என்பது அவர்களை இயன்றவரை அணு அணுவாக பின்பற்றுவதும் அவர்கள் மீது சலவாத்தை  அதிகமதிகம் மொழிவதும்தான்! அல்லாஹ் பூமியில் சிலவானவர்களை ஏற்படுத்தியிருக்கிறான். என்மீது சலவாத் கூறப்பட்டால் அதை எனக்கு எடுத்துக்காட்டுவார்கள் என்ற நபிமொழியின் மூலம் மரணித்துவிட்ட நபியவர்களுக்கு சொல்லப்படும் சலவாத்கள்தான் அவர்களை சென்றடையுமேயன்றி, மவ்லிது கவிகள் அல்ல. எனவே மவ்லிது என்பது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

மவ்லிதும் மார்க்கம்தான் என்று வரட்டுவாதம் பேசாமல், மவ்லிதுகளில் உள்ள தவறான அர்த்தம்தரும் வார்த்தைகளை நீக்கிவிட்டு, பக்தி முலாம் பூசாமல் வேண்டுமானால் பொழுதுபோக்குக்கு வேண்டுமானால் பாடிக்கொண்டு திரியுங்கள்.

அடுத்து மவ்லிதை எதிர்ப்பவர்கள், ஒரு சாரார் அறிந்தோ-அறியாமலோ மவ்லிது ஓதுகிறார்கள் என்பதற்காக அவர்களை நரகவாதிகள் என்று சொல்வது அப்பட்டமான வரம்புமீரலாகும். ஏனெனில், யார் சொர்க்கம் செல்வர் யார் நரகம் செல்வர் என்று தீர்மானிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. நபியவர்கள் பாவங்களை மன்னிப்பார்கள் என்று கவிபாடினால் அது ஷிர்க். ஆனால் இறைவனின் தன்மையான தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கையிலெடுத்து ஒரு சாராரை நரகவாதிகள் என்று கூறுவதற்கு பெயரென்ன? எனவே, மென்மையாக எடுத்துச்சொல்லி தவறான செய்கையிலிருந்து மக்களை மீட்டெடுக்க முயற்சிப்பதே அறிவுப்பூர்வமானதாகும்.

(மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்க வாசிகள் சொர்க்கத்திலும் நரக வாசிகள் நரகத்திலும் நுழைந்து விடுவார்கள். பின்னர் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் எனும் இறைநம்பிக்கை இருப்பவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு 'ஹயாத்' என்ற ஆற்றில் போடப்படுவார்கள். இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான மாலிக், ஆற்றின் பெயர் 'ஹயா' என்று நபி(ஸல்) கூறினார்களோ என்று சந்தேகப்படுகிறார்... அவ்வாறு அவர்கள் அந்த ஆற்றில் போடப்பட்டதும் பெரும் வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் விதைகள் முளைப்பது போன்று பொலிவடைவார்கள். அவை வளைந்து மஞ்சள் நிறமாக இருப்பதை நீர் பார்த்ததில்லையா?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்கள்.
நூல்; புஹாரி,எண்; 22

அல்லாஹ்வே  மிக அறிந்தவன்.